Monday, February 7, 2011

சரஸ்வதிக்கே சாபம்

சரஸ்வதிக்கே சாபம்

சிவனது திருவிளையாடலில் இந்த வாரம் 'சங்கப்பலகை கொடுத்த படலம்' பற்றி காண்போம். ஒரு சமயம் பிரம்மா பத்து அசுவமேத யாகம் செய்து, நீராடுவதற்காக சரஸ்வதி, சாவித்திரி, காயத்ரி மூவரோடும் கங்கைக்கு சென்றார். அப்படி செல்லும் வழியில் சரஸ்வதி ஒரு பெண்ணின் இசையில் மயங்கி நின்றதால் பிரம்மா சாவித்திரி, காயத்ரியோடு கங்கையில் நீராடினார். தன்னை விட்டு விட்டு இவர்கள் நீராடியதால் சரஸ்வதி கோபித்துக்கொண்டார். இதையறிந்த பிரம்மா, ''குற்றம் உன்மீது இருக்க என் மீது நீ கோபித்ததால், அளவில்லாத மனிதப்பிறவி எடுப்பாய்'' என சாபமிட்டார். மனம் வருந்திய சரஸ்வதி, தங்களது அருமைத்துணைவியான நான் மனிதப்பிறவி எடுத்து மயங்கலாமா என மன்றாடினாள். மனமிறங்கிய பிரம்மா, பாண்டிய நாட்டில் அகரம் நீங்கலாக மீதி உள்ள நாற்பத்து எட்டு எழுத்துக்களும் நாற்பத்தெட்டு புலவர்களாக பிறக்கட்டும் என்று சாபத்தை மாற்றி தந்தார். அகரம் என்பது முதல் எழுத்து. அதே போல் ஆதி பகவனே உலகத்துக்கு முதல்வனானான். எனவே ஆதி பகவானான சோமசுந்தரர், இந்த முதல் இடத்துக்கு புலவராக வருவார் என கூறி மறைந்தார்.
இதன் படி நாற்பத்தெட்டு எழுத்துக்களும் நாற்பத்தெட்டு புலவர்களாக தோன்றினர். அவர்கள் வடமொழியும் தமிழும் நன்கு கற்றவராக விளங்கி, அகத்தியர் முதல் தொல்காப்பியர் வரை எழுதிய இலக்கண நூல்களை ஆராய்ந்தனர். மற்றும் பல பாடல்களை பாடினர். இவர்களை எல்லாம் சோமசுந்தரர் ஒரு புலவராக அவதரித்து மதுரைக்கு கொண்டு வந்தார்.
வங்கிய சேகர பாண்டியன், அப்புலவர்களுக்கு பரிசுகள் பல தந்து, சங்க மண்டபம் ஒன்று அமைத்து தந்தான். அப்புலவர்கள் தங்கள் புலமையால் பிற தேசத்து புலவர்களை வென்றனர். ஒரு நாள் அவர்கள் புலமையை அறிய சங்கப்பலகை தருமாறு வேண்டினர். சிவனும் அவ்வாறே பலகை தந்ததுடன், தானும் அவர்களுடன் ஒரு புலவராய் வந்து விளங்கினார். புலவர்கள் பல அரிய நூல்களை இயற்றினர்.

வில்வத்தின் விளைவு: கைலாயத்தில் உள்ள சோலையில் ஒரு வில்வ மரத்தடியில் சிவன் பார்வதி தேவிக்கு சிவாகமங்களை உபதேசித்து கொண்டிருந்தார்.வில்வ மரத்திலிருந்த கருங்குரங்கு விளையாட்டாக வில்வ இலைகளை பறித்து சிவன் மீதும், பார்வதி மீதும் பாதம் முதல் தலை வரை போட்டது. குரங்கின் இந்த செயலால் கோபத்துடன் மேலே பார்த்தார் பார்வதி. உடனே குரங்கிற்கு அஞ்ஞானம் விலகி மெய்ஞானம் வரப்பெற்றது. உடனே குரங்கு மரத்திலிருந்து கீழே இறங்கி அம்மையப்பனின் பாதத்தில் விழுந்து அடியேன் செய்த பிழையை பொறுத்தருள்க என வேண்டியது.
அதற்கு சிவன், ''குரங்கே நீ கவலைப்பட வேண்டாம். ஒரு வில்வ இலையால் எம்மை அர்ச்சித்தாலே எல்லா நலன்களும் கிடைக்கும். ஆனால் நீ தெரிந்தோ தெரியாமலோ வில்வ இலைகளைப்பறித்து எம்மீது போட்டுள்ளாய். ஆகவே நீ மண்ணுலகில் அரிச்சந்திர குலத்தில் அரசனாகப்பிறந்து சிறந்த செல்வ நலன்களை அனுபவித்து பின் கயிலை வந்து சேர்வாயாக'' என அருள்புரிந்தார்

No comments:

Post a Comment