Wednesday, September 19, 2018

ஔவையார் அருளிச் செய்தவிநாயகர் அகவல் உரையும்

 

விநாயகர் அகவல்


ஔவையார் அருளிச் செய்த
விநாயகர் அகவல்
(மூலமும் பு.பா.இரசபதி உரையும்)

ஔவையார் அருளிச் செய்த
விநாயகர் அகவல் (மூலமும் பு.பா.இரசபதி உரையும்)



நூல்முகம்

இந்த அருள்நூலுக்கு, மறைமலையாரின் தலை மாணாக்கரும், பல்வேறு அருட்பணிகள் ஆற்றி, பின்னாளில் துறவு பூண்டு, மாம்பாக்கத்தில் திருக்குறள் பீடம் கண்டு, அமைந்தவருமான, பாலசுந்தரனார் என்ற இளவழகனார் அருளிய நூல்முகம்:


திருவருள்

இந்திய நாடு திருவருள் நாடு! காலந்தோறும் குருமார் பற்பலர் தோன்றி, மேலுமேலும் அருள்நலம் பெருக்கிய நாடு. செல்வத்தில் மிதந்து, கல்வியில் திளைத்து, அருளில் அமைதியுற்ற அழகிய நாடு! குறைவொன்றும் இல்லாத குருநாடு!

இந்த நாட்டில் அரும்பி மலர்ந்த திருநெறிகள் பல. அந்நெறிகளின் வழியே திருவருள் வெளிப்பட்டுத் தோன்றிய திருவுருவங்களும் பல. அருள் வெளிப்பட்ட இடங்களில் எழுந்த திருக்கோயில்களும் பல. அவற்றின் வரலாறுகளும் பலப்பல. அழகிய பழம்பெரு மொழிகளில் ஆன்றோர் அருளிய அருள் மணங்கமழும் ஞான நூல்களும் பற்பலவாம்.

தேனினும் இனிய தமிழ் மொழியில் அருள்ஞான நூல்கள் மிகவும் அளவாக உள்ளன. மக்கள் வாழ்நாளில் அமைதியுடைய நாள் மிகச்சில; அச் சில நாளில் நன்கு அறிந்து தெரிந்து கொள்ளத்தக்க வகையில், அளவாய் ஞானநூல்கள் தமிழில் இனிது அமைந்திருக்கின்றன. ஆனால், பொருள் நிறைவுக்கோ, கருத்து ஆழத்துக்கோ, பழக்கப் பயனுக்கோ அவற்றிற் குறைவு ஒன்றுமில்லை. மேலும், தெளிவு மிகுந்து, சுவை உயர்ந்து, மெய் பொலிந்து, அருள் ஒளி விடுவன தமிழ் நூல்கள்.

அத்தகைய அழகிய ஞானநூல்களில் ஒன்று, ஔவையார் அருளிய விநாயகர் அகவல். எளிய நடையில் சிறு பிள்ளைகளும் ஓதி நலம்பெறும் வகையில் அமைந்தது அது. அவ்வாறே, விநாயகர் வழிபாடும், பிள்ளைகட்கும் ஏற்ற இனிய எளிய வழிபாடு. மண்ணைப் பிடித்து, அறுகம் புல்லை எடுத்து இட்டு, உண்டை படைத்து வணங்கும் மிக எளிய வழிபாடு இது.

ஔவையார் சிறுபிள்ளைகட்கு நூல்கள் எழுதுவதில் வல்லவர். சிறுபருவத்திலேயே நெட்டுருச் செய்துகொண்டு நாளுக்கு நாள் மெய்ப்பொருள் உணரும் வகையில், அப்பிராட்டியார் நூல்கள் அருளிச் செய்துள்ளார். பெரிய மூதறிவினரே சிறுவர்க்கும் யாவர்க்கும் நூல்கள் அருளுதற்குரியவர்.

விநாயகர் அகவல் இப்போது உரை விளக்கத்தோடு வெளிவருகின்றது. விளக்கமும் தக்க மூதறிவினரையே ஆசிரியராய்ப் பெற்றிருக்கின்றது. திரு.ரசபதி அவர்கள் இதன் உரையாசிரியர். அவர்கள், மொழித் திறமும், ஞான மெய்ப்பொருள் ஆய்வும், திருவருள் அன்பும், எழுத்து வன்மையும், பல அருள் நூல்களுக்கு உரை வகுத்துதவிய உரைப் பழக்கமும் நன்கமைந்தவர்கள். இன்பத் தமிழுலகு, அப் பேரறிவாளராற் பயன் கொள்ளத் தக்கன பல உள்ளன.

உரையும் நூலுமாக இதனை வெளியீடு செய்யும் புண்ணியத் திருவுடைய 'அமிர்தவசனி' பதிப்பகத்தார், தெய்வமணம் பரவுதலொன்றே நோக்கமும் குறியுமாக உடைய மாட்சியர். நல்லவருலகம், வான்முகில் நோக்கும் பசும்பயிர் போல இப் பதிப்பகத்தார் முகங்கொண்டு வாழ்ந்து வருகின்றது.

இந்நூல் வாழ்க! இதன் செய்கையர் வெல்க! திரு அருள் தழைக!

இளவழகன்,
குருகுலம், மாம்பாக்கம்.
(31.5.1954)

ஆசிரியர் முன்னுரை

இறைவன் திருவருளால், இவ்வுலகம் தோன்றியது; தொழிற்படுகின்றது. அகில உலகில் ஒவ்வொரு செயலிலும், அருள் முத்திரை உளது. அமைதி, இதனை எவர்க்கும் அறிவிக்கும். எளியேனுடைய திண்ணைப் பள்ளி ஆசிரியருள் ஒருவர் பிரமஸ்ரீ கனகசபேசையர் அவர்கள். வைதீகசீலரான அப் பெருந்தகை, அருளொடு தூண்ட, விநாயகர் அகவலை இளமையில் மனனம் செய்தேன். இன்றுவரை அத் தொடர்பு என்னிடம் உளது.

அதன் பயனாக, பல சாதுக்கள் ஆசியையும் பெற்றேன். இன்றைய உலகில், அமயம் வாய்க்கும் போதெல்லாம், நூலின் உள்ளுரையை உணர்ந்து உணர்ந்து நெகிழும் என் உள்ளம். கடலூர் வெள்ளிப் பிள்ளையார் கோயில் நிர்வாகி அன்பர் கணபதி முதலியார் அவர்களும், என் கெழுதகை நண்பரான கிடங்குத்தெரு ஸ்ரீ பாலசுப்பிரமணியம் கம்பெனி அவர்களும், இந்நூலுக்கு உரையெழுதும் வேட்கையை இடையிடை என்னில் எழுப்பினர்.

அமிர்தவசனி தெய்விகத் திங்கள் இதழ் ஆசிரியரும், ஏதாயினும் திருப்பணி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்னும் உணர்வை எவர்க்கும் எழுப்புபவருமான பிரமஸ்ரீ சு.முத்துஸ்வாமி ஐயரவர்கள், 'விநாயகர் அகவல் விரிவுரை, நாட்டிற்குச் செய்யும் நல்லதொரு தொண்டு. இதனில் ஈடுபடுக' என்று ஆணையிட்டனர். இதுகுறித்து டாக்டர் பிரமஸ்ரீ மணி ஐயர் அவர்களும், 'உரைத் திருப்பணி எவ்வளவு நடைபெற்றிருக்கிறது' என்று, இடையிடை அன்பொடு வினவலாயினர். 'செய்கிறேன்' என்னும் என் வாய். நெஞ்சமோ பெரிதும் அஞ்சியது.

உருவிற் சிறியது எனினும், சாதனை பழுத்தவர்க்கே சாத்தியமானது விநாயகர் அகவல். யானோ அருகன்! இனிய ஊக்குதல் தொடர்பு, திருவருள் கட்டளைபோல் இருந்தது.

யாதாயினும் ஆக! கணேசா! அப்பா நீயே துணை என்று நம்பி ஏதோ சிறிது முயன்றேன். முயல்வின் பயன் இச் சிற்றுரை. சாதனா சம்பந்திகளும், அருங்கலை வாணரும், எளியேன் செய்த இச் சிறுபணியை ஏற்க வேண்டுகிறேன். உள்ள குறைகளையும் உணர்த்துவரேல், அந்நன்றியை என்றும் மறவேன்.

விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யும் பக்தர்களின் பாததூளியே எளியேன் விழைதரும் பரிசு. கணேசா! வரசித்தி நாதா! திருப்பணியில் ஈடுபட்டுச் செயலாற்றும் அமிர்தவசனி காரியாலயம் வாழ்க என்று வழுத்துகிறேன். தெய்வக் கணபதி அடியார்தம் திருவடிகட்கே அடைக்கலம்.

இங்ஙனம் அன்பன்,
பு.பா.இரசபதி
97, சஞ்சீவிராயன் கோயில் தெரு,
பழையவண்ணை, சென்னை - 21.
(20.9.1954)
    'ஒன்றாகக் காண்பதே காட்சி; புலன்ஐந்தும்
    வென்றான்தன் வீரமே வீரமாம் - என்றானும்
    சாவாமல் கற்பதே கல்வி; தனைப்பிறர்
    ஏவாமல் உண்பதே ஊண்' - ஔவையார்

விநாயகர் அகவல் - மூலம்

    சீதக் களபச் செந்தா மரைப்பூம்
    பாதச் சிலம்பு பலவிசை பாடப்
    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
    வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
    பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
    5
    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
    அஞ்சு கரமும் அங்குச பாசமும்
    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
    நான்ற வாயும் நாலிரு புயமும்
    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
    10
    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
    அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
    முப்பழ நுகரும் மூஷிக வாகன!
    15
    இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
    தாயா யெனக்குத் தானெழுந் தருளி
    மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
    திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
    பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
    20
    குருவடி வாகிக் குவலயந் தன்னில்
    திருவடி வைத்துத் திறமிது பொருளென
    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
    உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
    25
    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
    கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
    இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
    30
    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
    ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
    ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
    ஆறா தாரத்(து) அங்குச நிலையும்
    35
    பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
    கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
    மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
    40
    குண்டலி யதனிற் கூடிய அசபை
    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
    அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
    45
    குமுத சகாயன் குணத்தையும் கூறி
    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
    உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
    சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
    எண் முகமாக இனிதெனக் கருளிப்
    50
    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
    தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
    கருத்தினில் கபால வாயில் காட்டி
    இருத்தி முத்தி யினிதெனக் கருளி
    என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து
    55
    முன்னை வினையின் முதலைக் களைந்து
    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
    தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
    இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
    அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்
    60
    எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
    அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
    அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
    65
    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
    அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
    70
    தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
    வித்தக விநாயக விரைகழல் சரணே!

விநாயகர் அகவல் - உரை (குகஸ்ரீ ரசபதி)

இது விநாயகரைப் பற்றிய அகவல் என விரியும். இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; ஆறாம் வேற்றுமைச் செய்யுட்கிழமைப் பொருளாகவும் விரிக்கலாம். விநாயகர் வடசொல். கணேசர்க்கு இப்பெயர் யோகமாக அமைந்தது; ரூடியாகவும் பெறவுளது. இதனால் இது யோகரூடி எனப்பெறும். வி-மேலான; நாயகர்-தலைவர்; எனவே தற்பர கணபதி, தனக்கு மேலொரு தலைவர் இலாதவர் என்றபடி.

'வித்தக விநாயக விரைகழல் சரணே' எனும் இந்நூலின் இறுதிஅடியில் இப்பெயர்ப் பொருள் விரித்துரைக்கப் பெற்றுள்ளது; ஆண்டு அது காணத்தகும்.

விநாயகர் அகவல் என்ற தொடர் அன்மொழித் தொகையாய், விநாயகர் மேல் பாடப் பெற்ற அகவல் பாவால் ஆகிய துதிநூல் எனும் பொருளில் நின்றது. மயில் அகவுவது போலும் ஒலியினது ஆகலின் அகவல் எனப் பெயர் பெறும். அகவல் எனினும் ஆசிரியம் எனினும் ஒக்கும். நேரிசை, இணைக்குறள், நிலைமண்டிலம், அடிமறி மண்டிலம் எனும் நால்வகையுள் இது, இயற்சீர் விரவிய நேரிசை ஆசிரியப்பா எனப் பெறும்.

