Wednesday, December 30, 2015

விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்

விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்


விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால்அருளிச் செய்யப்பட்டது. இது தமிழ்ச் சைவர்களின் நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. தமிழர்கள் கைக்கொண்டொழுகிய வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த நூல் தமிழருக்கு அறிவிக்கும் அரிய செய்திகளை இக்கட்டுரை திரட்டித் தருகின்றது. இக்கருத்துக்கள் சைவசித்தாந்தப் பேராசிரியர் திரு இரா.வையாபுரியார் அவர்கள் விநாயகர் அகவலுக்கு எழுதியுள்ள பேருரையினின்றும் திரட்டப் பட்டது.
‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர், சிவபுரத்திலுள்ளார்’. விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யும்போது இப்பொருள்கள் நினைவுக்கு வந்து பாராயணத்தைப் பயனுடையதாக்கும்.
இந்நூல் 15ஆவது வரி ‘அற்புதம் நின்ற கற்பகக் களிறே’ என்று கூறுவதால் இந்நூலில் கூறப்படும் விநாயகப் பெருமானின் திரு நாமம் ‘கற்பக விநாயகர்’ என்பது.
அவர் தன் நிலையில்,
• சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாதவர்.
• துரியநிலையில் இருப்பவர்.
• ஞானமே சொரூபமாக இருப்பவர்.
இது அவருடைய சொரூப நிலை அல்லது உண்மை நிலை எனப்படும். இது பரசிவமாக இருக்கும் நிலை.
ஞானமே சொரூபமாக உடைய பரசிவம் தன்னை அடியவர்கள் வழிபட்டு உய்வதற்காகவும் அடியவர்களுக்கு அருள் செய்வதற்காகவும் அற்புதமான வடிவம் கொண்டு காட்சிக்கும் நினைப்புக்கும் சொல்லுக்கும் எட்டுபவராக எளிவந்து அருளும். அத்தகைய அற்புதக் கோலங்களில் ஒன்று விநாயக வடிவம். ( அற்புதம் – அற்புதம் என்பது உலகில் எங்கும் காணப்படாது இயற்கைக்கு மாறாக நிகழ்வது. இது திருவருளால் மட்டுமே நிகழ்வது.)
அவ்வற்புத வடிவமானது:
• தாமரை மலர்போன்ற மென்மையும் அழகும் மலர்ச்சியும் உடைய திருவடிகள்.
• அத்திருவடிகளில் இனிய ஒலியெழுப்பும் சிலம்பு.
• பொன்னரைஞாண்.
• அழகிய பட்டாடை அணிந்த இடுப்பு
• பேழை (பெட்டி) போன்ற வயிறு.
• பெரிய வலிமை மிக்க தந்தம்.
• யானைமுகம்.
• முகத்தில் அணிந்த சிந்தூரம்.
• ஐந்துகைகள்.
• அங்குசம், பாசம் என்னும் ஆயுதங்கள்.
• நீலமேனி (நீலம் – கருமை)
• தொங்குகின்ற வாய்.
• நான்கு தோள்.
• மூன்று கண்.
• கன்னத்தில் மதநீர் வடிந்த சுவடு.
• இருபெரிய செவிகள்.
• பொற்கிரீடம்
• பூணூல் புரள்கின்ற மார்பு.
இது குணங்குறி அற்ற பரசிவம் உயிர்களுக்கு அருளும் பொருட்டு மேற்கொள்ளும் வடிவங்களுள் ஒன்று. அதனால் தடத்த வடிவம் அல்லது தடத்த நிலை எனப்படும். இறைவடிவங்களைத் தரிசித்துத் தொழும்போது திருவடியிலிருந்து தொடங்கி உச்சிவரைக் கண்டு திருமேனியில் விழியைப் பதித்தல் முறை. திருவடி என்பது திருவருள்.  திருவருளால் இக்காட்சி நடைபெறுகின்றது என்பது பொருள்.
•  அவருக்கு நிவேதனப் பொருள்கள் முப்பழம்.
•  ஊர்தி மூஷிகம்
•  அவர் தன்னை வழிபடும் அடியவர்களுக்குத் தாய்போன்ற அன்புடையவர்.
•  எப்பொழுதும் அடியவர்களைப் பிரியாமல், அவர்களுடைய அறிவுக்கு அறிவாய், அறிவினுள்ளே இருந்து அவர்களுக்கு வாழ்வில் வழிகாட்டுவார்.
•  அடியவர்களுக்குப் பக்குவம் வந்த காலத்தில் குருவடிவாக வெளிப்பட்டு வந்து, முன் நின்று தீக்கை செய்து உண்மை ஞானம் புகட்டுவார்.
•  அடியவர்களை யோகநெறியிலும் ஞானநெறியிலும் நிற்கச் செய்வார்.
•  ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலப் பிணிப்பிலிருந்து விடுபடச் செய்வார்
•  நின்மல அவத்தை (அருளுடன் கூடிநிற்கும் நிலை) யில் நிற்கச் செய்வார்.
•  அளவில்லாத ஆனந்த அனுபவம் விரியச் செய்வார்.
•  இறுதியில் தன்னைப்போலத் தன் அடியவர்களையும் என்றும் மாறாத அழியாத நிலையில் (தத்துவநிலை) நிற்கச் செய்வார்.
விநாயகப் பெருமான் உணர்த்தும் ஞானநெறி
•  குருவாக வந்து தீக்கை அருளுகின்றார்
•  இதுவரையிலும் அவ்வுயிர் செத்துப் பிறந்து உழல்வதற்குக் காரணமான மயக்க அறிவைப் போக்குகின்றார்.
•  திருவைந்தெழுத்தை (‚ பஞ்சாக்கரம்) நெஞ்சில் பதிவிக்கின்றார்.
•  உள்ளத்தில் வெளிப்பட்டு விளங்கி நிற்கின்றார்.
•  பதி, பசு, பாசம் எனும் அனாதியான முப்பொருள்களின் இயல்பினை விளக்கி உரைக்கின்றார். சஞ்சிதம் எனும் பழவினையைப் போக்குகின்றார். ஞானோபதேசம் செய்கின்றார்.
•  உபதேசித்த ஞானப்பொருளில் ஐயம்,  திரிபு ஆகியன நேரிடாமல் தெளிந்த உணர்வு உண்டாமாறு அருளுகின்றார்.
•  ஐம்புலன்கள் விடயங்களை நோக்கி ஓடி விருப்பு வெறுப்புக் கொண்டு துன்புறாதபடி புலனடக்கம் உண்டாவதற்குரிய வழியினைக் காட்டியருளுகின்றார்.
•  உடம்பில் உள்ள தத்துவக் கருவிகள் எவ்வாறு ஒடுங்குகின்றன என்பதை அறிவிக்கின்றார்.
•  பிராரத்த வினை தாக்காதவாறு காப்பாற்றுகின்றார்.
• ஆணவம லத்தால் வரும் துன்பத்தைப் போக்குகின்றார்.
•  ஆன்மாவை நின்மல நிலைக்கு உயர்த்தி நின்மலதுரியம் நின்மலதுரியாதீதம் என்னும் நிலைகளில் திருவருளுடனும் சிவத்துடனும் கலந்து நிற்கச் செய்கின்றார்.
குருவாக வந்த விநாயகப் பெருமான் இவ்வாறு ஞானநெறியை அருளி, இந்த ஞானநெறியில் நெகிழ்ந்து விடாது உறுதியாய் நிற்பதற்குரிய யோகநெறியினையும் அறிவித்தருளுகின்றார்.
•  ஒன்பது வாயில்களை உடைய உடம்பில் உள்ள ஐம்புலன்கள் ஆகிய கதவுகளை அடைத்து மனம் உள்ளே (அகமுகப்பட்டு) நிற்கச் செய்கிறார்.
•  இதனால் ஆதாரயோகம் மேற்கொள்ளும் முறையினைத் தெளிவிக்கின்றார்.
•  மவுனசமாதி நிலையினை அடையச் செய்கின்றார்.
•  இடநாடி, வலநாடி, சுழுமுனா நாடி என்னும் நாடிகளின் வழியாய் மூச்சுக்காற்று இயங்கும் முறையினைத் தெரிவிக்கின்றார்.
•  சுழுமுனா நாடி மூலாதாரத்திலிருந்து கபாலம் வரையிலும் (தலையுச்சி) சென்று நிற்கும் நிலையினைத் தெரிவிக்கின்றார்.
•  அவ்வாறு செல்லும் வழியில் உள்ள அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்னும் பகுதிகளின் இயல்பைத் தெரிவிக்கின்றார்.
• மூலாதாரத்தில் உள்ள ஹம்ச மந்திரம், குண்டலினி சத்தி, பிரணவ மந்திரம் என்பனவற்றின் இயல்பினைத் தெரிவிக்கின்றார்.
•  இடகலை, பிங்கலை என்னும் மூச்சுக்காற்ரினால் குண்டலினி என்னும் சத்தியை எழுப்பிச் சுழுமுனைநாடி வழியாக மேலே கபாலம் வரையிலும் பிரணவமந்திரத்துடன் ஏற்றும் முறையினையும் தெரிவிக்கின்றார்.
•  இவ்வகையில் பிரணவமந்திரம் பலகலைக்களாகப் பிரிக்கப்பட்டு, (மூன்று, ஐந்து, பன்னிரண்டு, பதினாறு) உடம்பில் அங்கங்கே நிறுத்தித் தியானிக்கப்படுவதாகிய பிராசாத யோகம் என்னும் நெறியினையும் கற்பிக்கின்றார்.
•  இப்பிராசாத யோகத்தினால் ஆன்மா பிரமரந்திரம் (தலையுச்சி) என்னும் இடத்தையும் கடந்து மேலே துவாதசாந்தப் பெருவெளி என்னும் இடம்வரையிலும் சென்று சிவத்துடன் கலந்து நின்று சிவானந்தம் அனுபவிக்கச் செய்கின்றார்.
• இவ்வாறு ஆறாதார யோகம், அட்டாங்க யோகம், பிராசாத யோகம் என்னும் முறைகளில் நிற்கச் செய்து மனோலயம் அடையச் செய்கின்றார்.
•  இதனால் உண்டாகும் அகக் காட்சியினால் ஆன்மாவின் இயல்பு,  உடம்பின் இயல்பு,  மாயாமலம் கன்மமலம் ஆணவமலம் என்பனவற்றின் உண்மையியல்பு ஆகியவற்றை அறிய வைக்கின்றார்.
•  சப்தப்பிரபஞ்சம் (ஒலியுலகம்) அர்த்தப்பிரபஞ்சம்(பொருளுலகம்) என்பனவற்றினியல்பையும் அவற்றில் பரம்பொருள் சிவலிங்கரூபமாகக் கலந்திருக்கும் முறையினையும் அறியச் செய்கிறார்.
•  இத்தகைய பரம்பொருள் மிகச் சிறிய பொருள்களுக்கெல்லாம் மிகச் சிறியதாகவும், மிகப் பெரிய பொருள்களுக்கெல்லாம் மிகப் பெரிய பொருளாகவும் இருக்கும் நிலையை உணரச் செய்கின்றார்.
•  இத்தகைய பரம்பொருள்சை உலகவாழ்வில் இருந்துகொண்டே அறிவதும் அப்பொருளுடன் கலந்து ஆனந்தம் அனுபவிப்பதும் கரும்பினைக் கணுக்கணுவாகச் சுவைத்துச் செல்லும் அனுபவம் போன்றது.
• இந்த அனுபவம் நீடித்திருக்கத் திருநீறு உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்களை அணிய வேண்டும்.
•  அவற்றையும் அவற்றை அணிந்துள்ள அடியார்களையும் சிவமெனவே கண்டு வழிபடுதல் வேண்டும்.
•  எப்பொழுதும் அடியார் கூட்டத்துடன் கலந்திருத்தல் வேண்டும்.
•  திருவைந்தெழுத்து மந்திர செபத்தைக் கைவிடலாகாது.
இவ்வாறு விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார். அந்நிலையிலிருந்து அவ்வான்மா தன்னைவிட்டு நீங்காமல் தனக்கே அடிமையாய் இருக்கும் நிலைமையினையும் விநாயப் பெருமான் அருளுகின்றார் என்னும் அரிய செய்திகளை விநாயகர் அகவல் என்னும் இந்த நூல் கூறுகின்றார்.

