Thursday, October 8, 2015

வர்ணாஸ்ரமத்தில் பிராமணன் உயர்ந்தவனா?:

வர்ணாஸ்ரமத்தில் பிராமணன் உயர்ந்தவனா?:
வர்ணாஸ்ரம தர்மத்தில் பிராமணன் தான் உயர்நிலையில் இருந்தார்போலவும் மற்றவரை அடக்கியாண்டது போலவும் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப் பட்டு வெற்றிகரமாக சொல்லப் பட்டும் வருகிறது! இது ஒரு வகையில் பார்த்தால் உண்மையாகவும் இன்னொரு வகையினில் உண்மையில்லாததாகவும் உள்ளது! அது எந்த வகையில் உண்மையில்லை சொல்கிறேன்!
நான்கு வர்ணங்களுக்கும் சொல்லப்பட்டுள்ள கடைமைகள், அதிகாரங்கள் குறித்து சற்று விளக்கமாக சிந்தித்துப் பார்த்தால் பிராமணன் எந்த அளவில் உயர்நிலையில் வைக்கப் பட்டான் என்பது புரிய வரும்!
என் சிந்தனைப் படி நான்கு வர்ணங்களிலும் பொருளாதார, அதிகார, அந்தஸ்து ரீதியாக உயர்நிலையில் இருந்தவன் க்ஷத்திரியன் மட்டுமே! க்ஷத்திரியன் என்பது அரசனும் அவனுடைய அமைச்சர் பரிவாரங்கள், போர்த்தொழில் புரிந்தோர் உள்ளிட்டோர் அடங்குவர்!
நாடுகாக்கும் பொறுப்பிலிருந்த அரசனே வரிவசூலுக்கு உடமை உள்ளவனாக இருந்தான்! நாடு முழுதும் செய்யப்பட வரிவசூல் முழுதும் அரசு கஜானாவில் நிறைந்திருந்தது! பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலங்களில் அரசனென்பவன் அந்த செல்வத்தை எல்லாம் மனம் போல செலவழிக்காது மக்களுக்கு நன்மைகள் செய்தும், ஏரிகுளங்கள் வெட்டி விவசாயத்துக்கு உதவி செய்தும், பஞ்ச காலங்களில் மக்களைக் காக்கவும் , எதிரிப் படைகளைப் போரில் வீழ்த்தவும் செலவு செய்தான் என்பதே உண்மை! அவர்கள் அப்புறமும் நாடு முழுக்க நிறைய ஆலயங்களைக் கட்டி அறம் வளர்த்தனர்!
அதே அரசர்கள் அறிவார்ந்த அந்தணர்களை ஆதரித்தனர்! விவசாயிகளுக்கும் வாணிபர்க்ளுக்கும் நல்ல முறையில் தொழில் செய்ய உதவினர்! நான்காம் வர்ணத் தொழிலாளர்கள் தகுந்த கூலி பெறவும் உறுதுணையாக இருந்தனர்!
க்ஷத்திரியர்களை அடுத்து வைசியர்கள் ! அவர்கள் பல தேசங்களும் சென்று அங்கு கிடைக்கும் பொருட்களை வாங்கியும் இங்கிருந்து கொண்டு சென்ற அரிய பொருட்களை விற்றும் பெரும் பொருள் ஈட்டினர்! ஆயினும் கூட அவர்கள் ஒரு சில நியாய தர்மங்களுக்குக் கட்டுப்பட்டே வியாபாரம் செய்தனர்! இவர்களுமே அரசர்கள் போல நாடு முழுதும் அன்ன சத்திரங்கள் பலவற்றைக் கட்டியும் கல்விச்சாலைகளை ஏற்படுத்தியும் தொண்டுகள் செய்தனர்!
இதன் மூலம் அறிவது என்னவென்றால் அந்தக் காலங்களில் இருந்த அரசர் வைசியர் போன்ற செல்வந்தர்கள் பலரும் இன்று போலன்றி தமது செல்வத்தை முடக்கி வைக்காமல் அதன் ஒரு பகுதியை அறம் வளர்க்க செலவு செய்து மகிழ்ந்தனர் என்பதுதான்! இதனாலேயே அன்று அறம் செழித்தது!
ஆக பணம், அதிகாரம், செல்வாக்கு, அந்தஸ்து ஆகிய விஷயங்களை மனதில் வைத்துப் பார்க்கும்போது அந்தக் காலத்தில் க்ஷத்திரியனும் வைசியனுமே சிறந்து விளங்கினர் என்பது புரியும்! உண்மையைச் சொன்னால் இந்த விஷயங்களில் பிராமணரும் நான்காம் வர்ணத்தவரும் ஒரே அளவில்தான் இருந்தனர் என்பதே உண்மையாகும்!

No comments:

Post a Comment