எழுபத்துஇரண்டு அடிகளைக் கொண்ட இந்நூலைப் பாடியவர் ஔவைப் பிராட்டியார். அற்புதமான அப்பாடலையும், பாடல் பொருளையும், தத்துவக் குறிப்பையும், திருவருள் துணை கொண்டு ஒரு சிறிது காண்போம்.

திருவடிப் பெருமை
உடலில் அரைஞாணிற்குக் கீழ் இருக்கிறது மூலநிலம்; அந்நிலத்தில் திகுதிகு என்று கனல்கிறது மூலக்கனல். உடலில் உள்ள பொறிபுலன் எல்லாம் அக்கனலிலிருந்தே உயிர்க்கின்றன. அற்புத அக்கனலே ஆன்ம வாழ்விற்கு ஆரம்பம்.

ஞானக்கனலான கணபதியின் திருவடிகள், அம்மூலக்கனலின் முன்பிருக்கின்றன. கனல் தணியாதபடி அங்கிருந்து காப்பளிக்கின்றார் கரிமுக வரதர். வெப்பம் காட்டாமல் தட்பம் காட்டும் அவர் திருவடிகளிலிருந்து எழுகின்றது ஏழிசை. எவர் உள்ளத்தையும் வயப்படுத்தும் அந்த ஏழ் இசை எழுகோடி மந்திரம் என நிற்கிறது. அரிய நுட்பம் பல காட்டும் அந்த மந்திர நாதமே, ஊனம் இல்லாத வேதமாக உருக் கொள்கின்றது; சொல் உலகமான வேதங்களுடன், பொருள் உலகமான உயர்ந்த தத்துவங்களும் உயிர்க்கின்றன.

தூயது, தூய்மை அற்றது, இரண்டும் கலந்தது (சுத்த மாயா, ப்ரக்ருதி மாயா, மிஸ்ர மாயா) எனப்பெறும் மூன்று மாயைகளும், அவைகளின் செயலால் உருக்கொள்ளும் உலகங்களும், வித்தக அந்த நாதத்திலிருந்தே விறுவிறு என்று எங்கும் விரிந்து வியாபிக்கின்றன. என்ன அற்புதம்!
    'அமல மாகிய சிந்தை யடைந்து அகல்
    தொலை விலாத அறம்பொரு ளின்பமும்
    அடைய ஓதி உணர்ந்து தணந்தபின் - அருள் தானே
    அறியு மாறு பெறும்படி அன்பினில்
    இனிய நாத சிலம்பு புலம்பிடும்
    அருண ஆடக கிண்கிணி தங்கிய - அடி தாராய்!'
- என வரும் கந்தன் அருள்பெறு சந்தமுனிவர் திருப்புகழ்க் குறிப்பு இங்கு எண்ணத் தகும்.

பயனான இவைகள் அனைத்தையும் ஊன்றி நெகிழ்ந்து உருகிய உளத்தொடு பாடுகின்றார் ஔவைப் பாட்டியார். பாடலைச் சிந்தனையுடன் படித்துப் பாருங்கள். என்ன ஆனந்தம்!

1. சீதக் களபச் செந்தா மரைப்பூம்
2. பாதச் சிலம்பு பலஇசை பாட

பதவுரை:
சீதம் - குளிர்ந்த,
களபம் - களப மணம் கமழ்கின்ற,
செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு - சிவந்த கமலம் போன்ற திருவடிகளில் அணிந்துள்ள சிலம்பு என்னும் அணிகள்,
பல இசை பாட - பலவகை இசைப்பாட்டு ஒலிகளை எழுப்பவும் (என்றவாறு).

அருள் நாதத்திலிருந்தே அனைத்தும் தோன்றின எனும் அருள் நூல்கள், எவ்வளவு நுட்பம் உணர்ந்து ஓதியிருக்கின்றன என்பது வித்தக இந்த இரண்டு அடிகளிலிருந்தும் விளங்குகின்றது அல்லவா!

இவ்வளவு செய்திகளையும் தன்னுள் கொண்டிருக்கும் இந்த இரண்டு அடிகளை என்றும் மறக்கவியலுமோ! இவைகளை நினைவுறுத்தும் இனிய பிராட்டியும் என்றும் நம் நினைவில் இடம் பெறுகின்றார்.

    'தடந்தாட்கு ஒத்த தமனியச் சிலம்பு
    படம் தாழ் கச்சைப் பாம்பொடு மிளிர
    வென்றாடு திருத்தாதை வியந்துகைத் துடிகொட்ட
    நின்றாடும் மழகளிற்றை நினைவாரோ வினையிலரே'
- எனவரும் பெருங்கதையடிகள், இங்கு நாம் நினைவு கொள்ளத் தகும்.

மூலாதாரத்திலிருந்து நாதநயம் பல தோன்ற, இன்ப நிருத்தம் செய்கின்றான் எம்மான். நூல் ஆரம்பத்திலேயே திருவடி தரிசனம் ஆகிறது. திருவடிகளின் செயலை இருபத்துஇரண்டாம் அடியும் அறிவுறுத்துகின்றது. விளக்கம் அங்குளது; ஆண்டு அதைக் காண்டல் நலம்.

திருஇடை
எம்மான்தன் இயற்கைத் திருமேனியில் அரைஞாணும், வெண்பட்டும் இருக்கின்றன. அந்தச் செயற்கைக் கோலத் தெய்வ அழகு, அகில உலகும் அமைதி பெற, வளரும் ஒளியுடன் அழகை வழங்குகின்றது. இந்நிலையை உணரும்போதே பாட்டியின் உள்ளம் படபடக்கின்றது. திருவாளன் தெய்வப் பிரபுத்துவத்தை, மெல்லெனப் பின்வரும் இரண்டடிகளால் அம்மை உரைக்கும் அழகே அழகு!

3. பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும்
4. வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்ப

பதவுரை:
பொன் அரைஞாணும் - பொன்னால் ஆகிய அரைஞாண் என்னும் அணிகலனும்,
பூந்துகில் ஆடையும் - மென்மையான வெண்பட்டு ஆடையும்,
வன்ன மருங்கில் - அழகிய திரு இடையில்,
வளர்ந்து அழகு எறிப்ப - மென்மேலும் அழகு மிகுந்து ஒளிபரப்ப (என்றவாறு).

பாட்டிக்குப் பாததரிசனம் காட்டிய பரன், கனிவிக்கும் தன் இடையையும் காட்டுகின்றான்.

கணபதி அஷ்டோத்தரம் என்றொரு நூல் உளது. அதனில்,

'ஓம் ஸ்வேத பரிதாநாய நம: என்பது 39'ஆம் மந்திரம்.
'ஓம் சுப்ரப்ரியாய நம: என்பது 27'ஆம் மந்திரம்.

இந்த இரு மந்திரங்களும் வெண்பட்டு ஆடையன் விமலன் எனலை விளக்குகின்றன.
சுப்ரம் என்பது வெண்ணிறப் பொருள்களைக் குறிக்கும்; எனினும் வெண்ணிற ஆடையென்றே இதுவரை பொருள் கொண்டுளர் மேலோர்.

'மின்னா மெனவே விளங்கு பட்டழகும்' என்றார் நக்கீரதேவ நாயனாரும். மின்னல் வெண்ணிற ஒளி. பட்டிற்கு இயற்கை நிறம் வெண்மை. உவகை விளைவிக்கும் இதனை உணர்ந்தே, 'சுக்லாம்பரதரம்' எனும் சுலோகமும் எழுந்தது. 'பூந்துகில் ஆடையும்' என்பதில், துகில் உடையை உணர்த்தாமல், நிறத்தையே உணர்த்திற்று.

    'குழவி வெண்மதிக் கோடுழக் கீண்டுதேன்
    முழவி னின்றதிர் மொய்வரைச் சென்னியின்
    இழியும் வெள்ளரு வித்திரள் யாவையும்
    குழுவின் மாடத் துகில்கொடி போன்றவே'
- என ஜீவகசிந்தாமணி நாமகள் இலம்பகம் முப்பத்து நான்காம் பாட்டில் வரும் துகில்கொடி என்ற இடத்தில், 'துகில்- வெண்மை செம்மை இரண்டற்கும் பொது' என்று உரைகண்டார் நச்சினார்க்கினியர். இதனால், 'பூந்துகிலாடை' என்பதற்கு, வெண்ணிற ஆடை எனப் பொருள் கோடல் நேர். கணபதிக்குச் செந்நிற ஒளியான ஆடையும் ஒரு சமயத்து அமைதலின், அதுவும் ஒருசார் கொள்ளப் பெறும்.

திருவயிறு

அகில உலகையும் தன்னுள் அடக்கிக் காட்டும் அற்புதத் திருவயிறு, அடுத்துத் தரிசனம் ஆகிறது.

வேதன், மால், உருத்திரன் எனும் முதலாளிகள் மூவர் தவம் முயன்று செய்தனர். அருள்மிக்க ஆனைமுக அம்மான் அவர்கட்கு முத்தொழில் செய்யும் முதன்மை வழங்கினன். விழுந்தனர்; பணிந்தனர்; எழுந்தனர். எங்ஙனம் செய்வது அச்செயல் என விநயமொடு மூவரும் வினவினர். அவ்வளவில், எம்மான் அம்மூவரையும் எடுத்து விழுங்கினன். உள் புகுந்தனர்; அளவிலாத அண்டங்கள், திருவயிற்றுள் இருந்து திகழ்கின்றன. அறிந்து வியந்தனர் அயன் முதலோர். அதனுடன், முத்தொழில் புரியும் பல கோடி மூவரையும் கண்டனர். அவர்கள் செய்யும் உயரிய தொழில் முறைகளை ஊன்றி உணர்ந்தனர். வரத கணபதியின் பிரபுத்வம் அறிந்து வந்தித்தனர். வாயாற வாழ்த்தினர். அவ்வமயம், திருவாயாலும், இரு செவியாலும் வித்தகக் கணபதி வேதன் முதலினோரை வெளிப்படுத்தினர்.

விரிவான இந்த விநாயக புராண வரலாறு, பேழை வயிற்றின் பெருமிதத்தோடு பாட்டியின் நினைவிற் படற்கிறது. அவ்வளவுதானா! இதோ பாருங்கள்!

வதன தந்தம்

ஒடித்த தந்தம் ஒரு கரத்திருப்ப, மற்றொரு கொம்பு திருமுகத்தில் மன்னியுளது. அளவிறந்த மகிமாதிசயங்கள், அதனிலிருந்து வெளியாகின்றன.

'ஒற்றைக் கொம்பன் விநாயகனைத் தொழத்
துள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே'
- எனும் பொருள் தோன்ற, 'ஏக தந்தாய விக்ந விநாசினே' எனும் மன்னிய தெய்வ மந்திரம், நம் நினைவில் இங்கு நிழலிடுகின்றது.

திருமுகம்

'வேழக் குரித்தே விதந்து களிறெனல்' என ஒல்காப் புகழ்மிகு தொல்காப்பியனார் ஓதிய வண்ணம், ஆண்மை மிக்க வேழமுகம் விளங்குகின்றது. திருமுக தரிசனம் செய்யச் செய்ய, உயரிய செய்திகள் பல நினைவில் உருண்டோடி வருகின்றன.

சுக்லாம்பரதரம் சுலோகத்தில் 'பிரஸன்ன வதனம்' உளது. இதற்குத் தரிசனமாகும் தெய்வத் திருமுகம் எனல் பொருளெனினும், யானைமுகம் என்றும் இதற்குப் பொருள் உண்டு. அற்புத இப்பெயர்ப் பொருளை, 'ப்ரஸ்ந்நோ மத்த வாரண' என்று நிகண்டு இனிது கூறுகின்றது.
    'ஒருகோடு முகத்தணிந்த பிரசன்ன
    விநாயகரை உளத்துள் வைப்பாம்'
- என்பது விநாயக புராணம்.

மேலும், இயற்கையாக யானைகட்கு இரு தந்தம். ஓங்கார யானைக்கு ஒரு கொம்பு. இதனால் 'ப்ரஸன்ன வதனம்' என்பது, வேழ முகமேயென்றும் நிச்சயிப்பர் மேலோர். இப்பெருமானே தியானத்திற்கு உரியவர் ஆதலின், 'ப்ரஸன்ன வதனம் த்யாயேத்' என்று சொல்கிறது சுருதி.

