Tuesday, February 22, 2011

பகீரதப் பிரயத்தனம்

பகீரதப் பிரயத்தனம்

ஒரு அசாத்தியமான காரியத்தை, மிகுந்த பொறுமையோடும் தளராத விடாமுயற்சியோடும் செயல்படுத்தி வெற்றி காண்பதை 'பகீரதப் பிரயத்தினம்' என்று கூறுவது வழக்கம். இதற்கான காரணத்தை விளக்குவதுபோல் அமைந்த ஒரு கதை கீழே வர்ணிக்கப்படுகிறது.
முன்காலத்தில், பெரிய மன்னர்கள் எல்லாம் தங்களது புகழை நிலை நிறுத்தவும் பராக்ரமத்தை பறைசாற்றும் விதமாகவும் 'அஸ்வமேத யாகம்' செய்வது வழக்கம். சூரிய வம்சத்திலே வந்த 'சகரர்ஒ என்ற மன்னரும் அதுபோல் ஒரு மஹத்தான அஸ்வமேத யாகம் செய்ய விரும்பினார். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் விதிப்படி மேற்கொள்ளப்பட்டது. யாகத்திற்குப் பூர்வாங்கமாக, த்ரிடதன்வா என்ற மஹாரதன் மேற்பார்வையில் மன்னரது குதிரை பல தேசங்கள் வழியாக வலம்வர அனுப்பப்பட்டது. ஆனால், ஒரு அமாவாசை இரவில் அரக்க உருவத்திலே வந்த இந்திரன் குதிரையைக் கவர்ந்து சென்றுவிட்டான். குதிரை காணாமல் போனதால் யாகத்தை நடத்த முடியாத நிலை ஏற்பாட்டது. துவங்கிய யாகமானது முடிவு பெறாமல் பாதியில் நின்றுவிடுமானால் அமங்கலம் ஏற்படும். ஆகவே குதிரையைத் தேடுவதற்காக தனது 60,000 புதல்வர்களையும் பணித்தார். உதயபர்வதம் முதல் அஸ்தமனகிரி வரையிலும் தேவலோகம், நாகலோகம், பிரம்ம லோகம், மற்றும் கருடனது மாளிகை வரை தேடுங்கள் ஒவ்வொருவரும் ஒரு யோஜனை தூரம் வீதம் அனைத்துப் பிரதேசங்களையும் விடாமல் தேடினால் வெற்றி நிச்சயம் என்று ஆசி கூறி அனுப்பிவிட்டு, சகர மன்னர் யாக தீஷையில் இருந்தார். தந்தையாரை வணங்கி உற்சாகத்துடன் புறப்பட்ட அவர்கள் வழியில் தென்படும் அனைவரையும் ஹிம்சித்துக்கொண்டே குதிரையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இவர்களது தொல்லை பொறுக்கமாட்டாத தேவர்கள் எல்லாம் பிரம்மதேவரிடம் முறையிட்டனர். அவர்களது வேதனையை செவி மடுத்த பிரம்மதேவர், ஓபூமி தேவியை பகவானுடைய பத்தினியாக மதித்து மரியாதை செய்யப்பட வேண்டியவள் ஆதலால், பூமியை ஹிம்சை செய்யும் அந்தச் சகரப் புதல்வர்கள் கபில வாஸுதேவரின் கோபத்தால் அழியப்போகிறார்கள் கவலை வேண்டாம்' என்று சமாதானம் செய்தார்.
