Sunday, March 6, 2011

அடுத்த பிற‌வி என்பதை ஜோதிடம் எ‌வ்வாறு பார்க்கிறது?

அடுத்த பிற‌வி என்பதை ஜோதிடம் எ‌வ்வாறு பார்க்கிறது?
ஜோதிட சாஸ்திரத்தைப் பார்க்கும்போது முப்பிறவி, இப்பிறவி, மறு பிறவி என்பது அனைத்தும் உண்மை. அதில் எந்த மாற்றமும் இல்லை.
அதாவது லக்னாதிபதி யாருடன் சேர்ந்திருக்கிறார், யாருடைய பார்வை பெற்றிருக்கிறது என்பதை வைத்து அவர் முற்பிறப்பில் என்னவாக இருந்திருப்பார், இந்த பிறவியில் அவரது செயல் எவ்வாறு இருக்கும் என்பதை அறியலாம்.மேலும், ஏழேழு ஜென்மம் என்பதும் உண்டு. அணு ஜென்மம், கிரி ஜென்மம், புனர் ஜென்மம் என்பதும் உண்டு. லக்னாதிபதியை வைத்து அவரது மறுபிறவிகளை அறியலாம்.
பொதுவாக 12ஆம் இடத்தில் கேது இருந்தால் அவர்களுக்கு மறுபிறவி இல்லை. மோட்சக் காரகன் கேது. 12ஆம் இடம் மோட்சத்திற்குரிய இடம். மோட்ச ஸ்தானத்தில் மோட்சக் காரகன் இருந்தால் மறுபிறவிக் கடலை நீந்தி மோட்சத்தை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் 12வது இடத்தில் கேது இருந்தாலோ அல்லது 12க்குரியவன் 12ம் இடத்திலேயே இருந்தாலும் மறுபிறவி இல்லை.
5ஆம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம் என்று சொல்லப்படுகிறது. 5ஆம் இடத்தை வைத்தும் முப்பிறவி, அடுத்த பிறவியைப் பற்றி அறியலாம்.
அதாவது லக்னாதிபதி எந்த கிரகத்தில் இருக்கிறது, லக்னாதிபதியை எந்த கிரகம் பார்க்கிறது, லக்னாதிபதியின் பார்வை எந்த கிரகத்தின் மீது இருக்கிறது என்பதை கணித்தால் அவர்களது முற்பிறப்பு, இப்பிறப்பு, மறுபிறப்பு பற்றி கணித்துவிடலாம்.இந்தப் பிறவியில் ஒருவர் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை முற்பிறவியை வைத்து அறிந்து கொள்ளலாம்.
ஒருவரது முப்பிறவியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் ஒரு குழந்தை பிறந்த நாள், நேரம் கொடுத்தால் போதும். அந்த நாளில் இருந்து 10 மாதங்கள் பின்னோக்கிச் சென்று அந்த கரு உண்டான நேரத்தில் அது எவ்வாறு இருந்தது என்பதை கணித்து முப்பிறவியைப் பற்றி அறிவார்கள். முப்பிறவியைப் பற்றிய அறிய அந்த முறை சிறப்பாக அமையும்.

No comments:

Post a Comment