Monday, March 28, 2016

துன்பங்களுக்கு காரணம் என்ன?

துன்பங்களுக்கு காரணம் என்ன? (கந்த புராணம் மற்றும் கம்பராமாயண நிகழ்வுகள் கூறும் விடை) :
*
தேவர்கள் சூரபத்மனால் விளக்கவொண்ணா இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்; ஓரிரு வருடங்கள் அல்ல, கால வரையின்றி 108 யுகங்கள் வரை நீடித்து வரும் துன்பங்கள். இந்திரன் முதலான தேவர்கள் பன்முறை சிவபெருமானிடம் முருகக் கடவுளைத் தோற்றுவித்து அருளுமாறு மன்றாடியும் பரமனின் திருவருள் நோக்கம் அது வரையில் கூடி வரவில்லை.
*
துன்பங்களின் வீரியம் தாங்காத நிலையில், விரக்தி மேலிடும் பொழுது தெய்வத்தை நிந்திக்கத் தோன்றுவது இயல்பு. அதே நிலையிலுள்ள இந்திரனும் ஆலம் உண்ட பரம்பொருளை நிந்திக்கத் துவங்குகிறான்; இனியும் பரமனை நம்புவதால் பயனேதும் விளையப் போவதில்லை என்ற ரீதியில் இந்திரனின் வார்த்தைகள் அமைய, நான்முகனார் குறிக்கிட்டு இந்திரனுக்கு சில நுட்பங்களை அறிவுறுத்துகிறார்.
*
(கந்த புராணம் - திருஅவதாரப் படலம்: கச்சியப்பர்):
இவறலும் இகலுமின்றி யார்க்குமோர் பெற்றித்ததாகி
அவரவர் வினைகள் நாடி அதற்படு பொருளை நல்கும்
சிவனையாம் வெறுத்தல் குற்றம்! சிறந்தநோன்பு இயற்றிடாதே
தவறு செய்தனம் என்றெம்மை நோவதே தக்கதென்றார்.
*
பொருள்:
சிவப்பரம்பொருள் பற்றற்ற நிலையில் பாகுபாடின்றி நீதி வழங்குபவர், ஆகையால் அவரவருடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை நல்கும் அப்பெருமானை நிந்திப்பதை விடுத்து, முறையான நோன்பு (தவம்) இயற்றாமையை எண்ணி நம்மை நாமே நோவதே தக்க செயல்.
*
இனி மற்றொரு புறம் கம்ப ராமாயண நிகழ்வினைக் காண்போம். 10 மாதங்கள் அன்னை சீதை கடும் துயரினை அசோக வனத்தில் அனுபவித்து வருகிறார். முடிவில் இராவண வதம் நடந்தேறுகிறது. பின்னர் அனுமன் அசோக வனம் சென்று அன்னையிடம் ஸ்ரீராமரின் வெற்றிச் செய்தியைத் தெரிவித்துப் பாதம் பணிகிறார்; ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கிறார்.
*
அன்னை ஜானகியை 10 மாதங்கள் துன்புறுத்திய அசோக வன அரக்கிகளை வதைக்க அனுமதி கோருகிறார். அரக்கிகளோ மிகவும் அஞ்சி அன்னையை சரண் புக, தேஜோ மயமாகவும் கருணையே ஒரு வடிவமெனவும் வீற்றிருக்கும் அன்னை சீதை அனுமனுக்கு கீழ்க்கண்ட பாடல் வரிகளால் பதிலுரைக்கிறார்.
*
(யுத்த காண்டம் - பிராட்டி திருவடி தொழுத படலம்)
யான் இழைத்த வினையினின் இவ்விடர்
தான் அடுத்தது, தாயினும் அன்பினோய்!
கூனியின் கொடியார் அலரே, இவர்!
போன அப் பொருள் போற்றலை, புந்தியோய்!
*
'இது வரையில் எனக்கு வந்து எய்திய துன்பங்களுக்கு யான் முன்பு இழைத்த வினையே காரணம்; இவ்வரக்கிகள் அன்று! ஆகையால் தாயினும் பரிவு மிக்கவனே இவர்களை மன்னிப்பாயாக' என்று கூறியருள்கிறாள். ஸ்ரீமகாலக்ஷ்மியின் நேரடி அவதாரமாக விளங்கும் அன்னை சீதையே 'துன்பத்திற்கு காரணம் தன்னுடைய வினை' என்று கூறும் பொழுது, நம் நிலையினை எண்ணித் தெளிதல் வேண்டும்.
*
'துன்பங்களுக்குக் காரணம் நாம் முன்பு செய்த வினைகளின் பயனே' என்பது இந்து தர்மத்தின் இறுதி முடிவு. எனினும் 'வினைப் பயனான துன்பங்களில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள இயலும்' என்பது திருமுறைகள் காட்டும் தெளிவு. உறுதி மாறாத வழிபாட்டாலும், பிற உயிர்களின் துயரினைப் போக்குவதாலும் இறைவன் மிக மகிழ்ந்து நம்மை வினையின் தாக்கத்தில் இருந்து விடுவித்து அருள்கிறான்.

No comments:

Post a Comment