Tuesday, October 6, 2015

இறந்தவர்கள் நற்கதி அடைய – காலபைரவ ஷாந்தி

 மஹாளய அமாவசை அன்று லிங்கபைரவியில் இறந்தவர்கள் நற்கதி அடைய சிறப்பு காலபைரவ ஷாந்தி நடைபெறுகிறது. அது பற்றிய சில தகவல்கள் இங்கே…  மஹாளய அமாவாசையானது மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக அமைகிறது. பொதுவாகவே அமாவாசை நாட்கள் பூமியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் தாக்கம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும், தசரா பண்டிகையின் துவக்கமாக அமையும் இந்த மஹாளய அமாவாசை நாள், பித்ரு கடன் செய்வதற்கு உகந்த நாளாக உள்ளது. சத்குருவால் வழங்கப்பட்டுள்ள காலபைரவ சாந்தி எனும் இந்த செயல்முறையானது, உடல் விட்டு நீங்கிய உயிர்களுக்கு நற்கதி வழங்குவதாய் அமைந்துள்ளது. நாம் பேசும் மொழி, அமரும் முறை, உடுத்தும் உடைகள், நமது வசிப்பிடம் என அனைத்துமே நம் முன்னோர் நமக்கு உருவாக்கி வைத்துவிட்டுச் சென்றதுதான். நெருப்பின் பயனை அறிந்தது; சக்கரம் கண்டுபிடித்தது; ஆடைகளை உருவாக்கியது என நம் முன்னோர்களின் பங்களிப்பு இல்லாமல் நாம் இன்று அனுபவிக்கும் எந்த ஒன்றும் வந்துவிடவில்லை. எனவே அவர்களுக்கு நம் நன்றியை அர்ப்பணிக்கும் வகையில் இந்த மஹாளய அமாவாசை நாளை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த மாதத்தில் தான் நமது இந்திய விவாசாய நிலங்களில் பயிர்கள் செழித்து கதிர் விடத் துவங்கும். எனவே அந்த தானியங்களை ‘பிண்டம்’ இட்டு, வெறும் சடங்காக இல்லாமல், உணர்வுப் பூர்வமாக நமது மூதாதையர்களுக்கு நன்றியுணர்வுடன் அர்ப்பணிக்கிறோம். பித்ருக் கடன் தீர்க்கும் காலபைரவ ஷாந்தி இந்த வருடம் மஹாளய அமாவாசையான அக்டோபர் 12ஆம் தேதியன்று லிங்கபைரவியில் வருடாந்திர காலபைரவ சாந்தி செயல்முறை வெகு சிறப்பாக நிகழவிருக்கிறது!! மஹாளய அமாவாசையன்று மாலை 6 மணியிலிருந்து நடுநிசி 12 மணி வரை சிறப்பு அர்ப்பணிப்பாக லிங்கபைரவிக்கு அக்னி அர்ப்பணம் நடைபெறவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, பித்ருக்களுக்கும் (நம் மூதாதையர்) மற்றும் இறந்த குடும்ப உறவுகளுக்கும் காலபைரவ ஷாந்தி நடைபெறவிருக்கிறது. இறந்தவர்கள் நற்கதி அடைய சத்குருவின் வழிகாட்டுதலில் தேவியின் அருள் பெற்று, இறந்தவர்கள் நற்கதி அடைய வேண்டி செய்யப் படக்கூடிய செயல்முறைகளே காலபைரவ கர்மா மற்றும் ஷாந்தி. இந்த தனித்துவம்வாய்ந்த அமாவாசை இரவில், நம் முன்னோர்களுக்காகவும் நம்மை விட்டுப் பிரிந்த உறவுகளுக்காகவும் நிகழ்த்தப்படும் இந்த செயல்முறையானது, குடும்ப நலனையும் வழங்குகிறது. இந்த ஆன்மீக செயல்முறையானது ஒவ்வொரு ஆண்டும் மஹாளய அமாவாசையன்று மண்ணுலகம் விட்டு மறைந்த குடும்ப உறவுகள் மற்றும் அன்பிற்குரியவர்களின் நினைவாக