Sunday, May 1, 2016

ஸ்ரீ இராம நாம மகிமை

ஸ்ரீ இராம நாம மகிமை

நம் பாரத தேசத்தின் மகத்தான இதிகாச காவியங்களில் ஒன்று மகாபாரதம் (வியாசர்), மற்றொன்று இராமாயணம் (வால்மீகி). நாராயணனின் ஒன்பது அவதாரங்களில் இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் என்பன தனிச்சிறப்புடையது. ஏழாம் அவதாரம் இராமாவதாரமும், எட்டாம் அவதாரம் கிருஷ்ணாவதாரமுமாகும். ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணன் தான் ஓர் அவதார புருஷன் என்றும், தன்னைக் கடவுள் என்றும், பரமாத்மா என்றும் பிரகடனப் படுத்திக் கொண்டார். “எவன் ஒருவன் தன்னைச் சரணடைகிறானோ அவனை ரட்சிப்பதே இந்த அவதார நோக்கம் என்றும், எவன் ஒருவன் அக்கிரமங்களும், அநியாயங்களும், செய்து அரக்கத்தனமாகவும், அசுரத்தனமாகவும் நடந்து கொள்கிறானோ அவனை வதம் செய்வதற்காக யுகாந்தரம் பிறப்பேன் என்றும் கீதையில் வாக்தத்தம் செய்திருக்கிறார்.
இராமாவதாரத்தில் ஸ்ரீஇராமன் அவதாரமானாலும், மனுஷனாகவே நடந்து, ஒரு மனிதன் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதற்கு உதாரண புருஷராக இருந்து, மகா நியாயவாதியாக, சத்தியம், தர்மம் கடைப்பிடிப்பவராக கடைசிவரைக்கும் வாழ்ந்து காட்டினார்.
பதினெண் புராணங்களையும், இதிகாச காவியமான மகாபாரதத்தையும் வியாசமகா முனிவர் எழுதினார் என்பதும், இந்த இராமாயண இதிகாசத்தை மட்டும் ஸ்ரீவால்மீகி முனிவர் எழுதினார் என்பதும் வரலாறு. வியாச பகவானே இந்த இராமாயண இதிகாச காவியத்தை எழுதியிருக்கலாம். அதை ஏன் வால்மீகி முனிவர் எழுத வேண்டும்? அங்குதான் இராம நாம மகிமை பளிச்சிடுகிறது.
வியாசபகவானோ, மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு சகஸ்ரநாமத்தில், “வியாசாய விஷ்ணு ரூபாய, வியாசரூபாய விஷ்ணவே” என்று ஆரம்ப சுலோகத்தில் சொல்லப்படுவதால் வியாசரின் மகிமையும், புலமையும் புலப்படுகின்றன. பல புராணங்கள் எழுதிய வியாசமுனிவர் இராமாயண மகாகாவியம் எழுதாது, வால்மீகி முனிவரால் எழுதப்பட்டது ஏன்? அதன் காரணம் இராமாயண காவியத்தை இயற்ற இராமநாமாவின் சக்தியால்தான் முடியும் என்பதை உணர்த்தவே நாரத மகாமுனி வழி வகுத்து வழிகாட்டுகிறார்.
வால்மீகி பூர்வஜன்ம வாழ்க்கையில் வேடுவனாக, கொள்ளைக்காரனாகப் பிறந்தவர்தான். பிரியம் வைத்த ஆசை நாயகிக்காக எதையும் செய்யும் குணமுடையோன். அவனின் ஆசை மனைவிக்காக கொலை, கொள்ளை செய்து எடுத்து வந்த விலையுயர்ந்த ரத்தினங்களையும், வைரங்களையும், தன் மனைவிக்கு அணிவித்து அழகு பார்த்தவன்.
ஒரு நாள் காட்டில் சாதாரணமாக மகா தபஸ்வியான நாரதமுனிவர் அவனைச் சந்தித்தார். நியாயமாக, மகா தபஸ்வியான முனிவர்களை, நாம் போய் சந்திப்போம். இங்கு முனிவரே சந்தித்தார். அவனும் காட்டில் வாழ்பவன் தானே! அதே காட்டில் ஒரு முனிவரை சந்தித்தான் என்பதுதான் அவனுக்குத் தெரியும். அவர் மகாதபஸ்வி, ஞானி, நாரத மகாமுனிவர், திரிலோக சஞ்சாரி என்பதெல்லாம் அந்த மூடனுக்குத் தெரியாது. அவன் அறிந்திட முயலவுமில்லை. அவன் அறிந்ததெல்லாம் மது, மாது, பொன், பொருள் ஆகியவைதான். அவனிடம் முனிவர் கேட்ட முதல் கேள்வியே “நீ ஒரு கொள்ளைக்காரன். கொள்ளைக்காக, கொலையும் செய்கிறாய். கொள்ளையடித்ததை, உன் ஆசை மனைவிக்கு அன்புடன் கொடுக்கிறாய். அதில் ஆனந்தமும் சந்தோஷமும் அடைகிறாய். அவளும் அதை ஏற்று, உன்னை சந்தோஷப்படுத்தி இன்பங்களை வழங்குகிறாள். இவ்வாறு நடப்பது உண்மைதானே?
