Monday, July 29, 2013

விஷ்ணுவின் ராம, கிருஷ்ண அவதாரத்தைப் போல பிற அவதார வழிபாடு அதிகமாகவில்லையே ஏன்?

* விஷ்ணுவின் ராம, கிருஷ்ண அவதாரத்தைப் போல பிற அவதார வழிபாடு அதிகமாகவில்லையே ஏன்?
சத்தியம், தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணு எடுத்தது ராம, கிருஷ்ண அவதாரம். மனிதனாகவே வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமர். தெய்வமாகவே மண்ணில் வாழ்ந்தவர் கிருஷ்ணர். வாழ்வில் எல்லா துன்ப அனுபவமும் ராமருக்கு உண்டானது. சந்தோஷமே வாழ்க்கை என துன்பத்தையும் கண்டு சிரித்தவர் கிருஷ்ணர். எனவே தான், இந்த இரண்டு அவதாரங்களையும் வணங்கும் வழக்கம் மக்கள் மத்தியில் அதிகமாகி விட்டது.

** ராமபிரான், சிவபிரான் என கடவுளைப் "பிரான்' என சொல்வது ஏன்?
புனிதவதி, கோவை

""இறைவன் கோயிலில் மட்டுமே இருப்பதாக எண்ணக்கூடாது. நம் உள்ளத்திலே
பிரியாது இருக்கிறார். உயிர்களாகிய நம்மை விட்டு பிரியாமல் இருப்பதால் தான் "பிரான்' என இறைவனை அழைக்கிறோம். எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் இறைவன் இருக்கின்றான்'' என்கிறார் வாரியார்.

கருட புராணத்தை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது ஏன்?
இறந்த பிறகு உடலில் இருந்து பிரியும் உயிரின் பயணத்தைப் பற்றியும், அந்த உயிர் செய்த பாவங்களினால் படும் கஷ்டத்தையும், இறந்த உயிருக்குச் செய்யவேண்டிய காரியங்களுக்கான காரணத்தையும் கூறும் நூல் கருடபுராணம். இதனால், வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது எனச் சிலர் கூறி வழக்கிலும் உள்ளது. இறந்த வீட்டில் காரியம் நடக்கும் நாட்களில் இதைப் படிப்பது விசேஷம்.

* மற்ற கிரகப்பெயர்ச்சியின் போது அந்தந்த கிரகத்தை வணங்கும்போது, குருபெயர்ச்சியின் போது மட்டும் குருவை வணங்காமல் தட்சிணாமூர்த்தியை வணங்குவது ஏன்?
பெயர்ச்சியாவது நவக்கிரகத்திலுள்ள தேவகுரு. குருவுக்கே குருவாக விளங்கும் லோக குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் தேவகுருவையும் வழிபட்டதோடு, சிவனையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதால் இதை பின்பற்றுகிறோம்.

ருத்ராட்சத்தை எந்த வயது முதல் அணியலாம்?
ஏழு வயது முதல் அணியலாம். விபூதி பூசி ஐந்தெழுத்து மந்திரத்தைத் தெரிந்து ஜெபம் செய்யக்கூடிய வயதும் அது தான். எல்லோரும் கட்டாயம் இதைப் பின்பற்றினால் மக்களிடையே பண்பாடு அதிகரிக்கும்.

கோவில், ஆலயம் இரண்டும் வெவ்வேறு பொருள் கொண்டவையா?
கோவில் என்பது கோ+ இல் என்பதாகும். "கடவுள் வாழுமிடம்' என்பது இதன் பொருள். ஆன்மா லயிக்கும் இடம் "ஆலயம்'. தன்னுணர்வு அற்ற நிலையில், உயிர் கடவுளோடு இரண்டறக் கலந்து லயிக்கும் இடமே கோவில்.

No comments:

Post a Comment