Tuesday, October 13, 2015

தென்னிந்திய கோயில்கள் வடஇந்திய கோயில்கள் என்ன வேறுபாடு?

நீங்கள் வட இந்தியாவிற்குச் சென்றிருந்தால், அங்குள்ள கோவில்கள் நம் தென்னிந்திய கோவில்களைப் போல அல்லாமல் பலநிலைகளில் முற்றிலும் மாறுபட்ட கட்டிட அமைப்பு, விக்ரக வழிபாடு கொண்டவைகளாக இருக்கும். இது ஏன் இப்படி ஆயிற்று? ஒரே நாட்டில் இருந்தும், வடக்கிற்கும் தெற்கிற்கும் இந்த வேறுபாடு எப்படி வந்தது? இதைப் பற்றி சத்குருவின் வாயிலாக அறிவோம்… சத்குரு: அன்னிய யாத்ரீகர்களின் வருகை வட இந்தியக் கோவில்களும் தென்னிந்திய கோவில்களும் கட்டிட ரீதியான அமைப்புகளின் படி பார்த்தாலே கூட மிகவும் வேறுபட்டிருக்கும். தென்னிந்திய யோகிகள் ஒரே இடத்தில் தங்கி வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு சக்திவாய்ந்த இடங்களை தாங்களாகவே உருவாக்குவது எப்படி என்னும் கலை தெரியும். உண்மையில் இரண்டு ஆன்மீக முறைகளுமே ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை. தென்னிந்தியாவின் ஆன்மீக முறைகள் வட இந்திய முறைகளின் தாக்கம் எதுவுமில்லாமல் தனித்துவத்துடன் உருவாகி வளர்ந்தன. ஆனால் வெளியுலகிற்கு தென்னிந்திய கோவில்கள் அதிகம் பிரபலமாகவில்லை. காரணம், வெளியுலகிலிருந்து வந்த அன்னிய யாத்ரீகர்கள்தான். இவர்கள் முதலில் வட இந்தியாவில்தான் கால் பதிப்பார்கள். ஏனெனில் இந்தியாவில் நிலம் வழியாக நுழைய விரும்பும் யாரும் வட இந்தியா வந்து பிறகுதான் தென்னிந்தியா வர முடியும், வேறு வழியில்லை. எனவே அந்த யாத்திரீகர்கள் வட இந்தியாவை மிகவும் பிரபலப்படுத்தி விட்டார்கள். அவர்கள் பொதுவாக தென்னிந்தியாவிற்கு வரவேயில்லை. அதுமட்டுமல்ல, தென்னிந்தியாவில், புதிய நபர்களை, தங்கள் கோவில்களிலோ அல்லது ஆன்மீக விஷயங்களிலோ அனுமதிக்காமல் இருந்தார்கள். இதனால்தான் தென்னிந்தியக் கோவில்களோ, தென்னிந்திய ஆன்மீக முறைகளோ வெளியுலகிற்கு அதிகம் அறிமுகமாகவில்லை. இவைகளைப் பற்றி யாருமே பேசவோ எழுதவோ இல்லை. ஆனால் தென்னிந்திய ஆன்மீக முறைகள் மிகவும் ஆழமாக தனித்துவத்துடன் வேரூன்றி இருந்தன. யோகிகள் கையாண்ட வேற்றுமை கோவில் உருவாக்கும் விதத்திலேயே தென்னிந்தியாவிற்கும் வடஇந்தியாவிற்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. வட இந்தியாவில் சக்தி வாய்ந்த இடங்களைக் கண்டால் உடனே அங்குள்ள வசதிக்கு ஏற்றார் போல் அந்த இடத்தைச் சுற்றி ஒரு சிறு கோவில் கட்டி விடுவார்கள். வட இந்தியாவில் உள்ள யோகிகள் பொதுவாக இடம் விட்டு இடம் சுற்றித் திரிபவர்கள். எனவே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எளிமையாக கோவில் கட்டி விடுவார்கள். ஆனால் தென்னிந்திய யோகிகள் ஒரே இடத்தில் தங்கி வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு சக்திவாய்ந்த இடங்களை தாங்களாகவே உருவாக்குவது எப்படி என்னும் கலை தெரியும். எனவே தங்களுக்கு வேண்டிய இடங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை சக்தியான இடங்களாக முறைப்படி உருவாக்கி, அதைச் சுற்றி விரும்பிய வடிவமைப்பில் பொருத்தமான பொருட்களைப் பயன்படுத்தி கோவிலைக் கட்டினார்கள். எனவேதான் தென்னிந்தியக் கோயில்கள் மிகவும் பிரம்மாண்டமாகவும், கட்டிடக் கலை நுணுக்கங்களுடனும், அதிக பரப்பளவிலும் இருக்கின்றன. கோவில் வடிவமைப்பு வட இந்தியக் கோவில்கள் பெரிய வடிவமைப்புடன் இருக்காது, பொதுவாக தேவையான வசதிகள் இல்லாமல் மோசமான வடிவமைப்பில்தான் இருக்கும். பெரிய திட்டமிடுதல் இல்லாமல், பெரிய கலை நுணுக்கங்கள் இல்லாமல் இருக்கும். பராமரிப்பு முறைகளும் அதிகம் இருக்காது. அந்தக் கோவில்களில் யார் வேண்டுமானாலும் உள்ளே போகலாம், வரலாம். கோவிலைப் பராமரிப்பவரும் பெரிதாக எந்தவிதப் பயிற்சிகளும் இல்லாமல்தான் இருப்பார். ஆனால் தென்னிந்தியக் கோவில்களில் யார் வேண்டுமானாலும் கடைசிவரை சென்று வர முடியாது. ஏனெனில் சக்தி நிலைகளை இவர்களே உருவாக்கியதால், அந்த சக்திநிலையை பராமரிப்பதற்கான கோவில் பராமரிப்பு முறைகளும் இருந்தன. அந்த பராமரிப்பு முறைகளை உறுதியாகவும் கடைபிடித்தார்கள். கோவிலைப் பராமரிப்பவருக்கு தேவையான பயிற்சிமுறைகள் இருந்தன. இந்திய ஆன்மீகம் பற்றி பேசும்போது, காஷ்மீர் சைவம் பற்றிதான் அதிகம் குறிப்பிடுவார்கள். ஆனால் அதே போன்ற பிரம்மாண்டமான மற்றும் வேறுபட்ட ஆன்மீக முறைகள் தென்னிந்தியாவிலும் காலம் காலமாக காலூன்றி இருக்கின்றன. அதற்காக வடஇந்தியக் கோவில்களை யாரும் தவறவிட்டுவிட முடியாது. கேதார்நாத் போன்ற கோயில்கள், தென்னிந்தியக் கோயில் போல் பிரம்மாண்டம் இல்லாமல், கலைநயம் இல்லாமல் இருக்கலாம். சுற்றிலும் வெறும் செங்கல் வைத்துக் கட்டிய சிறு அறை போல் இருக்கலாம். ஆனால் அளப்பரிய சக்தி கொண்டவை!

No comments:

Post a Comment