Wednesday, January 13, 2016

பணிவே வெற்றி.

பணிவே வெற்றி.

மகாபாரத யுத்தம் தொடங்குவதற்கு பாண்டவரும் கவுரவரும் ஆயத்தமானார்கள்.கவுரவர்களின் அரசனான துரியோதனன் தனது நட்பு நாட்டு மன்னர்களுக்கெல்லாம் தூதனுப்பித் தன் படை வலிமையைப் பெருக்கிக் கொண்டிருந்தான்.

பாண்டவரும் தங்களின் படையைப் பெருக்கிக் கொண்டிருந்தனர்.இரண்டு சாராருமே கிருஷ்ணனின் துணையை நாடவேண்டும் எனத் தீர்மானித்தார்கள்.

த்வாரகை மன்னனான கிருஷ்ணனிடம் இருக்கும் பெரும் படை தனக்குத் துணையாக வந்தால் நமக்கே வெற்றி நிச்சயம் எனக் கூறினான் துரியோதனன்.சகுனி மாமாவும்  இதை ஆமோதித்தார..

ஆனால் பாண்டவரின் நண்பனாக இருக்கும் கிருஷ்ணன் அவர்களுக்கு உதவாமல் கவுரவர்களான தங்களுக்கு உதவுவானா, என சந்தேகத்தைக் கிளப்பிவிட்டார். ஆனாலும் துரியோதனன் தானே சென்று கிருஷ்ணனின் படையைக் கேட்பதாகக் கூறிப் புறப்பட்டான்.

இதே நோக்கத்தோடு துவாரகையை  நோக்கி வந்து சேர்ந்தான் அர்ச்சுனன். ஆனால் முதலில் அரண்மனையை அணுகியவன் துரியோதனனே. வாயிலில் நின்ற காவலர் துரியோதனனை எந்தத் தடையும் சொல்லாது உள்ளே அனுமதித்தனர். மன்னர் எவர் வந்தாலும் அவரை உடனே உள்ளே அனுமதிக்கவேண்டும் என கண்ணன் கட்டளை இட்டிருந்ததே காரணம்.

மன்னன் என்ற அகந்தையோடு  உள்ளே கம்பீரமாக நுழைந்தான் துரியோதனன். உள்ளே மஞ்சத்தில் சயனத்தில் இருந்தான் கண்ணன்.கண்களை மூடிப் படுத்திருந்தவனின் காலருகே ஒரு ஆசனமும் அவனது தலையருகே ஒரு ஆசனமும் இருந்தன. முதலில் காலருகே இருந்த ஆசனத்தில் அமரச் சென்ற துரியோதனன் சற்றே சிந்தித்தான்.

இவனோ மாடு மேய்த்தவன். இன்று அரசனாக உள்ளான் இவனது காலடியில் மன்னனான நான் அமர்வதா என நினைத்தான். உடனே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தலைமாட்டில் இருந்த ஆசனத்தில் சென்று அமர்ந்து கொண்டான். கண்ணன் கண்களைத் திறப்பதற்காகக் காத்திருந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் அர்ச்சுனன் அங்கு வந்து சேர்ந்தான்.துரியோதனன் தனக்கு முன்பாகவே அங்கு அமர்ந்திருப்பதைப் பார்த்து திகைத்தான். முதலில் வந்த துரியோதனன் கண்ணனிடம் தான்  கேட்க நினைத்ததைக் கேட்டு விட்டால் என்ன செய்வது என்றே திகைத்தான்.

ஆனாலும் நம்பிக்கையோடு இரு கரம் கூப்பி கண்ணனின் காலடியில் நின்று கொண்டு இருந்தான்.சட்டென அப்போதுதான் விழிப்பவன் போல் கண்ணன் கண்களைத் திறந்து மகிழ்ச்சிக் குரலில் வா,வா, அர்ச்சுனா, நலமா உன் அன்னையார் குந்தி தேவியார் நலமா என்று கேட்டபடியே எழுந்து அமர்ந்தான்.

படுத்தவரின் கண்களுக்கு அவர் எழுந்ததும் முன்னே இருப்பவர் தானே கண்களில் படுவர்.அந்த வகையில் தன் காலடியில் நின்றிருந்த அர்ச்சுனனைப் பார்த்துக் கேட்டான் கண்ணன்.