வித்தக ஞானத் தொந்தியும், தாக்கற நிற்கும் தனியாண்மையும் தெய்வத் தந்தமும் கொண்ட திருமுகத்தில், என்றும் மங்களன் என்பதற்கு அறிகுறியான விமல திலகமும் விளங்குகின்றது. பார்த்த கண் வாங்காமல் பார்த்துப் பூரிக்கும் பாட்டியின் திருவாய் பாடுகின்றது கேளுங்கள்!

5. பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
6. வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

பதவுரை:
பேழை வயிறும் - பெட்டி (அல்லது கூடை) போன்ற திருவயிறும்,
பெரும் பாரக்கோடும் - மிக்க கனம் தங்கிய (திருமுகத்தில் உள்ள) ஒற்றைத் தந்தமும்,
வேழ முகமும் - யானை முகமும்,
விளங்கு சிந்தூரமும் - (அத்திருமுகத்தில்) ஒளிர்கின்ற செந்நிறப் பொட்டும் (என்றவாறு).

அடியும் இடையும் காட்டிய அமலன், வயிறும் தந்தமும் காட்டிய வரதன், முகமும் திலகமும் காட்டிய முதல்வன், தயவு மிகுந்து மற்றைய அங்கங்களையும் தரிசனம் செய்யத் தருகின்றான்; இவைகளை நினைக்கும்போதே நம் மனம் நெகிழ்கிறது அல்லவா!

ஐந்தொழில் செய்யும் ஐங்கரம்

முப்பத்தாறு கருவிகளுடன் சாரும் ஆன்மா, உடல் போகங்களை அறிவது சாக்கிர சிருட்டி.

சாக்கிரத்தில் நுகர்ந்த வாசனையைக் கனவினும் கண்டு நிற்பது கனவுக் காப்பு.

கனவுபோல் சிறிது நிழலெனத் தோன்றி மறைவது சுழுத்தி சங்காரம்.

பிராணவாயு இயக்கம் இல்லாமல் ஒன்றும் தோன்றாது நிற்பது துரிய திரோபவம்.

கருவிகள் ஒன்றும் இன்றி, மல இருள் கெட, மாயையில் உடல் கரணம் முதலிய உதவல்; இருவினை ஒப்பு வருவித்தல்; குருமுகம் காட்டி அருளல் முதலிய துரியாதீத அநுக்ரகம்.

இங்ஙனம் அவத்தை நிலையில் தொழில் ஐந்திருக்கின்றன. இவைகளை ஊன்றிப் படித்தால் உள்ளம் உருகும். ஓட்டத்தில் ஓதினால் ஒன்றுமே விளங்குவதில்லை.

உடல் தோன்றி நின்று அழிவது - படைத்தல் காத்தல் அழித்தல்.
உயிருள் மயக்கமும் தெளிவும் வருவன - மறைப்பு; அருளல்.

இங்ஙனம் உடலில் மூன்றும், உயிருள் இரண்டுமாக வரும் ஐந்தொழிலுமுள.

பொறிகளால் ஆன்மா தொடர்பு கொள்ளல் - படைப்பு
அதனால் அறிவனவற்றை அனுபவித்தல் - காப்பு
அதன் மயமாய் அழுந்தல் - அழிப்பு
அதனின் இன்பமயமாதல் - மறைப்பு
அதனிலிருந்து தெளிவு பிறத்தல் - அருளல்.

இங்ஙனம் பொறிகள் தோறும் வரும் ஐந்தொழிலும் உண்டு.

மனத்தால் ஒரு பொருளை எண்ணல் - படைப்பு
அப்பொருளில் வேட்கை கொள்ளல் - காப்பு
அது என்று கைவரும் என்று திகைத்தல் - அழிப்பு
அப்பொருளின் மேல் மயங்கி நிற்றல் - மறைப்பு
அதைத் தெரிந்து கொள்ளல் - அருள்.

இங்ஙனம் கரணநிலையில் வினை ஐந்தொழில்களும் நடைபெறுகின்றன.

முத்தியில் அருள் வடிவாதல் - படைப்பு
ஆனந்தப் பேறடைதல் - காப்பு
அதனின் அதீதப் படுதல் - சங்காரம்
காண்பான், காட்சி, காணப்படுபொருள் முதலிய மூன்றும் தோன்றாமை - மறைப்பு
இவை நான்கும் எக்காலமும் விளங்கல் - அநுக்ரகம்.

இங்ஙனம் எல்லாம், ஒழிவிலொடுக்க நூல், ஐந்தொழில்களை விவரிக்கின்றது. ஆனந்தமான அருள் மிகுந்து எந்த ஐந்தொழிலையும் செய்பவர் எம் ஹேரம்பர்.

கணபதியின் எழுத்தாணி இருக்கும் திருக்கரம், பயன் விளைவிக்கும் படைப்பைச் செய்கிறது.

கொழுக்கட்டை ஏந்திய திருக்கரம், காப்புக் கருமம் காண்கிறது.

அங்குசக் கரம், அழித்தல் தொழிலை ஆற்றுகின்றது.
பாசத் திருக்கரம் மறைத்தலை விளைவிக்கின்றது.

அமுத கலசத் திருக்கரம், அருளல் செயலைச் செய்கிறது. நினைத்தாலே நெஞ்சம் நெகிழ்கிறதே!

இவைகளால், சிவத்தின் வேறல்லர் சிவசுதர் என்பது வெளிப்படையாக விளங்குகின்றது அல்லவா!

கயமுகனைச் சாய்க்க ஒடித்த தந்தத்தை, எழுத்தாணி என்பது மரபு. அது கொண்டே மேருவில் பாரதம் எழுதினாராம் ஹேரம்பர்.

முழு உலகும் அழிய ஒரு காலம் வரும்; அழிந்த உலகை ஆக்க, முன்கூட்டி உலகப் படத்தை எழுதி வைக்கவும் உதவுகின்றது அவ் எழுத்தாணி.

மீட்டும் ஒரு கயமுகன் தோன்றி, இமயவர்க்கு இடுக்கண் விளைவிக்காதபடி, அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது அக்கொம்பு என்றெல்லாம் புகல்கின்றன புராணங்கள். மேலும்,

'ஏர் கொண்ட தன்னைத் தளைப்பவரும் ஊருநரும் இலரென்பது உலகு தேறற்(கு) எடுத்தவெம் பாசமோ(டு) அங்குசம் தன்கரத் தேந்திமத தாரை சிதறி ... பகிரண்ட முற்றும் புகுந்துலாய்க் கலைசையிற் பதியுமோர் களிறு'
- எனும் விநாயகர் பிள்ளைத்தமிழும்,
    'பண்ணியம் ஏந்து கரம் தனக்காக்கிப்
    பால்நிலா மருப்பமர் திருக்கை
    விண்ணவர்க்(கு) ஆக்கி, அரதன கலச
    வியன்கரம் தந்தை தாய்க்(கு) ஆக்கிக்
    கண்ணில் ஆணவவெம் கரிபிணித்(து) அடக்கிக்
    கரிசினேற்(கு) இரு கையும் ஆக்கும்
    அண்ணல் நல் தணிகை வரைவளர் ஆபத்
    சகாயனை அகம்தழீஇக் களிப்பாம்'
- எனும் தணிகைப் புராணமும் இங்கு நம் நினைவில் நிழலிடுகின்றன அல்லவா!

அங்குச பாசம்

அநாதி நித்திய ஆணவத்தின் சார்பால், அல்லல் அடைகின்றது ஆன்மா. கலங்க வைக்கும் இந்தக் கண்ணற்ற ஆணவத்தை, மதகரியென்று உருவகிப்பது மரபு. அது தானேயும் அகலாது; விலக்கும் சூழ்நிலையும் விளங்குவது இல்லை. என்ன வேதனை! கண்ணீர் விடுவதுதான் கண்ட பலன்.

'மூலமுதலே! அபயம்! அபயம்!' என்று முடிவில் ஆன்மா முறையிடும். அந்நிலையில் விரைந்து உயிர்க்கு உதவ, வெளிப்படுகின்றார் வேழமுகர்; ஆணவ யானையை அங்குசத்தால் அடக்கி, பாசத்தால் அதைப் பிணித்து, வித்தக உயிர்கட்கு விடுதலை தருகிறார் விமல விநாயகர். இது பிண்ட நுட்பம்.

காந்தக் கதை

எக்கருவியாலும் இறவா வரம் பெற்ற யானைமுக அவுணன் ஒருவன் இருந்தான். உள்ளத் தூயரை அடக்கி ஒடுக்குவது அவன் தொழில். இதனால், தாங்க இயலாமல் வானவர் தடுமாறினர். முதல்வன் திருமுன் முறையிட்டனர். வேழமுகர் வெளிப்பட்டார். திருமுகத் தந்தம் இரண்டனுள் ஒன்றை ஒடித்தார். அது கொண்டு அவனை அடக்கினார். மேலும் அவனைத் தன் அடிப்படுத்தினார். அவனால் விலங்கிடப் பட்டிருந்த விண்ணவரும் விடுதலை பெற்றனர் என்பது அண்ட வரலாறு.

'உகத்தா னவன்றன் உடலம் பிளந்த ஒரு கொம்பனே' என்பது விநாயகர் இரட்டைமணி மாலை.
யோக காலத்தில் உள்முக நாதம் உண்டாகும். அதனால் ஆணவச் செயல் விரிவுகள் எல்லாம் அடங்கும். ஊன்றியிதனை மேலோர் உணர்ந்துளர். ஆங்காரம் எல்லாம் ஓங்காரத்துள் ஒடுங்கும்; இது கணபதி உபாசகர் கண்ட பழமொழி. இவ்வளவு விரிவுகளை உள்ளடக்கிக் குறிப்புத் தோன்றக் கூறுகின்ற முறை கோடி பெறும். கேளுங்கள்!

7. அஞ்சு கரமும் அங்குச பாசமும்
பதவுரை:
அஞ்சு கரமும் - ஐந்து திருக்கைகளும்,
அங்குச பாசமும் - (அவைகளுள் இரு கரங்களின் இருக்கும்) அங்குசம், பாசம் எனும் இரு கருவிகளும் (என்றவாறு).

அங்குசம் ஒரு கரத்தில்; பாசம் மற்றொரு கரத்தில் என்று வெளிப்படையாக விளம்பியவர், ஒரு கரத்தில் மோதகம், ஒரு கரத்தில் எழுத்தாணி, துதிக்கையில் அமுத கலசம் என்பவைகளைக் கூறாதே குறிப்பாக உய்த்துணர வைக்கின்றார்.

நீலமேனி

மின்னுகின்றது மேனி. கண்கட்குக் குளிர்ச்சி தரும் நீலநிறம், காண்பவர் மனத்தைக் கவரும். நிமல கணபதியின் நீலநிறம் வெம்மைப் பிறவியை விலக்கும்.

'த்வம் சிந்மய:'
'த்வம்ஜ்ஞான மய:'

- என்றெல்லாம் வரத கணபதியைச் சுருதி வந்திக்கின்றது. நீலமேனியில் நீறணிந்து, வெள்ளை வாரணர் எனப் பெறுகிறார் விநாயகர். அவர்க்குச் சசிவர்ணர் என்றொரு பெயர் மந்திர சாத்திரத்தில் உளது. சசம் - முயல்; சசி - முயல் களங்கம்; சசிவர்ணர் - முயற்களங்கம் கொண்ட சந்திர நிறத்தர் எனவாம். சந்திரனுடைய இயற்கை நிறம் வெண்மை; காட்சி நிறம் கருமை; இந்த இரு நிறக் கலப்பே சசிவர்ணம்.
    'முகத்தால் கரியனென்றாலும் தனியே முயன்றவர்க்கு
    மிகத்தான் வெளியன் என்றே மெய்ம்மை யுன்னும் விரும்படியார்'
- எனும் நம்பியாண்டார் நம்பிகள், இச்செய்தியை எவ்வளவு உணர்ந்து ஓதுகின்றார்!
    கிரேதா யுகத்தில் பத்து திருக்கரம், சோதி மேனி, சிங்க வாகனம்;
    திரேதா யுகத்தில் ஆறு திருக்கரம், வெண்ணிற மேனி, மயில் வாகனம்;
    துவாபர யுகத்தில் நான்கு திருக்கரம், செக்கர் மேனி, பெருச்சாளி வாகனம்;
    கலி யுகத்தில் இரண்டு திருக்கரம், நீலமேனி, குதிரை வாகனம்
என்று விநாயக புராண லீலா காண்ட மயூரேசர் திருவவதாரப் படலம் குறிப்பிடுவதும் இங்குக் கருதத் தகும். இவ்வளவும் நினைவில் அரும்பப் பின்வருகின்றது ஔவையாரின் ஒரு வரி.

8. நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
பதவுரை:
நெஞ்சிற் குடிகொண்ட - (அடியர்) உள்ளத்தில் (எப்பொழுதும்) தங்கியிருக்கின்ற
நீல மேனியும் - நீலநிறத் திருமேனியும் (என்றவாறு).

கருணைக் கணபதியின் அருளான அங்கங்களை, அன்பொடு மேலும் காண்கின்றார் அம்மையார்.

நான்ற வாய்

பக்குவிகட்குப் பயன் விளைய, அந்தரங்க மந்திரங்களை நுட்பமாக உயிர்க்கும் திருவாய், கீழ்நோக்கித் தொங்கித் தோன்றுகின்றது. இதனைத் தெய்வ யோகிகள் தெளிந்து உணர்கின்றனர்.

மற்று, வேறு ஒரு வகையில் அத்திருவாய், உயிர்களின் கன்மத்திற்குத் தக்க கட்டளையை விறுவிறு என்று வெளிப்படுத்திக் கொண்டே யிருக்கிறது. அரிய நுண்ணிய கன்ம தேவதைகள், சிரமேற்றுக் கட்டளையைச் செயல் செய்கின்றன. யானை முகத்திற்கு ஏற்பத் தொங்கும் திருவாய், இங்ஙனம் அரிய பல செயல்களை ஆற்றுகின்றது.
    'அலப்படை யனைய தூங்கு வாய் நெடும் கை
    அலை செவி வாரணம்'
- என்று விநாயக புராணம் கூர்த்த உணர்வொடு இதனைக் குறிப்பிடுகின்றது; இவைகளை எல்லாம் நினைத்ததும் உள்ளம் எவர்க்கும் உருகும்; அதனை அத்தன் திருவுளமும் அறியும்.

நாற்புயம்

ஏழாவது அடியிற் கூறியபடி ஐந்து திருக்கரங்களைத் தரிசனம் செய்த அன்னைக்கு, கம்பீரமான நான்கு திருத்தோள்களும் காட்சியாகின்றன.

என்ன இது? ஐந்து கைகட்கு நான்கு தோள்களா? ஆம். வியாபகத்துக்குள் அடங்குவது வியாப்பியம். அவ்வகையில் தோளில் கை வியாப்பியம். துதிக்கையுடன் சேர்த்து ஐங்கரன் என்போர் அறவோர். தும்பிக்கை, துதிக்கை என்பதன்றி, தும்பித்தோள், துதித்தோள் என்ற வழக்காறும் இல்லை.

வாழும் அந்த நாலிரு புயங்கட்கும் வணக்கம் செலுத்துகின்றார். நாலிரு புயமா! ஆம். நான்காகிய பெரிய தோள்கள் என்பதே இதன் பொருள். ஏன், பாட்டி குறித்த நாலிரு புயம் என்பதற்கு, எட்டுத் திருத்தோள்கள் என்று பொருள் கொண்டால் ஆகாதோ எனில், அப்படியும் ஒரு திருமேனி உண்டு. எனினும், ஐந்துகரம் என்பதை உணர்ந்து, இப்பொருள் கொள்வதே தகுவது. 'சுக்லாம் பரதர' சுலோகமும் சதுர்ப்புஜமே கூறுகின்றது. தியானத்திற்கு உரியது நால்தோளும், ஐங்கரமும் ஆன கணபதியின் திருவுருவமே என்பது ஆன்றோர் வழக்கு.

திருக்கண்கள்

அப்ராக்ருத சூர்ய, அப்ராக்ருத சந்திர, அப்ராக்ருத அக்கினி மூன்றும் கணபதியினுடைய திருக்கண்கள். அவை பிண்டத்துள். உயர்ந்த இம்மூன்று கண்களாலும், பிராக்ருத (அண்டத்தின்) பரிதி மதி அக்கினிகள் உய்தி பெறுகின்றன; ஐம்பூத நுட்பங்கள் உயிர்க்கின்றன; கணபதியின் கண்ணருளால், இந்த எட்டுப் பொருள்களும் உஜ்ஜீவிக்கின்றன என்று முழங்குகின்றது முதுமறை. அந்த எட்டின் மயம் இந்த உலகம்.
    'எட்டுக் கொண்டார் தம்மைத் தொட்டுக் கொண்டே நின்றார்
    விட்டார் உலகம் என்று உந்தீபற
    வீடே வீடாகும் என்று உந்தீபற'
- என்பது அருள்நூல் முடிவு. கனிந்த உணர்வொடு இவைகளைக் காண்கின்றார் பிராட்டியார்.

மும்மதம்

யானைக்குக் கன்னமதம், கபோலமதம், பீஜமதம் என மும்மதங்கள் உண்டு. கணபதிக்கு யானை உறுப்புக் கழுத்துக்கு மேலிருத்தலின், மும்மதத்தன் எனல் பொருந்துமோ என வீணாகப் பலகாலம் விவாதித்து, 'மும்மதம் என்பது யானைக்கு அடைமொழி' என்று முடிவு கட்டுவர் சிலர்.

ஒற்றைக் கொம்பு முதலியன எல்லாம் கணபதிக்கே அடையாக, மும்மதம் மட்டும் யானைக்கு அடையாதல் பொருந்துமோ எனில், அதற்கு இதயபூர்வமான விடை பிறவாது.
'மும்மதம் என்பன இச்சா ஞானக் கிரியைகளின் உருவகம்' என்றார் சிவாக்ர யோகிகள். அங்ஙனமேல், முத்தர் போற்றும் முருகனையும் மும்மதன் எனல் வேண்டும்; அங்ஙனம் கூறும் வழக்காறு இல்லை.

'ஐந்தெழுத்தின் பேதமான நாலெழுத்தும், மூன்றெழுத்தும், இரண்டெழுத்தும், ஓரெழுத்தும், காரண பஞ்சாக்கரம், மகா காரண பஞ்சாக்கரம், முக்தி பஞ்சாக்கரம் என வழங்குவதுபோல், மும்மதத்தின் பேதமான ஒரு மதமும் இரு மதமும், மும்மதம் எனப் பெறுகிறது' என்கிறார் மாதவச் சிவஞான யோகிகள்.

இங்ஙனம் மும்மதம் குறித்துத் தம் மதம் தோன்றப் பலவகையாக அறிவுறுத்தியுளர் ஆன்றோர்.

இது குறித்தொரு வரலாறு

வாழ வைத்தவர் வீழ்க; அப்பொழுதான் என் பெருமை தலையெடுக்கும் என்று எண்ணும் ஏழை மதியர் சிலர், அன்னாளினும் இருந்தனர். அவர்களுள் ஒருவன் சலந்தரன். பேறளித்த சிவத்தின் வீறழிப்பேன் என்று விரைந்தான். நற்கயிலையை நண்ணினான். உத்தம வேதியர் உருவில், அவன் முன் விமல சிவனார் வெளியானார்.

'எங்கு செல்கிறாய் அப்பா!' என்றார் இறைவர். பரத்தின் தரத்தை அழிக்கப் பறந்து வருகிறேன் என்றான் பதகன். நகைத்து நோக்கினர் நம்பர்.

'அப்படியா! ஓ! அதற்கு உரிய ஆற்றல் உன்னிடம் உளதா? அதை நான் முதலில் அறியக் காட்டு' என்று அறிவித்தபடியே, வலது திருவடிப் பெருவிரலால் நிலத்தில் வட்டமாகக் கோடு கீறினார் நிமலர்.

'இவ்வட்டத்தைக் கட்டமின்றி எடுத்து, உன் தலைமேல் வைத்துக் கொள்ள வல்லையேல், வேதம் போற்றும் உயர் பரத்தின் வீறழிக்க உரியவன்தான் நீ என்று உணர்ந்து கொள்வம் யாம்' என்று, உள்நகை செய்து உரைத்து நின்றார் உமாபதி.

தோள் ஆற்றல் மிக்க சலந்தரன், அரும் கடின நிலத்தை அகழ்ந்தான். வாவியெடுத்த வட்டத்தைத் தன் தலைமேல் வைத்தான். அவ்வளவில் கிறுகிறுவென்று சுழன்றது அந்த ஆழி; அவ்வளவுதானா! இமைக்கும் முன், தருக்குடைய சலந்தரன் தலையையும் தடிந்தது. விரிந்து பெருகும் என்று எதிர்பார்த்த அவன் வாழ்வு, அன்றோடு வீழ்ந்தது.

சலந்தரன் உடல் குருதி, பொறுக்க முடியாத துர்நாற்றமாய் உலகைப் போர்த்தது. அதனால் தாங்க முடியாமல் தடுமாறிய அகில உலகமும், ஐங்கரக் கணபதியை ஆராதித்தது. உடனே பிரசந்நராயினர் பிரசந்நவதனர். எமது ஆனைமுகப் பெருமானின் ஊற்றெடுத்த அருள்மதம், எங்கும் வியாபித்து, அப் பொல்லாத நாற்றத்தைப் போக்கியது. உய்ந்தது அதன்மூலம் உலகம். சலந்தரனைத் தடிந்த சக்கரம், அரவணையான் திருக்கரத்தில் அமர்ந்தது; ஆழியின் களங்கத்தையும் அகற்றினன் நம் அத்தன்.
    'விழிமலர்ப் பூசனை யுஞற்றித் திருநெடுமால்
    பெறும்ஆழி மீள வாங்கி
    வழியொழுகாச் சலந்தரன் மெய்க் குருதிபடி
    முடைநாற்றம் மாற்றும் ஆற்றால்
    பொழிமதநீர் விரையேற்றி விகடநடப்
    பூசைகொண்டு புதிதா நல்கிப்
    பழிதபுதன் தாதையினும் புகழ் படைத்த
    மதமாவைப் பணிதல் செய்வாம்'
- என இவ்வரலாற்றைக் கருத்தைக் கனிவிக்கும் நடையில் கூறுகின்றது காஞ்சிப் புராணம். இது அண்ட வரலாறு.

ஹேரம்பர் அருளாடல், முழுதும் அறிதற்கு உரியவர்கள் யார்?

'அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணமருள'
முழுயானை உருவாக வந்த மும்மத முதல்வனை,
    'முருகோட்டம் தரப்பாயும் மும்மதமும்
    ஊற்றெடுப்ப முரிவில் கோட்டும்
    ஒருகோட்டு மழகளிற்றை இருகோட்டு
    மழகளிறா உலவக் காட்டிப்
    பருகோட்டு நறைவேட்டுப் பைங்கோட்டுத்
    தினைப்புனத்துப் பரண்மேற் கொண்ட
    குருகோட்டும் பெடைமணந்த குமரகோட்டத்
    தடிகள் குலத்தாள் போற்றி'
- எனச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றார் சிவஞான யோகிகள்.

'சதகோடி விததாள சதிபாய முகபாகை குறிபாய்கடாம்
மதகோடி உலகேழும் மணநாற வருயானை வலிபாடுவாம்'
- என ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப் பரணியும் வரத கணபதியின் மதமணத்தை வாய் மலர்கின்றது.
    'உள்ளமெனும் கூடத்தில் ஊக்கம் எனும்
    தறிநிறுவி, உறுதியாகத்
    தள்ளரிய அன்பென்னும் தொடர்பூட்டி
    இடைப்படுத்தித் தறுகண் பாசக்
    கள்ளவினை பசுபோதக் கவளமிடக்
    களித்துண்டு, கருணை யென்னும்
    வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை
    நினைந்து வரு வினைகள் தீர்ப்பாம்'
- எனும் திருவிளையாடல் புராணம், அறக்கருணை, மறக்கருணைகளை இருமதமா உடையவன் எம்பிரான் எனலை ஆர்ந்த பொருளொடு அறிவிக்கின்றது.

