Tuesday, May 27, 2014

இறைவன் இல்லம்.......

இறைவன் இல்லம்.......
பகவான் கிருஷ்ணன் அஸ்தினாபுரிக்கு வருகிறான். வீதியெங்கும் அலங்கார வளைவுகள், பூரணகும்பம் கொண்டு வரவேற்பு. பீஷ்மர், துரோணர் வரவேற்க, கண்ணன் தேரை விட்டு இறங்கி வருகிறான். கண்ணுக்கு எட்டிய வரையில் பெரிய பெரிய மாளிகைகள்!
"பச்சை வர்ணம் பூசப்பட்டு ஆலிலை பிரளய காலத்தில் மிதந்தது போல நிற்கிறதே அது யார் வீடு?" என்று கண்ணன் கேட்டவுடன், "அச்சுதா .... அது என்னுடைய வீடு" என துரோணர் சொல்கிறார்.
...
"காவி நிறம் பூசப்பட்டு கம்பீரமாய் நிற்கிறதே அது யாருடைய வீடு?" என்றவுடன், கிருபர், "மாதவா.... அது என்னுடைய வீடு என பகிர்ந்தார்.
கண்ணன், "மஞ்சள் வர்ணம் பூசப்பட்டு மாமேரு பர்வதம் போல் நிற்பது?" எனக் கேட்டவுடன், "வாசுதேவா... அது என்னுடைய வீடு என பீஷ்மர் கூறினார்.
கண்ணன், "நீல வர்ணம் பூசப்பட்டு கருங்கடல் போல பரிமளிப்பது யாருடைய வீடு?" என வினவியுடன், அஸ்வத்தாமன், "ரிஷிகேசா..... அது என்னுடைய வீடு" என்றான்.
"சிறிதாக வெள்ளை நிறத்தோடு சத்வ குணமாகப் பாற்கடலைப் போலவும் கயிலையைப் போலவும் பரம சாத்வீகம் பொருந்திய நிற்கிறதே அது யாருடைய வீடு?" என பரந்தாமன் வினா எழுப்பியபோது, விதுரர், "கண்ணா..... அது உன்னுடைய வீடு!" என பதில் உரைத்தார்.
"என்னுடைய வீடா? என்னுடைய வீடா? இந்த அஸ்தினாபுரத்தில் எனக்கென்று அரையடி மண் கூட இல்லை என்று எண்ணியிருந்தேன். இத்தனை பெரிய வீடு எனக்கு இருக்கிறபோது நான் பிறர் வீட்டில் தங்குவதா? பீஷ்மர், கிருபர் யாவரும் அவரவர் வீட்டுக்கு அழைத்தனர். நான் என் வீட்டுக்கு போகிறேன்" என்று சொல்லிவிட்டு விதுரர் வீட்டிற்குள் நுழைந்தான் பகவான் கண்ணன்.
எல்லாமே இறைவனுடையது என்கிற அர்ப்பண உணர்வு உடையவரையே கடவுள் விரும்புகிறார். "யான்", என்னுடையது' என்னும் செருக்கை அறுப்பவனின் உள்ளத்தில்தான் இறைவன் வசிக்கிறான்

No comments:

Post a Comment