Tuesday, February 8, 2011

அப்பா

அப்பா என்கிற மனிதன்

குழந்தை பிறந்தவுடன், அது ஆணோ பெண்ணோ எந்த தாய்க்கும் தந்தைக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு விசயமாகத்தான் இருக்கும். இதில் தாயின் நிலைபாட்டைப் பற்றி நான் பேசவில்லை. ஒரு தந்தையின் நிலைப்பாட்டை பார்க்கிறேன். பிறக்கப்போகும் குழந்தை பெண்ணாக இருக்கவேனுமேன்பதே பெரும்பாலான அப்பாக்களின் விருப்பமாயிருக்கிறது. அப்படி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பெண் குழந்தை பிறந்தால், அளவில்லா மகிழ்ச்சிகொள்கிறான். தன குழந்தையை தேவதையாகப் பார்க்கிறான். அவளது இரண்டாம் வயதிலிருந்தே அவளை என்னை படிக்க வைப்பது, அவளின் திருமணத்தை எப்படி நடத்துவது எனப் பலதரப்பட்ட யோசனைகளை நெற்றி முடி நரைக்கும் வரை அவன் விடுவதில்லை.
சிறுவயதில் தன் மகளை குழந்தையாகப் பார்க்கிறான், பிறகு பதின்ம வயதில் மகளாக, பருவ வயதில் தோழியாக பாவிக்க முயல்கிறான், ஆனால் எப்போதும் அவனுக்குள் இருக்கும் அப்பா கதாப்பாத்திரம் அவனை ஒரு பொறுப்புள்ள தந்தையாகவே காட்டிக்கொள்ள முயல்கிறது. எந்தெந்த இடத்திலெல்லாம் அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவம் குறைகிறதோ அல்லது அதன் தேவை இல்லாமல் போகிறதோ அப்போதெல்லாம் அவன் தன்னைத்தானே ஒருவித தாழ்வுமனப்பான்மைக்கு அடிபணியச் செய்கிறான். அதுவே அவனை மகளிடமிருந்து கொஞ்சமாய் தள்ளி நிற்கச் செய்கிறது. திருமண வயதில் அவளிடமிருந்து கொஞ்சமாய் விலகச்செய்யும் அது நாளைடைவில் பெரிய இடைவெளியை உண்டாக்குகிறது. கணவன் வீட்டிலிருந்து வரும் மகளின் சுக துக்கங்களை தன் மனைவி மூலமாக மட்டுமே அறிந்துகொள்கிறான். எந்நேரமும் தன் மகளின் நல்வாழ்வையே சிந்தித்து வரும் அவன் தன் மனதில் தேக்கிவைத்த ஆசைகளை, தன் மகளிடம் பேச வேண்டுமென்று சேர்த்துவைத்த வார்த்தைகளின் எண்ணிக்கை கூடிகொண்டே போகிறது, கூடவே அதன் கணமும். இறக்கும் தருவாயிலும் தன் மகளின் தலையில் கைவைத்து வாஞ்சையோடு தடவிக்கொடுப்பதொடு அவனின் எல்லாமே முடிந்துபோகிறது.
மகள்களும், தங்களது சிறுவயதில் தந்தையை ஒரு கதாநாயகனாக பார்க்கிறார்கள். பருவ வயதை அடைந்தவுடன், பெண்ணுக்கே உரிய சிலவிசயங்களை பகிரங்கமாக தந்தையுடன் பகிர்ந்துகொள்ள முடியாத அவள், தன் தாயை தோழியாக பாவிக்கிறாள். அங்கு தொடங்கும் அவர்களின் நெருக்கம் திருமணம், முதலிரவு, குழந்தை, குழந்தை வளர்ப்பு என ஒவ்வொரு நிலையிலும் கூடிக்கொண்டே போகிறது. இதனால் தன் தந்தையோடு ஏற்ப்பட்ட இடைவெளிக்கு இன்னொரு சமாதானமும் அவள் யோசிப்பதே இல்லை. அதனால் ஏற்ப்படும் ஒரு தந்தையின் வலிக்கு மாற்றையும் அவளால் தேட முடிவதேயில்லை. மகளின் திருமணத்திற்கு பிறகு அவளின் உறவுக்கொடி அவள், அவள் மகன், மகள், கணவன், மாமனார், மாமியார் என்று நீண்டுகொண்டே போகிறது. அண்ணனோ, தம்பியோ அப்பாவை தன்னோடு வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையில் மனமிருந்தாலும் வழியில்லாமல் இருக்கும் அவள், என்றோ ஒருநாள் அப்பா இறந்து விட்டார் என்ற செய்திகேட்டு தூரத்திலிருந்து அழுதுகொண்டு, பிணத்தை எடுப்பதற்குள் வந்துசேர வேண்டுமென்பதிலேயே முடிந்துபோகிறது, ஒரு மகளின் விதி.
அதேபோல தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவும், அப்படியே. எண்ணற்ற சிக்கல்களையும், விசித்திர புரிதல்களுக்கும் உட்பட்டது. எல்லா அப்பவுமே இப்படித்தானோ என்று நினைக்கும்படியான பெரும்பான்மையான அப்பாக்களும், எல்லா மகன்களும் இப்படித்தானோ என்று நினைக்கும்படியான பெரும்பான்மையான மகன்களும் ஒருவித குறிப்பிட்ட மனநிலையிலேயே இருக்கின்றனர்.
தன்னால் வாழமுடியாத வாழ்க்கையை தன் மகனுக்கு அமைத்துக்கொடுக்கும், என்னால் மருத்துவராக முடியவில்லை, என் மகனை மருத்துவராக படிக்கவைத்துக் கொண்டிருக்கிறேன் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் சராசரி தகப்பனாகி போகிறான். தன் மகனின் கனவுகள் தனது கனவுகளோடு ஒத்துபோகாதபோது ஏற்ப்படும் இடைவெளி பெரிதாகி தலைமுறை இடைவெளி என்னுமிடத்தில் போய் நிற்கிறது.
மகன் தனது கல்லூரியில், தனது தேவைகளுக்கான பணத்தை ஒருபோதும் அப்பாவிடம் கேட்ப்பதேயில்லை. அம்மாவின் மூலமாக தூதுவிடுகிறான். தன்னுடைய முதல மாத சம்பளத்தை தாயிடமே கொடுக்கிறான். தனக்கு பிடித்த அல்லது காதலிக்கிற பெண்ணை தாயிடமே அறிமுகம் செய்கிறான். இப்படி அவனது ஒவ்வொரு தேவைகளும், ஒவ்வொரு சந்தோசங்களும் தாயின் மூலமாகவே தந்தையின் காதுகளுக்கு வந்து சேர்கிறது.
எந்த ஒரு தந்தையும் தனக்கு திருமணமாகும்வரை மட்டுமே அவனுக்காக வாழ முடிகிறது.பிறகு அவனது சுக துக்கங்கள் பெரும்பாலும் குடும்பத்தை சார்ந்தே இருக்கிறது. முதலில் மனைவிக்காக, பிறகு குழந்தைகளுக்காக அவர்களின் கல்விக்காக, திருமணத்திற்காக என்று சகலத்தையும் ஒப்படைத்துவிட்டு எஞ்சிய காலங்களில் அன்பையும் அரவணைப்பையும் அனுசரணையான சொற்களையும் வேண்டி நிற்கும் அவனது கண்களில் காலத்தை விஞ்சிய ஏமாற்றமே எஞ்சியிருக்கிறது. மெல்லிய நடுக்கத்தோடும் சன்னமான குரலின் முனகலோடும் இறந்துபோகிறது, அப்பாவின் கடைசி காலம்.
எனது வீட்டினருகே ஒரு வயதான தந்தை இருக்கிறார். அவருக்கு "ஏன்தான் இப்படி என்னோட உயிரை எடுக்குற?அதான் உன்னோட மவ வீடு இருக்குல்ல, அங்க போயிதொலைய வேண்டியதுதானே? இல்ல எங்கயாவது போயி தொலை... " இதுபோக இன்னும் கேவலமாக என்னென்னவோ சொல்லி திட்டித்தீர்க்கும் ஒரு மருமகள், இது எங்கேயோ,யார் வீட்டிலேயோ நடக்கிறது என்பதுபோல ஒரு முகபாவத்துடன் அவரது மகன். என்னுடைய அநேகமான காலைநேரம் இவர்களின் பெருத்த கூச்சல்களுக்கிடையேதான் விடிகிறது. சில நேரங்ககளில் அந்த தந்தையின் மகன் "அப்படியே ஒண்ணு விட்டேன்னா....... தெரியுமா? கிழட்டு......." என்று திட்டுவதை கேட்டிருக்கிறேன். என்ன தவறு செய்திருப்பார் அந்த அப்பா? எதற்காக இப்படி அவரை நோகடிக்கின்றனர்? என்று யோசித்துக் கொண்டிருப்பேன்.சரிபோகட்டும் என்ன செய்துவிட்டால்தான் என்ன?
சிறுவயது முதலே தாயுடன் ஏப்படும் நெருக்கம் கடைசி காலங்களிலும் தாயிற்கு சில சன்மானங்களை பெற்றுத்தந்து விடுகிறது. ஆனால் தந்தை என்றுமே ஒரு பணம் காய்க்கும் மரம்தான், பணம் காய்க்கும்வரை அதுவும் செழிப்பாகத்தான் இருக்கும். காய்ப்பது குறையும்போது கிளைகளற்ற மொட்டை பனமரமாய் நின்று போகிறது.தந்தையின் உணர்வுகள் மிகவும் மெல்லியது. அதிர்ந்த கனமான வார்த்தைகளால் கூட கிழிந்து போகுமளவிற்கு மெல்லிய அந்த உணர்வுகளை புரிந்துகொள்வோம்

No comments:

Post a Comment