Monday, February 7, 2011

மூன்று விதமான மனநிலை

மூன்று விதமான மனநிலை

ஒரு மனிதனுக்குத் தேவையானது மனவளம். இன்றைக்கு நம்முடைய மனதைத் தூய்மையாக வைத்திருந்தால்தான் பல காரியங்களை நாம் செம்மையாகச் செய்யமுடியும். இந்த மனநிலையை 1. மேல்நிலை, 2. நடுநிலை, 3. கீழ்நிலை என்று மூன்றாகப் பிரிக்கலாம். ஏனென்றால் இந்த மூன்று நிலகளும் வெவ்வேறான வழியிலே இருக்கின்றன.
ஒருவனுடைய மனதானது எப்போதுமே தெய்வீக சிந்தனையுடையதாக இருக்குமானால் அதுவே மேல்நிலை என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு நடக்கும் காரியங்களை வைத்து நம்முடைய மனதை வளப்படுத்திக் கொள்வது நடுநிலை என்று சொல்லப்படுகிறது. எப்பொழுதுமே கீழ்த்தரமான சிந்தனையுடையதாக இருக்குமானால் அதுவே கீழ்நிலை என்று சொல்லப்படுகிறது. இப்படி மூன்றுவிதமாக மனநிலையைப் பிரித்துக் கொள்ளலாம்.
உதாரணமாக, கீழ்நிலை என்றால் இந்த உலகத்திலே எதைச் சம்பாதிக்கலாம்? அதற்காக என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்? என்று இருபத்து நான்கு மணி நேரமும் அந்த எண்ணத்திலேயே தங்கள் வாழ்க்கையைச் செலவிடுவதாகும். இதற்கு ஒரு கதை உண்டு.
ஒரு கணவன் மனைவி சன்னியாசம் போக வேண்டுமென்று பட்டணத்தை விட்டு காட்டுக்குச் சென்றார்கள். காட்டுக்குப் போகும் வழியிலே ஒரு வைரக்கல் கீழே கிடந்தது. அதைப் பார்த்த கணவன், "இதை என் மனைவி பார்த்தால் வைரக்கல்லுடன் நாம் திரும்பவும் பட்டணத்துக்குச் செல்வோம் என்று சொல்வாள். நம்முடைய சன்னியாசம் என்னாவது" என்று நினைத்துக் கொண்டே அந்த வைரக்கல்லை தன்னுடைய காலால் மறைத்துக் கொண்டு நின்றான்.
இதைக் கண்ட மனைவி, " என்ன ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறிர்கள். நாம் காட்டிற்குள் செல்ல இன்னும் வெகுதூரம் நடக்க வேண்டும்." என்றாள்.

அப்பொழுது கணவன் "நான் ஒரு வைரக்கல்லைக் கண்டேன். இந்த வைரத்தைப் பார்த்ததும் நீ வைரத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் பட்டணத்துக்குச் செல்வோம் என்று சொல்லி விடுவாயோ என்கிற பயத்தில் அந்த வைரக்கல்லை மறைத்து நின்று கொண்டிருக்கிறேன்." என்று சொன்னான்.

அதற்கு மனைவி, " உங்களுக்கு கல்லுக்கும், வைரத்திற்கும் வித்தியாசம் தெரிகிறதென்றால் நாம் சன்னியாசம் போவதை விட பட்டணத்திற்கே திரும்பப் போய்விடுவது நல்லது" என்றாள்.

அதன்பிறகு இருவரும் பட்டணத்திற்கேத் திரும்பினார்களாம்.இது எதைக் குறிக்கிறதென்றால் கீழ்நிலையைக் குறிக்கிறது.

சிலர் எப்போது பார்த்தாலும் வெளியே செல்லும் போது, நீ போகும்போது பார்த்துப் போ, ஜாக்கிரதையாகப் போ, ஆட்டோ, கார் இடித்துவிடாமல் பார்த்துக் கொள். பஸ்ஸில் ஏறும் போது கீழே விழுந்து விடாமல் பார்த்துக் கொள். என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அப்படி நினைக்கிறவர்கள்தான் விழுந்து விடுவார்கள்.

எனக்குக்கூட அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. ஒரு முறை பத்திரிகையிலே வெளியான ராசிபலனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய ராசிக்கு படிக்கும் போது அந்த மாதத்தில் ஒரு விபத்து உண்டாகும் என்று போட்டிருந்தது. நான் அதே எண்ணத்தில் கார் ஓட்டுவேன். அதில் சொன்னது போலவே ஒரு நாள் சின்ன விபத்து நடந்து விட்டது. பெரிய சேதம் ஏதுமில்லை. அப்பொழுதுதான் நாம் பயந்த காரியம் நடந்து விட்டதே என்று யோசித்தேன். நம்முடைய மனநிலையானது அப்படியிருக்கும் போது அந்தப் பயத்திலேயே நாம் சில காரியங்களைச் செய்து விடுகிறோம். அது மாதிரியான சிந்தனைகளை நம்முடைய மனதை விட்டு அப்புறப்படுத்தி விட வேண்டும்.
நடுநிலை என்றால்: இன்றைகுள்ளதைப் பார், நன்றாகச் சாப்பிடு, நன்றாக உடையணிந்து கொள், நாளையைப் பற்றித் தெரியாது என்று சொல்லித் தங்களுக்குக் கிடைத்த பணத்தை எல்லாம் வீணாகச் செலவழிப்பார்கள். அதுவும் ஒருவிதமான மனநிலை.
ஆனால் மேல்நிலை என்று சொல்லும் பொழுது, சிலர் வேதங்களைப் படிப்பார்கள். ஆன்மீகம் மற்றும் நல்வழிப் புத்தகங்களைப் படிப்பார்கள். வரப்போகிற அழிவு பற்றிய சில காரியங்கள் அவர்களுக்குத் தெரியும். அதை மனதில் வைத்து அவர்கள் தங்கள் மனதைப் பக்குவப்படுத்தி மற்றவர்களுக்கு இப்படி செய்யாதே நல்லதையேச் செய்யுங்கள் என்று புத்த்மதி சொல்வார்கள்.
வேதத்தில் இப்படி சொல்லியிருக்கிறது. நாம் இப்படித்தான் வாழவேண்டும், நம்முடைய மனதை நல்லபடியாக வைத்து வாழவேண்டும் என்று பல அறிவுரைகள் சொன்னவர்கள்தான் இன்று நமக்கு மகான்களாகத் திகழ்கிறார்கள். நாமும் நம்முடைய மனவளத்தைப் பெருக்கிப் பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும். அதுதான் வாழ்க்கைக்கு நல்லது.

No comments:

Post a Comment