Monday, March 28, 2016

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!

மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!
குருசேத்திர யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் தீவிரமாய் போர் செய்து கொண்டிருக்கிறார்கள். கவுரவர் அணியில் இருந்து துரோணர் உக்கரமாய் போர் செய்கிறார். துரோணர் சிறந்த வீரர். அவரை போரிட்டு வெல்ல முடியாது என்பது பகவான் கிருஷ்ணனுக்கு தெரியும்.எனவே துரோணரை தந்திரமாக வீழ்த்த எண்ணுகிறார்.
துரோணரின் ஒரே பலவீனம் அவரது மகன் அஸ்வத்தாமன் மீது அவருக்குள்ள பாசம்.அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் துரோணர் தவித்துப் போய்விடுவார் என்று கணக்கு போடுகிறான் கிருஷ்ணன்.
உடனே கிருஷ்ணன் தருமரை அழைத்து சொல்கிறான் " தருமா! துரோணரை போரில் வீழ்த்த உங்களால் இயலாது. எனவே நான் ஒரு உபாயம் சொல்கிறேன். அதன்படி செய்" என்கிறான். தருமர் உடனே ,"சொல் கிருஷ்ணா" என்கிறார்.
கிருஷ்ணன் சொல்கிறான் " தருமா! துரோணருக்கு தன் மகன் அஸ்வத்தாமன் மீது அளவு கடந்த பாசம்.அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் இவர் துடித்துப் போய்விடுவார்.அந்த நேரத்தில் நாம் அவரை வீழ்த்திவிடலாம். அதனால் நீ இப்போது "அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்" என்று சத்தம் போட்டு சொல்.அதை கேட்டவுடன் அவர் போரை நிறுத்திவிடுவார். பிறகு அர்ஜுனன் அவரை தாக்கட்டும்"
.இதைக்கேட்ட தருமர் , "கிருஷ்ணா! என்னைப் பற்றி நன்கு அறிந்த நீயா இப்படி சொல்கிறாய். எந்த காரணம் கொண்டும் நான் பொய் சொல்ல மாட்டேன் என்பது உனக்கு தெரியாதா? நான் நிச்சயம் இந்த பாவத்தை செய்யமாட்டேன் " என்கிறார்.
கிருஷ்ணன் யோசிக்கிறான்."இந்த தருமனை பொய் சொல்ல வைப்பது சிரமம்.அதேநேரம் தருமன் சொன்னால் தான் துரோணர் நம்புவார்.என்ன செய்யலாம்" என யோசிக்கிறான்.
பிறகு பீமனை அழைக்கிறான்.ஓடோடிவந்த பீமனிடம், "பீமா! நீ ஒரு முக்கியமான் வேலை செய்ய வேண்டும்" என்கிறான். என்ன என்று கேட்கும் பீமனிடம் , "பீமா! கவுரவ சேனையில் அஸ்வத்தாமன் என்னும் யானை இருக்கிறது.அது போர்க்களத்தில் புகுந்து நமது வீரர்களை பந்தாடுகிறது. நீ உடனே பொய் அதை கொன்றுவிட்டு வா" என்கிறான். பீமனும் சரி என்று சொல்லி கையிலே கதையை எடுத்தான். நேரே அந்த யானையிடம் சென்று கதையால் ஒரு போடு.யானை கீழே விழுந்து இறந்தது.
