உமையவளாகிய பராசக்தியை லோகமாதா என்று வழிபடுகிறோம். அவளே  கோயில்களில் இறைவனோடு சேர்ந்து அம்மையப்பராய் அருள்பாலிக்கிறாள். இறைவனின்  ஐந்து தொழில்களில் ஒன்றான அருளல் என்னும் அருட்சக்தியே அம்பிகையாக  உருவெடுத்து அருள்புரிவதாக ஆகமங்கள் கூறுகின்றன. அதேநேரம், கருணையே உருவான  அம்பிகை உக்கிர ரூபமாகி அசுரசக்திகளை அழிக்கும் போது "காளி' என்று பெயர்  பெறுகிறாள். ஆடு, மாடு போன்ற உயிர்களை அவளுக்கு பலியிடுகிறார்கள். ஆனால்,  உண்மையில் காளி விரும்பும் பலி எவை தெரியுமா? "வாமாசாரம்' என்று  சாஸ்திரத்தின் மூலம் பழங்காலத்தில் காளிக்கு பலியிடும் வழக்கம் இருந்ததை  அறியமுடிகிறது. மனித மனதில் ஆறு வகையான பகைவர்கள் இருக்கிறார்கள்.  அப்பகைவர்களை வெல்லும் சக்தியை அருள்பவள் காளியே. காமம், கோபம்,  கருமித்தனம்(லோபம்), மோகம், ஆணவம்(மதம்), பொறாமை(மாச்சர்யம்) என்பவையே அந்த  தீயகுணங்களின் குறியீடாகவே வெள்ளாடு, எருமை, பூனை, செம்மறியாடு, மனிதன்,  ஒட்டகம் ஆகியவற்றை அக்காலத்தில் பலியிட்டு வழிபட்டனர். ஆனால்,  காலப்போக்கில் இவ்வழக்கம் குறைந்து ஆடு, கோழி பலியிடப்படுகிறது. மற்ற  மிருகங்கள் குறைந்த அளவில் பலியிடப்படுகின்றன. பலியிடுதலில் இருக்கும்  உண்மையை உணராமல், வெறும் அடையாளத்தை மட்டும் பின்பற்றுவது முறையானதல்ல.  கருணையே வடிவமான காளியிடம் நம்மிடம் இருக்கும் வேண்டாத தீயகுணங்களை  பலியிட்டு மனத்தூய்மை பெறுவதே சிறப்பாகும். 
 
 
No comments:
Post a Comment