Saturday, December 26, 2015

சிவதாண்டவ வகைகள்

சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவங்கள் சிவதாண்டவங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிவபெருமான் தண்டு முனிவருக்கும்பரத முனிவருக்கும் தாண்டவங்களை உருவாக்கி கற்பித்தார் என்று நாட்டிய சாத்திரத்தின் நாலாவது அத்தியாயமான தாண்டவலட்சணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவபெருமானின் தாண்டவம் உலக நலனை நோக்கியே நிகழ்ப்படுவதாகவும், அதனுடைய நோக்கமானது உயிர்களை மலங்கள் (குற்றங்கள்) பிடியிலிருந்து விடுவிப்பதாகும். சிவதாண்டவத்தில் சிவனின் உடலமைப்பு அணி கலன்கள் கைகளில் உள்ள படைக்கலன்கள், தலைமுடி மற்றும் பாதங்களின் அமைப்பு ஆகிய அனைத்திற்குமே மெய்ப்பொருளியல் விளக்கங்கள் சைவர்களால் எடுத்துரைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தாண்டவங்களும் வெவ்வேறு மெய்பொருளியல் கோட்பாடுகளை விளக்குகின்றன.[1]

சிவதாண்டவ வகைகள்

ஐந்து தாண்டவங்கள்

முதன்மைக் கட்டுரை: ஐம்பெரும் தாண்டவங்கள்

  1. ஆனந்த தாண்டவம்
  2. அசபா தாண்டவம்
  3. ஞானசுந்தர தாண்டவம்
  4. ஊர்த்தவ தாண்டவம்
  5. பிரம தாண்டவம் 

ஏழு தாண்டவங்கள்[

சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் ஏழு தாண்டவங்கள் சப்த ஸ்வரங்களை குறிப்பதாக அமைகின்றன. இந்தஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், கஜ சம்ஹாத் தாண்டவம், கெளரி தாண்டவம், காளிகா தாண்டவம் என்ற ஏழு தாண்டவங்களும் சப்த தாண்டவங்கள் என்று வழங்கப்படுகின்றன. சிவபெருமானை சுந்தரர், ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே என்று போற்றியுள்ளார்.
  1. காளிகா தாண்டவம் - ச
  2. சந்தியா தாண்டவம் - ரி
  3. கௌரி தாண்டவம் - க
  4. சம்கார தாண்டவம் - ம
  5. திரிபுர தாண்டவம் -ப
  6. ஊர்த்துவ தாண்டவம்- த
  7. ஆனந்த தாண்டவம் - நி

சப்த விடங்க தாண்டவங்கள்

  1. அஜபா தாண்டவம்
  2. வீசி தாண்டவம்
  3. உன்மத்த தாண்டவம்
  4. குக்குட தாண்டவம்
  5. பிருங்க தாண்டவம்
  6. கமல தாண்டவம்
  7. ஹம்சபாத தாண்டவம்

நவ தாண்டவங்கள்

நவராத்திரியின் காலத்தில் சிவபெருமான் ஒன்பது தாண்டவங்கள் ஆடுவதாக நம்பப்படுகிறது. அவையாவன,.
  1. நவராத்திரியின் முதல் நாள் : ஆனந்த தாண்டவம்
  2. நவராத்திரியின் இரண்டாம் நாள் : ஸந்தியா தாண்டவம்
  3. நவராத்திரியின் மூன்றாம் நாள் : திரிபுரதாண்டவம்
  4. நவராத்திரியின் நான்காம் நாள் : ஊர்த்துவ தாண்டவம்
  5. நவராத்திரியின் ஐந்தாள் நாள் : புஜங்க தாண்டவம்
  6. நவராத்திரியின் ஆறாவது நாள் : முனி தாண்டவம்
  7. நவராத்திரியின் ஏழாவது நாள் : பூத தாண்டவம்
  8. நவராத்திரியின் எட்டாவது நாள் : சுத்த தாண்டவம்
  9. நவராத்திரியின் ஒன்பதாம் நாள் : சிருங்காரத் தாண்டவம் [3]

பன்னிரு தாண்டவங்கள்

சிவபெருமானது தாண்டவங்களில் பன்னிரு தாண்டவங்கள் என்று சிறப்புபெறுபவை கீழே.
  1. ஆனந்த தாண்டவம்
  2. சந்தியா தாண்டவம்
  3. சிருங்கார தாண்டவம்
  4. திரிபுர தாண்டவம்
  5. ஊர்த்துவ தாண்டவம்
  6. முனித் தாண்டவம்
  7. சம்ஹார தாண்டவம்
  8. உக்ர தாண்டவம்
  9. பூத தாண்டவம்
  10. பிரளய தாண்டவம்
  11. புஜங்க தாண்டவம்
  12. சுத்த தாண்டவம்