பீமன் கிருஷ்ணனிடம் ஓடோடி வந்து நடந்ததை சொல்கிறான். கிருஷ்ணர் இப்போது தருமரைப் பார்க்கிறார். "தருமா! கேட்டாயா? பீமன் அஸ்வத்தாமன் என்னும் யானையை கொன்றுவிட்டான்.அதனால் நீ இப்போது தாராளமாக அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்று சொல்லலாம்" என்கிறான்.
அதற்கு தருமர், "கிருஷ்ணா! நான் நீ சொன்னபடி செய்கிறேன்.ஆனால் அஸ்வத்தாமன் எனும் யானை இறந்துவிட்டது என்றுதான் சொல்வேன் " என்கிறார்.
கிருஸ்ணன் உடனே, " தருமா! நான் சொல்வதைக் கேள்.இல்லையென்றால் துரோணரை வீழ்த்தவே முடியாது.அதனால் , ' இறந்துவிட்டான் அஸ்வத்தாமன் என்னும் யானை' என்று சொல்.இதில் 'இறந்துவிட்டான் அஸ்வத்தாமன்' என்பதை சத்தமாகவும் , 'என்ற யானை' என்பதை மெதுவாகவும் சொல்" என்கிறான்.
இதற்கு தருமர் சம்மதிக்கிறார். அதற்குள் கிருஷ்ணன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டான் என்ற செய்தியை பரப்புகிறார்.இந்த செய்தி துரோணர் காதில் விழுகிறது. ஆனால் அவர் அதை நம்ப மறுக்கிறார்.ஏனென்றால் அஸ்வத்தாமன் ஒன்றும் சோற்றுக்கு செத்தவனல்ல. நிகரற்ற வீரன்.அவனை வீழ்த்துவது மிகக் கடினம்.
அதனால் எப்போதும் சத்தியமே பேசும் தருமரைப் பார்த்து துரோணர் கேட்கிறார், "தருமா! நீ சொல்.அஸ்வத்தாமன் என்ன ஆனான்? இறந்துவிட்டானா ?" அதற்கு தருமர், ஆமாம்! 'இறந்துவிட்டான் அஸ்வத்தாமன்' என்று சத்தமாகவும், 'என்ற யானை' என்று மெதுவாகவும் சொல்கிறார்.
இதைக்கேட்ட துரோணர் கலங்கி போய் தனது வில்லை தூக்கி எறிந்து இனி போர் செய்ய மாட்டேன் என்று அமைதியாய் அமர்ந்து விடுகிறார்.
உடனே கிருஷ்ணன் அர்ஜுனனிடம் கண் காட்டுகிறான்.புரிந்துகொண்ட அர்ஜுனன் தனது சக்திவாய்ந்த பாணத்தால் துரோணரை வீழ்த்துகிறான்.
இந்த சம்பவத்தின் முக்கிய நிகழ்வு என்ன தெரியுமா? தருமர் எமதர்மனின் அம்சமாக குந்திதேவி வயிற்றில் உதித்தவர்.மகா சத்யவான்.பொய்யே பேசாதவர்.
இதனால் போர்க் களத்தில் அவரது தேர் இந்த பாவ பூமியில் படாமல் ஒரு அடி உயரத்திலேயே நிற்கும்.அதாவது அந்தரத்தில் நிற்கும்.
அவர் சொன்ன இந்த சிறிய பொய்யினால் அவரது தேர் தடாலென்று பூமியில் வந்து விழுந்தது.
இந்த சம்பவத்தின் முக்கிய பாத்திரமான அஸ்வத்தாமன் பிற்பாடு சிரஞ்சீவி பட்டம் பெறுகிறான்,அதாவது ஆஞ்சிநேய சுவாமி போல் அவனும் இன்றும், என்றென்றும், இந்த உலகம் உள்ளளவும் வாழ்வான்.

கீதை சொல்லும் பாதை!

கீதை சொல்லும் பாதை!
ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் தன் பேரனுடன் வசித்து வந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, சமையலறை மேஜை அருகில் அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம். அனைத்து விஷயங்களிலும் அவரைப் பின்பற்ற நினைத்த பேரனும், கீதை படிக்க முற்பட்டான். ஒருநாள் தாத்தாவிடம், நானும் உங்களைப்போல் தினமும் பகவத் கீதை படிக்கிறேன். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை; புரிந்த கொஞ்சமும், புத்தகத்தை மூடி வைத்ததும் மறந்துவிடுகிறது. இப்படி அதைப் படிப்பதால், எனக்கு என்ன ிரயோஜனம்? என்று கேட்டான். அடுப்பில் கரியைப் போட்டுக்கொண்டிருந்த தாத்தா, அமைதியாக அந்தக் கரிக் கூடையைச் சிறுவனிடம் கொடுத்து, நதிக்குப் போய் இந்தக் கூடையில் நீர் கொண்டு வா என்றார். பேரனும் கூடையுடன் ஆற்றுக்கு ஓடினான். ஆனால், மூங்கில் கூடையில் தண்ணீர் தங்குமா என்ன? அவன் வீடு திரும்புவதற்குள் தண்ணீர் முழுவதும் ஒழுகிவிட்டது. தாத்தா சிரித்துக்கொண்டே, நீ இன்னும் வேகமாக வர வேண்டும் என்று சொல்லி, மறுபடியும் அவனைத் தண்ணீர் எடுத்து வர அனுப்பினார்.
இந்த முறை சிறுவன் வேகமாக ஓடி வந்தான்; ஆனாலும், வீடு சேர்வதற்குள் கூடை காலியாகிவிட்டது. கூடையில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்று புரிந்துகொண்ட சிறுவன், வாளி ஒன்றைக் கையில் எடுத்தான். ஆனால் தாத்தாவோ, எனக்கு வாளியில் நீர் வேண்டாம். கூடையில்தான் வேண்டும். நீ இன்னும் தீவிரமாக முயற்சி செய் என்று அவனை மறுபடியும் ஆற்றுக்கு அனுப்பினார். அந்த முறையும் அவனால் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை. போங்க தாத்தா, இது பயனற்ற வீண் வேலை! என்றான், மூச்சு வாங்கியபடி. அவனைப் பார்த்து புன்னகைத்த தாத்தா, நீ இதைப் பயனற்றது என்கிறாய். ஆனால், கூடையைப் பார், தெரியும் என்றார். பையன் கூடையைப் பார்த்தான். முதல் தடவையாக அது முற்றிலும் வேறாக மாறியிருப்பதைக் கண்டான். பழைய, கரி படிந்த கூடை, இப்போது உள்ளும் புறமும் சுத்தமாகிப் புத்தம் புதியது போல் காணப்பட்டது! தாத்தா சொன்னார்: குழந்தாய்! கீதை படிக்கும்போது இதுதான் நமக்கும் நேர்கிறது. உனக்கு அர்த்தம் புரியாமல் இருக்கலாம்; நினைவில் நிற்காமல் போகலாம். ஆனால், நீ உள்ளும் புறமும் தூய்மையடைந்து முற்றிலும் புதிய மனிதனாகிவிடுவாய்! இது கீதாச்சார்யனான கிருஷ்ண பரமாத்மா, நம் வாழ்வில் நிகழ்த்தும் அற்புதம்!


துன்பங்களுக்கு காரணம் என்ன?

