Sunday, January 10, 2016

தீட்டு என்றால் என்ன?

ஒரு ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள ஆண்கள்… அனைவரும் பங்காளிகள் எனப்படுவர்.
மூல புருஷன் எனப்படும் ஒரு ஆண் வழியாக தோன்றும் மகன்-பேரன்-கொள்ளுப்பேரன்-எள்ளுப்பேரன் எள்ளுப் பேரனுக்கு மகன் – எள்ளுப் பேரனுக்குப் பேரன் வரையில் மூல புருஷனையும் சேர்த்து 7 தலைமுறைகள் ஆகின்றது. இதற்குள் அடங்கும் அத்தனை பங்காளிகளில் யாராவது ஒருவர் இல்லத்தில் ஏற்படும் பிறப்பினாலும் (ஜனனத்தாலும்) அல்லது இறப்பினாலும் (மரணத்தாலும்) அனைவருக்கும் தீட்டு உண்டாகும்.தீட்டுக் காலத்திலும் கண்டிப்பாக சந்தியாவந்தனம் பண்ணவேண்டும். காயத்திரி எண்ணிக்கை மட்டும் 10 காயத்திரியுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
மற்ற காம்யமான ஜபங்கள் கிடையாது.
தாய் வழியாகவும் சில தீட்டுகள் ஏற்படும். தீட்டு பற்றிய விஷயங்களுக்கு மூல ஆதாரம் “வைத்யநாத தீக்ஷிதீயம் ஆசௌச காண்டம்” ஆகும்.
இங்கு மிகவும் சுலபமான முறையில் தீட்டு விஷயங்கள் விளக்கப்படுகிறது. மிகவும் நுணுக்கமான விஷயங்களை அறிய ஒரு நாள் அவகாசத்துடன் ஈமெயில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தீட்டு என்றால் என்ன? என்று கூட சிலர் கேட்கிறார்கள்.
தீட்டுக் காரியங்கள் நடக்கும் இடத்தின் மற்றும் பொருடக்களின் சம்மந்தம் ஆன்மீகம் மற்றும் விஜ்ஞான ரீதியாகவும் விலக்கத் தக்கது என்பது கருத்து. ஆன்மீகம் தீட்டு என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது. விஜ்ஞானம் ஹைஜீனிக் என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது.
எனவே ஆன்மீக ரீதியாக யார் யார் எவ்வளவு நாட்கள் பிறரிடமிருந்தும், வழக்கமான மேம்பாட்டு வழிமுறைகள் நெறிமுறைகளிலிருந்தும் சில காரணங்களை உத்தேசித்து விலகி நிற்கச் சொல்கிறது.
உறவைக் கொண்டு அவர்களின் விலகி நிற்கவேண்டிய கால அளவை வெகு அழகாக நிச்சயித்துள்ளார்கள்.
உறவு உள்ள அளவிற்கு எங்களுக்கு நெருக்கமில்லை நாங்கள் ஏன் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்? என்று சிலர் கேட்கிறார்கள்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் கார் செல்லும் வழி, மோட்டார் சைக்கிள் செல்லும் வழி, பஸ் செல்லும் வழி, கனரக வாகனங்கள் செல்லும் வழி, நடந்து செல்லும் வழி என பாதையைப் பகுத்து வைத்து இந்தந்த பாதையில் செல்வோர் இன்னின்ன வேகத்தில் செல்ல வேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளார்கள். நடந்து செல்பவன் காரில் செல்பவன் நடைபாதையில் சென்று கொண்டு, எனக்கு அந்தவிதி பொருந்தாது என்று கூறி அவனுடைய வேகத்திற்குச் செல்லமுடியாது.
அதுபோல, இந்த உறவு இருப்பவர்களுக்கு இந்த அளவு நெருக்கம் இருக்கும் இருக்கவேண்டும் என்பது பொது விதி. அப்படி நெருக்கம் இல்லாதது விதிசெய்தவன் குற்றமல்ல. இதுபோன்ற விதிவிலக்குகளுக்காக வேண்டி விதியை மாற்றி அமைக்க முடியாது. எனவே (உறவு முறையில்) நெருக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உறவுமுறையுடன் பிறந்து தொலைத்த காரணம் கருதி விதிப்படி அநுட்டிப்பதே விவேகமாகும்.
ஜனனம்
கல்யாணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் எந்தத் தீட்டும் இல்லை.
பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு பிரசவித்த பத்து நாளுக்குப் பிறகு எவரும் காக்கத் தேவையில்லை.
பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு 40 நாட்கள் தீட்டு
ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு 30 நாட்கள் தீட்டு
பிறந்தது பெண் குழந்தையானால் கீழ் கண்டவர்களுக்கு பத்து நாட்கள் தீட்டு: குழுந்தையின் உடன் பிறந்தோர்.
அதுபோல குழந்தையின் தகப்பனாரின் ஸஹோதரர்கள், குழந்தையின் தகப்பனாரின் தகப்பனார், (பிதாமஹர்) அவரின் ஸஹோதரர்கள். மேற்கண்டோர் திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு.
குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு 3 நாள் தீட்டு
குழந்தை பெற்றவளின் ஸஹோதரன், மாமா, பெரியப்பர, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டில்லை ஆயினும் அவர்களில் யாருடைய பொருட் செலவில் ப்ரஸவம் நடந்தால், ப்ரஸவம் எங்கு நடந்தாலும் செலவு செய்தவர்களுக்கு ஒரு நாள் தீட்டுண்டு.
10 நாள் தீட்டு
பங்காளிகளில் யார் ஒருவர் இறந்தாலும் 7 தலை முறைகளுக்கு உட்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் அவர்கள் மனைவிகளுக்கும் 10 நாள் தீட்டு உண்டு.
பிறந்து பத்து நாட்களே ஆன புருஷ (ஆண்) குழந்தை இறந்தால் கீழ்க்கண்டவர்களுக்கு பத்து நாள் தீட்டு.
இறந்தவர் (குழந்தை)யின் தந்தை, தாய், மற்றும் மணமான ஸஹோதரார்கள்.
மேற்படி இறந்தது மணமாகாத ஒரு பெண் (குழந்தை) ஆனாலும் மேற்கண்ட அனைவருக்கும் 10 நாள் தீட்டு.
7 வயதுடைய உபநயனம் ஆன பையன் இறந்தால் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு.
7 வயதுக்கு மேல் இறந்தது ஆண் ஆனால் உபநயனம் ஆகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு.
3 நாள் தீட்டு
கீழ்க்கண்ட உறவினர்களின் மரணத்தில் ஆண்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்கும் 3 நாள் தீட்டு.
தாயின் தந்தை (மாதாமஹர்), தாயின் தாய் (மாதாமஹி), தாயின் ஸஹோதரன் (மாதுலன்), மாமன் மனைவி (மாதுலானி), மாமனார், மாமியார் தாயின் உடன் பிறந்த ஸஹோதரி (சித்தி, பெரியம்மா), தந்தையின் ஸஹோதரிகள் (அத்தைகள்)
ஸஹோதரியின் மகன் (உபநயனமானவன்) மருமான். உபநயனமான பெண்வயிற்றுப் பேரன் (தௌஹித்ரன்)
ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள் (ஸமானோதகர்கள்)
கல்யாணமான பெண், கல்யாணமான ஸஹோதரி, ஸ்வீகாரம் போனவனைப் பெற்றவள் (ஜனனீ), ஸ்வீகாரம் போனவனை ஈன்ற தந்தை (ஜனக பிதா), ஸ்வீகாரம் போன மகன் (தத்புத்ரன்)
7 வயதுக்கு மேற்பட்ட கல்யாணமாகாத பங்காளிகளின் பெண்.
2 வயதுக்கு மேற்பட்ட ஆனால் உபயநயனமாகாத பங்காளிகளின் ஆண் பிள்ளைகள்.
7 தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள்.
பெண்களுக்கு மட்டும்
பெண்களுக்கு திருமணத்தின் மூலம் கோத்திரம் வேறு படுகிறது. கணவனின் கோத்திரத்தை (சந்ததியைச்) சேர்ந்தவர்களின் பிறப்பு இறப்பே அவளுக்கும் உரியதாகும். ஆயினும் பிறந்தகத்தைச் சேர்ந்த சிலரது மரணத்தினால் பெண்களுக்கு மட்டும் 3 நாள் வரை தீட்டு சம்பவிக்கும் இந்த தீட்டு அவர்களுடைய கணவருக்குக் கிடையாது. தூரமான ஸ்த்ரீ தனித்திருந்து தீட்டுக் காப்பது போல இதை அவள் மட்டும் காக்க வேண்டியது.
பெண்களின் கீழ்க்கண்ட உறவினரின் மரணத்தில் அவளுக்கு மட்டும் 3 நாள் தீட்டு:
உபநயனமான உடன்பிறந்த ஸஹோதரன், உபநயனமான மருமான் (ஸஹோரதன் பிள்ளை), உபநயனமான ஸஹோதரியின் பிள்ளை, இளைய அல்லது மூத்த தாயார் (தந்தையின் வேறு மனைவிகள்)
பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள்.
கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் பெண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்)
தந்தையுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா, தாயுடன் பிறந்த சித்தி, பெரியம்மா, தாயின் ஸஹோதரர்கள் (மாதுலன்), தந்தையின் ஸஹோதரிகள் (அத்தை)
மேல் நான்கு வகையினரின் பெண்கள், பிள்ளைகள்
தந்தையின் தந்தை – பிதாமஹன், தந்தையின் தாய் – பிதாமஹி, தாயின் தந்தை – மாதாமஹன்
தாயின் தாய் – மாதாமஹி, உடன் பிறந்த ஸஹோதரி, ஸஹோதரியின் பெண்கள், மருமாள் (ஸஹோதரனின் பெண்)
கீழ்கண்டவர்கள் உபநயனமான ஆண், விவாஹமான பெண் மரணத்தால் பெண்களுக்கு மட்டும்
1 நாள் தீட்டு.
தாயின் மூத்தாள் அல்லது இளையாள் (ஸபத்னீ மாதா) குமாரன். ஸபத்னீ மாதா புத்ரீ (குமாரத்தி)
ஸபத்னீமாதா ஸஹோதர, ஸஹோதரிகள். ஸபத்னீமாதா பிள்ளையின் பிள்ளை, பெண். ஸபத்னீ மாதா பெண்ணின் பிள்ளை, பெண். ஸபத்னீமாதா ஸஹோதரியின் பிள்ளை, பெண்.

No comments:

Post a Comment