நூற்றியெட்டு சிவதாண்டவங்கள்

நூற்றியெட்டு பரதநாட்டிய நிலைகளை குறிக்கும் நடன தாண்டவங்களை சிவபெருமான் ஆடினார்.
  1. தாளபுஷ்பபுடம்
  2. வர்த்திதம்
  3. வலிதோருகம்
  4. அபவித்தம்
  5. ஸமானதம்
  6. லீனம்
  7. ஸ்வஸ்திக ரேசிதம்
  8. மண்டல ஸ்வஸ்திகம்
  9. நிகுட்டம்
  10. அர்தத நிகுட்டம்
  11. கடிச்சன்னம்
  12. அர்த்த ரேசிதம்
  13. வக்ஷஸ்வஸ்திகம்
  14. உன்மத்தம்
  15. ஸ்வஸ்திகம்
  16. பிருஷ்டஸ்வஸ்திகம்
  17. திக்ஸ்வஸ்திகம்
  18. அலாதகம்
  19. கடீஸமம்
  20. ஆஷிப்தரேசிதம்
  21. விக்ஷிப்தாக்ஷிப்தம்
  22. அர்த்தஸ்வஸ்திகம்
  23. அஞ்சிதம்
  24. புஜங்கத்ராசிதம்
  25. ஊத்வஜானு
  26. நிகுஞ்சிதம்
  27. மத்தல்லி
  28. அர்த்தமத்தல்லி
  29. ரேசித நிகுட்டம்
  30. பாதாபவித்தகம்
  31. வலிதம்
  32. கூர்நிடம்
  33. லலிதம்
  34. தண்டபக்ஷம்
  35. புஜங்கத்ராஸ்த ரேசிதம்
  36. நூபுரம்
  37. வைசாக ரேசிதம்
  38. ப்ரமரம்
  39. சதுரம்
  40. புஜங்காஞ்சிதம்
  41. தண்டரேசிதம்
  42. விருச்சிககுட்டிதம்
  43. கடிப்ராந்தம்
  44. லதா வ்ருச்சிகம்
  45. சின்னம்
  46. விருச்சிக ரேசிதம்
  47. விருச்சிகம்
  48. வியம்ஸிதம்
  49. பார்ஸ்வ நிகுட்டனம்
  50. லலாட திலகம்
  51. க்ராநதம்
  52. குஞ்சிதம்
  53. சக்ரமண்டலம்
  54. உரோமண்டலம்
  55. ஆக்ஷிப்தம்
  56. தலவிலாசிதம்
  57. அர்கலம்
  58. விக்ஷிப்தம்
  59. ஆவர்த்தம்
  60. டோலபாதம்
  61. விவ்ருத்தம்
  62. விநிவ்ருத்தம்
  63. பார்ஸ்வக்ராந்தம்
  64. நிசும்பிதம்
  65. வித்யுத் ப்ராந்தம்
  66. அதிக்ராந்தம்
  67. விவர்திதம்
  68. கஜக்ரீடிதம்
  69. தவஸம்ஸ்போடிதம்
  70. கருடப்லுதம்
  71. கண்டஸூசி
  72. பரிவ்ருத்தம்
  73. பார்ஸ்வ ஜானு
  74. க்ருத்ராவலீனம்
  75. ஸன்னதம்
  76. ஸூசி
  77. அர்த்தஸூசி
  78. ஸூசிவித்தம்
  79. அபக்ராந்தம்
  80. மயூரலலிதம்
  81. ஸர்பிதம்
  82. தண்டபாதம்
  83. ஹரிணப்லுதம்
  84. பிரேங்கோலிதம்
  85. நிதம்பம்
  86. ஸ்கலிதம்
  87. கரிஹஸ்தம்
  88. பர ஸர்ப்பிதம்
  89. சிம்ஹ விக்ரீடிதம்
  90. ஸிம்ஹாகர்சிதம்
  91. உத் விருத்தம்
  92. உபஸ்ருதம்
  93. தலஸங்கட்டிதம்
  94. ஜநிதம்
  95. அவாஹித்தம்
  96. நிவேசம்
  97. ஏலகாக்ரீடிதம்
  98. உருத்வ்ருத்தம்
  99. மதக்ஷலிதம்
  100. விஷ்ணுக்ராந்தம்
  101. ஸம்ப்ராந்தம்
  102. விஷ்கம்பம்
  103. உத்கட்டிதம்
  104. வ்ருஷ்பக்ரீடிதம்
  105. லோலிதம்
  106. நாகாபஸர்ப்பிதம்
  107. ஸகடாஸ்யம்
  108. கங்காவதரணம்

தமிழிலக்கியங்களில் சிவதாண்டவம்

சிவதாண்டவத்தினைப் பற்றி தமிழிலக்கியமான கலித்தொகையின் இறைவணக்கத்தில் முதல் குறிப்பு உள்ளது. காரைக்கால் அம்மையின் பாடல்கள், எ எல் பாஷ்யம் சிவதாண்டவம் ஆகியவற்றிலும், சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்தந்தாதியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைகேயியின் தியாகம்...!!

