Thursday, December 18, 2014

லட்சுமணனின் சகோதர பாசம்

கைகேயியின் வரத்தால், அயோத்தி அரசனாக முடி சூட்டும் பட்டத்தை துறந்து 14 ஆண்டுகள் வனவாசம் புறப்பட்டு விட்டார் ராமன். அவருடன் சீதாதேவியும், லட்சுமணனும் இணைந்து கொண்டனர். கங்கைக் கரையில் ராமபிரானைக் கண்ட வேடுவனாக குகன், ராமபக்தியில் ஓடோடி வந்து ராமர் பாதம் பணிந்தான்.

அவனை தூக்கி நிறுத்திய ராமர், அப்படியே கட்டித் தழுவிக் கொண்டார். பின்னர் ராமருக்கும், சீதா, லட்சுமணனுக்கும், சாப்பிடுவதற்காக பழ வகைகளை கொடுத்து உபசரித்தான் குகன். அன்று இரவு தூங்குவதற்காக இடங்களையும் தேர்வு செய்து கொடுத்தான்.

மேலும், ‘ராம பிரபுவே! நீங்கள் அனைவரும் 14 ஆண்டுகளும் இந்தக் கங்கைக் கரையில் வசித்தாலும் எங்கள் உபசரணையில் எந்தக் குறைவும் இருக்காது’ என்றான் குகன். சிறு புன்சிரிப்புடன் ராமரும், சீதையும் அவர்களுக்கான இடத்தில் படுத்து உறங்கினர்.

லட்சுமணன் மட்டும் உறங்காமல் விழித்துக் கொண்டிருந்தான். அவனது உறக்கமற்ற நிலையை கண்ட குகன், ‘லட்சுமணரே! நீங்களும் உறங்க வேண்டியது தானே. உங்களுக்கு இங்கு எந்த ஆபத்தும் நேராது. இங்கு விலங்குகள் பயமோ, கள்ளர் பயமோ கிடையாது. ஆகவே தாங்கள் நிம்மதியாக நித்திரை கொள்ளுங்கள்’ என்றான்.

‘இங்கு எவ்வித பயமும் இல்லை என்பது எனக்கும் தெரியும். ஆனால் அரசனாகப் பிறந்தவன்; சக்கரவர்த்தி திருமகனான எனது அண்ணன் ராமன், இப்படித் தரையில் தூங்கும்படி ஆகிவிட்டதே. இதைக் கண்ட கண்களுக்கு தூக்கம் எப்படி வரும்?. அந்த துக்கத்தால் தான் எனக்கு தூக்கம் வரவில்லை’ என்றார் லட்சுமணன். குகனுக்கு லட்சுமணனின் சகோதர பாசம் விளங்கியது.

No comments:

Post a Comment