துன்பங்களுக்கு காரணம் என்ன? (கந்த புராணம் மற்றும் கம்பராமாயண நிகழ்வுகள் கூறும் விடை) :
*
தேவர்கள் சூரபத்மனால் விளக்கவொண்ணா இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்; ஓரிரு வருடங்கள் அல்ல, கால வரையின்றி 108 யுகங்கள் வரை நீடித்து வரும் துன்பங்கள். இந்திரன் முதலான தேவர்கள் பன்முறை சிவபெருமானிடம் முருகக் கடவுளைத் தோற்றுவித்து அருளுமாறு மன்றாடியும் பரமனின் திருவருள் நோக்கம் அது வரையில் கூடி வரவில்லை.
*
துன்பங்களின் வீரியம் தாங்காத நிலையில், விரக்தி மேலிடும் பொழுது தெய்வத்தை நிந்திக்கத் தோன்றுவது இயல்பு. அதே நிலையிலுள்ள இந்திரனும் ஆலம் உண்ட பரம்பொருளை நிந்திக்கத் துவங்குகிறான்; இனியும் பரமனை நம்புவதால் பயனேதும் விளையப் போவதில்லை என்ற ரீதியில் இந்திரனின் வார்த்தைகள் அமைய, நான்முகனார் குறிக்கிட்டு இந்திரனுக்கு சில நுட்பங்களை அறிவுறுத்துகிறார்.
*
(கந்த புராணம் - திருஅவதாரப் படலம்: கச்சியப்பர்):
இவறலும் இகலுமின்றி யார்க்குமோர் பெற்றித்ததாகி
அவரவர் வினைகள் நாடி அதற்படு பொருளை நல்கும்
சிவனையாம் வெறுத்தல் குற்றம்! சிறந்தநோன்பு இயற்றிடாதே
தவறு செய்தனம் என்றெம்மை நோவதே தக்கதென்றார்.
*
பொருள்:
சிவப்பரம்பொருள் பற்றற்ற நிலையில் பாகுபாடின்றி நீதி வழங்குபவர், ஆகையால் அவரவருடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை நல்கும் அப்பெருமானை நிந்திப்பதை விடுத்து, முறையான நோன்பு (தவம்) இயற்றாமையை எண்ணி நம்மை நாமே நோவதே தக்க செயல்.
*
இனி மற்றொரு புறம் கம்ப ராமாயண நிகழ்வினைக் காண்போம். 10 மாதங்கள் அன்னை சீதை கடும் துயரினை அசோக வனத்தில் அனுபவித்து வருகிறார். முடிவில் இராவண வதம் நடந்தேறுகிறது. பின்னர் அனுமன் அசோக வனம் சென்று அன்னையிடம் ஸ்ரீராமரின் வெற்றிச் செய்தியைத் தெரிவித்துப் பாதம் பணிகிறார்; ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கிறார்.
*
அன்னை ஜானகியை 10 மாதங்கள் துன்புறுத்திய அசோக வன அரக்கிகளை வதைக்க அனுமதி கோருகிறார். அரக்கிகளோ மிகவும் அஞ்சி அன்னையை சரண் புக, தேஜோ மயமாகவும் கருணையே ஒரு வடிவமெனவும் வீற்றிருக்கும் அன்னை சீதை அனுமனுக்கு கீழ்க்கண்ட பாடல் வரிகளால் பதிலுரைக்கிறார்.
*
(யுத்த காண்டம் - பிராட்டி திருவடி தொழுத படலம்)
யான் இழைத்த வினையினின் இவ்விடர்
தான் அடுத்தது, தாயினும் அன்பினோய்!
கூனியின் கொடியார் அலரே, இவர்!
போன அப் பொருள் போற்றலை, புந்தியோய்!
*
'இது வரையில் எனக்கு வந்து எய்திய துன்பங்களுக்கு யான் முன்பு இழைத்த வினையே காரணம்; இவ்வரக்கிகள் அன்று! ஆகையால் தாயினும் பரிவு மிக்கவனே இவர்களை மன்னிப்பாயாக' என்று கூறியருள்கிறாள். ஸ்ரீமகாலக்ஷ்மியின் நேரடி அவதாரமாக விளங்கும் அன்னை சீதையே 'துன்பத்திற்கு காரணம் தன்னுடைய வினை' என்று கூறும் பொழுது, நம் நிலையினை எண்ணித் தெளிதல் வேண்டும்.
*
'துன்பங்களுக்குக் காரணம் நாம் முன்பு செய்த வினைகளின் பயனே' என்பது இந்து தர்மத்தின் இறுதி முடிவு. எனினும் 'வினைப் பயனான துன்பங்களில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள இயலும்' என்பது திருமுறைகள் காட்டும் தெளிவு. உறுதி மாறாத வழிபாட்டாலும், பிற உயிர்களின் துயரினைப் போக்குவதாலும் இறைவன் மிக மகிழ்ந்து நம்மை வினையின் தாக்கத்தில் இருந்து விடுவித்து அருள்கிறான்.

Saturday, March 19, 2016

மண்டலம் பற்றிய தகவல் இது ...!

மண்டலம் பற்றிய தகவல் இது ...!!!
48 நாள் என்பது ஒரு மண்டலம் இது ஒரு
கணக்கு.
இது ஒரு அறிவியல் சார்ந்த விசயம். மதம்
சம்பந்தமான விசயம் என்றும் சொல்லலாம் .
சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள்
சூரிய ஒளியாக நம்மை தொடுவதை நாம்
ஏற்றுகொள்கிறோம் அல்லவா ? அது
போலத்தான், நம் பூமியைச்சுற்றிலும் உள்ள
கோள்கள், நட்சத்திர கூட்டங்கள்
இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்
வீச்சுக்களும் நம் மேல் விழுகின்றன.
அறிவியல் பூர்வமாக சூரியனின் புற ஊதா
கதிர்கள் நம் மீது படுவதால் ஏற்படும்
பாதிப்புகளையும் அதே நேரத்தில் சூரிய
ஒளியின் மூலம் தான் அனைத்து உயிர்களும்
பயன் பெற்று வாழ்கின்றன என்பதை நாம்
ஏற்றுக்கொள்கிறோம் அல்லவா ? அதே போல்
தான், நம்மை சுற்றிலும் உள்ள கோள்களின்
மற்றும் நட்சத்திர கூட்டங்களின் கதிர்
வீச்சுக்களும் நம் மீது தொடர்பு
கொண்டுள்ளன என்பதை நாம் ஏற்றுகொள்ள
வேண்டும்.
என்ன, அவை இருக்கும் தூரத்தின்
காரணமாகவும், அவற்றின் உருவ வேறுபாடு
காரணமாகவும் அவை வெளியிடும் கதிர்
வீச்சுக்களின் ஒளி சூரியனின் ஒளியைப்போல்
நம் கண்களுக்கு தெரிவதில்லை.
இப்படி நம்மை வந்தடையும் கதிர்வீச்சு
ஒளிகளுக்கு சொந்தமான நட்சத்திர
கூட்டங்களையும் மற்றும் கோள்களையும் 12
ராசி நட்சத்திர கூட்டங்களாகவும், 27 நட்சத்திர
கூட்டங்களாகவும் மற்றும் 9 கோள்களாகவும்
நம் முன்னோர்கள் கண்டுபிடித்து அதை
வகைப்படுத்தி வைத்துள்ளனர்..
நாம் அன்றாடம் பயன் படுத்தும் தினசரி
காலண்டரில், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட
நட்சத்திரத்துக்கு மற்றும் ஒரு குறிப்பிட்ட
ராசிக்கு உரியது என்று கொடுக்கப்பட்டிர
ுப்பதை நாம் பார்க்கிறோம் அல்லவா ? அது
போல வார நாட்களிலும் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கிரகத்திற்கு உரியது என்பதை
அதன் பெயர்களை கொண்டே நாம் அறியலாம்.
ஒரு வருடத்தின் எந்த நாளை எடுத்து
கொண்டாலும் சரி அன்றிலிருந்து தொடங்கி
சரியாக 48 நாட்களுக்குள் 9 கிரகங்கள்,
ராசிக்கூட்டங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்
டங்கள் இவைகளுடைய கதிர்வீச்சு ஆதிக்கம்
பெற்ற அத்தனை நாட்களும் கணக்கில்
வந்துவிடும
கவனிப்போம்....
கிரகங்கள் 9, ராசி கூட்டங்கள் 12, நட்சத்திர
கூட்டங்கள் 27 இந்த மூன்றையும் கூட்டி
பாருங்கள்> 9+12+27=48
எப்படி சூரியனின் கதிர்வீச்சு ஒளி இல்லாமல்
உலகில் விவசாயமும் இன்னும் பல
விசயங்களும் செய்ய முடியாதோ, அதே போல்
இந்த மூன்று கூட்டமைப்புளின் மூலம்
வெளிப்படும் கதிர்வீச்சுகளின் ஒளியும் நாம்
நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம் மீது பரவி
நம்முடைய செயல்களுக்கு காரணமாக
இருக்கின்றது என்பது அறிவியல் சார்ந்த
உண்மை.
எனவே தான், தொடர்ந்து 48 நாட்கள் ( ஒரு
மண்டலம் ) செய்யும் எந்த ஒரு செயலும்
மேலும் மேலும் தொடர்ந்து வெற்றிகரமாக
நடக்கின்றன. இதனால் தான் சித்த
மருத்துவத்தில் கூட எந்த ஒரு இயற்கை
மருந்தையும் ஒரு மண்டலம் சாப்பிடச்
சொல்லுவார்கள். அப்படி செய்தால் அந்த
நோய் நிரந்தரமாக குணமாகும். அதே போல்
எந்த மதத்தினை சேர்ந்தவராய் இருந்தாலும்,
தொடர்ந்து 48 நாட்கள் செய்யும்
வேண்டுதல்களும் ( மற்றவர்களுக்கு தீமைகள்
இல்லாத ) கை கூடுகின்றன.
நம்முடைய முன்னோர்களான சித்தர்களும்,
முனிவர்களும் வெற்றுச் சாமியார்கள் அல்ல.
அவர்கள் மிகச்சிறந்த அறிவியலாலர்கள்.
ஏதாவது ஒரு செயலயோ அல்லது
வேண்டுதலயோ 48 நாட்கள் நம்பிக்கையோடு
ஒரு முறை செய்து தான் பாருங்களேன்....!
அறிவியல் உண்மை விளங்கும்.

