Tuesday, May 31, 2011

செவ்வாய்தோஷம்

நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் உடலின் ரத்த அணுக்களுக்குரிய கிரகம். இதனை பூமிக்குரிய கிரகமாகவும், உடன்பிறப்பிற்குரிய கிரகமாகவும் சோதிடவியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். மனிதர்களின் நடத்தையை நிர்ணயிப்பதில் செவ்வாய்க்கு முக்கிய பங்குண்டு. மரபணு, ரத்த அணுக்கள், ஆண்களின் விந்தணுக்கள் ஆகியவற்றிர்க்கு செவ்வாய்தான் காரணமாக உள்ளது.

நீச்ச செவ்வாய்

செவ்வாய் வீரியத்திற்குரிய கிரகம் என்பதால் ஆண், பெண் இருபாலருக்கும் அது சரியாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் தோஷம் என்று குறிப்பிடப்படுவது இந்த குறைபாட்டினைத்தான். எனவே ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சமாகி சுபகிரகப் பார்வை இல்லாமல் இருந்தால் அவருக்கு காமத்தில் ஈடுபாடு இருக்காது.

ஆண் பெண் இருவருக்கும் சரியான விகிதத்தில் செவ்வாய் அமைந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையில் இன்பம் ஏற்படும். பெண்ணிற்கு வலுவாக செவ்வாய் இருக்கும் பட்சத்தில், ஆணிற்கும் வலுவாக செவ்வாய் இருக்க வேண்டும் என்று சோதிடவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால்தான் தோஷமுள்ளவர்களின் திருமணம் தடைபடுகிறது.

தோஷநிவர்த்தி

செவ்வாய் தோஷக்காரர்கள் சுப்பிரமணிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தால் தோஷநிவர்த்தி நிச்சயம். திருவாரூர் மாவட்டம் பேராளத்துக்குப் பக்கத்தில் கடகம்பாடி அருகே உள்ள சிறுகுடியில் மங்களநாயகி சமேத சூட்சுமபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு முன்புறம் மங்களதீர்த்தம் என்னும் குளம் உள்ளது. குளக்கரை விநாயகர், மங்களவிநாயகர், செவ்வாய் தோஷ ஜாதகக்காரர்கள் மங்களதீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை முறைப்படி வழிபட்டு திருநீறு பெற்று பூசிக்கொண்டால் தோஷநிவர்த்தி நிச்சயம். செவ்வாய்க்கிழமைகளில் காலையும், மாலையும் நீராடி வழிபடுவது உத்தமம்.

செவ்வாய்க்கிழமை விரதம்

ஜாதகத்தில் அங்காரக தோஷம் உள்ளவர்க்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தை மங்களவார விரதம் என்று சொல்வார்கள். செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் அம்மனின் அருளும், முருகனின் அருளும் கிடைக்கிறது. செவ்வாய் தோஷமும் நீங்குகிறது. ரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கி மனதில் தைரியமும் வீரமும் பிறக்கின்றன.

செவ்வாய்கிழமை விரதம் இருக்கும் பெண்கள் பூஜை முடிந்த பின் துவரை வழங்கவேண்டும். அதன்பிறகு சுமங்கலிப்பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் ஆகியவற்றைத் தரவேண்டும்.

செவ்வாய்திசை, செவ்வாய்தோஷம், செவ்வாய் நீசம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது நன்மை தரும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செம்பவழத்தைக் கழுத்துச் சங்கிலியிலோ, மோதிரத்திலோ அணிந்து கொள்ள வேண்டும்.

இத்தோஷம் உள்ள பெண்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து செவ்வாய்க்கிழமை நாட்களில் காலையில் அம்மனையும், மாலையில் முருகனையும் வழிபட்டு வந்தால் தோஷம் நீங்கிவிடும்.

பிரிந்தவர்களை இணைக்கும் செவ்வாய்

நவகிரகத்தில் செவ்வாயை சகோதரகாரர் என்று குறிப்பிடுவர். இவரை வழிபட்டால் சகோதரர் உறவு பலப்படும். பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர செவ்வாய்க்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட வேண்டும்.

தாரதோஷம்

சில ஆண்களுக்கு ஜாதகரீதியாக தாரதோஷம் ஏற்படுவதுண்டு. செவ்வாயினால் உண்டாகும் இந்த தோஷத்திற்காக, வாழைமரத்தை வெட்டி பரிகாரம் செய்யும் படி ஜோதிடர்கள் கூறுவதுண்டு. இது மனத்திருப்திக்காக மட்டுமே செய்யப்படுகிறது.

