Monday, May 7, 2012

இறைவனுடைய புகழை பேசுவதாலும், கேட்பதாலும் புனிதர்களாக மாறுகிறோம் --மகாபெரியவர்

இறைவனுடைய புகழை பேசுவதாலும், கேட்பதாலும் புனிதர்களாக மாறுகிறோம். இறைவனுடைய அருள் இல்லாமல் உலகம் இயங்காது.
* கடமைகளை ஆன்மிக சிந்தனையோடு செய்தால், ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை ஏற்பட்டு, உண்மையான பக்தியும், அறிவும் கைகூடும்.
* நாம் அலங்காரம் செய்தால் அகங்காரம் ஏற்படும். அதே அலங்காரத்தை அம்பாளுக்குச் செய்தால் பாவம் தொலையும்.
* அறிவுச் சக்தியும், அறிவியல் ஆற்றலும் அதிகமாகிக் கொண்டிருப்பதால் தான், உலகிற்கு ஆபத்து அதிகமாகிக் கொண்டிருக்கிறது. பக்தியும், அமைதியும் தான் உலகில் இன்று ஏற்பட்டுள்ள கோளாறுக்கு ஏற்ற மருந்து.
* இறைவனிடம் நாம் பெற்றிருக்கும் மனம், வாக்கு, உடம்பு இவற்றால் செய்யும் செயல்கள் அனைத்தும் தர்ம சிந்தனையுடன் இருக்க வேண்டும். குணத்தாலும், உடலாலும், மனதை தூய்மைப்படுத்திக் கொள்ளும் முறையில் செயல்களைச் செய்ய வேண்டும்.
* "ஹரஹர' என்று ஜெபிப்பதால் துன்பம் நீங்கும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நிம்மதி தேடி எங்கெங்கோ அலைகிறோம். இருக்குமிடத்தில் இதைச் செய்ய மனம் மட்டும் ஒத்துழைக்க வேண்டும்.
* நடிகன் பல வேஷம் போட்டாலும், ஆள் ஒருத்தன் தான். அதேபோல் எத்தனை ஜீவராசிகள் இருந்தாலும், அவற்றுக்கு உள்ளேயிருக்கிற ஆள், சுவாமி ஒருத்தர் தான்.
* கவலை, குறை மட்டும் தான் பாரம் என்றில்லை, தன்னைப்பற்றிய பெருமையும் பெரிய பாரம் தான். அதனைக் குறைத்துக் கொள்வது நல்லது.
* வழிபாட்டு முறை எதுவாக இருந்தாலும், பக்தி அனைவருக்கும் பொதுவானதே.
* உலகம் பல வண்ணங்களைப் பூசிக் கொண்டிருக்கிறது. வண்ணம் கலைந்த பிறகு எஞ்சியிருப்பது உண்மைப் பொருளான இறைவன் மட்டுமே.
* ஓடி ஓடி சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வருவதில்லை. அதனால் நியாயமான வழியில் பொருள் தேடி, அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள்.
* தேவையை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவளவு அமைதியும், சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கும்.
* பாவம் நீங்க ஒரே வழி தியானம் செய்வது தான். தியானத்திற்காக தினமும் சிறிது நேரமாவது ஒதுக்குங்கள். அதே நேரம் புதிதாகப் பாவம் செய்யாமல் இருப்பதும் அவசியம்.
* தூய்மையோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எங்கு சென்றாலும் அங்கு நல்ல முறையில் மகிழ்ச்சியை உருவாக்க வேண்டும்.
* நல்ல மனமுள்ளவர்கள், ஒருவரைப் பூஜை செய்கிறார்கள் என்றால், அப்படிப் பூஜிக்கப் படுபவரும், ரொம்ப நல்ல மனம் படைத்தவராகத் தான் இருப்பார்.
* புத்தியை சுத்தப்படுத்திக் கொள்ள கல்வி, மனதை சுத்தமாக்க தியானம், வாக்கைச் சுத்தமாக்க ஸ்லோகம் இருக்கின்றன. இவற்றை வாழ்க்கையில் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment