Sunday, May 4, 2014

பித்ரு தோஷம், பித்ரு சாபம்

பித்ரு தோஷம், பித்ரு சாபம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்….

 பித்ரு தோஷம், பித்ரு சாபம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்….
பித்ரு தோஷத்திற்கும், பித்ரு சாபத்திற்கும் வேறுபாடு என்ன? இந்தக் கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள். சூரிய பகவானை பித்ருகாரகர் அதாவது மூதாதையர்களை குறிப்பவர் என்று அழைக்கிறார்கள். சந்திர பகவானை மாத்ரு காரகர் அதாவது தாயைக் குறிப்பவர் என்று அழைக்கிறார்கள். இந்த இருவரின் நிலைமையை ஒரு ஜாதகத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டும். இவர்களின் சுப – அசுபத் தன்மையைக் கொண்டு ஒருவருக்கு பித்ருக்களின் ஆசி உள்ளதா அல்லது தோஷம் உண்டாகியுள்ளதா என்பதை அறிய முற்பட வேண்டும்.
பித்ரு தோஷம் அல்லது ஆசிகள் ஒருவருக்கு தந்தை வர்க்கம் அல்லது தாயின் வர்க்கத்திலிருந்து அமையக்கூடும். எங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு தன் தாயின் தந்தையின் ஜாதகத்தைப் போலவே அமைந்திருந்தது. அவரும் தன் தாத்தாவைப் போலவே அவர் சார்ந்த துறையிலே பணியாற்றி அவரைப் போலவே பெயரெடுத்தார். அதோடு ராகு பகவானை பிதாமஹர் அதாவது தந்தையின் தந்தை என்றும், கேது பகவானை மாதாமஹி அதாவது தாயின் தாய் என்றும் கூறுவார்கள். ஒன்பதாம் வீடு குறிப்பாக ஐந்தாம் வீட்டிற்கு முன்பாக பித்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படுவதால் இந்த இரண்டு வீடுகளின் அதிபதிகள் பெற்ற சுப, அசுப நிலைமைகள், இவர்களுடன் ராகு, கேது பகவான்களின் தொடர்பு ஆகிவயற்றைக் கருத்தில் கொண்டும், அவர்கள் பெற்றுள்ள சாரம் மற்றும் சேர்க்கை ஆகியவற்றாலும் எந்த அளவுக்கு ஒருவருக்கு மூதாதையர்களின் உதவி கிடைக்கும் என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும்.
சூரிய பகவானுக்கு அவரின் புதல்வரான சனி பகவான் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகம். பலரும் சூரிய பகவான் மற்றும் சனி பகவான் ஆகியோரின் சேர்க்கை இருந்த போதிலும் சிறப்பான வளர்ச்சியடைவதைப் பார்க்கிறோம். சனி பகவானே சிறப்பான ஆதிபத்ய விசேஷம் பெற்று ஜாதகருக்கு உதவும் நிலைமையில் இருப்பார்கள். அதோடு சூரிய பகவானோடு ராகு பகவானின் சேர்க்கையும் பலரை சூரிய பகவான் தசையில் நல்ல நிலைமைக்கு உயர்த்துவதைப் பார்க்கிறோம்.
சூரிய பகவானுக்கு உகந்த காரகத்துவங்களான அரசியல் செல்வாக்கு, அரசாங்க ஆதரவு, கௌரவம், ஆற்றல், வீரம், கண் தொடர்பான விஷயங்கள் ஆகியவை பலமாக சூரிய பகவானால் கிடைக்கும். சூரியன், ராகு பகவான்கள் இணைந்தவர்களுக்கு அரசுப் பணிகளில் உயர் பதவிகளில் அமரும் வாய்ப்பு கிடைக்கும். சூரிய பகவான் எந்த அளவுக்கு நலம் சேர்ப்பாரோ அந்த அளவுக்கு சனி பகவானும் ஒருவரை பெரிய அரசாங்க அதிகாரி ஆக்குகிறார். சனி பகவான் கீழ்த்தட்டு மக்களை நிர்ணயிப்பவர் என்பதால் அவர்களுக்கு அவரின் ஆதரவு நிரம்பக் கிடைக்கும். பிறரை வேலை வாங்கும் அளவுக்கு அதிகாரமான நிலைமை உண்டாகும். அதனால் சூரிய, சனி, ராகு பகவான்களின் சேர்க்கையை ஒரு குறை என்கிற ரீதியில் மட்டுமே பார்க்காமல், அதில் எந்த கிரகத்திற்கு சுப பலம் உண்டாகிறதோ அந்தக் கிரகத்தின் அடிப்படையில் அவரின் முன்னேற்றம் இருக்கும் என்பதை ஆராய்ந்து அறிய வேண்டும்.
மேலும் எந்த தசையில் நலம் உண்டாகும் என்பதையும் அறிய வேண்டும். அதோடு ஷட் பலம் அதாவது ஆறு விதமான பலத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். இதில் சூரிய பகவானுக்கு குறைந்தது 5 ரூப பலமும், சந்திர பகவானுக்கு 6 ரூப பலமும், செவ்வாய் பகவானுக்கு 5 ரூப பலமும், புதன் பகவானுக்கு 7 ரூப பலமும், குரு பகவானுக்கு 6.5 ரூப பலமும், சந்திர பகவானுக்கு 5.5 ரூப பலமும், சனி பகவானுக்கு 5 ரூப பலமும் கொடுத்திருக்கிறார்கள். இந்த சூரிய, சனி, ராகு பகவான்களின் சேர்க்கை பித்ரு தோஷம் என்று கூறினாலும் சூரியன், சனி பகவான்களுக்கு ஷட் பலத்தில் சிறப்பான ரூப பலம் கிடைத்துவிட்டால் அந்தக் கிரகமானது பித்ரு தோஷத்தையும் மீறி சிறப்பான பலன்களைக் கொடுக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதனால் பொதுவாக சற்றேரக்குறைய நால்வரில் இருவரின் ஜாதகங்களில் மேற்கூறிய அமைப்புகள் இருந்தால் அதை பித்ரு தோஷம் என்று கூற வேண்டும். அதற்குப் பிறகு அதில் எந்தக் கிரகங்கள் லக்ன சுபர்களாக ஆகிறார்கள், அவர்கள் பெற்ற சார பலம் மற்றும் சேர்க்கை, பார்வை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டும், ஷட் பலத்தையும் ஆராய்ந்து முடிவு செய்தால் ஓரளவுக்கு அந்த தோஷம் பெற்ற கிரகத்திற்கு சுப பலம் எந்த அளவுக்கு உண்டாகி இருக்கிறது என்றும், அவரால் எந்த அளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம் என்றும் அறிந்து, பலன்களைக் கூறினால் சரியாக அமைந்துவிடும்.
மற்றபடி மேற்கூறிய சேர்க்கைகளில் அசுபத் தன்மை கூடியிருந்தால் அதை பித்ரு சாபம் என்றுகூற வேண்டும். இத்தகையோருக்கு அதாவது நான்கில் ஒருவருக்கு இந்த அமைப்பு ஏற்படலாம். அவர்களும் தக்க பரிகாரம், சாந்திகளால் மேற்கூறிய தோஷத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு பரிகாரமாக திலஹோமம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். உங்களுக்கு பித்ருகாரகரான சூரிய பகவான் நீச்சமாகி சர்பக் கிரகத்தின் சாரம் பெற்றிருந்தாலும், அவருடன் லக்னாதிபதி மற்றும் சூரிய பகவானுக்கு நீச்ச பங்க ராஜயோகம் உண்டாகிறது என்பதை மறுக்க முடியாது. அதாவது நீச்சனேறிய ராசி நாதன் ஆட்சி உச்சம் பெறுகையில் நீச்சபங்க ராஜயோகம் உண்டாகும் என்பது ஜோதிட விதி.
இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் சுகாதிபதியியன் தசையில் அனுகூலமற்ற அந்தரம் நடக்கும். அதற்குப் பிறகு உங்கள் ஆரோக்யம் மேம்பாடடையும். அதோடு ஆரோக்ய ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. அதனால் நிரந்தர உபாதைகள் என்று எதுவும் ஏற்படாது. மூத்த சகோதர ஸ்தானாதிபதியான சந்திர பகவான் அஷ்ட ராசியில் மறைந்திருக்கிறார்.
மற்றபடி அவரை நீச்சபங்க ராஜயோகம் பெற்ற சூரிய பகவான் பார்வை செய்வதால் பௌர்ணமி யோகம் உண்டாகிறது. அதோடு அவரை லக்ன கர்மாதிபதியும், தன பாக்யாதிபதிகளுமான தர்ம கர்மாதிபதிகள் பார்வை செய்வதாலும், 2015ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்குப் பிறகு தொடங்கும் பூர்வ புண்ய ஸ்தானாதிபதியின் புத்தியிலிருந்து மூத்த சகோதரருடன் ஏற்பட்ட உறவு மேம்படும்.
வியாழக்கிழமைகளில் குரு, தட்சிணாமூர்த்தியையும், ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானையும், சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

No comments:

Post a Comment