முருகனை நினைத்து அனுதினமும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பவர்களுக்கு எந்த வித தோஷமும் தீண்டாது.

Monday, May 30, 2011

சிவனருள் கிட்டும் சோமவாரப் பிரதோஷம்

மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சிவஆலயங்களில் இன்று சோமவாரப்பிரதோஷம் நடைபெறுகிறது. மற்ற பிரதோஷ நாட்களைவிட சனிப்பிரதோஷம் மற்றும் சோமவார பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்த நாளில் நாள் முழுவதும் சிவநாமம் ஜெபித்து மாலை வேளையில் ஆலய தரிசனம் செய்வோம்

பிரதோஷம் தோன்றிய கதை

சாகா வரம் பெறுவாதற்காக அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது வலி தாங்காத வாசுகி பாம்பு விஷத்தை கக்கியது. அச்சமயத்தில், கடலில் இருந்தும் விஷம் பொங்கியது. இப்படி பாம்பினால் கக்கப்பட்ட 'காலம்' என்ற நீல விஷமும், பாற்கடலில் பிறந்த 'ஆலம்' என்கிற கருப்பு விஷமும் சேர்ந்து கருப்புப் புயல் போல் கொடிய வெப்பமும்.

கடும் புகையும் கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது. விஷத்தைக் கண்டு பயந்த தேவர்கள் கயிலாயம் சென்று ஈசனிடம் முறையிட்டனர். அப்பொழுது ஈசன், தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகரும் ஆகிய 'சுந்தரர்' என்னும் அணுக்கத் தொண்டரை அனுப்பி "அவ் விஷத்தை இவ்விடம் கொண்டுவா!" என்று பணிந்தார். சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக கொண்டு வந்தார்.

அந்த ஆலகால விஷத்தை ஒரு கணநேரத்தில் உட்கொண்டார் சிவபெருமான். இதனால் ஈரேழு உலகிற்கும் பாதிப்பு வரும் என்று கருதிய பார்வதி, விஷம் முழுவதும் சிசனின் கழுத்திலேயே தங்குமாறு செய்தால். அன்றுமுதல் ஈசன், திருநீலகண்டர் என்றழைக்கப்பட்டார். விஷம் கொண்டுவந்த 'சுந்தரர்' 'ஆலால சுந்தரர்' என்று அழைக்கப்பட்டார்.

திரியோதசி நடனம்

ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில் எழுந்து, உமையவனை ஒரு பக்கம் கொண்டு சூலத்தை சுழற்றி மருகத்தை ஒலித்து 'சந்தியா நிருத்தம்' எனும் நடனம் ஆடினார். இந்நாட்டியத்தை கண்ட தேவர்கள்அனைவரும் 'ஹரஹர' என்று மகிழ்ச்சிக்குரல் எழுப்பினர்.

நலம் தரும் நந்திகேஸ்வரர்

பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும்.

மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தல் நலம்.

பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள். எனவே, பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும்.

அபிஷேகப் பொருட்கள்

இறைவனுக்கும் நந்திதேவருக்கும் தேவையான அபிஷேகப் பொருட்களை வழங்குவதன் மூலம் நற்பலன்களை அடையலாம் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் - பல வளமும் உண்டாகும், தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் - விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், நெய் - முக்தி பேறு கிட்டும். இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் – சுகவாழ்வு, சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்

பிரதட்சண முறை

முதலில் சிவலிங்கத்தையும் தேவரையும் வணங்கிகொண்டு, அப்பிரதட்சணமாகச் சண்டேசுவரர் சந்நிதி வரை சென்று அவரை வணங்கி கொண்டு, அப்படியே திரும்பி வந்து முன்போல சிவலிங்கத்தையும் ரிஷப தேவரையும் வணங்கிக் கொண்டு வழக்கம்போல் பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரும்போது சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி அப்பிரதட்சணமாக சந்நிதிக்கு வந்து சிவலிங்கத்தையும் ரிஷபதேவரையும் வணங்க வேண்டும்.

இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் அனேக அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு ஆலயத்தில் பிரதோஷ வழிபாட்டை முடித்தபின் வீட்டிற்குச் சென்று உணவருந்தல் வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது.

சோமவார பிரதோஷம்

சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரக்ஷை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

தெய்வாம்சம் நிறைந்த இலுப்பை மரம்

இந்து ஆலயங்களில் தலவிருட்சம் வைத்துப் பேணும் மரபு உண்டு. இந்தவகையில் திருஇரும்பைமாகாளம், திருப்பழமண்ணிப்படிக்கரை, திருக்கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு), திருவனந்தபுரம் முதலிய திருக்கோயில்களில் இலுப்பை மரம் தலமரமாக உள்ளது. திருப்பழமண்ணிப்படிக்கரை தலமரத்தால் இலுப்பைப்பட்டு என்றே தற்பொழுது விளங்குகிறது.

