Thursday, October 13, 2011

ஆன்மிக தகவல்கள்

காலை ஐந்து மணிக்கு விளக்கேற்றி வழிபட விரும்புகிறேன், ஆனால், அந்நேரத்தில் வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு நல்வழி காட்டுங்கள்.இரவு ஒன்பது மணிக்கு "டிவி'யை அணைத்து விட்டு எல்லாரையும் தூங்கச் சொல்லுங்கள். காலை ஐந்து மணிக்கு எல்லாருமே எழுந்துவிடலாம். ஆனால், இந்த பதிலை உங்கள் வீட்டார் ஏற்றுக்கொள்ள வேண்டுமே! "சுகமாக "டிவி', பார்ப்பதையும், காலைத் தூக்கத்தை கெடுக்கிறேன்' என்றும் உங்கள் வீட்டினர் என்னை சபிக்காமல் இருந்தால் சரி!

* சூரியகாந்தி எண்ணெய், பாமாயிலை விளக்கேற்ற பயன்படுத்தலாமா?
எண்ணெய் என்ற சொல்லே நல்லெண்ணெயைத்தான் குறிக்கிறது. எள்+நெய்=எண்ணெய். இதுதான் விளக்கேற்ற உயர்ந்தது. தைல தீபம் என்று தான் சாஸ்திரங்கள் கூறுகின்றன. "திலம்' என்றால் "எள்'. திலத்திலிருந்து எடுக்கப்படுவதால் "தைலம்' என்று பெயர். சாஸ்திரம் ஏற்பட்ட பொழுது சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் போன்றவை கிடையாது. அதனால் சாஸ்திரங்கள் விட்டிருக்கலாம் என்று கேட்பீர்கள்! அதற்கு மின்சார விளக்கே போதுமே?

* மலைக்கோயிலுக்குச் செல்லும் பொழுது, குரங்குகள் பூஜைப் பொருட்களை எடுத்துச் சென்று விடுகின்றன. இதனால் உண்டாகும் மனக்கஷ்டம் நியாயமானதா?
குரங்குகள் நம்மைப்போல் சிந்திக்கத் தெரியாதவை. உங்கள் மனம் கஷ்டப்படும் என்று அவற்றிற்குத் தெரிந்திருந்தால் இதுபோல் செய்யுமா? சிந்திக்கத் தெரிந்த நாமே அவற்றிடம் ஏமாந்து விடுகிறோமே! ஜாக்கிரதையாக இருந்து கொண்டால் போதும். இதையும் மீறி இப்படி நடந்தால் சுவாமியே எடுத்துக் கொண்டதாக சமாதானமாகிக் கொள்ளுங்கள். வீட்டில் சுவாமி நிவேதனத்திற்காக வைத்திருக்கும் இனிப்பை விபரம் அறியாத குழந்தை சாப்பிட்டு விட்டால் என்ன செய்கிறோம்? சோலைமலை, முக்கொம்பு போன்ற இடங்களில், குரங்குகளிடம் படாதபாடு பட்ட அனுபவம் எனக்கும் உண்டு.

* முன்னோர் திதியன்று ஏழைகளுக்கு அன்னதானமும், குழந்தைகளுக்கு கல்விக்கான உதவியும் செய்தால் தர்ப்பணம் செய்த பலனைத் தருமா? விளக்கம் தேவை.
மற்ற எந்தக் காரியமாக இருந்தாலும் மாற்று வழியை சிந்தித்துச் செயல்படலாம். முன்னோர் திதி என்ற காரியம் மட்டும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியன செய்துதான் ஆக வேண்டும் அன்னதானம், கல்விக்கு உதவி என்று எல்லாமே மிகப்பெரிய புண்ணிய செயல்கள் தான். ஆனால் பிதுர்காரியத்தோடு இவற்றை ஒப்பிடாதீர்கள்.

* காளஹஸ்தியில் ராகு கேது பரிகாரம் செய்யும்படி ஜோதிடர் கூறுகின்றனர். வசதியில்லாதவர்கள் எளிமையாக செய்யும் வழி இருந்தால் தெரிவியுங்கள்.
திருநாகேஸ்வரம் (கும்பகோணம் அருகே) திருப்பாம்புரம் (கும்பகோணம்-பேரளம்) கீழப்பெரும்பள்ளம் (பூம்புகார் சமீபம்) ஆகிய திருத்தலங்களில் செய்து கொள்ளலாம். இதுவும் உங்கள் ஊர் கோயில்களில் நவக்கிரக சந்நிதி இருந்தால் அங்கேயே செய்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment