Wednesday, October 7, 2015

வழிபாட்டு முறைகளும் ப்ரமாணமும்

வழிபாட்டு முறைகளும் ப்ரமாணமும்
श्रीगुरुभ्यो नमः
திருமணம், உபநயனம், ஸீமந்தம், ஷஷ்டி அப்தபூர்த்தி, முதலான சுப கார்யங்கள், பல வித ஹோமங்கள், மற்றும் ஏனைய சடங்குகள் எல்லாம் சாஸ்திரங்களில் விதித்தபடியே செய்தல் வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது .
ப்ரமாணங்கள் முறையே: ச்ருதி (வேதம்), ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்கள், வாக்தேவியின் பூரண அருள் பெற்ற காளிதாஸன் போன்ற மஹாகவி வாக்யம், குருவின் வாக்கு, சான்றோர் வாக்கு என்று வரிசைப் படுத்தப் பட்டுள்ளன. இந்த கிரமம் மிக முக்கியமானது. உதாரணமாக வேதம் ஒன்று சொல்லிவிட்டால் அதற்கு முரணாக எதுவும் எடுபடாது. யார் சொன்னாலும் எடுபடாது.
சில ஆண்டுகளுக்கு முன் நெல்லையில் (ஸன்யாஸி கிரமத்தில்) மக்களால் “ஆண்டி வாத்தியார்” என்று அன்புடன் அழைக்கப்பட்ட சுப்ரமணிய கனபாடிகள் என்ற ஒரு வேத சாஸ்திர வித்பன்னர் வாழ்ந்து வந்தார்.
ப்ரயோகத்தில் விசேஷ பாண்டித்யம் பெற்ற இவர் மக்களுக்கு ஏற்பட்ட எந்த சந்தேகத்தையும் பராசர, கௌதமாதி ஸ்ம்ருதிகளிருந்து (கிரந்தங்களிருந்து) தக்க ப்ரமாணத்தைக் காட்டியே தீர்த்து வைப்பார். ஓரு சந்தர்ப்பத்தில், ஒருவரின் தாயாரின் ச்ராத்த தினம் வந்தது. அவரின் தமயனாரின் குமாரருக்கு ஸ்த்ரீ ப்ரஜை ஏற்பட்டு பத்து தினங்களாக வில்லை. ச்ராத்தம் செய்யலாமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. பலர் பலவித அபிப்ராயங்களை சொன்னார்கள். ஸ்ரீ ஆண்டி வாத்தியாரை அணுகின போது, அவர் சருதி ப்ரமாணத்துடன் (புத்தகத்தையே காண்பித்து) விடை அளித்தார்.
“பிதாமஹஸ்ச தத் ப்ராதா, பிதாமகரும் அவருடைய சகோதரரும்” , (விருத்தி ஸூதகம் (தீட்டு) எப்போதும் பத்து தினங்கள் உண்டு. ஸ்த்ரீ ப்ரஜையின் சகோதரர், தந்தை, தந்தையின் சகோதரர், பிதாமகர், அவரின் சகோதரர் இவர்களுக்கு ஸூதகம் ஏற்படுகிறது. பதினோராவது தினம் ச்ராத்தம் செய்ய வேண்டியது. அடுத்த திதியில் அல்ல.
இந்த வித்வான் எந்த ஸந்தேகத்தையும், ப்ரமாணத்துடன் மிக தௌவாக தீர்த்து வைக்கும் வல்லவராக இருந்தார். சிருந்கேரி ஜகத்குருக்களான ஸ்ரீ மஹாஸந்நிதானம், ஸ்ரீ ஸந்நிதானம் ஆகிய மஹான்களின் பாராட்டையும் இவர் பெற்றார். இவர் வேண்டுகோளின் மேல் ஜகத்குருவின் ஆக்ஞைப்படி இவரிடமிருந்த சில அரிய நூல்கள் சிருங்கேரி மட நூலகத்தில் சேர்க்கப் பட்டுள்ளன.
பிரஸித்தி பெற்ற ஸாமவேத பாரங்கதரும் சாஸ்திர வித்பன்னருமான ப்ரம்ம ஸ்ரீ மாயூரம் ராமநாத தீக்ஷிதர், மக்களுக்கு மிக நன்மை பயக்கும் வகையில் பல அரிய நூல்களை வௌயிட்டுள்ளார். தர்ம சாஶ்திரத்தை விளக்கும் பராசர, கௌதம ஸ்ம்ருதிகளை வடமொழிமூலம, மற்றும் தமிழ் விளக்க உரையுடன் அவர் வௌயுட்டுள்ள நூல் மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
இவர்களையும், இவர் போன்ற மற்றும் சில பெரியோர்களை சந்தித்து உரையாடி சில விஷயங்களை தெரிந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிட்டியது அதன் அடிப்படையிலேயே, அமைந்து உள்ளது இந்த கட்டுரை. சில முக்கிய பிரச்சினைகளை வாசகர் பலருடன் பகிரங்கமாக பகிர்ந்து கொள்வதே இதன் நோக்கம்.
இந்நாட்களில் ஒரு புரோகிதரிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்டால், உடனே அதற்கு விடை கிடைத்து விடும். இது பெரும்பாலும் அவர் அபிப்பிராயமே. ஒரு சிலரே "இது எனக்குத் தெரியாது. தெரிந்தவரைக் கேட்டுச் சொல்கிறேன். தர்ம சாஸ்திரத்தைப் பார்த்து சொல்கிறேன்” என்பார்கள். இதனால் இவர்கள் யோக்யதை அதிகரிக்கவே செய்கிறது. நாம் வேண்டுவது ஒருவரின் அபிப்பிராயம் அல்ல. பிரமாணத்தின் அடிப்படையில் அமைந்த விடையே. சில ஸந்தர்ப்பங்களில் இவர்கள் அபிப்பிராயம் சாஸ்திர விரோதமாகவும் அமையும். அப்பொழுதான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
திருமணம், உபநயனம், ஸீமந்தம், ஷஷ்டி அப்தபூர்த்தி, முதலான சுப கார்யங்கள், பல வித ஹோமங்கள், மற்றும் ஏனைய சடங்குகள் எல்லாம் தன் கிரகத்திலேயே, தன் பரம்பரை புரோகிதரால், வேத பிரம்மணர்கள் ஸஹாயத்துடன், உற்றார் உறவினரோடு நடத்துவதே சாலச்சிறந்ததாகும்.
வசதியைப் பொருத்து, லௌகிகச் செலவுகளை கட்டுப் படுத்தலாம்
திருக்கடையூரில் ஷஷ்டி அப்தபூர்த்தி,
பழனி அல்லது திருப்பதியில் திருமணம் ராகு கால துர்கா பூஜை, ஸங்கடஹர சதுர்த்தி பூஜை இவை சமீப காலத்திலேயே நம்மிடை வந்துள்ளன.
சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ள சுக்லசதுர்த்தி விரதம், வரலக்ஷ்மி விரதம், நவராத்திரி, ஸோமவார விரதம, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஆயுஷ் ஹோமம், சுதர்சன ஹோமம் முதலியவை அதிக பலனை அளிக்கும். உபாகர்மம் போன்றவை ஒரு சமூகத்தில் பலர் சேர்ந்து செய்யத் தகுந்தவை.
காயத்திரியை விட சிறந்த மந்திரம் வேறில்லை. “சந்தஸ்களில் நான் காயத்திரி” என்று பகவான் கீதையில் கூறியுள்ளது இதை விளக்குகிறது. பகவானின் மந்திர ஸ்வரூபமே காயத்ரி. இதை பிரம்மோபதேசத்தின் போது சாஸ்த்ரோக்தமாக உபதேசம் பெற்றவர்களே ஜபித்து உபாஸிக்க யோக்யதை உள்ளவர். பெண்டிரும், மற்றவரும் கயத்ரியை ஜபிக்கலாகாது. காயத்திரியை உரத்த குரலில் ஜபம் செய்யலாகாது. ஒரு ஹோமத்திலோ மற்ற கார்ய கிரமத்திலோ, காயத்திரி மந்திரம் ப்ரயோகாமாக வரும்போது, அதுவரை வேத மந்திரங்களை உரத்த குரலில் ஓதிக் கொண்டிருந்த ரித்விக்குகள், உடனே மௌனமாக காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதை நாம் காண்கிறோம்.
காயத்திரி மந்திர உபதேசத்தைப் பற்றி ஒரு அனுக்கிரக பாஷணத்தில் ஜகத்குரு ஸ்ரீ மகாஸந்நிதானம் அவர்கள் மிகத்தளிவாக விளக்கியுள்ளார். தர்ம சாஸ்திர விதிப்படி காயத்திரி மந்திர உபதேசம் பெற முடியாத ஓர் அரசன், ஆசாரசீல அந்தணரான தன் குல குருவை, தனக்கு காயத்திரியை உபதேசிக்க வேண்டினான். அவர் “அரசே! உனக்கு அது வராது, வேண்டாம்” என்று மறுத்துவிட்டார். அடுத்தடுத்து அவன் பல முறை வேண்டியும் அவர் இசையவில்லை. எனவே அரசன் வறுமையால் வருந்தும் ஒர் ஏழை அந்தணனை அழைத்து, அவனுக்கு நிறைய பொற்காசுகளை அளித்து, காயத்திரி மந்திரத்தையும் அதை சரியாக உச்சரிக்கவும் கற்றுக் கொண்டான்.
அந்த அரசன் ஒரு நாள் அரசவையை கூட்டி எல்லோரையும் அழைத்தான். குருவை வணங்கி, “குருதேவரே! எனக்கு காயத்திரி வராது என்றீர்களே! நான் அதை நன்கு கற்றுக் கொண்டு விட்டேன்” என்று கூறினான். அது முடியாது என்று அவர் கூற, இதோ எல்லோரும் கேளுங்கள் என்று அரசன் உரத்த குரலில் காயத்திரியை உச்சரித்தான். பல முறை அவன் அதை ஓதினாலும், அது சரியில்லை என்று ராஜகுரு கூறவே, அரசன் தனக்கு காயத்திரியை கற்பித்த (உபதேசம் அல்ல) அந்தணனை விளித்து வினவ, அவன் அரசன் சரியாகவே சொல்வதாகவே கூறினான். அப்போது ராஜகுரு, அரசன் பக்கத்தில் பணியிலிருந்த ஒரு சேவகனை, அரசனின் கன்னத்தில் பலமாக இரண்டு அடி அடிக்கும்படி உத்தரவிட்டார். அவன் அசையவே இல்லை. அசைந்தால் கூட தலை போய்விடுமோ என்ற பயம் அவனுக்கு. குரு நான்கு ஐந்து முறை உத்தரவிட்டும் பயனில்லை. ஆனால் அரசன் மிக்க சினமடைந்து அதே சேவகனை பார்த்து ராஜகுருவின் கன்னத்தில் அடிக்குமாறு பணித்தான். சிரிதும் தயக்கமின்றி சேவகன் குருவின் கன்னத்தில் அடித்து விட்டன். அடிக்காவிட்டால் தலை போய்விடுமோ என்ற பயம் அவனுக்கு. சபையில் ஒரே பரபரப்பு. ராஜகுரு அப்போது அமைதியாக கூறினார். “அரசே! பார்த்தாயா பலமுறை நான் உத்தரவிட்டும், அதை சேவகன் பொருட்படுத்தவே இல்லை. ஓரேமுறை நீ உத்தரவிட்டாய். உடன் அதை அவன் நிறைவேற்றிவிட்டான். எதைச் சொல்ல யாருக்கு யோக்கியதை இருக்கிறதோ அவர் சொன்னால் தான் அதற்கு பலன் உண்டு. அரசே! நீ நல்லவன். உன் ஆட்சியில் உன் மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளாய். காயத்திரி மந்திரம் உனக்கு விபரீத பலனையே அளிக்கும். உன் நன்மை வேண்டியே நான் அதை உனக்கு உபதேசிக்கவில்லை” என்று கூறினார். அரசன் தன் தவறையுணர்ந்து குருவின் கால்களில் விழுந்து மன்னிக்க வேண்டினான்.
வேத மந்திரங்கள் சரியான ஸ்வரத்தோடு ஓதப்பட வேண்டும். தப்பான ஸ்வரத்தோடு ஓதினால் அது விபரீத பலனை அளிக்கும்.
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸந்நிதானம் அவர்கள் பாலாமடையில் அருளிய ஒரு அனுக்ரக பாஷணத்தில் கூறியதை இங்கு நினைவு கொள்வோம். பிரஜாபதி த்வஷ்டா இந்திரனை வெல்லக்கூடிய ஒரு மகனை விரும்பி, ஒரு வேள்வி நடத்தினார். அதில் பயன்படுத்தப் பட்ட மந்திரங்களில் “இந்த்ரசத்ரு” என்ற பதத்தை தவரான ஸ்வரத்துடன் உச்சரித்ததால், இந்திரனால் கொல்லப் படக்கூடிய விருத்ராசுரன் பிறந்தான்.
இதன் பொருள்:
ஒரு மந்திரத்தை ஓதுங்கால், அக்ஷரப் பிழையோ, ஸ்வரத்தில் பிழையோ, வேறேனும் தவறோ ஏற்பட்டால், “இந்த்ரசத்ரு” என்ற பதம் தவறான ஸ்வரத்தோடு ஓதப்பட்ட போது நடந்தது போல் வஜ்ராயுதம் போலாகி எஜமானனுக்கே தீங்கு விளைவிக்கும்.
காயத்திரி மந்திரம் ஒலி பெருக்கி மூலமும், தொலைக் காட்சியிலும், மெட்டமைத்து பாடப்படுவது நம் காதுகளில் நாராசம் போல் பாய்கிறது புருஷ ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம், துர்கா ஸூக்தம், ருத்ரம், சமகம் முதலிய அதிமுக்கியத்வம் வாய்ந்த வேத மந்திரங்கள், அனுதினமும், காலையில் தொலைகாட்சி நிகழ்சிகளில், சில தேவாலயங்களில், முறையாக வேதம் கற்காதவர்களால் (அபஸ்வரமாக) ஓதப்படுகிறது. இது வேதத்தை பெரிதும் மதிக்கும் ஆஸ்திக பெருமக்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இதற்கெல்லாம் எப்படி தீர்வு காண்பது

No comments:

Post a Comment