Thursday, March 3, 2016

இந்துக்களின் ஐந்து முக்கிய கடமைகள்

இந்துக்களின் ஐந்து முக்கிய கடமைகள்
இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து கடமைகளை இந்துதர்ம நூல்கள் முன்மொழிகின்றன. இவை ‘பஞ்ச நித்திய கர்மங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. நித்திய கர்மம் என்றால் கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டிய செயல்கள் எனப் பொருள்படும். இந்த ஐந்து முக்கிய செயல்களும் ஒரு உறுதியான, பொறுப்புள்ள, பண்பாடுமிக்க, தர்மநெறியில் செயல்படும் மனிதனை உருவாக்குகின்றன.
1) வழிபாடு (உபாசனை)
வீட்டிலும் கோவிலிலும் வழிபாடு செய்யவேண்டும். வழிபாட்டு விதிமுறைகளைப் பற்றி ஆகமநூல்கள் விளக்குகின்றன. வழிபாட்டில் ஈடுபடும் போது கலாச்சார உடைகள் அணியவேண்டும். வழிபாடு என்பது தூய்மையானதாகவும் எந்தவொரு சுயநல எண்ணமும் அற்றதாகவும் இருக்கவேண்டும். தானும் வழிபாட்டில் ஈடுபடவேண்டும், மற்றவர்களையும் வழிபாட்டில் ஈடுபட வழிகாட்ட வேண்டும். ஒருவனை வழிபாட்டில் ஈடுபட விடாமல் தடுப்பதை விட கொடிய கர்மவினை கிடையாது. உபாசனை என்பது வழக்கமான பூஜைகள் மட்டுமின்றி தியானத்தையும் குறிக்கும். உபாசனை என்றால் ‘அருகில் அமர்ந்து மனத்தை ஒருநிலைப்படுத்தல்’ எனப் பொருள்படும். ஆராதனைகளும் வழிபாடுகளும் முடிந்த பின்னர், பூஜை அறையிலும் கோவில்களிலும் அமர்ந்து (நாமஜபத்தால் இறைவனுக்கு மிக அருகில் மனத்தைக் கொண்டுவந்து) தியானத்தில் ஈடுபடவேண்டும். இவ்வாறு முழுமையான வழிபாட்டில் ஈடுபட வேண்டியது இந்துக்களின் முக்கிய கடமை.
2) திருவிழா (உத்சவம்)
உத்சவம் என்றால் ’துன்பங்களை நீக்கும் நாள்’ எனப் பொருள்படும். பெரும்பாலும் பாரத நாட்டு திருவிழாக்கள் மிகவும் கோலாகலமாகவும் மகிழ்ச்சிப் பொங்கும் மங்கல திருநாட்களாகவும் திகழ்கின்றன. இந்நன்னாட்களை மக்கள் களிப்போடு ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக் கொள்ளவேண்டும். ஒருவனின் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் தான் துன்பங்கள் என்றழைக்கப்படுகின்றன. அதேபோல் மனத்தில் விதைக்கவேண்டிய நற்குணங்கள் இன்பங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒருவனுக்குத் துன்பங்களை விளைவிக்கும் தீய எண்ணங்களை நீக்கும் நாட்கள்தான் திருவிழா என்றழைக்கப்படுகின்றன. தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, தைப்பூசம், சித்திரை திருவிழாக்கள் போன்றவை எல்லாம் பின்னணியில் தீமைகளை அழித்து நன்மைகளை விதைத்தல் என்ற நோக்கத்தைக் கொண்டிருக்கும். நம் முன்னோர்கள் பல புராணக் கதைகள் மூலமாக இதை நமக்கு உணர்த்த முற்பட்டனர். ஆகவே, திருநாட்களில் துன்பங்களை நீக்கி இன்பமாக இருக்கவேண்டியது இந்துக்களின் முக்கிய கடமையாகும்.
3) அறநெறி (தர்மம்)