“இந்தக் கொள்ளையும் கொலையும் பாபம் என்று உனக்குத் தெரியுமா? வேட்டையாடுவது தான் உன் தொழில். கொள்ளையடிப்பது, கொலை செய்வது உன் தொழில் அல்ல. அதனால் பாபங்கள் உனக்கு வந்தடையும். இதை அவளிடம் “நான் செய்யும் கொலை கொள்ளைகளால் எனக்குப் பாபம் சம்பவிக்கிறது. இந்தப் பாபத்தில் உனக்கும், பந்தமும், கட்டும், கூட்டும் உண்டல்லவா? ஏனெனில் இது உனக்காகச் செய்யப்படும் ஈனச் செயல்கள். அதனால் என் பாபத்தை நீயும் சமபங்கு போட்டுக் கொள்ள வேண்டுமல்லவா?” என்று அவளிடம் சொல். அதன் பின் நாள் உனக்கு நல்வழி காட்டுகிறேன்.” என்று சொல்லிச் சென்றுவிட்டார்.
அந்த வேடுவனும் தன் ஆசை மனைவியிடம் சென்று நாரதர் சொன்னதை அப்படியே வரி விடாமல் சொன்னான். அவளோ, “நீ செய்யும் பாபங்களில் எனக்குப் பங்கில்லை. நான் எப்படிச் சம பங்குகொள்ள முடியும்? உன்னுடைய சுகத்திலும், இன்பத்திலும், புண்ணியத்திலும், வாழ்விலும், சமபங்கு கொள்வேனேயல்லாது, உன்னுடைய அதாவது நீ செய்யும், கொலை, கொள்ளை அதனால் ஏற்படும் பாபத்தில் எனக்குப் பங்கில்லை. ஆனால் புண்ணியத்தில் பங்கு கொள்வேன்” என்று ஆணித்தரமாகப் பதில் சொன்னாள்.
ஓடிவந்தான் அதே இடத்திற்கு, மனம் பதறிப் போய், அந்த வேடுவன் அங்குமிங்கும் அந்த கானக முனிவரைத் தேடினான். கண்ணும் நாலாபக்கமும் அலைந்து தேடியது. அதுதான் குருவை நாடித்தேடி ஓடி வருகிறான். ஆத்ம ஞானம் அடைந்திட. அவனும் கண்டான் முனிவரை. “வேடுவனே! நான் உன்னிடம் சொன்னதை உன் ஆசை மனைவியிடம் கேட்டாயா?”
“கேட்டேனே பலமுறை. அவள் பதில் ஒன்றுதான். நான் கொலை கொள்ளை செய்யும் பாபத்தில் அவளுக்குப் பங்கில்லையாம். என் புண்ணியத்தில் பங்கு கொள்வாளாம். ‘உன் பாபத்தை நான் பங்கு போட்டுக் கொள்ள முடியாது’ என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டாள். அவளுக்காகத்தானே இந்தக் கொடிய தொழிலை மேற்கொண்டேன்? அவளைச் சந்தோஷப்படுத்தவும், அவள் மனம் ஆனந்தப்படவும் தானே, கொள்ளைப் பொருள்களை பரிசாக அவளுக்கு அளித்தேன்? அப்படியிருக்க அவளுக்கு யாதொரு சம்பந்தமும், பந்தமும் இல்லையென்று சொல்லிவிட்டாளே. இதை நான் எங்கே போய்ச் சொல்லி முட்டிக் கொள்ள முடியும்? இனிமேல் இனி எனக்கு என்ன உள்ளது. அதனால்தான் உங்களை நாடி ஓடி வந்தேன். இனி ஒரு வருமில்லை எனக்கு. நான் கடைத்தேறிட வழி சொல்லுங்கள். கேள்வி கேட்கச் சொன்னவரே நீங்கள்தான். இதற்கும் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். நீங்கள்தான் இனி எல்லாம்” என்று அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டான்.
அவனை அறியாமலேயே, அவன் குருவை சரணாகதம் அடைந்துவிட்டான். அவனுக்கு வழி காட்ட வேண்டிய பொறுப்பு நாரதருக்கு வந்தது. நாரதர் சொன்னார், “வேடுவனே! உலகில் ஒன்றும் நிலையில்லை. மனைவி மக்கள், சுற்றம், பொன், பொருள், இந்த உடல் எல்லாம் என்றேனும் ஒரு நாள் அழிந்து விடக்கூடியது. ஆனால் ஒரே ஒரு பொருள் மாத்திரம் அழியாதது, அழிவில்லாதது. அந்தப்பொருளை உனக்கு நான் தருகிறேன். அதை கெட்டியாக உன் மனத்தில் பற்றிக் கொள்.” என்றார்.
