Thursday, March 10, 2011

பரிகாரம் இல்லாத ஜாதக அமைப்புகள் உள்ளதா

பரிகாரம் இல்லாத ஜாதக அமைப்புகள் உள்ளதா?
ஒருவரின் ஜாதகத்தில் ஏதாவது தோஷம் ஏற்படும் போது அதற்குரிய ஜோதிட பரிகாரங்கள், வழிபாடுகளைக் கூறுகிறீர்கள். பரிகாரம் என்பதே இதற்கு இல்லை; இதுதான் தலையெழுத்து என்று கூறும் வகையிலான ஜாதக அமைப்புகள் ஏதாவது உள்ளதா?
பதில்: ஜோதிட ரீதியாக பரிகாரமே இல்லாத பிரச்சனை என்று எதுவும் கிடையாது. பொதுவாக பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு/பரிகாரம் உண்டு.
நவகிரகங்கள் மற்றும் அவற்றின் காரகத்துவம் பற்றி ஜோதிடத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. உதாரணமாக சூரியனை எடுத்துக் கொண்டால் அவர் ஆத்மா, பிதுர், அரசாங்கம், அரசியல், இதயம் ஆகியவற்றில் ஆற்றல் செலுத்துவார்.
ஜோதிட ரீதியாகப் பார்த்தால் ஒரு கிரகம் குறிப்பிட்ட நபரின் ஜாதகத்தில் சிறப்பாக இருந்தால் அதன் காரகத்துவம் முழுமையாகக் கிடைக்கும். அதே கிரகம் கெட்டுப்போய் இருந்தால் அது வழங்கும் பலன்களும் கெடுதல் பயக்கும்.
ஜோதிட ரீதியாக பரிகாரம் இல்லாத விஷயம் என்று எதுவுமில்லை. பண்டைய காலத்தில் நவகிரகத்தால் ஏற்படும் தோஷங்கள், அவற்றால் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க குறிப்பிட்ட மந்திரங்களை ஜெபித்து முறையாக யாகம் நடத்தப்பட்டது.
ஆனால் தற்போதைய சூழலில் முறையாக யாகம் நடத்துபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதால், நடைமுறைப் பரிகாரங்களின் மூலம் தோஷத்திற்கு பரிகாரம் தேடுவதே சிறந்த வழி.
உதாரணமாக செவ்வாய் கிரகம் ரத்தத்திற்கும், விபத்திற்கும் உரியது. ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய், சனி பார்வை பெற்றிருந்தாலும், செவ்வாய்+சனி சேர்க்கை பெற்றிருந்தாலும் அவருக்கு அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட ஜாதகர் தாமாகவே முன்வந்து ரத்ததானம் செய்யலாம். இதன் மூலம் விபத்தால் ரத்த இழப்பு ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.
திருமணமே நடக்காது என்பது போன்ற கடுமையான தோஷம் உள்ள ஜாதகத்தையும் பார்த்திருக்கிறேன். அந்த மணமகனுக்கு தற்போது 38 வயதாகிறது. அவரது ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் (7, 8ஆம் இடம்) சிறப்பாக இல்லாமல், சுக்கிரனும் கெட்டுப் போய் இருந்ததால் அவருக்கு மண விலக்கு பெற்ற பெண்ணை திருமணம் செய்வதே சிறந்த பரிகாரமாக அமையும் எனக் கூறினேன்.
அந்த ஜாதகத்தை கொண்டு வந்த பெற்றோர், எனது அலுவலகத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக என்னிடம் ஒரு விடயத்தை தெரிவித்தனர். அதாவது, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் மகனின் ஜாதகத்தைக் கொண்டு வந்து பார்த்ததாகவும், அப்போது கூட மறுமணம் செய்ய வேண்டும் என்று நான் கூறியதாகவும் நினைவுபடுத்தினர்.
ஆனால் குடும்ப கௌரவம் கருதி மணவிலக்கு பெற்ற பெண்ணை திருமணம் செய்யாமல் தவிர்த்து வந்தோம். தற்போது மகனுக்கு 38 வயது முடிவடைய உள்ளதால் வேறு வழியில்லாமல் மணவிலக்கு பெற்ற பெண்ணை தேடி வருகிறோம் என்று கூறினர்.
எனவே, ஒருவர் தனது ஜாதகத்தில் கிரகங்களின் ஆதிக்கம் எப்படி இருக்கிறது என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

1 comment:

  1. உங்களிடம் எப்படி கேள்வி கேட்பது?

    ReplyDelete