கைகேயியின் தியாகம்...!!
தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி. இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்படுகிறது.
இராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராக்ஷசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ஸ்ரீஇராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரத்வாஜ மஹாமுனியின் அழைப்பை ஏற்று அவருக்கு ஏற்கெனவே வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார். விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும், சத்ருக்னனும் அக்னிப்பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி, தான் வந்துகொண்டிருக்கும் செய்தியைக் கூற அனுமன் ஸ்ரீஇராமரால் அனுப்பப்பட்டார்.
அவரும் நந்திகிராமத்துக்கு வந்து அவர்கள் நெருப்பில் வீழ்வதிலிருந்து காத்தபிறகு, பரதனிடம், “அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார். பரதனும், “ஸ்ரீஇராமனைப் பெற்ற பாக்கியசாலி அன்னை கௌசல்யை இதோ.” எனக் காட்டினான். அவளை வணங்கியபின் மறுபடி “அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார். “ஸ்ரீஇராமனைக் கணமும் பிரியாது சேவை செய்த பாக்கியசாலி லக்ஷ்மணனையும், என் தம்பி சத்ருக்னனையும் பெற்ற அன்னை சுமித்ரை, இதோ இவர்.” எனக் காட்டினான் பரதன். அவளையும் வணங்கிய பின்னரும், வெளிப்படையாக, “உன்னைப் பெற்ற தியாகி, அன்னை கைகேயி எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார் அனுமன்.
துணுக்குற்ற பரதன், “அவள் மஹாபாவியாயிற்றே. அவளுக்கு மகனாகப் பிறக்கும் அளவுக்கு பாபம் செய்து விட்டேனே! என நான் வருந்தாத நாளில்லை. அவளுக்கு நீங்கள் ஏன் நமஸ்காரம் செய்ய வேண்டும்?” எனக் கேட்டான். அப்போது அனுமன் பின்வருமாறு பிறர் அறியாத கைகேயியின் பெருமைகளைக் கூறினார்.
“பரதா! நீயோ இந்த உலகமோ அவளை அறிந்து கொண்ட லக்ஷணம் இவ்வளவுதான். உன் தாயார் எவ்வளவு தன்னலமற்ற தியாகி தெரியுமா?
தசரதரின் தாயார் இந்துமதி மிகுந்த இளகிய மனம் படைத்தவள். செடி, கொடிகளிலும் உயிரோட்டத்தை உணர்ச்சிகளைக் கண்டவள். அவளுடன் ஒரு நாள் சிறுவன் தசரதன் உத்யானவனத்தில் திந்தபோது, தளதளவெனப் பொன்னிறத்தில் மினுமினுத்த தளிர் ஒன்றைக் கொடியிலிருந்து ஒடித்து விட்டான். ஒடித்த இடத்திலிருந்து பால் வடிவதைக் கண்டு பதறிய இந்துமதி, “தன் குழந்தையான தளிரைப் பிரிந்து இந்தக் கொடி எப்படி கண்ணீர் வடிக்கிறதோ, அப்படியே உன் மகனைப் பிரிந்து நீ கண்ணீர் வடித்து மடியக் கடவாய்.” எனச் சாபமிட்டாள்.
பின்னர் இளைஞனாக தசரதன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ரிஷிகுமாரனான சிரவணன் குடுவையில் தன் தாய் தந்தையின் தாகம் தீர்க்கத் தண்ணீர் மொள்ள, அதை யானை தண்ணீர் குடிப்பதாகக் கருதி சப்தவேதி என்னும் அஸ்திரத்தினால் அவனைக் கொன்றதனால், “உயிர் நீங்கும் முன் புத்திர சோகத்தினால் உயிர் நீங்கக்கடவாய்” என்று அவனது கண்ணிழந்த தாய் தந்தையால் தசரதர் சபிக்கப்பட்டார். தசரதர் பெற்ற இவ்விரண்டு சாபங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.
தசரதர் இராமருக்கு எவ்வளவு சீக்கிரம் பட்டம் கட்ட முடியுமோ அவ்வளவு விரைவில் முடிசூட்ட நிச்சயித்து, தன் அரசவை ஜோதிடர்களை வற்புறுத்தி, குறித்த முகூர்த்தத்தின் பின்விளைவுகளை, பல கலைகளும் சாஸ்திரங்களும் அறிந்த தன் தந்தையிடமிருந்து தான் முழுமையாகக் கற்றிருந்த ஜோதிடத்தின் மூலம் கோசல ராஜ்ஜியத்தின் ஜாதகத்தினை ஆராய்ந்து நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.
அந்த முகூர்த்தப்படி இராம பட்டாபிஷேகம் நிகழ்ந்திருந்தால், ராஜ்யபாரத்தில் இராமன் அன்று அமர்ந்திருந்தால் அதுவே அவனது ஆயுளை முடிந்திருக்கும். புத்ரசோகம் தசரதனையும் முடித்திருக்கும். புத்ரசோகம் எப்படியும் நிகழ வேண்டும் என்னும்போது, அது இராமனை விட்டுத் தற்காலிகப் பிரிவா? நிரந்தரப் பிரிவா? என்பதுதான் பிரச்னை. தனக்கு வைதவ்யம் வந்துவிடும் என்று தெரிந்திருந்தும் ஸ்ரீஇராமனின் உயிரைக் காப்பாற்ற நிச்சயித்தாள் உன் அன்னை.
அந்தக் கணத்தில் அரணாக இருப்பவன் உயிர் நீப்பது இராஜ்யத்தின் ஜாதக அமைப்பின்படி நிச்சயம் என்ற நிலையில் ஏற்கெனவே ஆண்டு அனுபவித்து முதியவனாகிவிட்ட தசரதன் உயிர் நீப்பதே மேல் என அவள் எண்ணினாள். அப்போது கூட அவள் கேட்க விரும்பியது பதினான்கு நாள்கள் வனவாசம். வாய்தவறி அது பதினான்கு வருடங்கள் என வந்துவிட்டது. ஒரு கணம்கூட இராமனைப் பிரிவதைச் சகிக்காத தசரதருக்கு இதுவே உயிரைக் கொல்லும் விஷமாகிவிட்டது.
எந்தப் பெண் தன் சௌமங்கல்யத்தைக் கூடப் பணயம் வைத்து மாற்றான் மகனைக் காப்பாள்? இராமனிடம் கைகேயி கொண்ட பிரியம் அத்தகையது. நீ ராஜ்யத்தை ஏற்க மாட்டாய் என அவளுக்குத் தெரியும். ஆகவேதான் அத்தகைய வரத்தைக் கேட்டாள். ஒருகால் நீ ஏற்றால் ஸ்ரீஇராமனின் உயிர் காக்க உன்னையும் இழக்க அவள் தயாராக இருந்தாள். அவள் மஹா தியாகி. அவளால்தான் எங்கோ வனத்தில் கிடந்த எங்களுக்கெல்லாம் ஸ்ரீஇராமனின் தரிசனம் கிட்டியது. கர-தூஷணர் முதலாக இராவணன் வரை பல ராக்ஷஸர்களின் வதமும் நிகழ்ந்தது. அந்த புனிதவதியைத்தான் நாம் அனைவரும் வணங்கவேண்டும்” என்றார் அனுமன். பரதன் முதலானவர்களுக்கு அப்போதுதான் கைகேயின் உண்மை உருவம் புரிந்தது.
இராமாயணத்தில் தன்னலம் அற்ற இன்னொரு மங்கையும் திரை மறைவில் உண்டு. அவளையும் பார்ப்போம்.
ஸ்ரீஇராமரும் சீதையும் வனவாசத்துக்குக் கிளம்பி விட்டனர். அவர்களுக்குச் சேவை செய்ய லக்ஷ்மணரும் கிளம்பிவிட்டார். கிளம்பியவர் தன் மனைவி ஊர்மிளையிடம் விடை பெற்றுக்கொள்ள அவளது அந்தப்புரத்துக்குச் சென்றார். தன் மீது தன் கணவர் கொண்ட பிரியம் ஊர்மிளைக்குத் தெரியுமாதலால், இதே பிரியத்துடன் அவர் கானகம் சென்றால், தன் நினைவும் விரகதாபமும் அவரை சரிவர அவர் கடமையைச் செய்ய விடாது அலைக்கழிக்கும் என அவள் வருந்தினாள்.
ஆகவே அவர் தன்னை வெறுக்கும்படி தான் நடந்து கொள்ளவேண்டும் என நிச்சயித்தாள் ஊர்மிளை. தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு லக்ஷ்மணனை வரவேற்கத் தயாரானாள். லக்ஷ்மணன் வந்து கானகம் செல்வதைப் பற்றி கூறியவுடன், “தந்தை காட்டுக்குப் போகச் சொன்னது உங்கள் அண்ணனையேத் தவிர உங்களை அல்லவே? நீங்கள் ஏன் கஷ்டப்படவேண்டும்? அண்ணிதான் அண்ணனை மணந்த பாபத்துக்கு அவர்பின் போகிறாள். நானாக இருந்தால் அதுகூட போகமாட்டேன். வாருங்கள் என்னுடன்; நாம் மிதிலைக்குப் போய் சௌக்கியமாக வாழலாம்.” என்றாள்.
லக்ஷ்மணன் கோபத்துடன், “நீ இவ்வளவு மோசமானவளா? நீ வரவேண்டாம்; என் முகத்திலும் இனி விழிக்க வேண்டாம். இங்கேயே சுகமாகப் படுத்து தூங்கு; என் அண்ணனுடனும், அண்ணியுடனும், நான் போகிறேன்.” என்றான்.
“உங்கள் தூக்கத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் நிம்மதியாகத் தூங்குவேன்.” என்றாள் சிரித்துக்கொண்டே ஊர்மிளை. “அப்படியே ஆகட்டும்.” எனக் கூறிச்சென்ற லக்ஷ்மணன் ஊர்மிளைக்குத் தன் தூக்கத்தைத் தந்துவிட்ட காரணத்தால் பதினான்கு ஆண்டுகளும் தூங்காது இராமனுக்குச் சேவை செய்ய முடிந்தது. ஊர்மிளை செய்த தியாகத்தினால் அவளுடைய நினைவும் லக்ஷ்மணனை வாட்டவில்லை. இராம பட்டாபிஷேகம் முடிந்தபிறகு சீதையின் வாயினால் உண்மையை அறிந்த லக்ஷ்மணன் அவளின் தியாக மனமறிந்து ஊர்மிளையை எப்போதையும் விட அதிகமாக நேசித்தான்.
இதேபோல லக்ஷ்மணனை ஊர்மிளை வேறொரு கோணத்தில் அறிந்து கொள்ள சீதையே வழிசெய்தாள். பட்டாபிஷேகத்துக்குப் பிறகு ஒரு நாள் தன் கால் கொலுசுகளை ஊர்மிளைக்குப் பரிசாக அளித்தாள். அன்றிரவு அவளின் அந்தப்புரத்துக்கு வந்த லக்ஷ்மணனின் பார்வையில் அந்தக் கொலுசுகள்தான் முதலில் பட்டன. தினமும் சீதையின் கால்களை மட்டுமே வணங்கி வந்துள்ள லக்ஷ்மணன் சீதையே தன்முன் நிற்பதாகக் கருதி அவள் கால்களில் விழுந்து வணங்கினான். துணுக்குற்றுப் பின்வாங்கிய ஊர்மிளை உண்மையைக் கூற, அவளைக் கடிந்து அந்தக் கொலுசுகளை உடனே அண்ணிக்குத் திருப்பித்தரப் பணித்தான் லக்ஷ்மணன். அதைப் பெற்றுக் கொண்ட சீதை வேறோர் உயர்ந்த கொலுசை அவளுக்குப் பரிசளித்து லக்ஷ்மணன் தன்னிடம் கொண்ட பக்தியை விளக்கவே அவ்வாறு தான்செய்ததாகக் கூறினாள்.
இந்த உலகில் எதையும் ஆராயாது நம்பக் கூடாது என்பதை இந்த நிகழ்ச்சி விளக்குகிறது.

Wednesday, December 23, 2015

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?

சிவன் லிங்கமாக இருப்பதன் தத்துவம் என்ன?
சிவம் என்றால் மங்களம். லிங்கம் என்றால் அடையாளம். மங்கள வடிவம் அது. மங்களம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும் என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:) சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு ஸர்வமங்களா என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வன் அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான். கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிடும். அதற்குத் தியாகம் என்று பொருள்.
தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்! பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும் என்கிறது உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:) லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும். சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.
சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும் இன்றி எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்.. அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து வெளிவர முடியாமல் திண்டாடி கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும். ஆசைகளை அறுத்தெறிந்தால் நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல் செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம். நடைமுறையில் நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, சுபம் என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு. எங்கும் எதிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது.

செய்வினை சூனியத்தை அகற்றுவது எப்படி?