இலுப்பை மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாகும். கொத்துக் கொத்தான நீண்ட இலைகளையும் கொத்தான வெண்ணிற மலர்களையும் முட்டை வடிவ சதைக்கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் கொண்டது இலுப்பை மரம். சாறு, பால் தன்மை கொண்டது. இந்த மரம் இருப்பை, ஓமை என்ற பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது.

திருவிளக்கெண்ணெய்

இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்பெண்ணெய் எனப்படுகின்றது. இந்த எண்ணெய் விளக்கெரிக்கப் பயன்படுகிறது. இதற்காகவே திருக்கோயில் சார்ந்த இடங்களில் தோப்பு தோப்பாக வளர்க்கப்பெற்றது; காடுகளிலும் தானே வளர்கிறது.

இலுப்பெண்ணெய் சகல தேவர்களிற்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது. ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது இலுப்பை எண்ணெய்தான். முன்பு பெரும்பாலான சிவாலயங்களில் இதனால் தான் தீபமேற்றப்பட்டது. இலுப்பெண்ணெய்யை ஆலயங்களின் தீபம் ஏற்றுவதற்கு வழங்குவதன் மூலம் காரியங்கள் வெற்றிபெறும் என்பது இந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனவே இதனை விடச் சிறந்த எண்ணெய் பூலோகத்தில் இல்லையென்றே கூறப்படுகிறது.

ஐஸ்வர்யங்கள் பெருகும்

பிரம்ம முகூர்த்த வேளையில் பஞ்சமுகக் குத்துவிளக்கிற்கு இலுப்பெண்ணெய் விட்டு வெள்ளைத் திரியிட்டு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் அஷ்டலட்சுமியின் ஐஸ்வர்யங்கள் யாவும் குறித்த குடும்பத்திற்குக் கிட்டும். இதேபோல் இங்கு மஞ்சள் திரியிட்டு தீபம் ஏற்றிவர குபேர அருளும் திருமண பாக்கியமும் புத்திர பாக்கியமும் உண்டாகும். சிவப்புத் திரியால் தீபமேற்றும் போது வறுமை, கடன், பல்வேறு தோஷங்களும் நீங்கும்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் அரப்பு

எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கிடைக்கும் இலுப்பை பிண்ணாக்கு அரப்பு எனப்படுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சி தரும். வாரத்தில் ஒரு நாள் அரப்பு வைத்து தலையில் முழுகும் மரபு தமிழர்களிடையே உண்டு. இதனால் குளிர்ச்சியும், அமைதியும் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் பெறும். ஆனால் இன்றைக்கு மனிதனின் ஈமக்கிரியை செய்யும்போது இறந்த உடலுக்கு நீராட்டுவதற்காகவே அரப்பு பயன்படுகிறது.

மருத்துவப்பயன் கொண்ட இலுப்பை

இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவையாக விளங்குகிறது. இலை பால் பெருக்கும், பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும்; உடலுக்குப் பலம் கொடுக்கும் பட்டை, விதை ஆகியவை உடல்தேற்றி உரமாக்கும்; நெய் புண்ணாற்றும். பிண்ணாக்கு தொற்றுப்புழு, குடற்புழு ஆகியவற்றைக் கொல்லும், வாந்தி உண்டாக்கும்.

இலுப்பைப்பூ

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு சுவை கொண்டது இலுப்பைப்பூ. நல்ல சுவை கொண்ட இப்பூவினால் பாம்பு கடித்த விஷம், வாதநோய் குணமடையும். இலுப்பைப்பூவை பாலில் போட்டு காய்ச்சி தினமும் பருகினால் தாது விருத்தி ஏற்படும். தாகம் தணியும்.

சித்திரையில் தான் தமிழ்ப் புத்தாண்டு!


சித்திரையில் தான் தமிழ்ப் புத்தாண்டு!

பூமி, சூரியனை சுற்றி வருவதும், ஒருமுறை சுற்றிவர ஒரு வருட காலம் எடுக்கும் என்பதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள். பூமி சூரியனை சுற்றும் போது சோதிடம் கூறும் 12 ராசிகளில் முதல் ராசியாகிய மேடராசியில் சூரியன் பிரவேசிக்கும் தினமே தமிழ் புத்தாண்டு பிறப்பாக கணிக்கப்பெறுகின்றது. அதாவது, மீண்டும் ஒருமுறை சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் நாளே (சித்திரை) தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகின்றது


கீழே உங்கள் வசதிக்காக தமிழ் வருடங்கள்.

எண் தமிழ் வருடங்கள்



1 பிரபவ

2 விபவ

3 சுக்ல

4 பிரமோதூத

5 பிரசோற்பத்தி

6 ஆங்கீரச

7 ஸ்ரீமுக

8 பவ

9 யுவ

10 தாது

11 ஈஸ்வர

12 வெகுதானிய

13 பிரமாதி

14 விக்கிரம

15 விஷூ

16 சித்திரபானு

17 சுபானு

18 தாரண

19 பார்த்திப

20 விய

21 சர்வசித்து

22 சர்வதாரி

23 விரோதி

24 விக்ருதி

25 கர

26 நந்தன

27 விஜய

28 ஜய

29 மன்மத

30 துன்முகி

31 ஹேவிளம்பி

32 விளம்பி

33 விகாரி

34 சார்வரி

35 பிலவ

36 சுபகிருது

37 சோபகிருது

38 குரோதி

39 விசுவாசுவ

40 பரபாவ

41 பிலவங்க

42 கீலக

43 சௌமிய

44 சாதாரண

45 விரோதிகிருது

46 பரிதாபி

47 பிரமாதீச

48 ஆனந்த

49 ராட்சச

50

51 பிங்கள

52 காளயுக்தி

53 சித்தார்த்தி

54 ரௌத்திரி

55 துன்மதி

56 துந்துபி

57 ருத்ரோத்காரி

58 ரக்தாட்சி

59 குரோதன

60 அட்சய


மருத்துநீர்

புத்தாண்டினைக் கொண்டாடுவதற்குச் செய்யப்படும் ஆயத்தங்களில் மருத்துநீர் வைத்து நீராடல் ஒன்றாகும்.

இம் மருத்துநீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி, சுக்கு என்பனவற்றை நீரிலே கலந்து காய்ச்சப்பெறுவதாகும். பெரும்பாலும் புத்தாண்டு நாளுக்கு முதல்நாள் மருத்துநீர் அருகிலிருக்கும் கோயிலிலே காய்ச்சப்படுகின்றது. மக்கள் பெரும்பாலும் இலவசமாகவே இதனைப் பெற்றுக் கொள்வர். சிலர் பணம் கொடுத்தும் பெறுவர்.

மருத்துநீர் தலையிலே தேய்த்து நீராடினால்தான் சித்திரைப் புத்தாண்டின் நல்ல பலன்களைப் பெறலாம் என்னும் நம்பிக்கை இந்துக்களிடையே உண்டு. அவ்வாறு நீராடிய பின்னர் புதிய ஆடைகளைக் குடும்பத்தினர் எல்லோரும் அணிவர்.

சித்திரைப் பொங்கல்

தைத்திங்கள் முதல் நாளிலே பொங்கலிடுவது போல சித்திரைத் திங்கள் முதல்நாளிலும் பொங்கல் செய்வது வழக்கமாகும். வீட்டு முற்றத்திலே பொங்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. வீட்டு முற்றத்தில் பொங்கலிடும் இடம் சாணியினாலே மெழுகப்பட்டுத் தூய்மையாயிருக்கும். மாவிலை, தோரணம் கட்டப்படும். மூன்று கற்கள் வைத்து அதன்மேலே பாலுடன் கலந்த நீர் விட்ட பானை ஏற்றப்படும். பால் பொங்கிவரும் போது வீட்டின் தலைவர் அதனுள் கிழக்குப் பக்கமாகவோ வடக்குப் பக்கமாகவோ பார்த்து அரிசியும் பயறும் சேர்ந்த கலவையைக் கையினால் அள்ளி மூன்று தடவை இடுவர். மிகுதியை வீட்டுத் தலைவி பானையுள் இட்டு, ஏனைய பொருட்களையும் சேர்த்து பொங்கல் தயாரிப்பார். மஞ்சளிலே குட்டிப் பிள்ளையார் அமைப்பர். பழம், வெற்றிலை, பாக்கு முதலியனவற்றுடன் பொங்கல் படையல் இடப்படும். கற்பூர ஆரத்தியின் பின்னர் ஒரு சிறிய வாழை இலைத் துண்டிலே பொங்கலில் ஒரு பகுதியை இட்டு, காகத்தைக் கூவி அழைத்து, அது உண்ணுவதற்கேற்றபடி உயரமான ஓர் இடத்திலே வைக்கப்படும். அதன் பின்னர் குடும்பத்தினர் பொங்கல் உண்பர். பொங்கலுடன் பலகார வகைகளையும் பரிமாறும் வழக்கமும் இருந்தது.

