Friday, June 17, 2016

குருமார்கள் ஏன் ஆடம்பரமாக இருக்கிறார்கள்?

குருமார்கள் ஏன் ஆடம்பரமாக இருக்கிறார்கள்?
விமானத்தில் பயணம் செய்கிறார்கள், தொலைக்காட்சியில் தலைகாட்டுகிறார்கள் என்று குருமார்களை சாடி ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு சத்குரு அளித்த பதில் இந்தப் பதிவில்… கேள்வி சில குருமார்கள் தொலைக்காட்சியில் ஏன் அடிக்கடி தலைகாட்டுகிறார்கள்? குளிரூட்டப்பட்ட அறை, விமானப் பயணம் என்றெல்லாம் ஏன் இவ்வளவு ஆடம்பரமாக வாழ்கிறார்கள்? சத்குரு: தொலைக்காட்சி என்பது தொழில் திறனின் முன்னேற்றம். மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்றவர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டுமா? துறவிகள் தங்கள் வேலையை மேம்படுத்திக் கொள்ள பயன்படுத்தக் கூடாதா? லட்சம் பேர் கூடியிருக்கும் இடத்தில், தொழில்திறனைப் பயன்படுத்தி மைக்கில் பேசாமல் குரு எப்படிப் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் படிக்கும் இந்தக் காகிதத்தில் அச்சாவது கூட தொழில் திறன்தான். குருவிடம் சென்று குருகுல வாழ்க்கை வாழ நீங்கள் தயாரா? துறவிகளும், குருமார்களும் நடந்துதான் போக வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மாட்டு வண்டியில் பயணம் செய்து ஓரிடத்தை அடைவதற்கு மிகுந்த காலம் பிடிக்கும் என்பதற்காக விமானத்தில் பயணம் செய்வது தவறாகுமா? அட, மாட்டு வண்டி என்பது கூட ஒருவிதத் தொழில் திறன் தானே. வருடத்திற்கு நான்கு முறை வகுப்பெடுப்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்ல நேர்கிறது. விமானம் இன்றி இது எப்படி சாத்தியம்? வாழ்நாள் மிகக் குறுகியது. வாழ்நாள் முடிவதற்குள் அதை எவ்வளவு ஆழமாக அழுத்தமாக வாழ்கிறோம் என்பதே முக்கியம். எவ்வளவு தூரம் மற்றவர்களுக்குப் பயன்பட முடியும் என்று வாழ்வைப் பற்றிய சிந்தனை உள்ளவர்கள், அதற்காக சில வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதை ஆடம்பரம் என்று எப்படி அர்த்தம் செய்துகொள்ள முடியும்? குரு என்றால் காற்று வராத குகையில் அமர்ந்திருக்க வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பா? அவ்வளவு பழமையானவரா நீங்கள்? கற்காலத்தை விட்டு விலகி வாருங்கள். வாழ்வை வளர்ச்சியாகப் பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment