Monday, August 22, 2011

ஆவணி ஞாயிறு

தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வாரநாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இதில் ஆடி வெள்ளி, ஆவணி ஞாயிறு, புரட்டாசி சனி, கார்த்திகை சோமவாரம் போன்றவை குறிப்பிடத்தக்க விரதநாட்களாகும்.

விரதங்களும் பலன்களும்

திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவரின் பரிபூரண அன்பைப் பெறலாம். செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம். புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும். வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம். வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம். சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும். ஞயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுக்கலாம்.

சூரிய நமஸ்காரம்

ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் "ஞாயிறு என்றாலே "சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணிமாதத்தில் "ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது

கண் ஒளி காக்கும் கடவுள்

சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே அவர்கள் ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், "ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.

எதிரிகளை வெல்லும் ஆதித்ய ஹிருதயம்

அகத்தியர் ராம பிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் என்ற நூலை பாராயணம் செய்தார். அற்புதமான அந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ததால்தான் ராமபிரான் எளிதில் ராவணனை வென்றார் என்கின்றன புராணங்கள். எனவே பகை அச்சம் விலக பகலவனை வணங்கவேண்டும்.

ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும். முறைப்படி செய்யும் சூரிய நமஷ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம்.

எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும், காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி “ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமோ சதா” என்று கூறி மூன்று முறை வணங்கினால் போதும் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித்தருவான்.

No comments:

Post a Comment