Sunday, August 28, 2011

பிரம்படி பட்ட இறைவன்

மதுரையில் மாதங்களின் பெயரால் தெருக்கள் உள்ளன. இவை ஆடி வீதி, சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி மூல வீதி எனப்படுகின்றன. முதல் இரண்டு தெருக்களுக்கும் நட்சத்திரங்களின் பெயர் இல்லை. ஆவணித் தெருவுக்கு மட்டும் மூல நட்சத்திரத்தைச் சேர்த்துள்ளதன் மூலம் இந்த நாளின் முக்கியத்துவத்தை உணரலாம். ஆவணி மூலம் என்பது ஆவணி மாதத்து மூல நட்சத்திரத்திலே சிவபெருமானைப் போற்றி எடுக்கப்படும் விழாவாகும்.

ஆவணித்திருவிழா

இந்த ஆண்டிற்கான திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆகஸ்ட் 24 ம் தேதி கொடியேற்றத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும் இந்த விழாவில் முக்கிய நிகழ்வுகளாக 30ம் தேதி தங்கச்சப்பரத்தில் பிரியாவிடையுடன் சுவாமியும், அம்மனும் கோவில் வளாகத்தில் உள்ள குலாலர் மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அன்றைய தினத்தில் இருந்து தினம் ஒரு திருவிளையாடல் என கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி கொடுத்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி அளித்தல், விறகு விற்றல், வளையல் விற்றல், என தினம் ஒரு திருவிளையாடல் நடைபெறும் செப்டம்பர் 6-தேதி நரி பரியாக்கிய திருவிளையாடலும், செப்டம்பர் 7-தேதி பிட்டுக்கு மண்சுமந்த லீலையும் நடைபெறுகிறது.

திருவிளையாடல் நாயகன்

மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமான் ஆடிய 64 திருவிளையாடல்களில் ஆவணி மூல நாளிலே ஆடிய திருவிளையாடல் மக்களை மிகவும் கவர்ந்ததாகும். ஏழை முதியவளுக்காக பிட்டுக்கு மண் சுமந்தததும், மாணிக்கவாசகரின் பக்தியை உணர்த்த நரிகளை பரிகளாக்கியதும் ஆவணி மூலத்தில் ஆடிய திருவிளையாடலாகும்.

ஓயாத பெருமழை பெய்து வைகை நதி பெருக்கெடுத்தது. வைகை ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும், பலப்படுத்தவும், மதுரை மக்களுக்கு பாண்டிய மன்னனால் கட்டளை இடப்பட்டது. மன்னனின் கட்டளைப்படி கடமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

வந்தி என்ற, பிட்டு விற்கும் ஏழை மூதாட்டி, வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியைப் பலப்படுத்த இடம் ஒதுக்கப்பட்டது. தள்ளாமையினால் தனது பகுதி வேலையை வந்தியினால் செய்யமுடியவில்லை. இறைவனிடம் முறையிட்டார் வந்தி. ஏழை மூதாட்டிக்கு உதவுவதற்காகவே இறைவன் கூலியாள் வடிவில் வந்தார். கூலி தர தன்னிடம் எதுவும் இல்லை என்று வந்தி கூறவே உதிர்ந்த பிட்டை சிவபெருமான் ஊதியமாக ஏற்று, மூதாட்டியின் வேலையை செய்ய உடன்பட்டார். ஊதியத்தை உண்டபின், தனது வேலையைச் செய்வதற்காக , மூதாட்டியிடம் விடைபெற்று ஆற்றங்கரைக்குச் சென்றார்.

பிரம்மபடி பெற்ற இறைவன்

உண்ட மயக்கம் தொண்டருக்கும் வருமே அது பிட்டு உண்ட சொக்கருக்கும் வந்தது. கூலியாள் வடிவில் இருந்த இறைவன் வேலை செய்யாமல் ஆற்றங்கரையில் படுத்துறங்கினார். அப்போது மேற்பார்வை பார்க்க வந்த பாண்டிய மன்னன் கூலியாளை எழுப்பி வேலையைச் திருந்தச் செய்யுமாறு கூறினார். அதற்கு கூலியாள் ஒப்புக்கொள்ளாமல் போகவே அவனை பிரம்பால் அடித்து தண்டனை வழங்கினார். சிவனுக்குக் கிடைத்த சவுக்கடியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் அந்த அடியை உணர்ந்தான், தனது பிழையையும் உணர்ந்தான். உலக மக்களுக்கு தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடியாக உதவ வருவேன் என்றும் உணர்த்த இறைவன் ஆடிய திருவிளையாடல் இது.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூல நட்சத்திரத்தன்று மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சுந்தரேசர் பொற்கூடையுடனும் பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகை ஆற்றிலிருந்து பக்தர் சூழ கோயிலுக்கு எழுந்தருளுவர். திருவிழவை காணவரும் பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம் வழங்கப்படும்.

பரிகளை நரிகளாக்கிய இறைவன்

பாண்டிய மன்னனரின் மந்திரியாக பணியாற்றியவர் மாணிக்கவாசகர். பணி என்னவோ பாண்டியனிடம்தான் என்றாலும் மனமெல்லாம் அந்த சுந்தரேஸ்வரனிடம்தான் இருந்தது. அதனால்தால் குதிரைகள் வாங்குவதற்காக மன்னன் கொடுத்த பணத்தை கொண்டு கோவில் கட்டி முடித்து விட்டார் மாணிக்கவாசகர். இதனைக் கேள்விப்பட்ட பாண்டிய மன்னன், மாணிக்கவாசகருக்கு தண்டனை அளித்தார்.

சுவாமியவர்களை விடுவிப்பதற்காகச் சிவபெருமானே குதிரை வியாபாரியாக வந்து காட்டிலுள்ள நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டுவந்து அவரைச் சிறையினின்றும் மீட்டது ஆவணி மாத மூல நட்சத்திரத் தினமாகும். பின்னர் பரிகள் எல்லாம் நரிகள் ஆக மாறி காட்டுக்குள் ஓடிய உடன்தான் மாணிக்க வாசகரின் அருமை மன்னருக்கு தெரிந்தது. வந்தது இறைவன்தான் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்து கொண்டனர். இந்த திருவிளையாடல் நடந்ததும் ஒரு ஆவணி மூல நட்சத்திரத்தில்தான்.

மூல நட்சத்திரத்தின் சிறப்பு

அன்னை சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலம்தான். சமயோசித அறிவு, தைரியம், அமானுஷ்ய சக்தி போன்றவை வேண்டாமா! ஆகியவற்றை தன்னுள்ளே கொண்டுள்ள ஆஞ்சநேயருக்கு ஜென்ம நட்சத்திரம் மூலம்தான்.

மூல நட்சத்திரத்திற்குரிய கிரகம் கேது. வாழ்க்கையின் நிலையாமையை பற்றிய ஞானத்தை தருபவர் இவர். கடவுளின் திருவடியே நமக்கு சரணாகதி என்று இவர் உணர்த்துகிறார்.

No comments:

Post a Comment