அதே சமயம் குரலைக் கனைத்துத் தான் அங்கிருப்பதை  அறிவித்தான் துரியோதனன். உடனே துரியோதனன் பக்கம் திரும்பிய கண்ணன் அடேடே துரியோதன மகாராஜாவா? ஏது இவ்வளவு தூரம். வரவேண்டும் வரவேண்டும்.தாங்கள் என்னைத் தேடி வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.என்று அப்போதுதான் பார்ப்பதுபோல் பேசினான்.

"கிருஷ்ணா, உன்னை சந்திக்க முதலில் வந்தவன் நான்தான். என் விருப்பத்தைத்தான் நீ கேட்கவேண்டும்."
"அப்படியா, ஆனால் நான் முதலில் பார்த்தது அர்ச்சுனனைத்தானே.சரி. உன் விருப்பப்படியே ஆகட்டும்.நீயே சொல். என்னைத்தேடி வந்த காரணம் என்ன?"
"கண்ணா, பாரதப் போரில் உன் உதவி எனக்குத் தேவை.

"அவ்வளவுதானே. சரி அர்ச்சுனா, இப்போது நீ வந்த காரணத்தைக் கூறு.
"பரந்தாமா, நானும் உன் உதவியை நாடியே வந்துள்ளேன்."
"கிருஷ்ணா, அர்ச்சுனனைப் போல் நானும் உனக்கு உறவு முறைதான். எனக்குத்தான் முதல் உரிமை தரவேண்டும் உன்னை முதலில் சந்திக்க வந்தவனும் நான்தான்."

"நீங்கள் இருவருமே எனக்கு வேண்டியவர்கள்தான். துரியோதனா,என் படைவீரர் அனைவரையும் தரட்டுமா? நான் ஒருவனே துணையாக வரட்டுமா?நான் போரில் ஆயுதத்தைக்  கையால் தொடமாட்டேன். இந்த இரண்டு துணையில் ஏது உனக்கு வேண்டும் கேள்."

"கண்ணா, உன் படைவீரர் அனைவரையும் தந்தால் போதுமானது.நீயும் போரில் ஆயுதம் தாங்குவதில்லை என்று கூறியிருப்பதை மறக்காதே."
"உன் விருப்பப்படியே செய்கிறேன். மகிழ்ச்சிதானே."என்ற கண்ணன் துரியோதனனுக்கு உபசாரம் செய்து அனுப்பினான். துரியோதனனும் மகிழ்ச்சியுடன் அஸ்தினாபுரம் வந்து சேர்ந்தான்.

அதன்பின் தன் நண்பனும் மைத்துனனுமான அர்ச்சுனனிடம் "அர்ச்சுனா, போரில் ஆயுதம் எடுக்காத நான் உனக்குத் துணையாக வருவது உனக்கு மகிழ்ச்சியா?இதை நீ விரும்புகிறாயா?"என்றான் கண்ணன்.

"பரந்தாமா, நீ எங்களுக்குத் துணையாக இருந்தாலே போதும்.உன்துணை ஒன்றிருந்தால் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.எங்கே துரியோதனன் உன்னைத் தனக்குத் துணையாகக் கேட்டு விடுவானோ என நான் அஞ்சினேன்.நல்லவேளையாக அவன் உன்னைக் கேட்காமல் படையை மட்டும் கேட்டான்."

பின்னர் மகாபாரதப் போரில் கண்ணன் சாரதியாக இருந்து   ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்    அர்ச்சுனனைக் காத்து வந்தான். போர் பதினெட்டு நாட்கள் நடந்தன.

எல்லாப் பகைவரையும் முறியடித்து பாண்டவர் வெற்றி பெற்று தருமன் மீண்டும் அஸ்தினாபுரத்திற்கு அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.
மூல முதல்வனான கண்ணனின் துணையும், அர்ச்சுனனின் பணிவுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று தெரிகிறதல்லவா.

வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் நமது பணிவே நமக்குப் பெரும் துணையாக இருக்கும் என்பதை நாம் இதிகாசக் கதைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment