Wednesday, May 14, 2014

ஒரு தாயின் தியாக வரலாறு

ஒரு தாயின் தியாக வரலாறு
எந்த ஒரு மரத்தின் வேரும் வெளியில் தெரிவதில்லை. தெரியாமல் இருப்பதுதான் நியதி. மரத்தின் எழிலைப் பார்க்கும் ஒருவன். கண்ணுக்குத் தெரியாத வேரை மனதில் நினைக்க வேண்டும். வேர் இன்றி மரம் இல்லை. இல்லறத்தில் அதுபோல் பெண் இன்றி ஆண் இல்லை. தமிழில் சங்க நூல்களிலும், திருக்குறளிலும் பெரும்பாலும் பெண் என்ற சொல் மனைவி என்ற பொருளையே தரும். பெண்ணின் பெருந்தக்க யாவுள....? ....சொற்காத்துச் சோர்விலாள் பெண்! வைதிக மதங்களில் பெண்ணுக்குத் துறவு இல்லை. ஏன் என்றால், பெண் பெண்ணா...க வாழ்வதே ஒரு துறவு நிலைதான்! தனக்காக அவள் வாழ்தல் இல்லை என்றே கூறலாம். பெண், அன்னை பராசக்தியின் சொரூபம், கன்னிகைகள் அனைவரும் அன்னை பராசக்தி சொரூபமாகவே எனக்குத் தென்படுகிறார்கள் என்றார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.
பெண்ணுக்கு உன்னதமான நான்கு பருவங்களை உறவு முறையில் இறைவன் வழங்குகிறான். மகள், சகோதரி, மனைவி, தாய் என்பன அவை. இந்த உறவுத்தடத்தில் ஒன்றில் புகழ் ஈட்டினால் அவள் பெண்ணின் நல்லாள் எனப்படுகிறாள் எனப்படுகிறாள். எல்லா உறவிலும் வென்று மேம்பட்டால் அவள் உலகத்தாரால் தெய்வம் எனப் போற்றிப் பெறுகிறாள். சீதாபிராட்டியை என் பெரும் தெய்வம் ஐயா, என்று அனுமன் போற்றி நிற்கிறான். மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம் என்று வணக்கம் வைக்கிறார் தெய்வச் சேக்கிழார். வெளியில் தெரியாத வேர்களாக இந்த நான்கு நிலைகளிலும் மேம்பட்ட பெண்கள் பலர் பெரிய புராணத்தில் மறைந்திருக்கிறார்கள். இதோ ஒரு தாயின் தியாக வரலாறு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ நாட்டை ஆண்டு கொண்டிருந்தான் சுபதேவன் என்ற மன்னன். அவன் பெருந்தேவி கமலவதி. இல்லறப் பயனாகிய பிள்ளைப் பேறு அவர்களுக்கு வாய்க்கவில்லை. இருவரும் புறப்பட்டுத் தில்லையை அடைந்தனர். மன்றில் ஆடும் தில்லைக் கூத்தனை வழிபட்டுப் பிள்ளை வரம் வேண்டிப் பாடிக் கிடந்தனர். சிவனருள் கூடி கமலவதி கருவுற்றார். மன்னனும், அரச சுற்றமும் அளவற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர். உரிய நாளும் வந்தது. கமலவதி வேதனையால் துடித்தார். இன்னும் ஒரு நாழிகையில் மகன் பிறப்பான் என்று மருத்துவச்சிகள் மன்னனிடம் தெரிவித்தனர். முக்காலமும் உணர வல்ல கணியன் ஒருவன், பிறக்கப்போகும் குழந்தை மேலும் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால் மூவுலகையும் ஆளும் என்றார்.
மகப்பேற்றை எப்படித் தள்ளி வைப்பது? மன்னன் கலங்கினான் செய்தி தோழியர் வழி கமலவதியின் செவிகளைச் சென்றடைந்தது. கமலவதி அந்தப்புரக் கதவுகளைத் தாளிடக் கட்டளை இட்டார். உற்ற தோழிகளை அழைத்து, என் இரு கால்களையும் ஒன்றாகச் சேர்த்து தலைகீழாக என்னைத் தொங்கவிடுங்கள் என்று கட்டளையிட்டார். இது கூடாது, உங்கள் உயிர்க்கு இது இறுதி தரும் என்றனர் மருத்துவச்சியர், கமலவதி தளரவில்லை. வேறு வழியின்றி கமலவதியின் கால்களைச் சேர்த்துப் பிணைத்துத் தோழியர் தலைகீழாகத் தூக்கிப் பிடித்தனர். அந்த நேரமும் வந்தது. பிறகு அவரைக் கீழே படுக்க வைத்தவுடன், தாயினுள் கூடுதலாக ஒரு நாழிகை சிக்கிக் கிடந்த மகன் கண்கள் சிவப்பேற மண்ணில் வந்தான். துவட்டி, கமலவதி மடியில் குழந்தையை வைத்தனர் மயங்கிய நிலையில் மகனை உச்சி மோந்து கண்களைப் பார்த்தார். ரத்தம் ஏறிச் சிவந்திருந்தது. என் மகன் கோச்செங்கண்ணனோ என்றார். கமலவதியின் தலை சாய்ந்தது. ஆவி பிரிந்தது. கோச்செங்கட்சோழன் தந்தைக்குப் பிறகு அரசு கட்டில் ஏறினார். காவிரியின் இருகரைகளிலும் சிவனுக்கு முதன் முதலாக எழுபது மாடக்கோயில்களை அமைத்தார்.

No comments:

Post a Comment