“அது என்ன பொருள் சாமி? நீங்க தந்துவிட்டாலோ, சொல்லிவிட்டாலோ, அதை உடும்பாகப் பற்றிக் கொள்கிறேன். அகப்பட்டதைப் பற்றும், உடும்பு போல பத்திரமாகப் பாதுகாப்பேன் மனத்தில்.” என்றான் வேடுவன்.
நாரதர் “உன் காதைக் காட்டு சொல்லுகிறேன்.” என்றார்.
அவர் “ராமா’ என்ற நாமம் மிகச் சிறந்தது. அதைத் திரும்பத் திரும்ப இரவு பகல் பாராமல் நாள்தோறும் சொல்லிக்கொண்டிரு. அதுவே உனக்கு அபயம் அளிக்கும்.” என்றார்.
“ஐயா சாமி! நீங்க சொல்றது ஒன்றும் புரியலையே! இன்னொரு முறை நினைவு கொள்ளும்படியாகச் சொல்லுங்கள்” என்றான். உடன் அவர், “நீ வேடுவன்தானே! அதோ தெரிகிறதே ஒரு மரம் அது என்ன மரம் தெரியுமா?”
“ஓ! தெரியுமே அது மராமரம்.”
“அந்த மராமரத்தின் பெயரையே உச்சரித்துக் கொண்டிரு. அது போதும். உன் முக்திக்கு வழி காட்டும்” என்று சொல்லிச் சென்றுவிட்டார் நாரதர்.
அந்த மராமரத்தின் அடியில் சென்று அமர்ந்தான். “மரா மரா” என்று அதையே உச்சரித்தான். அது ‘ராம ராம’ என மாறியது. பசிதாகம், வெயில், குளிர், மழை எல்லாம் மறந்தான். வசந்தங்கள் மாறின. தக்ஷிணாயனம், உத்தராயனம் மாறின. வருஷங்கள் மாறின. கோலங்களும் காலங்களும் மாறின. மரத்தடியில் தவம் செய்து வந்த இடத்தில் புற்றும் வளர்ந்தது. ஒரே ‘ராம’ சப்தம் தவிர வேறு ஒன்றும் கேட்வில்லை. ஒரு நாள் அகோர மழையில் புற்றும் முற்றும் கரைந்தது. புற்றிலிருந்து தவம் செய்த வேடுவன் நரை தோன்ற தாடி மீசையுடன் வெளிவந்தான்.
அங்கு நாரத மகாமுனி தோன்றினார். புற்றிலிருந்து வெளிப்பட்டதால் வான்மீகி என்று அவனுக்குப் பெயர் சூட்டினார். ராம நாமத்தை பற்பல வருடங்கள் தியானமும், தபமும் செய்தவர் வால்மீகி முனிவர். “இன்று முதல் நீவிர் வால்மீகி மகரிஷி ஆவீர்கள். ராம நாமத்தால் இந்தப் பதவியை அடைந்தீர். நீரே ராம காவியத்தை எழுத வேண்டும் என்பதே நாராயணனின் கட்டளை. உமக்கு இராமபிரானின் சரிதங்களும், நிகழ்ச்சிகளும், நிகழ்வுகளும், சம்பவங்களும், கண்முன் காட்சிகளாகத் தோன்றும் அதைப் பார்த்து ரசித்து இராம காவியத்தை வான்மீகி இராமாயணம் என்று இயற்றும்.” என்று நாரதர் அருள்புரிந்தார். அதன்பிறகு வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தான் இன்றும் நாம் கேட்கிறோம். இதிலிருந்து ராம நாம மந்திரமகிமை புரியும். அந்த இதிகாசத்தை எழுத வைத்ததே ‘ராம மந்திரம்’தான்.
ராம நாமம் மிகச் சிறந்தது என்பதற்கு பாராட்டாக, வியாச மகாபாரதத்தில், ஸ்ரீபீஷ்மர் மரண அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் பொழுது, ஸ்ரீகிருஷ்ணனும், அர்ச்சுனனும் தர்மரும் காண வந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனத்தைப் பீஷ்மர் கண்டு எல்லையில்லா ஆனந்தத்தில் ஆயிரம் நாராயண விஷ்ணு நாமாக்களை சொல்லி தோத்திரம் செய்தார். அந்த விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் பலஸ்ருதியாக, சிவன் பார்வதிக்குச் சொல்வது போல் ஒரு ஸ்லோகம் வருகிறது.
