Thursday, February 11, 2016

மனம் பக்குவமடைதல்:

மனம் பக்குவமடைதல்:
நமக்கு வருகின்ற‌ துன்பங்களைத் தாங்கிக் கொள்வதன் மூலம் மனம் பக்குவமடைகிறது. ஆரம்பக்கட்டத்தில் சிறிய துன்பங்கள் கூடப் பெரிதாகத் தெரியும். அது வளர வளர உள்ளம் மரத்துக் கொண்டே வரும். ஒரு கட்டத்தில் எதையும் தாங்கிக் கொள்கிற சக்தி வந்துவிடும்.
ஓரளவு துன்பம் வந்தால் அழுகை வருகிறது. தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருந்தால், அழுவதற்கு சக்தி இல்லாமற் போய் “வெறுப்பும் விரக்தியும்” கலந்த சிரிப்பு வருகிறது. ஒரு கால கட்டத்தில் எந்தத் துயரம் வந்தாலும் சிரிப்பது பழக்கமாகி விடுகிறது. இப்படி ஒரு மனிதன் பழக்கமடைந்துவிட்டால் அவனது மனம் பக்குவமடைகிறது. அவன் அனைத்து இன்ப துபன்பங்களையும் சம அளவிலேயே கருதுகிறான். இதற்கு ஒவ்வரு மனிதனும் உதாரணமே!!!
மனம் பக்குவமடைதல் பற்றிய பாடல் வரிகள்.
ஆவின மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியான் மெய்நோவ அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்
தள்ள வொணா விருந்துவர சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள் வந்து தட்சணைகள் கொடுஎன் றாரே! ! !
விளக்கம்:
ஒரே நேரத்தில் ஒரு மனிதனுக்கு வரும் துயரங்களின் வரிசையைய் பாருங்கள்.
· பசு மாடு கன்று போட்டதாம்.
· அடாத மழை பெய்ததாம்.
· வீடு இடிந்து விழுந்து விட்டதாம்.
· மனைவிக்கு கடுமையான நோய் வந்ததாம்.
· வேலைக்காரன் இறந்து போனானாம்.
· வயலில் ஈரம் இருக்கிறது விதைக்க வேண்டுமென்று ஓடினானாம்.
· வழியில் கடன்காரர்கள் மடியைய் பிடித்து இழுத்தார்களாம்.
· "உன் மகன் இறந்து போனான்" என்று சாவுச் செய்தியோடு ஒருவன் வந்தானாம்.
· இந்த நேரத்தில் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்து சேர்ந்தார்களாம்.
· பாம்பு அவனைக் கடித்து விட்டதாம்.
· நிலவரி வாங்க அதிகாரிகள் வந்து நின்றார்களாம்.
· குருக்களும் தட்சினைப் பாக்கிக்காக வந்திருக்கிறாராம்.
ஒரே நேரத்தில் இவ்வளவு வந்து சேர்ந்தால் அழுகையா வரும்? இவ்வளவு துன்பங்களையும் சந்தித்த பிறகு ஒருவன் மனம் மரத்துப் போகும். மரத்துப் போன நிலையில் துன்பங்களைக் கண்டு பிடிக்காமல் அலட்சியப்படுத்தத் தோன்றும். "நாமார்க்கும் குடியல்லாம் யோம், நமனை அஞ்சோம்" என்ற தைரியம் வந்து விடும். சிறதளவு இன்பமும் பெரிதாகத் தோன்றும். பேராசை அடிபட்டுப் போகும்.
கண்ணதாசனின் சினிமா பாடல் வரிகள் மனம் பக்குவமடைதல் பற்றி இவ்வாறு கூறுகிறது.
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே...
எனவே நாம் துன்பங்களைக்கண்டு தயங்க வேண்டாம், துன்பங்களே நம் மனதைப்பக்குவப்படுத்தி நல்ல மனிதனாக மாற உதவுகிறது.

No comments:

Post a Comment