நிகழ்த்தப்படுகிறது. பாரத கலாச்சாரத்தில், இறந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்கானது இறந்த உயிர்களுக்கு நலம்பயக்கும் வகையில் மிகநுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் வயது, மரணமடைந்த விதம் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த சடங்கு செயல்முறைகள், இறந்த உயிரினை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மென்மையாக பரிமாற்றம் செய்வது மட்டுமல்லாமல், அந்த உயிருக்கு ஆன்மீக பரிணாமத்தையும் வழங்குவதாய் அமைகிறது. துரதிர்ஷ்ட வசமாக, கடந்த இரு நூற்றாண்டுகளாக இந்த உன்னத செயல்முறையானது சமூகத்தில் சீர்கெட்டுவிட்டதோடு, அதன் தன்மையையும் இழந்துவிட்டது. சத்குருவால் வழங்கப்பட்டுள்ள காலபைரவ சாந்தி எனும் இந்த செயல்முறையானது, உடல் விட்டு நீங்கிய உயிர்களுக்கு நற்கதி வழங்குவதாய் அமைந்துள்ளது. ஈஷாவில் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காலபைரவர் முன்னிலையில், சத்குருவிடமிருந்து முறைப்படி கர்மா செய்யும் வழிமுறையை அறிந்துணர்ந்த பிரம்மச்சாரிகளால் காலபைரவ கர்மா மற்றும் ஷாந்தி ஆகியவை நடத்தப்படுவதால் மிகவும் சக்தி வாய்ந்த செயல்முறையாக இது உள்ளது. தங்களது குடும்ப உறவுகளை இழந்து மீளாத் துயரத்தில் வருபவர்கள், கால பைரவ கர்மா முடித்துவிட்டுச் செல்லும்போது இறந்த உயிருக்கு தாங்கள் செய்ய வேண்டியவற்றைச் செய்த நிம்மதியுடன் செல்கிறார்கள். தங்கள் பித்ருக்களுக்கு காலபைரவ ஷாந்தி செய்பவர்கள், தங்கள் நன்றியை உணர்வை வெளிப்படுத்திய திருப்தியில் செல்கிறார்கள். குறிப்பு: காலபைரவ கர்மா, இறந்த குறிப்பிட்ட தினங்களுக்குள் செய்வது. காலபைரவ சாந்தி, இறந்த உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் செய்வது. காலபைரவ சாந்தியை ஒவ்வொரு வருடமும் செய்யலாம், அல்லது முன்பே பதிவு செய்து 10 வருடங்களுக்கு (ஒவ்வொரு வருடமும் மஹாளய அமாவாசை அன்று) தொடர்ச்சியாக செய்து கொள்ளலாம். காலபைரவ சாந்தி செய்வதற்கு இறந்தவரின் ஒரு புகைப்படமும், பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்ந்த தேதியும் தேவைப்படுகிறது. செயல்முறையின்போது நேரடியாக வந்து கலந்துகொள்ள இயலாதவர்கள் தங்களின் முன்னோர்கள் அல்லது இறந்த உறவினர்களின் புகைப்படங்களை ஸ்கேன் செய்து அத்துடன் பிறப்பு மற்றும் இறப்பு தேதியையும் குறிப்பிட்டு இ-மெயிலில் அனுப்பலாம். பிறந்த தேதி சரியாக தெரியவில்லை என்றால், பிறந்த வருடத்தையாவது குறிப்பிட வேண்டும். இறந்த வருடமும் தெரியாதபட்சத்தில், இறந்தவர்களின் பெற்றோர் பெயர்கள் (தாய் மற்றும் தந்தை இருவரின் பெயரும்) குறிப்பிட்டால் போதுமானது.

No comments:

Post a Comment