அபரஞான, பரஞானங்களே இரு மதம்; அவைகளை, இலக்கணையால் மும்மதம் என்றல் முறையென்று முடிவுகட்டி உரைப்பாரும் உளர்.

மத நீரைக் குறித்தா இவ்வளவு கூற வேண்டும்! ஆம். பாவ நாற்றத்தைப் பாழ்படுத்தி, அருள்மணம் நாறும் அப்பன் மதநீர் என்று மேலுரைத்த பாக்களையெல்லாம் ஊன்றி உணர்தற்கும் புண்ணியம் வேண்டும். மேலும் இம்மணநலம், தரிசன ஆரம்பத்திலேயே கணபதி உபாசகர் காண்தகு அநுபவம்; இதற்கு அயலாய்ப் பிறிது பேசுவோர் மொழிகள், அவர்கட்குப் புறம். இவ்வளவையும் எண்ணியெண்ணி, நெஞ்சம் இளகிப் பாடும் ஔவையின் இரண்டடிகளைப் படித்துப் பாருங்கள்! அப்போதுதான் தெரியும் அந்த ஆனந்தம்!

9. நான்ற வாயும் நாலிரு புயமும்
10. மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

பதவுரை:
நான்ற வாயும் - தொங்கும் திருவாயும்,
நால் இருபுயமும் - நான்காகிய பெரிய திருத்தோள்களும்,
மூன்று கண்ணும் - மூன்று திருக்கண்களும்,
மும்மதச் சுவடும் - மும்மதம் பொழிதலால் உண்டான தழும்புகளும் (என்றவாறு).

அருள் மதநீர் ஒழுகும் அடையாளம், கணபதி திருமுகத்தில் காணப் படுகிறது எனும் பாட்டியின் பாட்டு, நயமுடன் உணரும் நம் மனத்தில் அன்பின் படபடப்பை அளிக்கின்றது அல்லவா!

இரண்டு செவி

எவர்க்கும் இருக்கின்றது இருசெவி; இருந்து என்ன பயன்? பொருளற்ற ஓசையிலேயே உறவு பூண்டு, புனித வாழ்நாள் கழிந்து போவாரும் உண்டு.

இசையெனும் பெயரால் ஒலியிற் பலநாள் உறவு கொண்டு, நாணற்கு உரிய வசைவாழ்வை அடைந்து அந்தோ, நலிவாரும் உண்டு.

இவைகட்கு அயலாய்ப் பயனான அருள்நாதம் கேட்கும் செவியினர் பரிபாகிகள். இந்த மூன்றாவது இனத்தைச் சேர்ந்தவர் நம் மூதாட்டியார். இவர்கட்குத்தான், எம்மானுடைய அருளான கரசரணாதி அவயங்களின் கருணைச் செயல்கள் காட்சியாகும்.

அசைத்து அசைத்து, அப்ராக்ருத வாயுவை அகிலம் அனைத்தும் பரப்பி, பிராக்ருத வாயுவை உயிர்ப்பித்து, ஆன்ம முறையீட்டை யேற்கும் அற்புதத் திருச்செவிகள் இரண்டு, இறைவன் திருவுருவில் இருக்கின்றன. இவ்வளவுதானா! இதோ பாருங்கள் அத்திருச்செவிகள் செய்யும் திருவருளை!

கரையேற விடும் கருணை

மனம் போன போக்கில் சென்றான் ஒருவன்; கண்ணையிழந்தான். கடலில் விழுந்தான். கரை தெரியவில்லை. கலங்குகிறான். நீருள் போகிறான். மேலே வருகிறான்.
திக்கு முக்காடித் திணறுகிறான். அபாயச் சூழ்நிலை. உடல் துடிக்கிறது. உள்ளம் பதைக்கிறது. அலறுகிறான். அழுகிறான். எதிர்பாராத ஒரு பருத்த மரம், அலைமேல் மிதந்து, எதிரே வருகிறது. காண்கிறான். நம்பிக்கை உதிக்கிறது. ஒரே தாவாகத் தாவி, அதைத் தழுவிக் கொள்கிறான். விட்டால் விபரீதம். இனி யாதாயினும் ஆக என்று அதையே இறுகப் பற்றியிருக்கின்றான்.

எதிர்பாராது எழுந்தது புயல். அலைவு அதிகரிக்கும் அது கண்டு அஞ்சினான். பயங்கரமாக வீசிய புயல் காற்று, அவனை ஒரே அடியாகக் கரையில் போய் வீழச் செய்தது. அந்த அதிர்ச்சியில், தன்னை மறந்தான். சிறிது பொறுத்து விழித்தான். என்ன வியப்பு! தான் கரையில் இருப்பதை அறிந்தான். மகிழ்ந்தது மனம். கட்டையை வாழ்த்தினான்; கரையில் ஒதுக்கிய காற்றையும் வாழ்த்தினான். ஆன்மாவின் வரலாறும், ஏறக்குறைய இதைப் போலவே இருக்கிறது பாருங்கள்!

இருண்ட அறிவால், ஒளிமயமான உணர்வை இழந்தது; அதன் பயனாக, ஆழங்காண முடியாத, முன்னும் பின்னும் தள்ளித் துன்புறுத்தும் வினை அலைகள் நிறைந்த, அநியாயப் பிறவிக்கடலில் வீழ்ந்தது ஆன்மா.

அகங்கார மமகாரங்கள், மாயை, காமக் குரோத லோப மோக மதமாற்சரியங்கள், பின்னி அறிவைப் பிணைத்தன. இவைகளால், கடுமையாக மோதியது கவலைப் புயல். வாழ்க்கையாம் வாழ்க்கை! கண்ணீர் வெள்ளத்தில் மிதந்ததுதான் கண்ட பலன். அமைதியை விரும்பி, எப்புறம் நோக்கினாலும் இடர்ப்பாடு; கற்றவர் உறவில் காய்ச்சல்; மற்றவர் உறவில் மனவேதனை. இனிய அமைதிக்கு இவ்வுலகில் இடமேயில்லை. அவதி பல அடைந்து, பொறுக்க முடியாத வேதனையில், கணபதி திருவடிகளைக் கருதுகிறது.

நினைக்க நினைக்க, நினைவில் நிஷ்காமியம் நிலைக்கிறது. அந்நிலையிலிருந்து, பரம கணபதியைப் பாடுகிறது. உணர்வு நெகிழ்ந்து உள்ளம் உருகிப் பாடும் பாக்களை, பாக்களில் உள்ள முறையீட்டை, கேட்டுக் கேட்டுப் பரம கணபதியின் திருவுளம் மகிழ்கிறது. அருளார்வ அறிகுறியாக அமலன் திருச்செவிகள் அசைகின்றன. அந்த அசைவிலிருந்து எழும் பெருங்காற்று, எங்கும் பரவி, பிறவிக்கடலில் தத்தளிக்கும் ஆன்மாவை, வாரிக் கரையில் சேர வீசி விடுகிறது. அந்நிலையில், முத்திக்கரை சேர்ந்தேன் என்று தன்னை மறந்து தனியின்பங் காண்கிறது அந்த ஆன்மா. இந்த வரலாற்றை,
    'மாற்றரிய தொல்பிறவி மறிகடலின் இடைப்பட்டுப்
    போற்றுறுதன் குரைகழல்தாள் புணைபற்றிக் கிடந்தோரைச்
    சாற்றரிய தனிமுத்தித் தடங்கரையின் மிசையுய்ப்பக்
    காற்றெறியும் தழைசெவிய கடாக்களிற்றை வணங்குவாம்'
- என்று கனிவொடு பாடுகின்றது காசிகாண்டம்.

தண்மை தந்த தன்மை

முதிர்ந்த பிறவிக்காடு முறிந்தது; சிவஞானத்தீ சிறந்து ஒளிர்ந்தது; அன்பால் உள்ளம் குழைகின்றார் அடியார்கள். பிறவி வெம்மை அவர்களிலிருந்து பெயர்ந்து ஒழிய, குளுகுளு என்று குளிர்ந்து வருகிறது தென்றல். தெய்வக் கணபதியின் செவியசைவிலிருந்து வருகிறது இத்தென்றல் என்பதை ஊன்றியுணர்கின்றார் மேலோர். முறிய வைத்தபோது உக்ரம்; ஒளிர வைத்தபோது சித்கனல்; தென்றலான போது தெய்வத் தட்பம். இம்மூன்று நிலையும், திருச்செவியசைவின் தெய்விக அநுபவம் என்பதை உணர்ந்து மகிழ்கிறது அவர்கள் உள்ளம்.
    'பழையவல் வினையால் உண்டாம் பவவனம் முறிய, அன்பர்
    உழைபுகும் சிவஞானாங்கி ஒளிபெற, உளத்தில் அன்பால்
    குழையும் மெய் யடியார் துன்பக் கோடைபோய்க் குளிர, என்றும்
    தழைசெவித் தென்றல் வீசும் தந்தியைச் சிந்தை செய்வாம்'
- எனும் திருப்புனவாயில் தலபுராணம் இங்கு எண்ணற்குரியது. ஊன்றி இவைகளை உணர்வது நலம்.

இலங்கு பொன்முடி

தேவகணம், மாநுடகணம், பூதகணம், விலங்குகணம் முதலிய எக்கணங்கட்கும் முதல்வர் இவர் எனலை அறிவுறுத்துகின்றது திருமுடி. தகாதவர்க்கு விக்கினங்களைத் தருகிறார்; தக்கவர்க்கு விக்கினங்களை விலக்குகிறார் எனப் பொருளாகும் விக்நேஸ்வர நாமமும், பெருந்தலைவர், வழிகாட்டுபவர் எனப் பொருள் தரும் விநாயக நாமமும் கொண்டவர் இந்த விமலர். அதற்கு ஏற்ப,
    'கைக்கும் பிணியொடு காலன் தலைப்படும் ஏல்வையினில்
    எய்க்கும் கவலைக்கு இடைந்தடைந்தேன்; வெம்மை நாவளைக்கும்
    பைக்கும் அரவரையான் தந்த பாய்மத யானை, பத்துத்
    திக்கும் பணி நுதல்கண் திருவாளன் திருவடியே!'

    ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
    விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே
    விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
    கண்ணிற் பணிமின் கனிந்து'

    'வேட்கை வினைமுடித்து மெய்யடியார்க் கின்பம்செய்(து)
    ஆட்கொண் டருளும் அரன் சேயை - வாட்கதிர்கொள்
    காந்தார மார்பில் கமழ்தார் கணபதியை
    வேந்தா உடைத்தமரர் விண்'
- எனப்பாடும் கபிலர் பாக்களும்,

'மணி பூத்த மருமத்து நெடுமால் முதல் புலவர் வான்பதம் வேட்டவர்க்கு,
வழங்குவோனும் தனது பதமிரந்தோர்க்குதவு வள்ளலும் தானே யெனும்,
தணி பூத்த தன் தந்தை போல் பிற குறித்ததூஉம் தற்குறித்து என்ற
தொழிலும், தானே கடைக் கூட்டவல்ல செங்கழுநீர்த் தடங்களிற்றை
யஞ்சலிப்பாம்'
- எனும் மாதவச் சிவஞான யோகிகள் காட்டும் குறிப்பும், கணபதி ஒருவரே
முடிபுனைதற்கு உரிய முதல்வர் என்பதை விளக்குகின்றன அல்லவா!

முந்நூல்

திருமால் பரமாக மூன்றுவிதத்தில் முன்னி, ஸ்ரீருத்ரபரமாக ஆறுவிதத்தில் எண்ணி, பிரம்ம, ஆதித்ய, அக்கினி பரங்களாக ஓரொரு தரம் உணர்ந்து, நலமுறும் அவர் தம் தொடர்பை
    'ஓம்பூர் புவஸ்ஸ¥வ: தத்ஸவிதுர் வரேண்யம்
    பர்கோ தேவஸ்ய தீமஹி
    தியோயோந: ப்ரசோதயாத்'
- என்பது காயத்ரி மந்திரம்.