அனைத்து இடங்களிலேயும் விரிவாகத் தேடியும், குதிரை காணப்படாததால், சகர மைந்தர்கள், மன்னரிடம் தெரிவிக்க திருப்தியடையாத அவர் பூமியிலே காணவில்லையானால் பாதாளம் வரை தோண்டிச் சென்று கீழ் உலகம் அனைத்திலும் தேடி, குதிரையைக் கண்டுபிடியுங்கள் என்று வலியுறுத்திக் கூறவே, அந்த 60,000 புதல்வர்களும் கடப்பாரை, கலப்பைகள் சகிதமாக பூமியை எல்லா இடத்திலும் தோண்ட ஆரம்பித்தனர். பூமியைக் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளிலும் தாங்கி நிற்கும் விரூபாக்ஷன், மஹாபத்மன், சௌமனஸன் மற்றும் பத்ரன் போன்ற திக்கஜங்கள் அனைவரையும் வணங்கி வலம்வந்து, தொடர்ந்து தோண்டிக்கொண்டே வந்த அவர்கள் ரஸாதலத்தை அடைந்தனர். அங்கு தவம் செய்துகொண்டிருக்கும் மாமுனிவர் கபில வாஸுதேவரைக் கண்டனர். அருகிலே யாகக் குதிரை மேய்ந்துகொண்டிருந்தது. கோபத்தினால் நிதான புத்தி இழந்த அவர்கள், முனிவர்தான் குதிரையை அபகரித்து வந்துவிட்டார் என்று எண்ணி, அவரை ஆயுதங்களாலும் கற்களாலும் தாக்க ஆரம்பித்தனர். கோபம் அடைந்த கபில வாஸுதேவர் தன் உக்கிரமான பார்வையால் அவர்கள் அனைவரையும் எரித்துச் சாம்பலாக்கினார்.
ரொம்ப காலமாகியும் குதிரையைத் தேடிச் சென்ற 60,000 புத்திரர்களும் திரும்பி வராததால், கவலையடைந்த 'சகரர்' தனது பேரனான அம்சுமானை அழைத்து, சென்றவர்கள் கதி என்னவாயிற்று என்று தெரிந்து வரும்படி அனுப்பினார். ஆயுதங்கள் சகிதமாகப் பெரியவர்களை வணங்கி ஆசிபெற்றுப் புறப்பட்ட அம்சுமான், பல இடங்களிலும் தேடிக்கொண்டே வந்து திக் கஜங்களையும் வணங்கி ஆசி பெற்றுச் சென்றார். ரஸாதலம் வந்தடைந்து எரிக்கப்பட்டு சாம்பல் குவியலாக இருக்கும் தன் முன்னோர்கள் கதியைப் பார்த்துத் துக்கம் மேலிட அழ ஆரம்பித்தார். அருகிலே யாகக் குதிரையும் காணப்பட்டது. இறந்தவர்களுக்கு ஈமக்கிரியைச் செய்யும் நோக்கத்தோடு, நீர்நிலைகள் இருக்கிறதா என்று நாற்புறமும் தேடியும் ஒன்றுமே காணப்படவில்லை. அதிக விசனமடைந்த அவர் முன் பறவைகளின் அரசனும் தன் முன்னோர்களின் தாய்மாமனுமான சுபர்ணன் வந்து சேர்ந்தார். கபிலவாஸு தேவரால் பஸ்மமாக்கப்பட்ட அவர்களைக் கரையேற்ற வேண்டுமானால், கங்கையின் தீர்த்தத்தைக் கொண்டுவந்து சம்ஸ்காரம் செய்ய வேண்டும்; ஆகவே அதற்கான ஏற்பாடுகளைச் செய்வாயாக; இந்தக் குதிரையைக் கூட்டிச் சென்று சகரர் துவங்கிய யாகத்தை பூர்த்தி செய்ய ஆவன செய்வாயாக என்று கூறினார்.
குதிரையை அழைத்துக்கொண்டு சகர மன்னரிடம் சென்ற அம்சுமான், நடந்த விவரங்களையெல்லாம் விவரமாக எடுத்துக் கூற, வேதனையடைந்த மன்னர், பெரியோர்களின் ஆலோசனைப்படி முதலில் தான் துவங்கிய அஸ்வமேத யாகத்தை நிறைவு செய்தார். 30,000 வருஷம் அரசாண்ட சகர மன்னர், கங்கையைக் கொண்டுவர என்ன செய்யலாம் என்று ஆலோசித்து ஆலோசித்து, ஒன்றும் செய்ய முடியாமல் ஜீவனை விட்டார். அம்சுமான் தனது புதல்வன் திலீபனிடம் ராஜ்யத்தை ஒப்படைத்துவிட்டு, ஹிமயமலைச் சாரலில் 32,000 வருஷங்கள் தவம் செய்தும் கங்கையைக் கொண்டுவரும் விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் உயிர் நீத்தார். அடுத்து பட்டம் ஏற்ற திலீபனும் 32,000 வருஷங்கள் பலவித யாகங்கள் செய்தும், கங்கையைக் கொண்டுவரும் எண்ணம் வெற்றி பெறாமல் வியாதியால் பீடிக்கப்பட்டு முக்தியடைந்தார்.