செய்வினை சூனியத்தை அகற்றுவது எப்படி?
பல காரணங்களால் வீடுகளில் துர்சக்திகள் புகுந்துவிடுகின்றன.
1. தெய்வக்குற்றம் (கடவுளுக்கு நாம் செய்யும் அபவாதம்)
2. பிதிர் குற்றம் (பிதிர்களுக்கு நாம் செய்யும் அபவாதம்)
3. செய்வினை சூனியம்
கோவில்களுக்கு போகும் பக்தர்கள் தெய்வநிந்தனை செய்வதாலும், ஆலயங்களுக்குள் செய்யத்தகாத வியங்களைச் செய்வதாலும் தெய்வக்குற்றம் ஆகிவிடுகிறது.
இறந்த ஆத்மாக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாமல் உதாசீனம் செய்யும் போது அது பிதிர்க்குற்றம் ஆகிவிடுகிறது. தெய்வக்குற்றம், பிதிர்க்குற்றம் ஏற்படும்போது நம்மைச் சூழ்ந்திருக்கும் தீயசக்திகள் தாமாக இலகுவில் புகுந்துவிடும்.
அதைவிட செய்வினை சூனியம் மூலமாக தீயசக்திகளை பிறர் ஏவிவிட வைக்கின்றனர்.
தீயசக்திகள் வீட்டில் புகுந்தால் அதற்கான அறிகுறிகள் எவை?
- வீட்டில் உள்ள நிம்மதி இல்லாமல் போகும்
- எதிர்பாராத நோய்கள் உருவாகும்
- வீட்டில் பொருட்செலவுகளை ஏற்படுத்தும் பல விடயங்கள் நடக்கும்
- பிள்ளைகளுக்கு படிப்பில் குறைபாடு ஏற்படும்
-கடவுளில் நம்பிக்கை குறையும்
-விவாகரத்துக்களை உண்டாக்கும்
-குடும்பப்பிரச்சனைகளை ஏற்படுத்தும்
தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை என்ன?
45 தினங்கள் வைரவப் பெருமானுக்கு
வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு தினமும் வழிபடவேண்டும். இந்த 45 தினமும் வீட்டில் மச்சம் மாமிசம் கொண்டுவரவே கூடாது. (மச்சம் மாமிசம் ஆகியவை தீயசக்திகளின் பலத்தை அதிகரித்துவிடும்). தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகை மட்டும் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்ட வேண்டும். காலை சூரியன் உதயநேரத்திலும், மாலையில் சூரிய அஸ்தமன நேரத்தி்லும் இதை தொடர்ந்து செய்யவேண்டும். 45 தினங்களில் மீண்டும் உள்ளே புக முடியாவிடின் தீயசக்திகள் உள்நுழைய முடியாது.
சர்வ சத்ரு நாசன மந்திர உச்சாடனமான
ஓம் க்லீம் க்ருஷ்ணாய........ ", என்று துவங்கும் மந்திரம் தெரிந்தவர்கள் அதை தினமும் ஓதிவரலாம். அதை தெரியாதவர்கள் வைரவருக்குரிய பாடல்களை படிக்கலாம்.
45 தினங்களுக்கு பிறகு துர்ககையின் ஆலயம் சென்று, தீர்த்தம் பெற்று வீட்டில் தெளித்துவிடுங்கள். துர்க்கைக்கு அர்ச்சித்த குங்குமம் பெற்று, வீட்டு வாசலில் சூலம் கீறிவிடுங்கள்.
அதன் பின்னர், செய்வினை , சூனியம் வைத்த இடங்கள் தாமாக உங்கள் கண்ணுக்கு புலனாகும் சந்தர்ப்பம் ஏற்படும்.
வெள்ளைக் கடுகுச் செடிகள் இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும்.

Monday, December 21, 2015

ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்..???

ஒரே ஜாதியில் கல்யாணம் ஏன்..???
நம்முடைய பெரியோர்கள் எல்லாம் ஒரே ஜாதி கல்யாணம் என்று வைத்ததிலே அர்த்தம் இருக்கிறது. பெண் போகிற இடத்தில்பழக்கவழக்கம் ஒரே மாதிரி இருக்கும். அதனால் குடும்பம் நடத்துவது சுலபமாக இருக்கும். சமையலில் இருந்து சகலமும் ஒத்து வரும். பல வசதிகளை முன்னிட்டுத்தான் ஜாதிக் கல்யாணம் வைத்தார்களே தவிர அது ஒன்றும் ஜாதி வெறியல்ல.
-கவிஞர் கண்ணதாசன்

உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி?

உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி?
* மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய் காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம் செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது.
* பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின் அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர சொல்லுகிறார்.
* துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை கூறுகிறான் துரியோதனன். ஸ்ரீ கிருஷ்ணர் புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன் தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை இடுப்பில் தொடை வரை அணிந்து காந்தாரியின் முன் செல்லுகிறான் துரியோதனன். கண்களை திறந்து தனது சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன் இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய விளையாட்டை புரிந்துகொண்டாள்.
* பாரத போரின் இறுதியில் பீமனுக்கும், துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும் பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும் இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில் தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான். காரணம் காந்தாரி வழங்கிய சக்தி தொடைபகுதியில் இல்லை. பீமன் உடல் வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின் கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே விரத பலனை நமக்கு உணர்த்தும்.
* விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம் உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும் வீணாக்கும் சக்தியின் அளவையும் புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில் உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம் பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என இரு செயல்களை தவிர்ப்பதை அனேக விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.
* சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன் (குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்றைய கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை மேலும் வலுசேர்க்கும்.
* சாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம் உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன் உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக் பயன்படுத்தினார். தற்சமயம் அது அரசியலாகிவிட்டது.
* நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன் மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை மூலம் அறியலாம.

Saturday, December 19, 2015

விரதம் மற்றும் பண்டிகை தினங்களில் ஆலயங்களில் செய்யக்கூடிய 18 பணிகள்!

விரதம் மற்றும் பண்டிகை தினங்களில் ஆலயங்களில் செய்யக்கூடிய 18 பணிகள்!
நமக்கு அன்றாடம் எவ்வளவோ பணிகள் இருந்தாலும் விரத மற்றும் பண்டிகை நாட்களிலாவது ஆலயப்பணிகளை செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.
1. சன்னதிதோறும் கோலமிடுதல்
2. ஆலய வளாகத்தை அலங்கரித்தல்
3. தரைப் பகுதியைப் பெருக்குதல்
4. மேல்பகுதிகளில் ஒட்டடை நீக்குதல்
5. கட்டிடங்களில் உள்ள செடிகளை அகற்றுதல்
6. விளக்கு, திருவாசிகளைத் தேய்த்தல்
7. மின் அமைப்பைப் பராமரித்தல்
8. நந்தவனத்தைப் பேணுதல்
9. அபிஷேக நீர்த்தொட்டியை சுத்திகரித்தல்
10. மண்டபங்களைக் கழுவி விடுதல்
11.சிறப்பு வழிபாடுகளை நடத்துவித்தல்
12. பூஜைப் பணிகளில் உதவுதல்
13.தரிசிப்போரை வரிசைப்படுத்துதல்
14. பிரசாதம் வழங்களில் உதவுதல்
15. புதியவர்க்கு வழிகாட்டல்
16. இறைத் துதிகளை கற்றுவித்தல்
17. இறை நூல்களை விநியோகித்தல்
18. வழிபாட்டில் முழுமையாக பங்கேற்றல்.

Friday, December 18, 2015

ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு கீதையில் அமைந்துள்ள 18 பெயர்கள்:

ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு கீதையில் அமைந்துள்ள 18 பெயர்கள்:
ஹ்ருஷீகேசன் = இந்திரியங்களுக்கு ஈசன்
அச்யுதன் = தன் நிலையிலிருந்து வழுவாதவன்
கிருஷ்ணன் = கருப்பு நிறமானவன், அழுக்கைப் போக்குபவன், மும்மூர்த்தி சொரூபம், பிரம்ம சொரூபம், அடியார்படும் துயரம் துடைப்பவன்
கேசவன் = அழகிய முடியுடையவன், மும்மூர்த்திகளை வசமாய் வைத்திருப்பவன், கேசின் என்ற அசுரனைக் கொன்றவன்
கோவிந்தன் = ஜீவர்களை அறிபவன்
மதுசூதனன் = மது என்ற அசுரனை அழித்தவன்
ஜநார்தனன் = மக்களால் துதிக்கப்படுபவன் (அஞ்ஞானத்தை அழிப்பவன்)
மாதவன் = திருமகளுக்குத் தலைவன்
வார்ஷ்ணேயன் = வ்ருஷ்ணி குலத்தில் உதித்தவன்
அரிசூதனன் = எதிரிகளை அழிப்பவன்
கேசிநிஷூதனன் = கேசின் என்ற அசுரனை அழித்தவன்
வாசுதேவன் = வசுதேவன் மைந்தன், எல்லா உயிர்களிடத்திலும் இருப்பவன்
புருஷோத்தமன் = பரம புருஷன்
பகவான் = ஷட்குண சம்பன்னன்
யோகேச்வரன் = யோகத்துக்குத் தலைவன்
விஷ்ணு = எங்கும் வியாபகமாய் இருப்பவன்
ஜகந்நிவாசன் = உலகுக்கு இருப்பிடம்
யாதவன் = யதுகுலத்தில் தோன்றியவன்

