சிவராத்திரி 2ஆம் ஜாம நேரம்: இரவு 11.00 முதல் 12.30 மணி வரை சிவராத்திரி 3ஆம் 
ஜாம நேரம்: அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை சிவராத்திரி 4ஆம் ஜாம நேரம்: 
அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை
சிவராத்திரி நான்கு ஜாமங்களாக உள்ளன. அக்காலங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்து 
அலங்கரித்து அர்ச்சித்து ஆராதனைகள் ஒவ்வொரு ஜாமத்திலும் செய்வார்கள். சிவராத்திரி 
தினத்தில் அதிகாலை முதல்  சிவசிந்தனையுடன் எல்லா காரியங்களும் செய்தால் நன்மை 
பயக்கும். 
அன்ன ஆகாரம் இன்றி பால், பழம் போன்றவைகள் ஒருவேளை மட்டும் உண்டு இறைவனின் 
பஞ்சாசரத்தை சதா சர்வகாலமும் ஓதியபடி இருந்தால் மன அமைதி பெற்று வாழ்வில் பலவித 
மாற்றங்கள் நமக்கு நன்மை தருவதாக அமையும். சிவாயநம என சிந்திப்போருக்கு அபாயம் 
ஒருபோதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. 
சிவராத்திரி தம்பதிகளாக கணவன்-மனைவி ஆகிய இருவரும் சிவலிங்க வழிபாடு செய்தால் 
இல்லறம் இன்ப மயமாக திகழும். தம்பதிகள் அன்யோன்ய அன்பு நிறைந்து இறைவனின் 
திருவருளால் வளமுடன் வாழ்வார்கள். 
திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரியன்று லட்சதீபம் ஏற்றுவார்கள். 
அதனை காண்பது சிறப்பாகும். சிவராத்திரி தினத்தில் சிவனை மனதார நினைத்து இரண்டாம் 
ஜாமத்தில் கிரிவலம் செய்தால் நினைக்கின்ற காரியம் வெகுவிரைவில் முடியும்
1.சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். எனவே சிவராத்திரி 
ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது. 
2.சிவராத்திரி அன்று விரதம் இருந்து, கண் விழித்து சிவபூஜை செய்ய வேண்டும். 
தூய ஆடைகளை அணிந்து கொண்டு, திருநீறு பூசிக்கொண்டு சிவனை தியானம் செய்ய வேண்டும் 
சிவனுக்குரிய மந்திரங்களைக் கூறி வழிபட வேண்டும். 
3. சிவராத்திரி விரதம் இருந்து, நமசிவாய என்ற மந்திரத்தை இரவு முழுவதும் 
உச்சரித்தால் மகத்தான பலன்கள் கிடைக்கும். 
4. வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர் அவசியம் சிவராத்திரி 
விரதம் இருக்க வேண்டும். 
5. சிவாலயத்தில் பலி பீடத்துக்கு அருகில்தான் நமஸ்கரிக்க வேண்டும். 
6. 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒரு எண்ணிக்கையில் நமஸ்காரம் 
மேற்கொள்ளலாம். 
7.கோவிலில் வடதுபுறம், கிழக்குப்புறம் கால் நீட்டக் கூடாது. 
8. ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய 
வேண்டும். 
9. கிழக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் தலை 
வைத்து வணங்க வேண்டும். 
10. தெற்கு, மேற்கு நோக்கிய சந்நிதிகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் 
தலை வைத்து வணங்க வேண்டும். 
11. வடக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் தலை 
வைத்து வணங்க வேண்டும். 
12.சூரிய கிரகணத்தின் போதும், பொங்கல் தினத்தன்றும் மேற்கே கால் நீட்டி 
வணங்கக் கூடாது. 
