Sunday, October 18, 2015

பிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு

பெண்களுக்கு மட்டுமே இது நடக்கிறது. பிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு. ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தகைய இடம்பெயரும் தருணம் உணர்வுப்பூர்வமானது. அந்தவேளையில், பெண்ணைவிட பெண்ணைப் பெற்றவர்களுக்கு குறிப்பாக தந்தைக்கு நேரும் உணர்வுப் போராட்டம் சொற்களில் அடங்காதது.
அவ்வாறாக உணர்ச்சிவசப்பட்ட ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரையை ஃபேஸ்புக் பகிர்வில் படிக்க நேர்ந்தது.
மிகவும் உருக்கமான, யதார்த்தமான, இயல்பான அந்த பதிவு இதோ:
"இந்த உரையை 'எனது மகளின் புதிய குடும்பத்தினரே' என்று உங்களை வரவேற்று ஆரம்பிக்க வேண்டும் என்றே நினைத்தேன். ஆனால், அது பொருத்தமாக இருக்காது என்பதால் கடைசி நிமிடத்தில் அதை தவிர்த்துவிட்டேன். அவள் எப்போது திருமண பந்தத்தில் இணைந்தாளோ அப்பொழுதே உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவளாகிவிட்டாள். அதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவள் உங்கள் குடும்பத்தினருக்கே எப்போதும், எதிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். இனி, இளைப்பாற விரும்புகிறோம். அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம். ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நான் எதிர்பார்ப்பதைவிட நீங்கள் அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததைவிட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளளோடு இருப்பாள் என நம்புகிறேன். இருந்தாலும், எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை திரும்பத் திரும்ப சொல்கிறேன் "தயவு செய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்"
அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன். ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே. இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன். ஏனென்றால் அது ஓர் இயற்கை நியதியாக இருக்கிறது. கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டுமட்டுமே அவளை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கிறேன். என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது. எனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் தருகிறேன். அந்த உலகம் என்றென்றைக்கும் அழகாக இருப்பதை நீங்களே உறுதி செய்ய வேண்டும். எனது இளவரசியை உங்களிடம் அனுப்புகிறேன். அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ வழிவகை செய்யுங்கள். எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது. இப்போது அவள் மாசறு பொன்னாக இருக்கிறாள்.
அவள் உங்கள் வீட்டுக்கு கொண்டு வரும் அன்பு, அக்கறை, அரவணைப்பு, அழகு, இதம் என எல்லாப் பண்புகளுக்கும் பரிசாக அவளுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள். ஆம், அவளை தயவுசெய்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
எப்போதாவது அவள் சிறு தவறு செய்துவிட்டாள் என நினைத்தால் அவளை தாராளமாக திட்டுங்கள் ஆனால் அதேவேளையில், அவள் மேல் செலுத்தும் அன்பில் குறைவைக்காதீர்கள். அவள் மிகவும் நளினமானவள். அவள் எப்போதாவது துவண்டு போய் இருந்தால் அவளுடன் இருங்கள். உங்களது சிறு கவனம் அவளுக்கு போதும், ஆறுதல் தர. அவள் உடல்நலன் பாதிக்கப்பட்டால் அவள் மீது அக்கறை காட்டுங்கள். அதுவே அவளுக்கு அருமருந்து.
அவளது பொறுப்புகளில் எப்போதாவது விலகிவிட்டால் அதைச் சுட்டிக்காட்டுங்கள். அதேவேளையில், 'நீ இன்னும் வாழ்க்கையை கற்றுக் கொண்டிருக்கிறாய் என நாங்கள் நம்புகிறோம்' என அவள் உணரும்படி நடந்து கொள்ளுங்கள். அவளைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அவளை மாதக் கணக்கில் காண முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, அவள் குரலை தினம் தினம் கேட்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டுக்கு வந்தபிறகு அவளுக்கு என் நினைவே வரவில்லை என்றால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். என் மகளின் மகிழ்ச்சி மட்டுமே என் வாழ்நாள் லட்சியம். எனவே, தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அன்பிற்குரிய மருமகனே...இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும்போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும். அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் 'என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என்று சொல்லும். எனவே, தயவு செய்து எனது மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த உரையை மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் அர்ப்பணிக்கிறேன்.

No comments:

Post a Comment