துர்க்கை அம்மன் 20 வழிபாட்டு குறிப்புகள்

துர்க்கை அம்மன் 20 வழிபாட்டு குறிப்புகள் 
1. அஷ்டமி தினத்தில் துர்க்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு வஸ்திரம் அம்பாளுக்கு அணிவிக்கலாம்.
2. துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி சண்டிகைதேவி சகஸ்ர நாமம் கொண்டு தான் அர்ச்சனை செய்ய வேண்டும். இவை சக்தி வாய்ந்தவை.
3. துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் துர்கா சப்தசதி என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.
4. பிறவி வந்து விட்டால் கஷ்டங்கள் துன்பங்கள் அதிகம். துக்கங்கள் அதிகமாகும். அந்த துக்கத்தைப் போக்குபவளே துர்காதேவி.
5. கோர்ட்டு விவகாரங்கள் வெற்றி பெறவும், சிறை வாசத்திலிருந்து விடுபடவும் துர்காதேவியை சரண் புகுந்தால், வெற்றியும் பந்த நிவாரணமும் சித்திக்கும்.
6. மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால் துர்க்கா மாதாவின் திருவடி நிழலைப் பிரார்த்திக்க வேண்டும்.
7. பரசுராமருக்கு அமரத்வம் அளித்தவள் துர்காதேவி.
8. துர்க்கையின் உபாஸனை மனத்தெளிவை தரும்.
9. துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. மனத்தளர்ச்சியோ சோகமோ ஏற்படுவதில்லை.
10. ஸ்ரீ துர்கையின் வாகனம் சிம்மம். இவளுடைய கொடி ``மயில்தோகை''.
11. ஸ்ரீ துர்க்காவை பூஜை செய்தவன் சொர்க்க சுகத்தை அனுபவித்து பின் நிச்சயமாக மோட்சத்தையும் அடைவான்.
12. ஒரு வருஷம் துர்க்கையை பூஜித்தால் முக்தி அவன் கைவசமாகும்.
13. தாமரை இலையில் தண்ணீர் போல துர்க்கா அர்ச்சனை செய்பவனிடத்தில் பாதகங்கள் எல்லாம் தங்குவதில்லை.
14. தூங்கும் போதும் நின்ற போதும், நடக்கும் போதும் கூட தேவி துர்க்கையை வணங்குபவனுக்கு சம்சார பந்தம் ஏற்படுவதில்லை.
15. ஸ்ரீ துர்கா தேவிக்கு மிகப்பிடித்த புஷ்பம் நீலோத்பலம். இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது.
16. துர்க்கையின் முன் புல்லாங்குழல் வாத்யம் வாசிக்கக் கூடாது.
17. துர்க்கையை ஒன்பது துர்க்கைகளாக ஒன்பது பெயரிட்டுக் கூறுகின்றது. மந்திர சாஸ்திரம். 1. குமாரி, 2. த்ரிமூர்த்தி, 3. கல்யாணி, 4. ரோஹிணி, 5. காளிகா, 6. சண்டிகை, 7. சாம்பவி, 8. துர்கா, 9. சுபத்ரா.
18. சுவாஸினி பூஜையிலும் 1. சைலபுத்ரி, 2. ப்ரம்ஹசாரிணி, 3. சந்த்ரகண்டா, 4. கூஷ்மாண்டா, 5. மகாகௌரி, 6. காத்யாயனி, 7. காளராத்ரி, 8. மகாகௌரி, 9. சித்திதார்ரி என்ற ஒன்பது துர்க்கைகள் இடம் பெறுகின்றனர்.
19. துர்க்கை என்ற பெயரையும் சதாக்சி என்ற பெயரையும் எவர் கூறுகின்றனரோ அவர் மாயையினின்று விடுபடுவர்.
20. துர்க்கை என்ற சொல்லில் `த்', `உ', `ர்', `க்', `ஆ' என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன. `த்' என்றால் அசுரர்களை அழிப்பவள். `உ' என்றால் விக்னத்தை (இடையூறை) அகற்றுபவள். `ர்' என்றால் ரோகத்தை விரட்டுபவள். `க்' என்றால் பாபத்தை நலியச் செய்பவள். `ஆ' என்றால் பயம் சத்ரு இவற்றை அழிப்பவள் என்பது பொருளாகும்

தீய எண்ணங்களே மனதில் எழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

தீய எண்ணங்களே மனதில் எழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?
நல்ல எண்ணங்களை எண்ண வேண்டும். நம் மனதில் இன்ன எண்ணங்கள்தான் எழ வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரமும், அதற்கான திறமையும் இயல்பாகவே நமக்கு அமைந்திருக்கிறது. நம் உள்ளத்தில் எழுகின்ற எந்த எண்ணமும் தானாக எழுவதில்லை. அது ஏற்கனவே சம்ஸ்காரங்களாக, நம் எண்ணங்கள் மற்றும் வினைகளின் வித்துக்களாக நம் சித்தத்தில் புதைந்து கிடக்கின்றன. இனி இப்பொழுது நாம் எண்ணும் எண்ணங்களும் அழுத்தம் பெறும் பொழுது சித்தத்தில் போய் பதிகின்றன. ஆனால், அவை தானே வலிய வந்து எண்ணங்களாக ஆவதில்லை. நம் புற மனதின் செயல்பாடுகள் மற்றும் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் வாழ்க்கைச் சூழல்கள் இவற்றிற்கு ஏற்பதான் அவை எண்ணங்களாக எழுகின்றன. அல்லாத பட்சத்தில் இந்த சம்ஸ்காரங்கள் முளைக்காத விதைகள்தான். இதில் ''அழுத்தம் பெறும் பொழுது'' என்று சொல்வது எதனால் என்றால், நம் வாழ்க்கை என்கிற குறிப்பிட்ட வட்டத்திற்குள் பெரும்பாலும் சில குறிப்பிட்ட எண்ணங்களையே மீண்டும் மீண்டும் எண்ணுகிறோம். மீண்டும் மீண்டும் எண்ணுவதே அழுத்தம் பெறுவது என்கிறோம். இதைப் பழக்கம் என்பார்கள். இந்த பழக்கமே எண்ணங்கள் வாயிலாக நம் இயல்பாக அமைகின்றது. எனவே உயர்வான எண்ணங்களை எண்ணப் பழகிக் கொண்டால், அதுவே நம் இயல்பாக ஆகி விடும்.
''உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.'' என்று வள்ளுவர் குறிப்பிடுவது இதற்காகத்தான்.
எனவே நல்ல எண்ணமோ, தீய எண்ணமோ நம் விருப்பமின்றி நம் மனதில் தோன்றுவதில்லை. மற்றவர்கள் வலிந்து அதை நம் மனதில் திணிக்க முடியாது. நாம் நமது சுயநலம் மற்றும் சுகபோக இச்சைகளுக்கு ஆசைப்பட்டு தீய எண்ணங்களுக்கு இடம் கொடுக்கிறோம். ஒரு பொருளை நாம் வாங்க வேண்டும் என்றால் விலை குறைவாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறோம். அதுவே நம்மிடம் இருக்கும் ஒரு பொருள் மட்டமானதாக இருந்தாலும் ஏதேதோ பொய்களைச் சொல்லி அதை அதிக விலைக்கு விற்க நினைக்கிறோம். பெரும்பாலானவர்கள் மன நிலை இவ்வகையில்தான் இருக்கிறது. இங்கே சுயநலம் மனதில் தீய எண்ணங்களுக்கு வித்திடுகிறது. அதாவது நமக்கு நல்ல எண்ணங்களை எண்ணக் கூடிய அதிகாரமும், சுதந்திரமும் இருந்தும், அவற்றைப் பயன்படுத்தாமல் லாபம் அடையும் சுயநல நோக்கில் தீய எண்ணங்களை எண்ணுகிறோம். சிலர் பேசும் பொழுது ''நல்லவனுக்கு ஏது காலம், தீயவர்கள்தான் வாழ்வில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்'' என்று சொல்லக் கேட்கிறோம். இந்த எண்ணம் தவறானது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். நீ நல்லவனாக, உயர்ந்த எண்ணம் உடையவனாக இருந்தும் வாழ்வில் உயர்ந்த நிலை வாய்க்கவில்லை என்று உன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதே. நிச்சயமாக அதன் பலன் கிடைக்காமல் போகாது என்பதை உறுதி செய்கிறார்.
நல்ல எண்ணங்களை மட்டுமே மனதில் எண்ணுவேன் என்று நாம் உறுதியாக இருந்தால் தீய எண்ணங்கள் உள்ளே நுழையவே முடியாது. நல்ல எண்ணங்களைத் தவிர எதிர்மறையான சிந்தனைகளுக்கு மனதில் இடங்கொடுக்க மாட்டேன் என்று நமக்கு நாமே மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். ''உன் வாழ்க்கை உன் கையில் என்பார்கள்.'' அதாவது நம் வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்குவது நம் எண்ணங்களே. அந்த எண்ணங்களை நல்ல விதமாக இருப்பதும், தீயைவைகளாக இருப்பதும் நம் கையில்தான் இருக்கிறது என்பதே அதற்குச்சரியான அர்த்தமாகும். நாம் பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்படும் இயல்பைப் பெற்றவர்கள். எனவே நல்ல எண்ணங்கள், நல்ல செயல்கள், நல்ல வார்த்தைகள் என்று பழகிக் கொண்டோமென்றால் தீய எண்ணங்கள் மனதில் எழுவதில்லை.