13. சிவாலயத்துக்குள் எப்போதும் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் 
மேல் குவித்து) செய்ய வேண்டும். 
14. பிராகாரத்தில் பிரதட்சணம் செய்யும் பொழுது மிகவும் நிதானமாகச் செய்ய 
வேண்டும். 
15. உட்பிராகார பிரதட்சணத்தைவிட வெளிப்பிராகார பிரதட்சணமே மிகவும் சிறந்தது. 
16. ஆலயத்தில் குறைந்தது மும்முறை கொடிமரத்துக்கு அருகே வணங்க வேண்டும். 
மும்முறை வலம் வரவேண்டும். 
17.அபிஷேக காலத்தில் பிரதட்சணம் செய்யக்கூடாது. கொடிமரத்தையும் சேர்த்து 
பிரதட்சணம் செய்ய வேண்டும். 
18. ஆலயத்தை விட்டு வெளிவரும்போது கொடிமரத்துக்கு அருகில் வணங்க வேண்டும். 
ஆலயத்துக்குள் எந்த சந்நிதியிலும் வணங்கக்கூடாது. 
19. பிரதட்சணத்தின் போது தலை பூமியை நோக்கி குனிந்திருக்க வேண்டும். நிலம் 
அதிர நடக்கக் கூடாது. பிறருடன் பேசிக் கொண்டு பிரதட்சணம் செய்யகூடாது. 
20. இறைவன், இறைவிக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது பிரதட்சண நமஸ்காரங்களைத் 
தவிர்க்க வேண்டும். ஆலயத்தில் ஆண்டவனைத் தவிர வேறு எவரையும் வணங்கக்கூடாது. 
21. ஆலயத்தில் நெய்விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும். நல்லெண்ணைய் 
ஆரோக்கியத்தை அளிக்கும். 
22. தேங்காய் எண்ணெய் வசீகரத்தை அளிக்கும். இலுப்ப எண்ணெய் சகல காரியங்களிலும் 
வெற்றியைத் தரும். மறு ஜென்மத்திலும் நன்மை அளிக்கும். 23. திருமணமாகி 5 
ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் ஸ்ரீதட்சணாமூர்த்தி 
அஷ்டகத்தை  வியாழக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஒன்பது தடவை பாராயணம் 
செய்தால் பலன் கிடைக்கும். 
24. பூவும், நீரும் சிறந்த சிவபுண்ணியம். செல்வமும், அமைதியும் பெற மகேசனை 
பூவும், நீரும் கொண்டு வழிபட வேண்டும். 
25. சிவனின் திருமேனியில் சந்தனக்காப்புப் பொருத்திக் குளிர்வித்தால் உலகில் 
உள்ள எல்லா உயிர்களையும் குளிர்விப்பது போல் ஆகும். 
26. கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் முதலான நறுமணப் 
பொருள்கள் கலந்து இறைவனுக்கு ஒரு முறை சந்தனக் காப்பு செய்தவர்கள் தேவ வருடத்தில் 
கோடி வருடம் சிவலோகத்தில் இன்புற்றிருப்பார்கள். 
27. உமாதேவியுடன் இணைந்த சிவபிரானை பூஜிக்கின்றவர்கள் பிறவிப்பயனை 
அடைந்தவர்கள். அவர்கள் பேரின்பத்தை அடைகிறார்கள் என்று சிவானந்தலஹரி கூறுகிறது. 
28. சிவாலய வழிபாடு செய்யும் போது லிங்கத்திற்கு வலப்புறம் இருந்து பணிய 
வேண்டும். 
29. பங்குனி உத்திரம் சிவனுக்கு மிகவும் சிறந்த தினமாகும். 
30. சிவபெருமானுக்குரிய திருப்பணிகள் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தும் 
குற்றமற்ற நல்ல அறமே ஆகும். 
31. சிவன் விரும்பி அணிபவை வெள்ளை எருக்கம் பூ, அருகம்புல், ஊமத்தை, வெண்ணீறு 
ஆகியவையாகும். 
32. சிவன் கையில் ஏந்தி இருப்பவை சூலம், மான், மழு, துடி, அக்னி. 
33. சிவனுக்கு ஆடை தோல். 
34. சிவனுக்கு வாகனம் காளை. ஆபரணம் பாம்பும், எலும்பும். மாலை மண்டை ஓடுகள், 
பன்றிக் கொம்பு, பிட்சை பாத்திரம். 