இன்று, தைத்திங்களிலே வீட்டு முற்றத்திலே பொங்குவது போல சித்திரைத் திங்களிலே பொங்கும் வழக்கம் அருகியே விட்டது. பெரும்பாலானவர்கள் வீட்டினுள் அடுப்பிலே பொங்குவர். பலர் பொங்கும் வழக்கத்தினையே கைவிட்டுவிட்டனர்.

கைவிசேடம்

சித்திரைப் புத்தாண்டில் கைவிசேடம் கொடுக்கும் வழக்கமுண்டு. இதற்கான உகந்த நேரம் பஞ்சாங்கத்திலே குறிப்பிடப்பட்டிருக்கும். அந்நேரத்தைக் கடைப்பிடித்து, வீட்டிலே தந்தையே பெரும்பாலும் கைவிசேடம் வழங்குவார். வெற்றிலையில் பணத்தை வைத்துக் கொடுக்க வாங்குபவர்கள் அவருடைய காலிலே விழுந்து வணங்கி ஆசிபெற்ற பின்னர் கைவிசேடத்தை வாங்கிக் கொள்வர். சிலரிடமிருந்து கைவிசேடம் பெற்றால் அந்த ஆண்டு முழுவதும் பணவரவும் பல நன்மைகளும் கிடைக்குமென்ற நம்பிக்கையும் உண்டு. இதனால் அவர்களைத் தேடிச் சென்று சித்திரைப் புத்தாண்டிலே கைவிசேடம் பெற்றுக் கொள்வர். அவ்வாறு கைவிசேடமாகப் பெற்ற பணத்தினை அடுத்த சித்திரைப் புத்தாண்டு வரை பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்ற நம்பிக்கையும் உண்டு.

விளையாட்டுக்கள்

போர்த் தேங்காய் அடித்தல் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒன்றாக அமைந்தது. போர்த் தேங்காய் அடித்தல் தமிழரிடையே நடைபெற்றுவந்த பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றாகும். இது கோயில் திருவிழாக்களிலும் விசேட கொண்டாட்ட நாட்களிலும் நடைபெறுவதுண்டு. சித்திரைப் புத்தாண்டு நாளிலே இவ்விளையாட்டுப் பல காலமாக நடைபெற்று வந்தது.

 கோழிச்சண்டைஇன்னொரு பரம்பரை விளையாட்டுப் போட்டி சித்திரைப் புத்தாண்டின் போது நடைபெற்று வந்தது. இம்மரபுவழிபட்ட நிகழ்வினையும் டானியல் தன்னுடைய நாவலிலே விரிவாகவும் தெளிவாகவும் விவரித்துள்ளார். சண்டை செய்வதற்கென்றே சேவல்கள் வளர்க்கப்பட்டன. அவை வளர்க்கப்படும் பக்குவம் பற்றி டானியல் தன்னுடைய அடிமைகள் நாவலில் மிக நுணுக்கமாகக் கூறுகின்றார். இன்றுஆடுகளம்திரைப்படத்தின் முக்கிய விடயமாகத் திகழும்கோழிச்சண்டைநம்முடைய தேசத்திலே சிறப்பாக நடைபெற்றதென்பதற்கு டானியலுடைய நாவல் சான்றாக உள்ளது.

சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுக்களில் ஒன்றுதாச்சிஎனப்படும்கிளித்தட்டுஆகும். இதனை விட எல்லை, சடுகுடு போன்ற விளையாட்டுக்களை ஆண்கள் விளையாடுவார்கள். பெண்கள் கொக்கான் வெட்டுதல், பல்லாங்குழி, சொக்கட்டான், நாயும் புலியும் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவர்.