ஒரு செயலை எப்படிச் செய்யவேண்டும் என்று கிருஷ்ணர் கூறுகிறார்

ஒரு செயலை எப்படிச் செய்யவேண்டும் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
-கீதை
துன்பம், லாபம், நஷ்டம், வெற்றி தோல்வி ஆகியவைகளை ஒன்றாகவே ஏற்றுக்கொண்டு அந்தச் செயலை செய்யவேண்டும்.அதனால் நீ எந்தவித இழப்பையும் அடையமாட்டாய்.
இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவிப்பது அறிவுப் பூர்வமானது.
லாபத்தையும் நட்டத்தையும் ஒன்றாகக் கொள்வது மனது பூர்வமானது.
வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாகப் பார்ப்பது தேகப் பூர்வமானது.
இந்த மூன்றில் இரண்டு குணங்களை பெற்றாலே அவன் கர்மயோகி ஆகிவிடுகிறான்.
கடலில் செல்லும் ஒருவன் அலைகளே இருக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் அல்லவா?
ஆர்ப்பரிக்கும் அலைகளைக் கொண்டது கடலின் குணம்.அந்தக் குணத்தை ஏற்றுக்கொள்பவன்தான் கடலில் பயணம் செய்யமுடியும்.
அதுபோலதான், வாழ்க்கையிலும். இன்பம் துன்பம் வெற்றி தோல்வி, என்னும் அலைகள் இல்லாமல் வாழ்வென்பதே கிடையாது.
அலைகளுக்குப் பயந்துவிடக் கூடாது. அதே சமயம் அலைகளால் அடித்துச் சென்றுவிடாமல் துணிச்சலாக வாழவும் வேண்டும்.
இத்தகைய வாழ்க்கையை ஒருவன் பெறவேண்டுமானால், அவன் தன்னைப் பற்றி முதலில் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.
கடமை எது என்று ஒரு தெளிவு கிடைத்துவிட்டால் பிறகு எப்படிச் செயல்படுவது என்பதில் குழப்பம் இருக்காது.
எந்த ஒன்றிலும் பர்றில்லாமல் அவன் கடமையைச் செய்தால் அவன் வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