35. சிவனுக்குப் புஷ்பாஞ்சலி செய்யும்பொழுது எல்லாப் புஷ்பமும் கலந்து 
செய்யலாம். 
36. முதல்நாள் சாத்திய வில்வத்தை எடுத்து நீரில் கழுவி மீண்டும் சிவ பூஜை 
செய்யலாம். ஒரு மாத காலத்திற்கு இவ்வாறு செய்யலாம்.
37. தாமரை, வில்வம்,  சதபத்ரம் ஆகியவற்றால் சிவனை அர்ச்சிப்பவன் பெரும் 
செல்வத்தை அடைவான். நீலோத் பலம், ஜாதி மல்லிகை, பாடலம், அரளி, ஆத்தி, கோங்கு, 
முல்லை, பலாசம் ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம். 
38. புஷ்பபலன் என்னும் நூல் ஒரு கொன்றை மலரை சிவனுக்கு சாத்துபவர் சாலோக 
பதவியையும், இருமலர்கள் சாத்துபவர் சாமீப பதவியையும், மூன்று மலர்கள் சாத்துபவர் 
சாரூப பதவியையும், நான்கு மலர்களைச் சாத்துபவர் சாயுஜ்ய பதவியையும் அடைவர் என்று 
கூறுகிறது. 
39. வில்வமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால், ஒரு வில்வம் லட்சம் சொர்ண 
புஷ்பங்களுக்குச் சமம். இதில் ஒன்றினை ஈசனுக்கு அர்ப்பணித்தால் மகாதோஷங்களும் 
நீங்கி, சகல நன்மைகளும் உண்டாகும். 
40. சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யும்போது, அதன் பின்பக்க நரம்பு 
மூர்த்தியின் மேல் படும்படி போட வேண்டும். அந்தப் பக்கம் தான் லட்சுமி வாசம் 
செய்கிறார். ஒற்றைப்படை இதழ்களைக் கொண்ட வில்வம் அர்ச்சனைக்கு மிகவும் நல்லது. 
41. மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோவில் உள்ளது. சிவபெருமானே 
சிவபெருமானை வழிபட்ட தலம் இது. 
42. சிவராத்திரியன்று திருவிடைமருதூரில் ஈசனை வழிபட்டால் ருத்ரபாதம் 
கிடைக்கும். 
43. சிவராத்திரியன்று கோவிலில் சென்று வழிபட்டால் சொர்க்கலோகம் 
கிடைக்கும்.
44. ஒருவர் தொடர்ந்து 24 ஆண்டுகள் மகா சிவராத்திரி விரதம் கடைபிடித்தால், 
அவரது 21 தலைமுறையினர் நற்பலன்களைப் பெறுவார்கள். 45. திருவைகாவூரில் 
சிவராத்திரியன்று ஈசன் திருவீதியுலாவை கண்டு தரிசித்தால் ஏழேழு ஜென்ம பாவங்கள் 
விலகும். 
46. மகா சிவராத்திரி செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமை வந்தால், அன்று சிவபூஜை 
செய்து தானம் செய்தால் 3 கோடி மடங்கு புண்ணியம் தரும். 
47. சிவராத்திரியன்று ருத்ராட்சம், சிவலிங்கம், விபூதிப்பை தானம் செய்வது 
சிறப்பான பலன்களைத் தரும். 
48. மகா சிவராத்திரி : பாற்கடலில் தோன்றிய நஞ்சைச் சிவபெருமான் உண்டு கண்டம் 
கருத்தனால் நீலக்கண்டன் என்ற திருநாமம் பெற்றார். அந்த நாள் மகா சிவராத்திரி என்று 
புராணம் சொல்லுகிறது. 
49. பார்வதி சிவபெருமான் கண்களை மூட உலகம் இருளில் மூழ்கியது. தேவர்கள் வேண்ட 
நெற்றிக் கண்ணைத் திறந்தார். இந்நாள் சிவராத்திரி ஆகும். இதனை அப்பர் கூறியுள்ளார். 
50. மோட்சம் அடைய நான்கு வழிகள்:- 
1. சிவனை அர்ச்சிப்பது. 
2. ஸ்ரீருத்ரம் பாடலைப் பாராயணம் செய்வது  
3. அஷ்டமி திதி திங்களில் விரமத் இருப்பது. 
4. காசியில் மரணம் அடைவது. இந்த நான்கு வழிகளிலும் நடக்க சிவராத்திரியில் 
சிவபூசை செய்ய வேண்டும். 
சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு 
இருப்பதாவது:- 
 