வயதில் முதியவர்களை மதித்தல், பெற்றோர்களை தெய்வத்திற்கு நிகராக போற்றுதல், சுயநலமான செயல்களையும் எண்ணங்களையும் துறத்தல், மற்றவர்களின் நலனுக்காக செயல்கள் ஆற்றுதல், தீமையானவற்றை செயலாலும் மனத்தாலும் மேற்கொள்ளாமலிருத்தல், இனிமையான பயன்தரும் சொற்களையே பேசுதல், சான்றோர்களின் சொற்களைப் பின்பற்றுதல், எல்லோரையும் சமமாகப் பார்த்தல், உயர்வுதாழ்வு மனப்பான்மையின்றி எல்லா உயிர்களிலும் ஈஸ்வரன் குடியிருக்கிறான் என்பதை அறிந்து தெளிவான நோக்கத்தோடு செயல்பட வேண்டும். இவ்வாறு தர்மநெறியில் செயல்படவேண்டியது இந்துக்களின் முக்கிய கடமையாகும்.
4) யாத்திரை (தீர்த்தயாத்திரை)
தீர்த்தம் என்றால் புனித தலம் எனப் பொருள்படும். புனித தலங்களுக்கு நீண்ட பயணம் மேற்கொள்வது தீர்த்தயாத்திரை என்றழைக்கப்படுகின்றது. யாத்திரை மேற்கொள்வது ஆன்மிகவலிமையும் மனோவலிமையும் தரும். தீர்த்தயாத்திரை தலங்கள் பெரும்பாலும் தெய்வத்துடனும் தெய்வீக மனிதர்களுடனும் தொடர்புடையதாக அமைந்திருக்கும். இத்தகைய இடங்களில் பல மகான்கள் தெய்விகத்தை உணர்ந்து முக்திநிலை அடைந்திருப்பார்கள். ஆதலால் இத்தகைய இடங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள புராணங்கள் ஊக்குவிக்கின்றன. தீர்த்தயாத்திரையின் போது ஒருவன் பல தடைகளைக் கடந்து தன்னுடைய இலக்கை அடைகின்றான். அதுபோலவே வாழ்க்கை எனும் பாதையில் மெய்யுணர்வு எனும் குறிக்கோளை அடைய ஒருவன் பல தடைகளையும் சவால்களையும் கடந்துவர வேண்டும். தீர்த்தயாத்திரை தலங்களின் அதீத தெய்வசக்திகள் ஒருவனின் மனத்திலிருக்கும் தீமைகளை நீக்கி அவனை நேர்வழியில் தர்மநெறியோடு செயல்பட உதவுகின்றன. ஆகவே, யாத்திரை மேற்கொள்வது இந்துக்களின் கடமையாகும்.
5) அர்த்தமுள்ள சடங்குகள் (சமஸ்காரம்)
ஒருவனின் பிறப்பு முதல் இறப்பு வரை மேற்கொள்ள வேண்டிய சில அர்த்தமுடைய சடங்குகளை இந்துதர்மம் வரையறுத்துக் காட்டுகின்றது. உதாரணமாக, வளைக்காப்பு, பெயர்சூட்டுதல், முடிநீக்குதல், காது குத்துதல், பள்ளியில் சேர்த்தல் போன்ற 16 சடங்குகள். சமஸ்காரம் எனும் சொல் ‘முழுமையான நிறைவு அடைதல்’ அல்லது ‘தயார்ப்படுத்துதல்’ எனப் பொருள்படும். இச்சடங்குகள் ஒருவனின் கர்மாவோடு தொடர்புடையவை என யோகசாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. சடங்குகள் பெரும்பாலும் புறம் மற்றும் அகம் எனும் இருநிலையிலும் ஒருவன் மேற்கொள்ள வேண்டியவை ஆகும். கௌதமர் தர்மசூத்திரம் (8:22), 8 அக சடங்குகளைக் குறிப்பிடுகின்றது. அவை: எல்லா உயிர்களிடமும் கருணை, பொறுமை, பொறாமை இல்லாமை, தூய்மை, தெளிவு, நேர்மறையான எண்ணங்கள் கொண்டிருத்தல், தாராளகுணம், பேராசை இல்லாமை. அடுத்த வரியில் (8:23) “எவனொருவன் புற சடங்குகளை மட்டுமே மேற்கொண்டு இந்த எட்டு அக சடங்குகளையும் மேற்கொள்ளாமல் இருக்கிறானோ அவன் இறைவனோடு ஒன்றாகக் கலப்பதில்லை. அவன் மேற்கொண்ட புற சடங்குகள் அர்த்தமற்று போகின்றன. ஒருசில புற சடங்குகள் மட்டுமே மேற்கொண்டிருந்தாலும் எட்டு அக சடங்குகளையும் மேற்கொண்டிருப்பவன் நிச்சயமாக இறைவனோடு சேர்கிறான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த அர்த்தமுள்ள சடங்குகள் இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கடமையாக அமைந்துள்ளன.
இந்த ஐந்து கடமைகளும் ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டியவை.