Thursday, December 17, 2015

மன்மதனின் காமத்தை பேரின்பமாக்கும் வித்தையின் இரகசியம்

மன்மதனின் காமத்தை பேரின்பமாக்கும் வித்தையின் இரகசியம்
காமம் என்பது மனிதன் பேரின்பம் பெறுவதற்கான திறவுகோல். இதன் அடிப்படையிலேயே ரதி மன்மதன் சாதனை ஸ்ரீ வித்தையில் உள்ளது. இதன் அடிப்படையினை புரிந்துகொண்ட சாதகன் காமத்தினை விலக்காமல் உயர்ந்த யோக சக்தியாக்கி கொள்ளமுடியும். இதற்கு உடல், மனம், பிராணன் ஆகியவற்றை பற்றிய சூக்ஷ்ம புரிதல் அவசியம். இங்கு இதன் சுருக்க இரகசியங்களை விளக்குகிறேன்! இந்த அடிப்படையிலேயே சித்தர்களது ஸ்ரீ வித்தை இரகசியங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
சிவத்திலிருந்து பிரிந்து வந்த மூலசக்தி பிரகிருதி எனப்படும். இந்த மூலசக்தி அண்டத்திலும் பிண்டத்திலும் பிராணனாக வியாபித்திருக்கிறது. இந்த பிராணன் இயங்கும் தன்மையுடைய சக்தியாகும். ஆணின் மனித உடலில் மூலசக்தி சிவமான விந்து எனப்படும் ஸப்த தாதில் உறைந்துள்ளது. இந்த விந்துவே அண்டத்தில் சிவம் எனப்படும் பிந்துவின் பிண்ட வடிவமாகும். பிரஞ்சத்தின் மூலவடிவம் மூலப்பிரக்ருதியும் சிவமும் இணைந்த வடிவமாகும். ஆனால் மாயா சக்தியின் ஆற்றலால் சிவமும் சக்தியும் பிரிந்த நிலையிலேயே அண்டமும் பிண்டமும் காணப்படுகிறது. இந்த இணைப்பே யோக சாதனை, ஞான சாதனை, முக்தி, பேரின்பம் என அழைக்கப்படுகிறது. ஆக அண்டத்திற்கு மூலமான சிவம் ஆணின் மனித உடலில் சப்த தாதுக்களில் ஒன்றான விந்து ஆகவும், பிராணன் ஆகவும் இருக்கிறது. இதனை ஆன்மா என்ற உணர்வுடன் இணைக்கத்தெரிந்தால் முக்தி கிடைக்கும் என்பதே இதன் அடிப்படை. இதுவே மூல சக்தி நிலை எனப்படுவது.
காமசக்தி பௌதீகமாக மனித இனத்தை விருத்தி செய்வதற்கும், மனததளத்தில் பெண்ணுடன் காதல் எனும் இன்ப உணர்வினை பெறுவதற்கும், அடிப்படை ஆக்க சக்தி – கிரியா சக்தி பெறவும் உதவுகிறது. அண்டத்தில் எல்லா காரியமும் நடைபெறுவதற்கு அடிப்படையாக இருக்கும் கிரியா சக்தி பிண்டத்தில் காம சக்தியாக இயங்குகிறது.
காமத்தினை தனது பெண் துணையுடனோ அல்லது தனியாகவோ பிராணனுடன் இணைத்து ஆன்மாவில் சேர்க்கத் தெரிந்தால் அதுவே முக்தி! பேரின்பம்.
ஆணில் சப்த தாதுக்களில் ஒன்றான விந்துவே சக்திக்கான மூலமாகும். ஆணின் விந்து என்பது சப்தாதுக்கள் ஒன்றின்பின் ஒன்றாகிய சாரமாகும். இதனை அளவுக்கு அதிகமாக வீணாக்கும்போது அது மனிதனது நோய் எதிர்ப்பு சக்திதொகுதியிலிருந்தும் நாளமில்லா சுரப்பி தொகுதியிலிருந்து தனது செலவீனத்தை ஈடு செய்து கொள்கிறது. இதனால் இந்த இரண்டு தொகுதிகளும் பாதிக்கும் நிலை ஏற்படும்.
விந்தினை வீணாக்காமல் சேமிப்பதே முதல் படியாகும். தனது சந்ததியினை உருவாக்குவது தவிர்ந்து விந்தினை வீணாக்குவது பெரும் மதிப்புமிக்க செல்வத்தை வீணாக்குவது என்று ஆயுள்வேத சித்த மருத்துவ நூற்கள் கூறுகின்றன. இப்படி நீண்டகாலத்திற்கு வீணாக்கப்படும் விந்து சக்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இல்லாதாக்குவதுடன் மனம் உணர்ச்சி சார்ந்த பிரச்சனைகளை பொதுவாக காரணமின்றி பெண்களை வெறுப்புணர்வுடன் பார்த்தல், வக்கிரமான மனநிலை, பயம், பதட்டம் என்பவற்றை உருவாக்கும். மேலும் ஆன்மீக சாதனையில் முன்னேறி செல்லும்போது உருவாகும் அமிர்தம் எனப்படும் தெய்வீக கிரணங்களை உடல் ஏற்க முடியாத நிலை ஏற்படும். இதனாலேயே யோக சாதனையில் விந்து கட்டுப்பாடு முக்கியமான ஒன்றாக கூறப்பட்டுள்ளது.
இதற்காக விந்தினை பலவந்தமாக இயற்கைக்கு மீறி அடக்குதலும் வீணாக்குவதால் ஏற்படும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது ஆரம்ப நிலையில், விந்தினை உயர்ந்த தெய்வீக சக்தியாக மாற்றும் உத்தி தெரியாமல் அதீதமாக அடக்குவதும், வீணாக்குவது இயற்கைக்கு மாறானா ஒன்று. அதாவது நெல்லினை விதைத்து தக்க பருவத்தில் அறுவடை செய்து, மீண்டும் விதைக்கு நெல்லினை சேமிப்பதுடன், குத்தி அரிசியை சோறாக்கி கறியுடன் சுவையாக உண்பத்னை உதாரணமாக கொள்ளவும்.
காமம் இயற்கையானதும், அனைவருக்கும் தேவையானதும், ஆரோக்கியமான ஒன்றுமாகும். இதனை வெறுமனே மேலோட்டமாக விந்து நீங்கி உடல் சார்ந்த இன்பமாக அனுபவிப்பதை விட உயர்ந்த பேரின்பமாக விந்தினை நீக்காமல் எப்படி அனுபவிப்பது என்பதனை அறிவதே இந்த யோகத்தின் இலக்காகும்.
சேமித்த விந்தினை பிராணனுடன் இணைத்தல் இரண்டாவது படியாகும். உடலுறவின் உச்சகட்டத்தில், விந்து நீக்கம் நடைபெறுவதற்கு முன்னர் விதைப்பையில் இருக்கும் விந்திலிருந்து பிராண சக்தி விரிவடைந்து உடலின் மேல் சக்தி மையங்களுக்கு, நரம்புகளுக்கு பரவத்தொடங்கும். இதுவே இன்ப உண்டர்ச்சியினை ஏற்படுத்துவது. இந்த சக்தி நிறைவு மேல் சக்கரங்களில் நிறைவதற்கு முன்னர் விந்தானது குறியினூடாக வெளியேறி ஆணிற்கு உயர்ந்த பேரின்ப உணர்ச்சியினை இல்லாமல் செய்துவிடுகிறது. இதனையே வெண்ணை திரண்டு வரும்போது தாழி உடைத்தல் என்று சித்தர்கள் குறிப்பிட்டார்கள். இந்த நிலையினால் மனிதன் சாதாரண உடல் சார் இன்பத்துடன் தனது காமத்தினை முடித்துக்கொள்கிறான்.
இதுவே மூலப்ரக்ருதி எனப்படும் மாயையின் விளையாட்டு. ஆணின் உடலில் பேரின்பத்தினை பெறகூடிய அமைப்பினையும் வைத்து, அது வீணாகுவதற்குரிய ஓட்டையினையும் வைத்திருக்கிறது. இப்படி வீணாக்காமல் இருக்க அவன் மேலே சக்தி செல்லும் பாதைகளை திறக்கவேண்டும். அத்துடன் இயற்கையாக வீணாகும் பாதையான குறியினூடாக வீணாகாமல் காப்பாற்றுவதற்கு பெண்ணின் துணை தேவைப்படுகிறது. இங்கு வியப்பான விடயம் என்னவென்றால் இயற்கையாக ஆணினின் சக்தியை மாயைக்கு உட்பட்டு வீணாகும் பெண்ணே ஆண் முன்னேறுவதற்கும் காரணமாக இருக்கிறாள் என்பதே. இதுவே ஆவது பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்பதன் விளக்கம்.
பெண்ணின் துணை கொண்டு அல்லது தனியாகவோ ஓரு ஆண் விந்துடன் தனது பெண் சக்தியான பிராண சக்தியை இணைத்து தனது நாடிகள் எனப்படும் சூக்ஷ்ம சக்தி ஓட்டப்பாதைகள் மூலம் விந்தினை மேலெழும்பி சக்கரங்கள் எனக்கூறப்படும் ஆறு ஆதாரங்களில் சேமித்து வைக்கலாம். இந்த சக்தி சேமிப்பு முக்தி என்ற இறுதி நிலை அடைவதற்கு முன்னரான உலக,ஆன்மீக, சூக்ஷ்ம உலக வாழ்க்கையில் இன்பமாக வாழ்வதற்குரிய ஆற்றல், இன்பம் ஆகியவற்றை தரும்.
மூன்றாவதாக நிலை; இப்படி சேமிக்கப்படும் விந்து – பிராண சக்திகளில் ஆண் (சிவம்) பெண் (சக்தி) சக்திகளை எப்போதும் சமமாக வைத்திருக்கும் உத்திகளை கற்றல். இதனை தனியே பயிற்சிக்கும் ஆண் தியான சாதனையின் மூலம் தனக்குள் இருக்கும் ஆண் பெண் சக்திகளை சுழற்சிப்படுத்துவதன் மூலமும், தம்பதியினர் ஒருவர் ஒருவரிடையே பரிமாற்றி சுழற்சிப்படுத்துவதன் மூலமும் சாதிக்கலாம். இப்படி ஒரு ஆணும் பெண்ணும் தமது சக்திகளை பரிமாற்றி வளர்த்தெடுத்தால் அது உடற்கவர்ச்சி சார்ந்த காமமாக இருக்காமல் உயர்ந்த காதலாகவும், அன்பாகவும் மாறி, ஒருவருக்கு ஒருவன் மானசீகமாகவும், ஆன்மார்த்தமாகவும், உதவும் ஆன்ம விழிப்பினையும் பேரின்பத்தையும் தரும். இதுவே சிவசக்தி ஐக்கிய ரூபிணி என்ற நிலை. இந்த நிலை அடைந்தால் குடும்பம், அன்பு, வாழ்க்கையின் நோக்கம் என்பன மிக ஆழமான சமநிலையினை அடையும். இந்த ஆண் பெண் காம மையங்களின் சமநிலையே ஆண் பெண்களுக்கிடையிலான உண்மை சமநிலை, ஆண் பெண்ணை போட்டியும் துன்பமும் தருபவளாகவும், தனது வலிமையினை இழக்க செய்பவளாகவும் கருதாமலும், பெண் ஆணை ஆதிக்கம் செலுத்துபவனாகவும், தனது உடல் மீது வன்முறை புரிபவனாகவும் இல்லாமல் ஆண் பெண்ணிற்கு பேரின்பம் தருபவனாகவும், பெண் ஆணிற்கு பேரின்பம் தருபவளாகவும் மாறும் நிலையினை இந்த் யோகம் தரும்.
பொதுவாக காமத்துடன் யோகம் சொல்லித்தருகிறோம் என்றவுடன் அனைவரும் ஏதோ மூன்றாம்தர நீலப்படம் பார்க்கப்போகிறோம் என்ற உண்டர்வுடனும், தமது காம இச்சைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய வகையில் மணிக்கணக்கில் உடலுறவு செய்யலாம் என்ற எண்ணத்துடனும் வருகிறார்கள். ஆனால் இதன் உண்மை அர்த்தம் வேறாக இருக்கிறது. இயற்கை காமத்தை வெறும் உடல் இன்பத்துடன் பூர்த்தி செய்து உயர்ந்த சூக்ஷ்ம பேரின்பத்தை பெறவிடாமல் தடுக்கிறது. இதிலிருந்து விடுபட்டு சிவமாகிய விந்தினை பிராணனாகிய சக்தியுடன் இணைத்து மூலசக்தியான சிவசக்தி ஐக்கிய ரூபத்தை அடைவதே இந்த யோகத்தின் குறிக்கோள். இந்த பாதையில் காமத்தினை கையாளுவது என்பது ஒரு சிறு படி மாத்திரமே. இதனை ஒரு பெரிய விடயமாக மன எழுச்சியுடன் பார்த்து அடையவேண்டியத்தை அடையாமல் போய்விடக்கூடாது என்பது ஒளி நிலையடைந்த சித்தர்களின் ரிஷிகளின் விருப்பம்.
அடிப்படையில் ஒருவனுடைய விந்து, பிராணன், ஆன்ம சக்திகள் ஒருங்கிணைந்தால் அவன் ஒருவித சமநிலையில் இருப்பான். இந்த சமநிலை அவனுக்கு இன்பத்தினையும், தான் முழுமையாக இருப்பதான மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
எப்போதும் ஆழமான காதலற்ற உடலுறவை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது ஸ்தூல, சூக்ஷ்ம, காரண ஸரீரங்களில் ஒருவித சமநிலை இன்மையினை தோற்றுவித்து அவர்களின் ஆன்ம, உள, பிராண வளர்ச்சிகளை குழப்பி பாதித்துவிடும். பெண் எப்போதும் தனது காதலனிடம் சிறுபிள்ளைத்தனமான அன்பினை எதிர்பார்ப்பவள், ஆனால் பொதுவாக ஆண் ஒருவித இயந்திர தனமாக கையாள்பவனாக இருப்பான். இருவரும் உயர் நிலை அடைவது என்பது பெண்ணின் முழுமையான பங்களிப்பு இன்றி நடைபெறாது. பெண்ணிடம் நாதம் (ஆணின் விந்துவிற்கு நிகரான) சக்தி அதீதமாக காணப்படுகிறது. அதனை அவள் பிராணனுடன் கலந்து உயர்ந்த சக்தியாக்கி தருவானேயானால் மட்டுமே ஆணின் ஆன்ம, மன வளர்ச்சி அதீதமான முன்னேற்றத்தை அடையும். இத்தகைய பெண்ணின் அன்பே ஆண்பெறக்கூடிய உயர்ந்த உறவாகும்.
இப்படி கூறியவுடன் பெண் ஒருத்தி இருந்தால்தான் இதனை செய்யமுடியும் என்று மனது மயங்கி வருத்தப்படாதீர்கள். ஆரம்பகால சாதனைக்கு பெண்ணில்லாமல் தனித்து இருந்து விந்தினை வெளியேறாமல் செய்யும் பயிற்சிகளை செய்வது மிக உசிதமானது. ஏனென்னில் தற்காலத்தில் பல்வேறு காரணங்களால் பெண்களை பார்க்கும் போதும், நினைக்கும்போதும் மனதில் தவறான எண்ணங்கள் ஏற்பட்டு விந்தினை இழக்கும் படியே மனம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் பெண் ஆணை விட சக்தி வாய்ந்தவள், உறுதியற்ற ஆணிடம் சக்தியினை உறிஞ்சி எடுத்துவிடுவாள். மேலும் ஆணே தன்னை பயிற்சிப்படுத்தி கொள்ள வேண்டிய தேவை அதிகம் இருக்கிறது. பெண்களுக்கு இயற்கையாகவே சக்தியை மேலே செலுத்தும் ஆற்றல் இருக்கிறது. மேற்கூறிய முறையில் சக்தியினை மேலேற்ற தெரிந்த ஆணுடன் உறவு கொள்ளும்போது இயல்பாகவே உள்ளுணர்வு மூலம் முயற்சி இன்றி பெண் தனது சக்தியை மேலேற்றும் தன்மையினை பெறுகின்றாள். எனினும் இந்த யோகத்தை பழகும் பெண்ணும் அடிப்படை விதிகளை, சக்தி மேலேற்றும் முறையினை தெரிந்து இருத்தல் வேண்டும். ஆகவே ஆண் பெண்ணாக ஆன்ம உயர்வு பெற முனையும் தம்பதியினர் கருத்தொருமித்து இந்த யோகத்தினை பயில வேண்டும்