1.சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும். 
 
2.மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரைத் தூவ வேண்டும். 
தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும். 
 
3.ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும். 
 
4.சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும். 
 
5.நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும். 
 
6.சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும். 
 
7.எருக்க மலர் மாலைகளைப் பெருமான் தலையில் வட்டமாக அணிய வேண்டும். 
 
8.சிவ தண்டமான கட்டங்களும், கபாலமும் ஏத்தி அவன் புகழைப் பாட வேண்டும். 
 
9.அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய 
வேண்டும். 
 
10.விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும். இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.  
 
சிவராத்திரி என்பது சிவனுக்கான இரவு. அந்த சிவராத்திரி ஐந்து வகையாக 
கூறப்பட்டுள்ளது. 
 
1. நித்திய சிவராத்திரி:
 
ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வருவது நித்திய 
சிவராத்திரி. இது போல் மாதம் இரண்டாக வரும் நித்திய சிவராத்திரியை தொடர்ந்து 24 
முறையும் அனுசரிக்க வேண்டும். 
 
2. பட்ச சிவராத்திரி:
 
தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 
14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரி. 
 
3. மாத சிவராத்திரி:
 
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வருவது. சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச 
அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச 
சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் 
புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், 
கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், 
தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி 
மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும். 
 
4. யோக சிவராத்திரி:
 
சோமவார நாளன்று (திங்கட் கிழமை) பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி 
வந்தால் அது யோக சிவராத்திரி. 
 
5. மகா சிவராத்திரி:
 
பெரும்பாலான சிவராத்திரிகளை கூர்ந்து கவனித்தால் அவை சதுர்த்தசி திதியில் 
வருவது தென்படும். ஏன் அப்படி? அமாவாசைக்கோ பௌர்ணமிக்கோ முன்பு பதினான்காம் நாளாக 
வருவது சதுர்த்தசி. அந்த நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திரங்கள் கூறும் 
செய்தியாகும். ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவரவர்க்கேற்ற திதியை ஒதுக்கி வணங்கும் போது 
சிவனுக்கு ஒதுக்கப்பட்டது தான் சதுர்த்தசி. 
 
இந்த சதுர்த்தசி கிருஷ்ண பட்சமானால் மறுநாள் அமாவாசை அதே சுக்லபட்சமானால் 
மறுநாள் பௌர்ணமி. தொடக்க முடிவு இரண்டுமே அந்த சிவனால் தான் என்பதை உணர்த்தவே இந்த 
திதி சிவனுக்காக ஒதுக்கப்பட்டது. சிவன் என்றால் மங்களம் என்று பொருள். ராத்திரி 
என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம். 
 
எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருஷம் ஒரு முறை மட்டுமே வருவதும் 
அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் 
தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் 
மகாசிவராத்திரி. 
 
5 வகை சிவராத்திரியையும் அனுஷ்டிக்கலாம். முடியாதவர்கள் அவசியம் வருஷம் 
ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் இருக்க வேண்டும். மகா 
சிவராத்திரியின் சிறப்பை வாதூலம் முதலான ஆகமங்களும், சிவபுராணம், கந்தபுராணம், 
பத்மபுராணம் முதலான புராணங்களும் கூறுகின்றன.