Tuesday, March 1, 2016

பஞ்ச ஆசௌசங்கள்

பஞ்ச ஆசௌசங்கள்
“ஆசூசம் இல்லை அருநிய மத்தருக்கு
ஆசூசம் இல்லை அரனைஅர்ச் சிப்பவர்க்கு
ஆசூசம் இல்லையாம் அங்கி வளர்ப்போரக்கு
ஆசூசம் இல்லை அருமறை யோர்க்கே”
-திருமந்திரம் 2552-
சைவத்திலே ஐந்து வகையான ஆசௌசங்கள் அல்லது துடக்கு கூறப்படுகின்றன. இவற்றை பஞ்ச ஆசௌசம் என்பர்.
1. ஜனன ஆசௌசம் அல்லது பிறப்பு துடக்கு; இது ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பதனால் அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் துடக்காகும்.
2. மரண ஆசௌசம் அல்லது மரணத்துடக்கு; இது ஒரு குடும்பத்தில் மரணம் நிகழும்போது அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் துடக்காகும்.
3. சூதக ஆசௌசம் அல்லது பூப்புத்தீட்டு; ஒரு பெண் பருவமடையும்போதும் அதன் பின்னர் மாதாமாதம் மாதவிடாய் குருதிப்போக்கு வரும்பொழுதும் அவளுக்கு மட்டும் ஏற்படும் துடக்கு இது. இதன்போது ஐந்தாம் நாள் தலை முழுகி பால் அல்லது பஞ்ச கவ்வியம் உண்ண இந்த துடக்கு விலகும். பெரும்பாடு போன்ற மாதவிடாய்க் குருதிப்போக்கு தீட்டாக கருதப்படுவதில்லை. - பராசர ஸ்மிருதி 7.18.
4. உச்சிஷ்ட ஆசௌசம் அல்லது எச்சில் துடக்கு; இன்னொருவரின் எச்சில்பட்ட உணவு அல்லது பானத்தை அருந்துவதால் ஏற்படும் துடக்கு. இது ஸ்நானத்தினாலும், பிராயச்சித்தத்தினாலும் போகும்.
5. ஜாதி ஆசௌசம் அல்லது சாதித் துடக்கு; இறை சிந்தனை மற்றும் நல்ல வாழ்நெறி இல்லாதவர்களுடன் இணங்குவதால் ஏற்படும் தோஷம். இது பிறப்பால் மட்டும் வருவது இல்லை, குணத்தாலும், பண்பாலும், வாழ்க்கை நெறியாலும் வருவது. இதனாலேயே சம்பந்தர் பல் குடிப்பிறந்த சிவ தொண்டர்களுடன் ஒன்றாக உண்டு, குடித்து, உறங்கி யாத்திரை செய்து வந்தார்.
வீர சைவ மரபில் உள்ளவர்களுக்கு மட்டும் இவ்விதமான ஆசௌசங்கள் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

வெற்றிலை என்று ஏன் பெயர் வந்தது?

வெற்றிலை என்று ஏன் பெயர் வந்தது?
தாவரவியல் மாணவனுக்கு விளக்கம்
(""எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும், ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும். அதனால் அது வெற்று இலை)
ஒரு சமயம் காஞ்சிமடத்தில் மகா சுவாமிகளைச் சந்திக்க ஒரு மாணவன் வந்திருந்தான். அவனிடம் சுவாமிகள்,""என்ன படிக்கிறாய்?'' என்று கேட்டார். மாணவன் தாவரவியல் படிப்பதாகக் கூறினான்.
சுவாமிகள் தன் முன் வைத்திருந்த பழம், பாக்கு, வெற்றிலைத் தட்டில் இருந்த வெற்றிலையைக் காட்டி,""இதன் பெயர் என்ன?'' என்று கேட்டார். மாணவனும் "வெற்றிலை' என்றான்.
""அதற்கு ஏன் வெற்றிலை என்று பெயர் வந்தது?'' என்று கேட்டார். மாணவன் திகைத்தான், மற்றவர்களும் விழித்தார்கள்.
மகா சுவாமிகள் கூறினார்,""எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும், ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும். அதனால் அது வெற்று இலை ஆயிற்று'' என்று கூறினார்