திலீபனின் புதல்வரான பகீரதன், முன்னோர்களின் கதியை நினைத்து நினைத்து மனம் வருந்தினார். அவருக்குச் சந்ததியும் இல்லாததால் கவலை மேலும் அதிகமாகியது.
உறுதியான நெஞ்சங்கொண்ட பகீரதன் கோகர்ண ஷேத்ரம் சென்று, கைகளை மேலே கூப்பியபடி, நாற்புறமும் அக்னி வளர்த்து, சூரியனின் வெம்மையில் இருந்துகொண்டு 'பஞ்சாக்னிதவம்' என்னும் முறையில், மாதம் ஒருமுறை ஆகாரம் உண்டு, ஆயிரம் வருஷங்கள் பிரம்மதேவரை நோக்கிக் கடும் தவம் புரிந்தார். தவத்தினால் சந்தோஷமடைந்து, முன்னால் தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்ட பிரம்மதேவரை, கண்களில் நீர் மல்க சாஷ்டாங்கமாக நமஸ்கரித்த பகீரதன், 'பிரபுவே! எனது வம்சம் விருத்தியடைய ஒரு புதல்வன் வேண்டும். மேலும், எனது முன்னோர்கள் முக்திபெற ஏதுவாக, ஆகாயத்திலிருக்கும் கங்கை நதி பூமியிலே பாய்ந்து வரவேண்டும்' என்று பிரார்த்தித்தான். பிரம்ம தேவர் 'பகீரதனே! அப்படியே ஆகட்டும். உனது குலம் விளங்க உத்தமமான ஒரு புதல்வன் தோன்றுவான். ஹிமவான் புதல்வியான இந்தக் கங்கையின் வேகத்தை பூமியால் தாங்க முடியாது. அதன் மஹத்தான வேகத்தைத் தாங்கும் சக்தி சூலபாணியான சிவபெருமான் ஒருவருக்குத்தான் உண்டு; ஆகவே இந்தக் காரியத்தில் வெற்றிபெறச் சிவபெருமானை நோக்கி பிரார்த்தனை செய்வாயாக என்று ஆலோசனை கூறி, கங்கா தேவியிடமும் சொல்லிவிட்டு' சிருஷ்டிக் கடவுளான அவர், தன் இருப்பிடமான சத்யலோகம் சென்றார்.
கால் கட்டை விரலைத் தரையிலே ஊன்றி, கைகள் இரண்டையும் தலைமேல் கூப்பி, இரவுபகலாக ஆகாரமின்றி வாயு யஷணம் செய்பவராய், அசையாமல் கட்டைபோல் நின்ற கோலத்தில், சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் செய்தார் பகீரதன். ஒரு வருஷம் கழிந்தது. தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் பகீரதன் முன் தோன்றினார். மலையரசன் மகளான கங்கையைத் தன் தலையிலே தாங்கிக்கொள்வ தாக வாக்களித்தார். அதை ஏற்ற கங்கா தேவியும் மஹத்தான சப்தத்தோடு, சிவ பெருமான் ஜடாமுடியில் பிரவேசம் செய்தாள்.
அதிவேகத்தோடு சிவபெருமானையும் சேர்த்துக்கொண்டு பாதாளம் அடைவேன் என்று கர்வம்கொண்ட கங்கா தேவியின் எண்ணத்தை அறிந்த மஹேஸ்வரன், தன் ஜடையிலிருந்து கங்கையைக் கீழே தரையில் விடவில்லை. சிவபெருமானின் ஜடாமண்டலத்தில் மோகம் அடைந்தவளான கங்கையும் கீழே இறங்க மனமின்றித் தலையிலேயே சுற்றிவரத் தொடங்கினாள். பல ஆண்டுகள் கழிந்தன. பகீரதன் பக்தியோடு மீண்டும் தீவிரமாகத் தவம் இயற்றினார். கருணாமூர்த்தியான சிவபெருமான், தலையிலிருந்து கங்கையை பூமியிலே, பிந்துசரஸ் என்ற இடத்தை நோக்கிப் பாயச் செய்தார். ஏழு கிளைகளாகப் பிரிந்த கங்கை நதியின், ஹ்லாதினீ, பாவனீ, நளினீ என்ற மூன்று கிளைகள் கிழக்கு நோக்கியும் சுஸக்ஷி ஸீதா, ஸிந்து என்ற மூன்று கிளைகள் மேற்கு நோக்கியும் ஏழாவது கிளை பகீரதனைப் பின்தொடர்ந்தும் செல்ல ஆரம்பித்தது.
பலதரப்பட்ட நீர்வாழ்ப் பிராணிகளோடு வேகமாக, பெரிய சப்தத்தோடு, பகீரதனைப் பின்தொடர்ந்து செல்லும் கங்கா நதியைக் கண்ட தேவர்கள், மஹரிஷிகள், கந்தர்வர்கள் மற்றும பூலோகவாசிகள் அனைவரும் மிகவும் ஆச்சரியம் அடைந்தவர்களாக, ஆஹா! விஷ்ணுவின் பாதத்திலிருந்து உற்பத்தியாகி, சந்திர மண்டலத்தையெல்லாம் புனிதப்படுத்திவிட்டு, சிவபெருமான் மேனியிலிருந்து வரும் இந்தக் கங்கை நதி மிகவும் பவித்ரமானது என்று சொல்லிக்கொண்டே, தங்களது பாவங்கள் தீர்வதற்காக, அதில் நீராடியும், ஜலத்தைப் பாணம் செய்தும் மகிழ்ந்து தங்கள் இருப்பிடத்தை அடைந்தார்கள்.
பகீரதனது ரதத்தைத் தொடர்ந்து செல்லும் கங்கா நதி, பாதையிலே அமைந்திருந்த 'ஜஹ்னுஒ மஹரிஷியின் ஆஸ்ரமத்தை மூழ்கடித்துவிட்டது. கோபம் அடைந்த மஹரிஷி, தனது தவ வலிமையால் ஆசமனம் செய்து கங்கையை முழுவதுமாகக் குடித்துவிட்டார்.
ஆக, மறுபடியும் சோதனை! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை! மனம் தளராத பகீரதன் ஜஹ்னு மஹரிஷியிடம் கங்கையை விடுவித்து உதவ வேண்டும் என்று பணிவோடு பிரார்த்தனை செய்ய, அதே நேரத்தில் அங்கு வந்த தேவர்களும் மஹரிஷியே! இந்தக் கங்கை தங்களது புத்ரிக்கு ஒப்பானவள்; உலக நன்மையைக் கருதி, தாங்கள் உதவவேண்டும் என்று கேட்டுக்கொள்ளவே, சந்தோஷமடைந்த ஜஹ்னு மஹரிஷியும் தன் காது வழியாகக் கங்கையை வெளியே அனுப்பினார். அதனால் கங்கைக்கு ஜாஹ்னவீ என்றும் பெயர் ஏற்பட்டது.
இப்படிப் பெரிய முயற்சியோடு கொண்டு வரப்பட்ட கங்கை நதியின் ஜலம், பகீரதனுடைய முன்னோர்களின் அஸ்தியின் மேல் பாய்ந்ததால் அவர்கள் அனைவரும் முக்தி அடைந்தார்கள். பிரம்மதேவரும், பகீரதனே! உலகிலே சமுத்திரங்கள் உள்ளவரை உனது முன்னோர் கள் சுவர்க்கலோகத்திலே நிலைபெற்று இருப்பார்கள். அதோடு இந்தக் கங்கை நதியும் உனது புதல்வியாகப் போற்றப்பட்டு, பாகீரதி என்ற பெயரையும் அடைவாள் என்று ஆசீர்வதித்தார்.



No comments:

Post a Comment