“ஸ்ரீராம ராமேதி ரமே ராமே மனோரமே, சகஸ்ரநாம தத்வல்யம் ஸ்ரீராம நாம வரானனே” என்பதாக வருகிறது. ஆயிரம் விஷ்ணு நாமாக்களை உன்னால் சொல்ல முடியாது போனாலும், அதில் வரும் இந்த ‘ராமா’ என்ற நாமத்தை மட்டும் ஜபித்தாலே போதும், அவன் ஆயிரம் விஷ்ணு நாமாக்கள் சொன்ன பலனை அடைகிறான்” என்று கூறுவதால், இந்த ராமநாமம் மகிமை பெற்றது. அப்படி சிவபெருமானே வாக்குறுதி அளிப்பதால் அந்த ‘ராம ராமா’ இன்னும் சிறப்புடையதாகிறது.
இராமாயணத்தில் ஒரு சம்பவத்தின் நிகழ்ச்சியால் ராம மந்திர மகிமையை உணரமுடியும். ஹனுமான், ஸ்ரீஇராமனின் சிறந்த பக்தர். சதா ராமநாமம் சொல்லும் மகா வியாகரண பண்டிதர். சிரஞ்சீவியான வாயுபுத்திரன். இராமனின் அடிமையான சேவகன். ராம நாமமே அவரின் உயிர் மூச்சு. ராம நாமம் ராம பாணத்தைவிடச் சிறந்தது என்று நிரூபித்தார்.
அப்படி பராக்கிரமசாலியான ஸ்ரீஆஞ்சனேயர், ஒரு சமயம் ஓர் அரசனுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவனை எந்த சக்தியிடமிருந்தும் காப்பாற்றுவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். இராமபிரானே அந்த அரசனை ஆஞ்சனேயரிடமிருந்து மீட்க யுத்தம் மேற்கொண்டார். அது இராம ஆஞ்சனேய யுத்தமாக உருவெடுத்தது. ஆஞ்சனேயர் தன் வாலை சுருட்டியுள்ள கோட்டையில் அந்த அரசனை பத்திரப்படுத்தி, அந்த வாலின் அரியணையில் அமர்ந்து “ராம ராம” என்று தியானம் செய்து கொண்டிருந்தார். ராமபாணங்கள் எகிறின. ஆனால் அவை ஆஞ்சனேயரை ஒன்றும் செய்யாது, பூமாலைகளாக விழுந்தன. இராமரே முன்னின்று போர் நடத்தியும், ‘ராம நாம ஜபம்’ செய்த ஆஞ்சனேயர் தான் வெற்றியடைந்தார். அதை இராமரே ஒப்புக்கொள்கிறார். அந்த ராம மந்திரமே தாரக மந்திரமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இன்னோர் உபகதையும் உண்டு. இராமாயணத்திலே விபீடணன் புஷ்பக விமானத்தில் அயோத்தி மாநகருக்கு வந்து இராமபட்டாபிஷேகம் கண்டும், எல்லாரையும் கண்டு ஆனந்தித்தும், இலங்கைக்குச் செல்லும் வேளையில், விபீடணனின் அயோத்தி நண்பர் ஒருவர், தனக்கு அந்த இலங்கையைச் சுற்றிப் பார்த்திட ஆசையுள்ளது என்று சொன்னதால், புஷ்பகத்தில் அவனையும் அழைத்துக் கொண்டு இலங்கைக்குச் சென்றார். அரசரின் விருந்தினராக பலநாள்கள் இலங்கையில் தங்கி எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்த பின்னர், அயோத்திக்குச் செல்ல ஆசைப் பட்டான். உடன் அவன் “நான் எவ்வாறு கடல் கடந்து போக முடியும்?” என்று விபீடணனிடம் வினவ அதற்கு விபீடணன் “ஒரு மகா மந்திர ஓலையை உன் அரைக்கச்சத்தில் கட்டி விடுகிறேன். அது உன்னை கடலின் அக்கரைக்குக் கொண்டு சேர்க்கும்.” என்று சொல்லி மகா மந்திரம் எழுதிய ஓலையை அவனுடைய அரையில் கட்டி விட்டார். எக்காரணம் கொண்டும் அந்த ஓலையை வழியில் எடுத்துப்பிரித்துப் படிக்காமல் கரை சேரவும். கரை சேர்ந்ததும் கடலில் அந்த ஓலையை எறிந்து விடவும்” என்றும் சொன்னார். அப்படிப் பிரித்துப் பார்த்தால் வழியிலேயே கடலில் மூழ்கிவிடுவாய்.” என்றும் கூறினார்.