பஞ்சாங்கம்

சித்திரைப் புத்தாண்டுக் காலத்திலேயே புதிய பஞ்சாங்கம் வெளி வரும். இலங்கையிலேஇரகுநாதையர்குழுவினர் கணித்து வெளியிடும் வாக்கிய பஞ்சாங்கமும்திருக்கணிதகுழுவினர் கணித்து வெயியிடும் திருக்கணித பஞ்சாங்கமும் வெளிவருகின்றன. சீனர்கள் தங்களுடைய காலக் கணிப்பில் 60 ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளனர். அவற்றுக்குப் பெயர்களும் இட்டுள்ளனர். கீழைத் தேயக் காலக் கணிப்பில் இது பொதுவான விடயமாக அமைகின்றது. இந்துக் காலக் கணிப்பிலும் 60 ஆண்டுக் கணக்கு இடம்பெறுகின்றது. பிரபவ ஆண்டு தொடக்கம் அஷய ஆண்டு வரையிலான 60 ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டே பஞ்சாங்கம் கணிக்கப்படுகின்றது. “இப்பஞ்சாங்கத்திற்கு ஆதாரமாகவுள்ள கணித சித்தாந்தம் மக்களை உய்விக்கும் பொருட்டு மஹாமகத்துவம் பொருந்தியவர்களும் யோக சித்தியால் திரிகால ஞானமுணர்ந்த தத்துவஞானிகளும் ஆகிய முனிசிரேஷ்டர்களால் ஒரு கற்பகாலம் வரையுமுள்ள கிரககால வரையறைகளை எக்காலமும் எளிதிற் கணிக்குமாறு யுக்தியனுபவங்களுக்கியைய நன்கருளிச் செய்யப்பட்டுள்ளதுஎன்று வாக்கிய பஞ்சாகக்காரர் குறிப்பிடுவதை நோக்குக. இரண்டு பஞ்சாங்கங்கள் பெற்ற மகிழ்ச்சி ஒரு பக்கம்; அதனாலே சில வேளைகளில் உபத்திரவமும் ஏற்படுகிறது.

 தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம்?

தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நமது பெரியோர்கள் சொன்ன மேலும் சில விளக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்!
சித்திரை 1 தமிழ்புத்தாண்டாக கொண்டாடி வந்த வழக்கத்தை மாற்றி, தமிழக அரசு தை 1 தமிழ் புத்தாண்டாக அறிவித்தது. சித்திரை ஒன்று அன்று வழக்கமான பஞ்சாங்கம் படிப்பதைக்கூட கோவில்களில் வாய்மொழியாக தடைசெய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆண்டு என்பது மாதம், வாரம் மற்றும் நாள் ஆகிவற்றால் ஆனதால் இவைபற்றி பார்ப்போம்.


காலத்தை அளவு செய்வதன் அளவுகோல் வானவியலை சார்ந்தது. பருப்பொருள்களின் நகர்தலினால்தான் காலம் என்பதே உருவானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் நமது பாரம்பரிய வானசாஸ்த்திரம் வான் கோள்களின் மாறாத இயக்கத்தை காலக்கடிகாரத்தின் முற்களாய் கொண்டு அளந்தது. நாள், வாரம், திங்கள்,வருடம் எல்லாம் கோள்களின் சுழற்சியினால் கணிக்கப்படுவது. நாளின் மணித்துளிகளை ஹோரை என்றனர் (இதுவே Hour ஆனது). நாழி, விநாழி (தமிழில் வினாடி ஆனது) என்பன நேரத்தின் அளவுகோல்கள்.



நமது வானசாஸ்த்திரம் அனைத்து வகையான காலப்பகுதிகளுக்கும் கோள்களின்/கிரஹங்களின் பெயரைச் சூட்டியது. எனவேதான் கிழமைகளின் பெயர்கள் ஞாயிறு மற்றும் ஏனைய கிரஹங்களின் பெயரில் அமைந்தது. [கிரஹிக்கும் அதாவது ஈர்க்கும் சக்தியினால் (Gravitation) இயங்குவதால் கிரஹம் என்றனர். எனவேதான் சூரியனும் ஜோதிட நோக்கில் மையத்தில் உள்ள ஒரு கிரஹம்தான், நவகிரஹங்களில் காண்பது போல். (சுய ஒளி உடையது நட்சத்திரம், பூமி முதலியன கோள்கள்/கிரஹங்கள் என்பது சமீபகாலத்தில் நம் பள்ளிகளில் எழுதப்பட்டது).

 ராகு கேது ஆகியன வெறும் நிழற்கோள்களானதால் அவை கிழமைகளில் இல்லை. திதி என்பது தமிழில் தேதி என ஆனது. பனிரெண்டு ராசிகளால் பனிரெண்டு மாதங்களாயின. இந்தப் பதிவின் முக்கியமான விஷயம் கிழமைப்பெயர்களைப் போன்று தமிழ் மாதங்களின் பெயர்களும் வானவியலை சேர்ந்தது என்பதும் அதில் சித்திரைதான் வருடத்தின் முதல் மாதமாக வைக்கப்பட்ட காரணங்களும் இதனை மாற்றக்கூடாததிற்கான காரணங்களைப் பற்றி விவரிப்பதற்காகவும்.
சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ்மாதத்தில், அம்மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே மாதத்தின் பெயராக வைத்துள்ளனர்(விவரம் கீழே காண்க). எனவே தமிழ் மாதப்பெயர்கள் வானசாஸ்த்திரத்தை அடிப்படையாக கொண்டவை.
ஒரு ஆண்டு என்பது பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலம். ஒரு வட்டத்தின் முதற்புள்ளியை எப்படி கணிப்பது? சுற்றும்போது பூமியின் சாய்வினால் சூரியன் வடக்கு தெற்க்காக நகர்கிறது. சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாததை முதற்புள்ளியாய் ஆண்டின் தொடக்கமாக கொண்டுள்ளனர் நமது பெரியோர்.

 பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள நமது நாட்டிக்கும் இதுதான் சரி (சித்திரை கத்திரி வெயில்). பனிரெண்டு ராசியினால் பனிரெண்டாக பகுக்கப்பட்ட ஆண்டில் நம்மீது நேராக பிராகசிக்கும்போது சூரியன் மேஷ ராசியில் இருப்பான். எனவேதான் மேஷம் முதல் ராசியானது. இப்படி நேராக பிரகாசிக்கும் மாதம் சித்திரை. எனவேதான் சித்திரை முதல் மாதமானது. தைமாதத்தில் சூரியன் கீழே ஆஸ்திரேலியா மீது நேராக பிரகாசித்துக்கொண்டிருப்பான்.
எனவே முதல் மாதமாக சித்திரை தவிற வேறு எந்தமாதமும் நமக்கு பொருத்ததமாகாது. ஆதலின் சித்திரை முதலான மாதப்பெயர்களை உடைய ஆண்டின் முதல் மாதம் சித்திரையாக மட்டுமே இருக்கமுடியும். எப்படி அர்த்தமே இல்லாமல் தை முதல் மாதமாகமுடியும்?
ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே தமிழ்மாதத்தின் பெயராக வைத்துள்ளனர். மட்டுமல்லாது அன்றைய தினம் விஷேச தினமாகவும் இருக்கும். சித்திரை மாதம் பெளர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வரும். எனவே மாதத்தின் பெயர் சித்திரையானது. அந்நாளும் சித்ராபெளர்ணமியாக கொண்டாடப்படுகிறது.
சித்திரை = சித்திரை [சித்திரா பெளர்ணமி]



விசாகம் = வைசாகம் = வைகாசி [வைகாசி விசாகம்]



அனுசம் = ஆனி



பூராடம் - பூராடி = ஆடி



சிரவணம் - ச்ராவணி = ஆவணி [திருவோணம் வடமொழியில் ஸ்ராவண நட்சத்திரம்]



பூரட்டாதி = புரட்டாசி [புரட்டாசி பெளர்ணமி பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும்]



அஸ்வினி = ஐப்பசி [வடமொழியில் ஆஸ்வீஜம்]



கார்த்திகை =கார்த்திகை [கார்த்திகை பெளர்ணமி]



மிருகஷீர்சம்= மார்கஷீர்சம் =மார்கழி



பூசம் வடமொழியில் புஷ்யம் என்பது. இதற்கு தைஷ்யம் என்று மற்றொரு பெயருண்டு. இது தை ஆனது. [தை பூசம்]



மகம் - வடமொழியில் மாக = மாசி [மாசி மகம்]



உத்திரம் -வடமொழியில் உத்திரப் பல்குனி = பங்குனி [பங்குனி உத்திரம்].

 ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமியன்று அதற்குரிய நட்சத்திரம் வருவதை காணலாம். இந்த நட்சத்திரப் பெயர்கள் ஏதோ வலிந்துபொருத்துவதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுக்கப்பட்டவை அல்ல. சித்திரையில் தொடங்கி பிற நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக 30 அல்லது 31 நாட்சுழற்சியில் வரும். சித்திரையிலிருந்து 31 வது நாள் விசாக(வைசாக) நட்சத்திரம் மற்றும் இதுபோல. மேலும் வைகாசி விசாகம், தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற பண்டிகைகளில் மாதத்தின் பெயருக்கும் நட்சத்திரதிற்கும் உள்ள தொடர்பை தெளிவாக காணலாம்.
இன்னும் அனேகவிஷயங்கள் உள்ளன. இப்படி காலஅளவுகள் நமது பெரியோர்களால் வானசாஸ்த்திரத்தில் அறிவியல் பூர்வமாக கணித்து வழக்கத்தில் உள்ள வருடத்தின் முதல் நாளை மாற்றுவது தவறு. தமிழ் உணர்வு என்பது எல்லாருக்கும் உண்டு. இதனை தேவையில்லாத இடங்களில் புகுத்தி மக்களை உசிப்பேற்றி குளிர்காயக்கூடாது. தமிழை காரணங்காட்டி வங்கிக் கணக்குகளுக்கான வருட ஆரம்பத்தை தை 1 க்கு மாற்ற அரசு உத்தரவிட முடியுமா? தேவையா?
முடிவாக, மாதங்களின் பெயர் சித்திரை முதல் பங்குனி வரை இருக்கும்போது, சூரியன் சித்திரையில் நம்மீது நேராக பிராகசிக்கும் வரை சித்திரை தான் வருடத்தின் முதல் மாதமாக இருக்கமுடியும். முதல்மாதம் தை என்பது வெறும் வீம்பாகத்தான் இருக்க முடியும். இதை மக்கள் உணர்ந்து தெரிந்தவர்கள் இவ்விஷயங்கள் தெரியாதுபோன்று இருக்கும் நம் அரசுக்கு உணர்த்தவேண்டும். தெரியாதவர்களுக்கு எடுத்துச்சொல்வோம்.


யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.


-
திருமந்திரம் (திருமூலர்)





உண்மையில் நாம் என்று பிறந்தோமோ அந்த நாளை பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்பது நியதி. அப்படிப் பார்க்கும் போது தமிழர்கள் அறுபது வருடத்திற்கு ஒருமுறை தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டும். நமது தமிழ் வருடங்கள் வான் கோள்களின் சுழற்சியின் அடிப்படையில் இயற்கையின் கணக்கீடுகளைக் குறிப்பதாகவே வடிவமைக்கப்பட்டிருகிறது. தமிழ் மாதங்களும் அவ்வாறே. அப்படிப் பார்க்கும் போது நாம் என்று பிறந்தோமோ அந்த வருடமும், எந்த நட்சத்திரத்தில் பிறந்தோமோ அந்த நாளில் தான் தமிழர்கள் உண்மையாகப் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.



அதாவது நாம் எந்த தமிழ் வருடத்தில் பிறந்தோமோ, அந்தத் தமிழ் வருடம், தமிழ் மாதம், தமிழ் நாள் எப்பொழுது மீண்டும் வருகிறதோ அன்று தான் நாம் முதல் பிறந்த நாளையே கொண்டாட வேண்டும். அது தானே சரி. அப்படிப் பார்த்தால் ஒவ்வொருவருக்கும் பிறந்தநாள் அறுபது வருடங்களுக்கு ஒரு முறைதான் வருகிறது.



இப்படி நாம் பிறந்த அதே நாள் அதே வருடம் திரும்பி வருவதற்க்கு அறுபது வருடங்கள் ஆவதால் அந்த நாளை மிகச்சிறப்பாக அறுபதாம் கல்யாணமாக முழுகுடும்பத்துடன் கொண்டாடுகின்றோம். அதாவது அறுபது வயதில் ஒரு மனிதன் கண்டிப்பாக குடும்பத்துடன் தான் இருப்பான் என்பது இயற்க்கை என்பதால் அதை வெறும் பிறந்த நாளாக மட்டும் கொண்டாடாமல் குடும்ப நாளாகக் கொண்டாடுகின்றோம். மேலும் ஒரு மனிதன் வாழ்வின் ஒரு சுற்றை முடிப்பதற்க்குளே பல கஷ்டங்களை அனுபவித்து விடுகிறார்கள். சிலர் இல்லாமலே போகிறார்கள். இதனாலேயே இவைகளைத் தாண்டி இந்த முதல் பிறந்தநாள் அதாவது அறுபதாவது திருமணம் கொண்டாடுபவர்களை வணங்கி ஆசி பெறுகின்றனர். இப்படி இல்லாமல் ஆண்டுக்கொரு முறை பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் தமிழர்களா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.



இதை எல்லோரும் மனதில் வைத்து தமிழ் வருடப்படி பிறந்தநாள் கொண்டாட வேண்டும். சரி இதையும் மூட நம்பிக்கை என்று பகுத்தறிவு மூடர்கள் சொன்னார்கள் என்றால் , தமிழ் புத்தாண்டு தேதியை மாற்றிய அவர்கள் தமிழ் வருட கணக்கீடுகளை மாற்ற ஏன் முன்வரவில்லை? தமிழ் வருடங்களின் பெயர்களை ஏன் மாற்றத் துணியவில்லை? முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். ஆதலால் அந்த மூடர்கள் படுத்தும் பாடுகளை மறந்து விட்டு நாம் உண்மையான தமிழர்களாக தமிழ்ப் புத்தாண்டை தமிழ் வருடப்படியே கொண்டாடுவோம்.