அவன் புறப்படும் சமயம் அந்த மந்திர ஓலையை நன்கு முடிந்து கொண்டான். கடற்கரையை அடைந்தான். ஒவ்வோர் அடியாக கடலில் அடியெடுத்து வைத்தான். அவன் தரையில் நடப்பது போலவே உணர்ந்தான். பின் வேகமாகவும், ஓட்டமாகவும் நடந்து முன்னேறினான். பல காத தூரங்கள் கடந்து, இயற்கையையும் கடல் வாழ் ஜந்துக்களையும் ரசித்துக் கொண்டே நடந்து சென்றான். ‘எப்படிப்பட்ட மகாமந்திரம் இந்த ஓலைச் சுவடியில் உள்ளது! அது என்னை இந்த மகாசமுத்திரத்தையே கடக்க வைத்து விட்டதே! உண்மையிலேயே இது ஒரு மகாமந்திரம்தான். அதன் மகிமை பெரியதுதான்’ என்று வியந்தான்.
தூரத்தில் கரை தெரிய ஆரம்பித்தது. ‘இன்னும் சில காத தூரமே தானிருக்கிறது. நான் மந்திர ஓலையால் மா கடலை கடந்து வந்து விட்டேன்? அவனுக்குள் ஓர் ஆர்வம். இந்த மகா மந்திரம் என்னவாக இருக்கும். அப்படிப்பட்ட மகிமையுள்ள மந்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று ஏற்பட்ட ஆவல் உந்துதலால் அந்த ஓலையை எடுத்துப் பிரித்து உரக்கவே படித்தான். அதில் ராம் ராம் என்று பலமுறை எழுதியிருந்ததைக் கண்டான். ஆச்சர்யத்துடன் ‘பூ’ இவ்வளவுதானா? இந்த ராம மந்திரம் தான் எனக்கும் தெரியுமே! இதில் ரகசியம் என்ன?’ என்று நினைப்பதற்குள், அவன் தண்ணீரில் மூழ்கினான். அந்த மந்திர ஓலை கையில் இருந்ததால் நீந்திக்கரை சேர்ந்தான் என்பது அதன் சுவாரஸ்யம். அதன் சாராம்சம் ‘ராம’ என்ற நாம மகிமைதான் காரணம். அதுதான் தாரக மந்திரமுமாகும்.
தியாகராஜ சுவாமிகள் மும்மூர்த்திகளுள் ஒருவர். தெலுங்கில் பல கீர்த்தனங்கள் எழுதி இசை உலகுக்குப் பெருமை சேர்த்தவர். இராமனுடைய கதைச் சம்பவங்களை வைத்தே பல பாடங்கள் புனைந்துள்ளார். இராமனையும், ராம நாமத்தையும் சிறப்பித்துப் பல பாடல்கள் தானே ரசித்து, பாடி, தோத்தரித்திருக்கிறார். அவர் தன்னுடைய கீர்த்தனையில் ‘ராம என்பது மகாமந்திரம். அந்த மந்திரம், சைவாகமத்திற்கும், வைஷ்ணவாகமத்திற்கும் உரியது. இரண்டும் கலந்த சேர்க்கைதான் ராம மந்திரம்’ என்று விளக்கியிருக்கிறார். அவர் ராம நாமத்தை தொண்ணூறு கோடி வரை ஜபம் செய்தவராம். இராமபிரானையே தரிசனம் செய்த மகாபுண்ணியவான்.
விஷ்ணுவும் சிவமும் கலந்த கலவை ராம நாமம் என்பதைச் சொல்லுகிறார். “ஓம் நமோ நாராயணாயா” என்று அஷ்டாட்சரத்திலிருந்துள்ள ‘ரா’ என்ற சப்தத்தையும், “ஓம் நமசிவாயா” என்ற பஞ்சாட்சரத்திலிருந்து ‘ம’ என்ற சப்தத்தையும் வேறுபடுத்தி விட்டால் “நாயணாயா” என்றும் “நசிவாயா” என்றும் மாறுபடும். அப்பொழுது அதன் அர்த்தமே அனர்த்தமாக ஆகிறது. அப்படியானால் இந்த இரண்டு நாமாக்களுக்கும் ஜீவனானது ‘ரா’வும் ‘ம’வுந்தான். அந்த இரு ஜீவன்களையும் ஒன்று சேர்த்தால் வருவதே ‘ராம’ மந்திரம். இந்த சப்த ஒலியினால் அந்த மந்திரம் மகாமந்திரம் என்று பெருமை உடையதாகிறது. இரு மத சாராருக்கும் இந்த மந்திரம் பொதுவாகிறது என்பதால் இதுவே ‘தாரக மந்திரமாகும்’. “தாரகம்” என்றாலே சம்சாரமான சாகரத்தைக் கடக்க வல்லது என்பதாகிறது. நம்மைக் கரையேற்றும் அல்லது கரை சேர்க்கும் மந்திரம் ‘ராம’ மந்திரம்.
ராம மந்திரம் முக்தி மோட்சம் ஆகியவற்றுக்குக் காரணமாகிறது. ஒருவர் இறக்கும் தறுவாயில் அவருடைய காதுகளில் ‘ராம ராம’ என்று ஓதுவார்கள், அவருக்கு நற்கதி கிடைக்க வேண்டுமென்று. காசியில் இன்னும் இதை நடைமுறையாகச் செயல் படுத்துகிறார்கள். காசி விஸ்வநாதரே, ராம மந்திரம் உச்சாடனம் செய்வதாக ஐதீகம் சொல்லப்படுகிறது.
இலங்கைக்குச் செல்ல குரங்குகளால் சேது பந்தனமான பாதை அமைக்கையில் குரங்குகள் எல்லாம் மலைகளையும் பெரிய பாறைகளையும் கடலில் போடும் பொழுது ஹேராம் ஹேராம் என்று சொல்லித்தான் போட்டார்களாம். இராமனே கூட இருக்கையில் அங்கு ராம நாமம்தான் துணையாகியது. அப்பாறைகள், மலைகள் எல்லாம் கடலில் மிதந்தே பாதை யாக்கியது.
‘இராமன்’ என்பது தெய்விகமான பெயர். அது ஆன்மிகமானதும், பரிசுத்தமானதும், உயர்வானதுமான பெயராகும். வசிஷ்டமகரிஷி எப்போதும் ராம நாமத்தை உச்சரிப்பதால் தான் இராமருக்கே அப்பெயரைச் சூட்டினாராம். அதே போல் இராம நாமமும் தெய்விகமும் ஆன்மிகமும் புனிதமும் உடைய பரிசுத்த தாரக மந்திரம்.
அதனால்தான் வாழ்க்கை நடைமுறையில் ‘ராம’ நாமத்தை தினம் எழுதுவதும் ஆஞ்சனேயர் பாதங்களில் சமர்ப்பிப்பதும், மாலையாகப் போடுவதும், கோடி நாமாக்கள் எழுதுவதும் இன்று நடைமுறையாக இருப்பதிலிருந்தே ராமநாம மந்திர மகிமை புரியும்.
கம்பர் தன்னுடைய இராமாயணத்தில் ஆரம்ப பலசுருதியாக
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாபமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண்டெழுத்தினால்”
என்று ஆணித்தரமாகச் சொல்லுவதால் ராம நாம மகிமை நன்குபுரியும்.
பக்த இராமதாஸ் கதை எல்லாருக்கும் தெரிந்திருக்கும். நவாப்பிடம் கடன் பட்டதால் சிறை தண்டனை அடைந்தார். ஸ்ரீராம பக்தரானதால், ‘பக்தராமதாஸர்’ என்ற பெயர் கொண்டார். ராம நாமம் தான் ஜீவன் என்று சதாசர்வகாலமும் ராம ஜெபமும், ராம பஜனும் செய்து கொண்டிருந்தார். அவர் நவாப்பிடம் ஏற்படுத்தின கடனை, ராம, லக்ஷ்மணர்கள் ராம் ரஹீமாக வந்து கடனை அடைத்து ராமதாஸைச் சிறையிலிருந்து மீட்டார்கள். இராமபிரானே மாறு வேடத்தில் வந்து அவரைக் காப்பாற்றினார் என்பது கலியுலகில் நடந்த வரலாறு. அவர் மனம் உருகி சிறையில் வைத்துப் பாடிய பாடல்
“ஓராம! நீ நாமம் ஏமிருசிரா
ஸ்ரீராம நீ நாமம் ஏமிருசிரா
எந்த ருசிரா ராம ஏமிருசிரா ராம
ஓ! ராம நீ நாமம் எந்தருசிரா!”
என்று ஆனந்தமயமாகப் பாடியிருப்பதை பூர்வி கல்யாணி ராகத்தில் ஆதி தாளத்தில் வித்வான்களால் பாடப்படும் அபூர்வ கீர்த்தனையாகும்.
அவர் அருளிய இன்னொரு பாடல்-
“அந்தா ராம மயம் ஈஜகத் அந்தா ராம மயம்” என்ற பல்லவி பந்துவராளி ராகத்தில் இன்றும் பாடப்பட்டு வருகிற ஒரு சங்கதி.
இன்னொரு பாடலால்
“ராம நாம தாரகம் ஸதா பஜரே,
ஸதா பஜரே, ஸதா ஜபோரே”
என்ற நாமாவளியும் பிரசித்தி பெற்றது. ராம நாம தாரகத்தை எப்போதும் சதாகாலமும் ஜெபியுங்கள்.
சதாசிவ பிரம்மேந்திரார் ராம நாம மகிமையை ஒரே வரியில் சொல்லுகிறார்.
“பிபரே ராமரஸம் ஹேரஸனே” என்று பல்லவியிலும் சரணத்தில்
“ஜனன மரணபய சோக விதூரம்
ஸகல சாஸ்திர நிகாமக ஸாரம்”
என்று பைரவி ராகத்தில் பாடப்படும் கீர்த்தனையால் ராம நாமத்தின் மந்திரமகிமை புரிகிறது. இதை விட ராம மந்திரத்திற்கு வேறு ஆதாரம் வேண்டுமா?
ஆதி சங்கரர் இராமனைப் பற்றிப் புகழ்ந்து சொல்லும்பொழுது, ‘ராம நாமம் போல் இனிது வேறு உளதோ? ராமர் போல் வேறு தெய்வம் இனி உளதோ?’ என்றும் கூறியிருக்கிறார்.
ஸ்வாமி வேதாந்த தேசிகர் தான் எழுதிய “ரகுவீர கத்யத்தில்” ராம நாம மகிமையையும், ராம மந்திரத்தின் திறத்தையும் இராமரின் சாகசங்கள் பற்றியும், குணாதிசயங்களைப் பற்றியும் பாடியிருப்பது வைஷ்ணவ சம்பிரதாயிகள், அதை மனப்பாடமாக சொல்லுவார்கள்.
மந்திரம் என்றாலே மகத்தான சொல்லுடையது. அக்ஷரங்களின் ஒலி அலைகளின் கூட்டுத்தான் மந்திரம். அந்த மந்திரமான சொல்லை நாம் உச்சாடனம் செய்யும்போது நம்மைச் சுற்றி ஒலி அலைகள் வளையமிட்டு கவசமாக நம்மைப் பாதுகாப்பதால், அதை மணி மந்திர ஔஷதம் என்றார்கள். நாம மந்திரம் ராம கவசமாக நம்மைச் சுற்றிக் காவல் புரிவதால் தான் இதை “ராமம் பஜே சியாமளம்” ராமா என்று பூஜித்தால் மங்களம் உண்டாகும் என்பது வாக்கு.
நம் உடலில் ஏழு குண்டலினி சக்திகள் இருப்பதாக யோக சாஸ்திரம் சொல்லுகிறது. ஆறு ஆதாரங்களிலும் ஸஹஸ்ராரம் என்பதிலும் ஆக ஏழு சக்கரங்களில் திரிந்து கொண்டு அந்தந்த ஜீவனின் ஆயுள் பிரமாணத்தைக் காட்டிக்கொண்டு வருகின்றன. அதில் ‘ரா’ மூலதாரக் குண்டலினியையும், ‘மா’ என்பது ஸஹஸ்ரார குண்டலினியையும் அதாவது முதலாவதும் கடையானதுமான குண்டலினிகளின் அக்ஷராமாவதால் ‘ராவும் மாவும்’ ஆதியும் அந்தத்தையும் குறிப்பிடுவதுபோல் அமையப்பட்டதிலிருந்து அந்த இரு எழுத்துகளின் வல்லமையும், வலிமையும் புரியும். ஆதலால் அதுவே சக்தியுள்ள மூலாதார தாரகமந்திரமாகும்.
ராம மந்திரத்தின் முக்கியமே, இந்த மந்திரத்தை எப்பொழுது வேண்டுமானாலும், நேரம் காலம் பாராது எக்காலத்திலும் எந்நேரத்திலும் மனதாரச் சொல்லக்கூடிய மகா மந்திரம் இது ஒன்றே என்பதுதான். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் காலநேரக் கோட்பாடுகள் அனுஷ்டானம், ஆசாரம், உபதேசம், குருமுகமாக அறிதல் ஆகியனவெல்லாம் வேண்டும். ஆனால் இந்த ராம மந்திரத்திற்கு இவை ஒன்றும் தேவையில்லை.
மனம் லயித்து, மனம் ஒன்றி, ஏக வசனமாக சொல்லக்கூடிய மகாமந்திரம் ராம மந்திரமே. இதை சாத்வீகர்களும், சகுணகுணமுடையோரும், நிர்குண உபாசிகளும் தியானம் செய்யும் மந்திரம். இரண்டெழுத்தின் ஜீவனான மந்திரம். ஜீவாத்மாவான நம் இருதயத்தில் புகுந்து பரமாத்மாவுடன் ராம மந்திரத்தால் ஐக்கியமாவது தான் தாத்பரியம்.
ராம நாமம் முக்தியைக் கொடுக்கும். மற்றதான யோகம், ஞானம், கர்மம், தியானம் ஆகிய ஒன்றும் இல்லாமல் வெறும் ‘ராம’ என்ற அக்ஷரத்தை ஆவர்த்தியாய்ச் சொன்னால் அவன் அமரருலகமும் எய்துவான் என்பது பிரமாணம்.
மகாத்மா காந்தியடிகள் எப்பொழுதும் ராம நாமம் உச்சரிப்பவர். அவர் குண்டடி பட்டதும் “ஹே ராம்” என்று சொல்லித்தான் சாய்ந்தார்.
ராம நாமம் சொல்லப்படும் இடமெல்லாம் ஆஞ்சனேயர் இருப்பார் என்பது ஐதீகம்.
வால்மீகி இராமாயணம் பலமொழிகளில் பிரசித்தி பெற்றது. தமிழில் கம்பரால் எழுதப்பட்டது ‘கம்பராமாயணம்’ என்றும் ஹிந்தியில் துளசிதாஸர் எழுதியது ‘துளசிதாஸ ராமாயணம்’ என்றும், சமஸ்க்ருத மொழியில் கவிகாளிதாசர் ‘ரகுவம்சம்’ என்றும், மலையாள மொழியில் எழுத்தச்சன் எழுதியது ‘ராமகதா’ என்றும் மராட்டிய மொழியில் ‘ஏக்நாத பர்வர்த்த ராமாயணம்’ என்றும் இருப்பவை இன்றும் மக்களால் போற்றிக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதே சமயம் ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்று இராஜகோபாலச்சாரியார் உரை நடையாக எழுதியதும், சோவின் வான்மீகி இராமாயணம் உரை நடையாக இருப்பதும் இன்றும் மக்களிடம் காவியமாக நிலைத்து நிற்கிறது ராம நாமம் போல.
சாஸ்திரம் படித்திருக்காவிட்டாலும் வேதங்கள் தெரிந்திருக்கவிட்டாலும் மந்திர உபதேசங்கள் அறிந்திருக்காவிட்டாலும் இந்த ‘ராம’ நாமத்தைப் பாராயணம் செய்தாலே போதும். அவனுக்கு சகல சௌபாக்கியங்களும், சௌகரியங்களும் அடைந்து சந்துஷ்டியாகவும், சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்திடுவான் என்பது கண் கூடு. அந்த ராம நாமம் நமக்கு சுபிட்சம் தரும், என்பது வேதவாக்கு.
இதனை ராக மாலிகையாக ‘நாரணன்’ எழுதியது.
“இராமனை நினைவு கொள்வாய் மனமே-அந்த
கோசலை மகனை துதி செய்வாய் தினமே!
சித்திரை நவமியில் புனர்பூசத்தில் பிறந்து
இத்தரை மாந்தர் வாழ்வில் உய்யவே அவதரித்த அந்த”
இவ்வளவு எளிமையான, இனிமையான லகுவான ராமமந்திரம் வாழ்வைக் கடைத்தேற்ற இருக்கையில் நாம் அதை அனுசரித்துக் கடைப் பிடித்து வாழ்வில் வெற்றியடைவோமாக.
ஸ்ரீ ராம நாமத்தின் மகிமை பற்றி கூற வேண்டும் என்றால் பல ஆயிரம் கதைகள் கூறலாம். ஆனாலும், ஒரு சிறு கதையை மட்டும் உங்களுக்கு கூறுகிறேன்.
ஒரு ஊரிலே ஒரு வயதான ஏழை பிரம்மச்சாரி இருந்தான். அவனுக்கோ கண்கள் குருடு. ஆனால் ராம பக்தன். அவனுடைய பக்தியினைக் கண்டு இரங்கி ராமபிரான் காட்சியளித்தான். 'ஒரே கேள்வியைக் கேட்டு வரம் பெற்றுக் கொள். கண்டிப்பாக மறு கேள்வி கேட்கக் கூடாதுதென்றான்.' ராமபிரான். கிழவனும் சரியென்று ஒப்புக்கொண்டு ஒரே ஒரு வரம் கேட்டான்.
'ஏழு அடுக்கு மாளிகையில் தங்கக் கரண்டியால் என் பேரன் பாலை குடிப்பதை எனது கண்களால் பார்க்க வேண்டும்..' என்று ஒரே ஒரு வரம் கேட்டான். வரம் கொடுத்து ராமபிரான் சென்று விட்டான்.
வீடு இல்லாதவனுக்கு வந்து விட்டது மாளிகை. பேரன் பிறக்க வேண்டுமானால், அவன் கல்யாணம் முடிக்க வேண்டும் அல்லவா? கிழவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? வர பலத்தால் இளமையும் வந்துவிட்டது. பால் குடிக்கும் கரண்டியே தங்கமானால் எவ்வளவு செல்வம் வரவேண்டும்? அவ்வளவு செல்வமும் வந்துவிட்டது. பேரனைப் பார்ப்பதற்குக் கண்கள் வேண்டுமல்லாவா?
கண்களும் வந்து விட்டன.
கிழவனுக்கு ராமநாம ஜெபத்தின் மகிமையால் தெளிவான ஒரே கேள்வி கேட்டதின் பயனால், மாளிகை , இளமை, செல்வம், கண்கள், இல்லற வாழ்வு இத்தனையும் பெற்றான்.
பக்தி நெறியிலீடுபட்டால் தெளிவான கேள்விகள் உதயமாகி, அறிவு தெளிவடையும்.
ஸ்ரீ ராம ஜெய

No comments:

Post a Comment