ய: - எவன்
ந - எமது
தீய - சிந்தனைகளை
ப்ரசோத யாத் - அருள் ஒளிபெற ஊக்குகின்றானோ (அவனே)
வரேண்யம் - மிகச் சிறந்த
சவிது - சிவ சூரியன்;
ஓம் - (அவனே) ஓங்காரம்;
பூ: - உடல் உலகம்
புவ - உயிர் உலகம்
ஸ¥வ: - மன உலகம் (முதலியவைகளில் விளங்குபவன்) ஆன
தத் - அந்த
தேவஸ்ய - இறைவனுடைய
பர்க - அருள் ஆக்கத்தை
தீமஹி - (என்றும்) தியானம் செய்வம்.

இங்ஙனம் பொருளாகும் இம்மந்திரத்தில், தத் ஸவிது என்பதற்கு, அவரவர் தம்தம் மதம் தோன்றப் பொருள் கூறுவர். பெயரையும் உருவையும் குறித்து எவர்க்கும் கவலை வேண்டுவதில்லை. உள்ளத் தூய்மையுடன் இம்மந்திரத்தை உபாசித்துப் பயன் பெறலே வேண்டப் பெறும். தத் ஸவிது என்பதைக் கணபதி பரமாகக் காண்பர் கணபதி உபாசகர். அதற்கான பயனையும் அடைவர்.

கணபதி சாரூபத்தை அளிக்கின்றது காயத்ரி. காலை மாலைகளில் அன்றி, இவ்வுபதேசம் நடுப்பகலில் செய்வதே என்றும் உள்ள மரபு. திருமணக்காலங்களில் மட்டும், காலக் கணக்கைக் காண்பது இல்லை. காலை பிரமன் சொருபம்; மாலை திருமால் சொருபம்; உச்சிப்பகல் உருத்திர சொருபம் என்று சுருதி உரைக்கும். ஆதலின், நடுப்பகல் உபதேசமே பலவிதத்தும் பாராட்டுப் பெறும். அந்தண்மையாளர் இதனை அறிந்துளர்.

'ஏக தந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்'
- என்று ஏத்தும் அந்த ஏதமிலாத வேதம், கணபதி காயத்ரிப் பொருளை விரித்து
விளம்புகின்றது. இந்த அருமையை எவரும் உணர, முதலில் தாம் உணர்ந்து
பாடுகின்றார், தவம்நிறை அன்பின் தையலார்.

11. இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
12. திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

பதவுரை:
இரண்டு செவியும் - இரு திருச்செவிகளும்,
இலங்கு பொன்முடியும் - (சிரத்தில்) விளங்கும் பொன்னாலாகிய மகுடமும்,
திரண்ட முப்புரி நூல் - மூன்று புரிகளைக் கூட்டி முறுக்கேற்றிய பூணூல்,
திகழ் ஒளி மார்பும் - ஒளி விளங்கும் திருமார்பும் (என்றவாறு).

கணபதியின் திருமேனியில் உள்ள ஒவ்வோர் உறுப்பும், இங்ஙனம் சிறந்த ஒவ்வோர் உபதேசத்தைச் செய்து கொண்டே யிருக்கின்றன. பயனான இப்பகுதிவரை ஊன்றிப் படித்ததும்,
    'வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
    பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
    ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
    யானைமுக னைப்பரவி யஞ்சலிசெய் கிற்பாம்'
    - என உருகி ஓதுகிறது நம் உள்ளம்.

காலமும் இடமும் கடந்த ‘துரிய மெய்ஞ்ஞானம்’

அக்கப்போர்

'எங்கிருந்து வந்தார் கணபதி? வடநாட்டிலிருந்து.’
‘எக்காலத்தில் வந்தார்? சிறுத்தொண்டர் காலத்தில்.'
- இப்படியெல்லாம் வாதப் போரிடுகிறது பகுத்தறிவு.

'சங்க நூல்களில், அவரைப் பற்றிய குறிப்பொன்றும் இல்லை. அதனால், கணபதி
வழிபாடு தமிழக வழிபாடு அன்று' என்றும், 'விலங்கினத்துள், தோற்றத்தால் பெரிய யானையை ஆதிமனிதன் அறிந்தான்; அஞ்சினான். அதை வணங்கி ஓடி ஒளிந்தான்; அன்றுமுதல் எப்படி எப்படியோ மக்கள், தம் பாவனைக்குத் தக்கபடி, அரிய ஓர் உருவில் யானைமுகம் அமைத்து, கனத்த தொந்தியுடன் கணபதியென்று பெயரிட்டு, வாழும் வழி இ·தென்று அறியாமையால் வழிபடலாயினர்' என்றெல்லாம் போகிறது பகுத்தறிவின் போக்கு.

வீட்டில் கணபதி வழிபாடு; கோயிலில் ஆராதனை; நவீன எழுத்துலகில் மட்டும்
பிள்ளையாரை மறுதலிக்கும் போர்; கற்றோரில் சிலரும், இந்த அற்புத உத்தியோகத்தில் ஆர்வம் கொண்டுளர். இல்லாத பகுத்தறிவை இருப்பதாக எண்ணவைக்கும் மலஇருள் வலியை, இது கொண்டும் உணர்கிறது கணபதி உபாசக இதயம். கணபதியின் சொருபச் செய்திதான் யாது? அமைதியொடு இதனையறிதல் நலம்.

உண்மை ஒளி

இது பெரிய உலகம். இதனில், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும்
புலன்களில் உறவு கொள்ளும் ஆன்மா, விழிப்பு நிலையில் விறுவிறுத்து, அதற்கு உரிய வேதனையை அடையும். இந்நிலையை 'ஜாக்ராவஸ்தை' என்பர்.

பருவுலகைவிடப் பெரிதான கனவென்னும் மனவுலகில் அது, தடைப்படலின்றி விரைந்து எங்கும் தாவும்; இதைச் 'சொப்பனாவஸ்தை' என்பர்.

இந்த இரண்டிடமும் சலனநிலை. இந்தச் சலனத்தில் சொற்கட்கு ஆட்சி உண்டு.

ஆழ்ந்த உறக்கம் என்னும் 'சுழுத்தி'யில் சொற்களின் ஆட்சி சோர்வடையும். எனினும் இது ஒரு மறதி நிலை. இதனாலும் பயன் இல்லை.

மனம் பிராணனில் அடங்க, சித்தம் அருள் உணர்வில் ஒன்றி நிற்பது 'துரிய' நிலை. இந்த நான்காம் நிலையில் உயிர் கணபதியை உணரும். வித்தக உணர்வை அங்கு வைத்தவர்கள், இரவு பகல் எனும் கால விகாரம் கடந்தவர்கள்; இன்ப துன்பமாம் மன
விகாரத்தை மாய்த்தவர்கள்; இறப்பு பிறப்பாம் உயிரின் விகாரத்தை ஒழித்தவர்கள். என்ன அருமை!

மேலான அந்த உணர்வில் மெய்ஞ்ஞானம் மேவும்; இது 'துரியாதீத' நிலை. அந்த
இடத்தில் அற்புத அநுபவம் பல வெளியாக, அருள் ஒளி நடுவில் அமர்ந்துளன் நம் ஆனைமுக அத்தன்.

வேண்டுவார் வேண்டுவதை அளிக்கும் வீறுடைய அந்த மூர்த்தியை, கல்மனத்தையும் உருக்கும் கற்பகக் களிறு என்று பெயரிடுகிறார் ஔவைப் பிராட்டியார்.

கல்பகம் - கல்பித்துத் தருவது; அரிய சங்கற்பம் எதையும் அருள்பவர் அவர் என்பது
குறிப்பு. களிறு எனும் பெயர், ஆனந்த ஆண்மையை உடைய யானை எனும் பொருளது. இப்பெருமானை, 'புத்தியி லுறைபவ! கற்பகம் என வினை கடிதேகும்'
என்று பாடுகின்றார், திருப்புகழ் ஓதிய தெய்வ முனிவர். அருணை முனிவர் குறித்த புத்தி, அந்தக்கரணத்தின் ஒன்றன்று; துரிய மெய்ஞ்ஞானத்தையே இங்குப் புத்தி
என்கிறார் அப்பெருந்தகை.
    'நற்பதத்தார் நற்பதமே ஞானமூர்த்தி
    நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற
    சொற்பதத்தார் சொற்பதமும் கடந்து நின்ற
    சொலற்கரிய சூழலாய் இதுவுன் தன்மை!
    நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்
    நிலவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
    கற்பகமே! யானுன்னை விடுவே னல்லேன்!
    கனகமா மணிநிறத்தெங் கடவுளானே!'
- என அப்பர் அருளிய தனித் திருத்தாண்டகம், 'ஞானமூர்த்தி, சொலற்கரிய சூழலாய், கற்பகமே!' என்று விமல அன்புடன் விளித்தல், இங்கு எண்ணத் தகும்.

படைத்தல் முதலிய தொழில் புரியும் பிரமன், மால், உருத்திரன், மகேசன், சதாசிவம் எனும் ஐவரினும் கடந்த துரியசிவத்தின் அபேத அவதாரம் கணபதி என்று காந்தம் கூறும். அப்பெருமானுக்கு அருவம், உருவம், அருவுருவம் என்பன அருட்கோலங்கள். உயரிய இச்செய்திகளை உணர்ந்து,
    'த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்ஹாஸி-த்வம்
    ப்ரஹ்மாத்வம் விஷ்ணுஸ்த்வம் ருத்ரஸ்த்வ மிந்தர:'
- எனும் கணபதி உபநிடதம், இங்குக் கருதத் தகும்.

எனவே, தாய் வயிறு காணாத தருமதுரை நம் கணேசப் பெருமான் என்பதும், எந்நாட்டிற்கும் அநாதி நித்திய தெய்வம் அவர் என்பதும், துரிய நிலத்திலிருந்து அப்பெருமான், உயிர்கள் உய்தி அடைய, மெய்ஞ்ஞானத் திருமேனி தாங்கி அற்புதமாக வெளிப்பட்டு, அன்பர்க்கு அருள்பாலிப்பவர் என்பதும் தோன்ற, பின்வரும் இரண்டு அடிகள், இரத்தினச் சுருக்கமாக, எவ்வளவு அழகாகச் செய்திகளை அறிவிக்கின்றன! பயன் விளைவிக்கும் அவைகளை, அமைதியொடு ஓதிப் பாருங்கள்! என்ன ஆனந்தம்!

13. சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
14. அற்புதம் நின்ற கற்பகக் களிறே

பதவுரை:
சொல் பதம் கடந்த - சொற்களின் அளவிற்கு அப்பால் ஆன,
துரிய மெய்ஞ்ஞான - துரிய நில அருள்ஞான சொருபமாக,
அற்புதம் நின்ற - அற்புதமாக இருக்கின்ற,
கற்பகக் களிறே - கற்பகம் போல் அருள் பாலிக்கும் ஆனந்த ஆண்மையுள யானைமுகப் பெருமானே (என்றவாறு).

துரிய மெய்ஞ்ஞான வடிவன் தந்திமுக எந்தை. அதனாற்றான், திரிகரணமும் ஒருமித்தாலன்றி அப்பரமனைத் தரிசிப்பது ஆவதில்லை. ஞானம் முதிர்ந்த பக்குவிகட்கும், ஒரு சில சமயத்தன்றி அச்சேவை இடையறாது நிகழ்வது இல்லை.

'உணர்ந்தார்க்கு உணர்வரியோன்' எனும் திருக்கோவையாரும், 'ஒருகால் தன்னை உணர்ந்தவர்கட்குப் பின் உணர்தற்குக் கருவியாகிய சித்த விருத்தியும் ஒடுங்குதலால், மீட்டும் உணர்வரியோன்' எனும் அதன் உரையும் இங்கு உணரத் தகும்.

அதனாற்றான், 'கருணைவடிவமே! கணபதியே! நின் சேவை தா!' என்று, இடையிடை மிகுதியும் விழுந்து அழுது தொழுது வேண்டுகின்றார் அம் மேலோர்.

காணும் போது கரிமுகம்; ஊன்றி நோக்கினால் ஞான ஆகாயம். அழுந்தி உணர்ந்தால், பிரணவ ஞானக் கனலே பெருமான் திருவுரு; அதனாற்றான்,
    'களிறு முகத்தவனாய்க் காயஞ் செந்தீயின்
    ஒளிரும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்
    பின்னாரை யூர்ஆரல் ஆரும் பெரும்படுகர்
    மன்னாரை யூரான் மகன்'
-என்று இனிது கூறுகிறது, விநாயகர் இரட்டை மணிமாலை.

'சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புத நின்ற கற்பகக் களிறே'
- எனும் பகுதியைப் படிக்கும் போதே,
'வாதம் கடந்து, பல மாயை கன்ம
வகையும் கடந்து, அவைசெய்
ஏதம் கடந்து பொருளொன்று மின்றி
எழுகின்ற மம்மர் உயிரின்
போதம் கடந்து, துரியம் கடந்த பொருளோயை
யானும் உணர்வேன்!
வேதம் கடந்த திருமேனி கொண்டேன்
விழிகாண முன்னர் வரலால்.'

'குணமொடு குறிபல கொள்கைகொள் ளாயெனில்
அணிமலர் மணமென ஆக்கையின் உயிரெனப்
பணிஉயிர் அறிவெனப் பயிலும்அத் துவிதமாம்
கணபதி நினதியல் காணவல் லார்எவர்?'

- என்று நம் உள்உணர்வு, பார்க்கவ புராணப் பாக்களைக் கொண்டு பரவசம் மிகுந்து பாடுகின்றது அல்லவா!

சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறு, ஆன்மவர்க்கம் தன்னை அறிந்துய்ய, அரிய ஒரு திருவுருவம் கொண்டது.

அத்திருமேனியின் உறுப்புகள் ஒவ்வொன்றினும், எண்ணிறந்த தத்துவங்கள் இருக்கின்றன. அத்திருவுருவின் பாதாதி கேசங்களைப் பன்னிரண்டு அடிகளால் பயபக்தி விநயமொடு பாடிய ஔவையார், அப்பெருமானுக்கு உரிய நிவேதனத்தையும் நிமல சிந்தையுடன் நினைவுறுத்துகின்றார்.


முப்பழம்

போகியாக இருந்து, உயிர்கட்குச் சிவபோகத்தை அருள்பவர் அவரே எனலை அறிவிக்க, முப்பழம் நுகர்பவர் அந்த முதல்வர் என்கிறார். முப்பழம் என்பது, அன்பிற் பழுத்த எவற்றையும் உள்ளடக்கி நிற்கின்றது. கொழுக்கட்டையென்பவை, உலக உருண்டைகள்; அண்டங்களையும், இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனும் மூன்று காலங்களையும் தன்னுள் கொள்பவர் இத்தற்பரர் எனலை, அவை அறிவிக்கின்றன.

மூஷிக வாகனம்

அண்டங்கள் அனைத்தினும் பெரியன், ஆனைமுக அத்தன். பருமையனாக இருப்பது போன்றே, அணுவினும் சிறியன் அந்த அமலன். பானை வயிறும் யானை முகமும் என உளறி வழியாதீர்! வீண் அச்சமும் வேண்டா! சிறிய ஒன்றும் தாங்கும் அத்துணை லேசுடையவன் காண் எம் அப்பன் என்று, ஏசிப்பேசும் வெள்ளை மதியர் நாண மேலும் விளம்புகின்றார் ஔவையார்.

வழிபாட்டு வளர்ச்சிக்குத் தக்க அளவாக, ஆன்ம இதயத்தில் அருள் விளக்கம் பிறக்கும்; அந்நிலையைச் சத்திநிபாதம் என்பர். சக்தி - அருள்; நிபாதம் - ஒழுக்கம். சத்திநிபாதம் படரும் சமயம், சாதகர்க்குக் குண்டலிக்கனல் குடுகுடு குறுகுறு என்று மேலேறிப் பாயும். பெருச்சாளி ஓட்டம் போல் அதிருகின்றது அவ்வொலி. மூலாதாரத்தில் ஓடிப்பாயும் குண்டலிக் கனலேறி அமர்ந்துளர் பிள்ளையார் என்பது 'பிண்ட நுட்பம்'.

புராண வரலாறு

கடுந் தவத்தர் மாகதர். அவர் மைந்தன் கயமுகன். கிரேதாயுகத்தில், இவன் செய்த கிளர்ச்சி அதிகம். படாத பாட்டை இவனால் அமரர் பட்டனர். எதற்கும் வரம்பு உண்டு. அளவு மீறியது அக்கிரமம். வேத விநாயகர் வெளிப்பட்டார். அநியாயக் கயமுகனை அடக்கினார். சாகாவரம் பெற்ற அச்சதுரன், பெருச்சாளி உருவங் கொண்டு பெருமான் முன் வந்தான்.

'இன்று முதல் நீ எமக்கு ஊர்தி' என்று, அவன்மேல் ஏறியமர்ந்தார் ஆனைமுகர்; இது 'அண்ட வரலாறு'.

அண்டம், பிண்டம் அவ்விரண்டும் சமம் என்று அறிந்து மகிழ்கின்றார் அறவோர்.
    'பேசத் தகாதெனப் பேயெருதும் பெருச்சாளியும் என்று
    ஏசத் தகும்படி ஏறுவதோ? இமையாத முக்கண்
    கூசத் தகும்தொழில் நுங்கையும் நுந்தையும் நீயும் இந்தத்
    தேசத் தவர்தொழும் நாரைப் பதியுள் சிவகளிறே'
- எனும் நம்பியாண்டார் நம்பிகள், இவ்வரலாற்றில் குறிப்புப் பல வெளிப்படக் கூறுவது, நம் உள்ளத்தில் அன்பின் குதூகலத்தை அளிக்கின்றது அல்லவா!

'அஞ்சு கரமும் அங்குச பாசமும்' எனும் ஏழாம் வரியினும், இவ்வரலாறு குறிப்பிடப் பட்டுள்ளது. இத்துணைச் செய்திகளையும் உணர்ந்து நெகிழ்ந்து, வரத கணபதியை விளித்துப் பாட்டி பாடுவதையும் பாருங்கள்!

15. முப்பழம் நுகரும் மூஷிக வாகன!
பதவுரை:
முப்பழம் - (வாழை மா பலா ஆகிய) முக்கனிகளை,
நுகரும் - உண்ணும்,
மூஷிக வாகனா - (ஊரும்) பெருச்சாளியை ஊர்தியாக உடையவரே (என்றவாறு).

முக்கனி உண்டு மூஷிகம் ஏறிப் பவனி வரும் நுட்பத்தை, உணர்ந்து உருகிப் பாடிய பாவலர் பலர்; அவர்களுள் ஒருவர் கபிலர்.
    'வாழைக் கனி பலவின் கனி மாங்கனிதான் சிறந்த
    கூழைச்சுருள் குழையப்பம் எல்லாம் துறுத்தும்
    பேழைப்பெரு வயிற்றோடும் புகுந்து என் உளம்பிரியான்
    வேழத் திருமுகத்துச் செக்கர் மேனி விநாயகனே'

    'அடியமர்ந்து கொள்வாயே நெஞ்சகமே! அப்பம்
    இடிஅவலொ(டு) எள் உண்டை கன்னல் வடிசுவையில்
    தாழ்வானை ஆழ்வானைத் தன்அடியார் உள்ளத்தே
    வாழ்வானை வாழ்த்தியே வாழ்!'
- என்று கனிவு மிகுந்த அக்கபிலர் பேழை வயிற்றனைப் பாடிய அருமைப் பாடல்கள், நீங்காமல் நம் உள்ளத்தில் நிற்கின்றன அல்லவா!

மாயாப் பிறவி மயக்கம்

ஐம்பூதங்களும், அவைகட்கு மூலமான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் தன்மாத்திரைகளும் கூடிவந்த உடல் இந்த உடல். ஐம்பூத நிறைக்கு, உரிய அளவில் உடல் அமையும். நீர் வாழ் உயிர்கட்கு, நீர்த்தன்மை மிகும்; ககனத்திற் பறக்கும் பறவைகட்குக் காற்றுத் தன்மை மிக்கிருக்கும்; மண்ணில் வாழ்பவைகட்கு, மண் தன்மை அதிகம். விண்ணும் நெருப்பும், அனைத்தினும் அளவாகி அமையும்.

ஒவ்வொரு உடலும் உதித்த பின், வளர்ந்து முதிர்ந்து தளர்ந்து விழும்.
அதன்பின், ஆக்கையிலிருந்த ஐம்பூதங்கள், தனித்தனிப் பிரிந்து, அதன் அதன் இடத்தை அடையும். அருமையாகப் பேணி வளர்த்த உடல், இங்ஙனம் ஒடிந்து
நொடிந்து உருக்குலையும். இவைகளை உணர்ந்து குமுறுகிறது நம் உள்ளம்.

ஆக்கையில் குடியிருந்த ஆன்மா மட்டும் அழிவது இல்லை. கூட்டில் இருந்தது கிளி.
ஊட்டி வளர்த்தார்கள் உரியவர்கள். எனினும் ஒருநாள் அது ஓடி விடுகிறது. அது போல், உடலில் இருந்த உயிர், ஒரு நாள் உடலை விட்டு ஓடும். வினை வலிக்குத் தக்கபடி, மற்றும் ஓர் உடலை நாடி அடையும். அதனிலிருந்து வாழ்க்கையை ஆரம்பிக்கும். மீட்டும் உலகியல் நாட்டம்.

அம்மவோ அம்ம! நினையாது இருந்தால், இவைகள் தோன்றுவதில்லை. நினைத்தால் நெஞ்சு வெடித்து விடும்போல் இருக்கிறது. கண்ணீர் பெருகுகிறது. அவ்வளவு அச்சம்
அதிகரிக்கின்றது. எழுதுகோலும் தடைப்படுகின்றது. போதும் இவ்வளவு!

மாயமாகத் தோன்றி மண்ணாகும் இந்தக் காய வாழ்க்கையில்தான் எத்தனை அபிமானம்! எப்படி வந்தது இந்த மயக்கம்?

ஓயாதோ இப்பிறவியென்று ஓயாமல் எண்ணுகிறோம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, முதல்வன் திருவருள் முன்னிற்க வேண்டும். அதற்கு நாம் யாது செய்ய வேண்டும்? வர வேண்டும் எந்தன் அருகே என்று வரத கணபதியை எண்ணி அழவேண்டும்; தொழ வேண்டும்; அன்பு செய்ய வேண்டும்; வேறு வழியில்லை. அன்றிருந்த மேலோர் இதனை அறிந்திருந்தனர்; இன்றிருப்போர்க்கும் இ·தொன்றே வழி. அன்றிருந்தார்
வரிசையில் ஔவையாரும் ஒருவர்.

தாயாக வந்த தயாநிதி

அன்பு மிகுந்து அலறி அழைக்கும் ஆன்மாவின் நிலையை அமலன் அறிகிறான். தனக்கே உள்ள விருப்பாலும், அறிவாலும், திருவருட் செயல்களை ஆன்மாவிற்குச் சிறிது சிறிதாக அறிவிக்கின்றான். அவைகளை அறிந்து அறிந்து உருகுகின்றது ஆன்மா.
    'உள்ளம் உருகில் உடனாவர் அல்லது
    தெள்ள அரியரென்(று) உந்தீபற'
- என்று சாத்திரம் உரைத்தபடி, காலம் பார்த்து உதவ அவன் கருணையும்
வெளிப்படுகின்றது. அவ்வளவில், மாயாப் பிறவியில் இருந்த மயக்கம் அடியொடு
மாய்கிறது. மகிழ்கிறது ஆன்ம இதயம். இவைகளைப் பயபக்தி விநயத்தொடு
ஔவையார் பாடுவதைப் பாருங்கள்!

16. இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
17. தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
18. மாயாப் பிறவி மயக்கம் அறுத்து

பதவுரை:
இப்பொழுது - இச்சமயத்தில்,
என்னை - (ஒன்றும் போதா) எளியேனை,
ஆட்கொள வேண்டி - ஆண்டு கொள்ள விரும்பி,
எனக்குத் தாயாய் - என்னிடத்தில் அன்பு செலுத்தும் அன்னை போல்வனாய்,
தான் எழுந்தருளி - தான் (தன் இயற்கைக் கருணையினால்) முன் வந்து,
மாயாப் பிறவி - முடிவிலாது பெருகும் பிறவியின்,
மயக்கம் அறுத்து - மயக்கத்தை வேரறுத்து (என்றவாறு).
எங்கும் தாய்மை தோன்ற வியாபகக் கணபதியின் திருவருள் வெளிப்பட்டு, அழியாமல் வளர்ந்து பெருகும் பிறவியிலிருந்த மயக்கத்தை ஒழித்த அருமையை, பெருமிதச் சுருக்கமாக அறிவிக்கும் ஔவையின் பெருமையே பெருமை. இறைவனால் ஆட்கொள்ளப் பெறும் இன்ப அநுபவம் விளையுமேல், மாயாப் பிறவியின் மயக்கம் இல்லை என்பது குறிப்பு.

மாயாப் பிறவி - மாயா மலத்தால் ஆன பிறவியெனலும் ஒருவகை.
    'தாயாய் முலையைத் தருவானே!
    தாராது ஒழிந்தால் சவலையாய்
    நாயேன் ஒழிந்து போவேனோ'
எனவும்,
    'பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
    பரிந்து நீ பாவியே னுடைய
    ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
    உலப்பிலா ஆநந்தம் ஆய
    தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே!'
- எனவும் வரும் கருவாசனை கழற்றும் திருவாசகப் பாசுரங்கள், இங்குக் கருதத் தகும்.

திருந்திய தெளிவு

பயனாக எழுந்த பரிபாகத்திற்குத் தக்கபடி, மாயாப் பிறவியிலிருந்த மயக்கம் அகன்றது.
திருவருட்செயலும், சிறிது சிறிதாகத் தெரிகிறது. செய்வானைச் சேவிக்கும் வேட்கை,
இந்நிலையில் வரவர வளர்வது இயற்கை. எனினும், எல்லையற்ற பரம்பொருளை எங்ஙனம் காணவியலும்! ஆர்வத்தொடு ஆன்மா, 'முன்வருக முதல்வவோ! இறைவவோ! பரமவோ!' என்று பலகாலம் முறையிடும்.

அன்பின் முறையீட்டு ஒலியலைகள், அண்டமெலாம் வியாபிக்கும். அன்பின் சாதனை, அம்மானை ஈர்க்கும். கண்ணீர் பெருக்கிக் கதறியழைக்கும் இந்நிலை கண்டு, அருளே உருவான ஆனைமுக அத்தன், வாழ்விக்கும் உளங்கொண்டு வரும்.

மந்திர நாதம் எம்பெருமான் திருமேனி. அதற்கேற்ப, பரம ஐந்தெழுத்தாய்ப் பரமன் படர்ந்து வரும். நுண்மை ஐந்தெழுத்தாய் நுணுகி வரும். காரண ஐந்தெழுத்தாய் எங்கும் கலந்து வரும்.

தூல சூக்கும காரணம் முதலிய மந்திர ஐந்தெழுத்துகள், அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளும் அளவாக அமைந்து இருக்கின்றன. முதன்மையான இவைகட்கு மூலம் உண்டு. அவை அகரம், உகரம், மகரம், பிந்து, நாதம் எனப்பெறும்.

ஒளியும் ஒலியுமான ஓங்கார பஞ்சாக்கரம் எனும் இவை, மூல ஆதாரத்தில் காலூன்றி, சுவாதிட்டானம், நாபி, இதயம், கண்டம், புருவநடு எனும் இடங்களில் சுழுமுனை
வழியாக நிற்கின்றன; பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவம் என்பவர், இவ் ஐந்தெழுத்தின் அதிதெய்வங்கள் என்றெல்லாம் ஏட்டிற் கண்டுளம்; வாயாற் படித்துளம்; செவியால் கேட்டுளம்.

கண்ணால் கண்டது வரிவடிவம்; வாயால் சொல்வது வைகரி; செவியால் கேட்டது
ஒலியளவை. போதுமா இந்நிலை? பேறு தரும் இந்த ஐந்தெழுத்துகளால், தெளிவு பிறக்க வேண்டுமே!

எவர் செவிக்கும் கேட்கும் ஓசையான ஐந்தெழுத்தை இடையறாது உச்சரிக்க வேண்டும்; அதனால் ஓசை, உச்சரிப்பார்க்கு உவகை தரும் ஒலியாக மாறும்; மேலும் உருவேற்ற உருவேற்ற, அத் தெய்வ எழுத்துக்கள் ஐந்தும், தெய்வ நாதமாகித்
திகழும். அதனை உள்கிய உயிரின் உள்ளம் உருகும். திருந்திய ஐந்தக்கர வடிவான தெய்வப்பிரான், உள்கும் புனித உள்ளத்திற் புகுகின்றான். அவ்வளவில், அவன் சொருபமான அந்த எழுத்து ஐந்தும், அகத்தில் பதியும். பழைய உலக நிழலீடுகள், அப்போதே இதயம் பிரிந்து அகலும். அதன்பின் இதயம் பஞ்சாக்கரமயமாக இருக்கும். ஐந்தெழுத்தான் சாந்நித்திய இடமனைத்தும், ஐந்தெழுத்தின் மயந்தான்;
பாடிக் காட்டுகிறார் இதை நம் பாட்டியார்.

19. திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
20. பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து

பதவுரை:
திருந்திய - திருத்தம் அடைந்துள்ள,
முதல் - (வேதாகமங்கட்கு) முதலான,
ஐந்து எழுத்தும் - (பிரணவ) ஐந்து எழுத்துக்களும்,
தெளிவாய்ப் பொருந்தவே - (ஐயம் திரிபு அறியாமையின்றித்) தெளிவாக அமையும்படி;
வந்து - (அருளுடன்) எழுந்தருளி,
என் உளந்தனில் புகுந்து - அடியேன் உளத்துள் நுழைந்து (என்றவாறு).

அறம் மூலம்; அதன் பயன் இன்பம். மூலத்தைக் கொள்ளாமல், இன்பப் பயனை
மட்டும் எதிர்நோக்கல் முறையாமோ? அப்படியே பாவம் மூலம்; அதன் பயன் துன்பம். இம்மூலத்தைக் கைக்கொண்டு, அதன் பயனான துன்பம் மட்டும் எம்மைப் பற்ற வேண்டா என்று எண்ணியிருக்கும் கீழ்களின் உள்ளம். படுகேடான இவ்வுள்ளத்தில் பயனளிக்கும் தெய்வம் விளங்குமா?
    'உள்ளத்தே நிற்றியேனும், உயிர்ப்புளே வருதியேனும்
    கள்ளத்தே நிற்றி யம்மா! எங்ஙனங் காணுமாறே!'
- எனும் ஆளுடையரசர் அருளியபடி, உயிரறிவில் ஒற்றித்து நின்றும், அவ்வறிவால் அறிய இயலாதபடி மறைந்தும் இருப்பன் மாபெரும் இறைவன். எனவே பொய்யர் உள்ளத்திற் பொய்யாகி இருப்பன்; அறநெறி வழுவா வாழ்க்கையர் உள்ளத்தில் என்றும் விளங்குவன் எம்மான். இதனால், மெய்யர் உள்ளத்தில் என்றும் மேவுபவன் என்பது,
வெளிப்படையாக விளங்குகின்றது அல்லவா!

'புந்திவட் டத்திடைப் புக்கு நின்றானையும்
பொய்யென்பனோ'
- என்றும் அந்த அரசரே அருளுதல் உணரத் தகும்.
    'மெய்யர்க்கே மெய்யனாகும் மெய்யிலா என்னைப் போலும்
    பொய்யர்க்கே பொய்யனாகும் புள்கொடி யுடைய கோமான்'
எனும் ஆழ்வார் பாசுரமும்,
    'அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
    ஒன்றுண் டில்லை யென்றறி வொளித்தும்
    பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும்
    ஒளிக்கும் சோரனைக் கண்டனம்'
- எனும் திருவாசகமும்,
    'யானை முகத்தான், பொருவிடையான் சேய், அழகார்
    மான மணிவண்ணன் மாமருகன் - மேல்நிகழும்
    வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
    உள்ளக் கருத்தில் உளன்'
- எனக் கபிலரும்,
    'என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்
    தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
    விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்
    அரசுமகிழ் அத்திமுகத் தான்'
- என நம்பியாண்டார் நம்பிகளும் நவிலல்,
இங்கு நம் நினைவிற்கு வருகின்றன அல்லவா!

எவராலும் காண்டற்கரியவன் இறைவன். ஞானயோகிகள், தம் உள்ளக் கமலத்தை மலரச் செய்து, அதன் நடுவில் உள்ள நுண்ணிய வெளியான தகராலயத்தில் உள்ள தற்பரனை, உணர்வுக் கண்கொண்டு வழிபட்டு உவகை அடைவர். இது ‘தகர வித்தை’ எனப் பெறும். இக்காட்சி ஞானயோகத்தில் முதிர்ந்த மெய்யன்பர்க்கன்றிப் பிறர்க்கு இயலாத செய்தி.

திருவடித் தீட்சை

இரக்கமே வடிவான எம்பெருமான், இதனையறிந்து, உவகையுடன் உள்ளம் புகுந்தான். ஓங்கார ஐந்தெழுத்தின் நாதம் ஊட்டினான். உவந்த அந்த நாதமயம் ஆகிறது உணர்வு. உள்ளம் மூலத்தை உணர்ந்தது. மூலத்திற்கு உரை வேண்டும்.

வடிவம் இல்லாத விண்ணில், சாயா புருட வடிவம் தோன்றும். அதுபோல், உவகை வழங்கும் புனித ஓங்காரப் பொருள், உரை கூறும் நடையில், கூர்த்த குரு வடிவம் கொள்கிறது.

ஆகாத போதம் அடங்க, குருமூர்த்தி அருள் நோக்கம் செய்கின்றார். இது 'சட்சு தீட்சை' எனப்பெறும். மலரவன் பொறித்த தலையெழுத்தை மாற்ற வேண்டாமா! அது கருதி, இனிய திருவடியைத் தலை மேல் ஏற்றுகின்றான் குருநாதன். பொய்ச்சின்னத்தை மாற்றி மெய்ச்சின்னத்தை ஏற்றிப் பொற்கழற்குள் ஆக்கும் புனிதநிலையிது. கற்றவர் அதன் பயனாகத் திருவடியைக் கருதுவர். கருதுவதற்குத் தக்கபடி, கருத்தில் ஒரு கண் மலரும்; அகக்கண் என்று அருள் நூல்கள் அதை அறிவிக்கின்றன.

வாசக தீட்சை

'அழிநிலை ஒன்று; மாயம் பல செய்யும் மருள்நிலை ஒன்று; அநியாய இந்த இரு
நிலையாலும், இத்துணை நாள் அயர்ந்து கிடந்தனை! ஆன்ம இதயம், ஐந்தெழுத்து மயமான இந்நிலையே என்றும் அழியாநிலை; இ·தொன்றே பொருள்நிலை'யென்று,
விரிவுரை ஆற்றுகின்றான் விமல குருபரன்.

'இதோ பார்! காலை மடித்து அமர்ந்த கோலத்தில் அகரம்; நமது தலையும் துதிக்கையும் உகரம்; வயிறு மகரம்; விந்து, நாதம் இரண்டும், நம் உருவில் விளையாடுகின்றன; உவந்த குண்டலினி நம் ஊர்தி; பாசம் அறுக்கின்றது பாச அங்குசம்; பற்றிய தந்தம் பதியறிவை விளக்கும்; ஏழுலகும் கொழுக்கட்டை; மந்திரசாதனை ஜபமாலை; நான்கு கரங்கள், அறம் பொருள் இன்பம் வீடளிக்கும் அறிகுறி. மூன்று கண்களுள் நடுக்கண் ஞானக்கண்; மற்ற இரு கண்களும் சந்திர சூரியர்.

'நம் ஓங்கார ஐந்தெழுத்து, அன்பொடு நீ வாழும் ஆக்கையினும் உளது. மூலாதாரத்தில் நாதமூலம்; சுவாதிட்டானத்தில் அகரம்; நாபியில் உகரம்; இதயத்தில் மகரம்; கண்டத்தில் பிந்து; புருவ நடுவில் நாதம்; வாழும் சுழுமுனை வழியாக, இந்த ஐந்தெழுத்தும் நிற்கும். இவைகளை அறிவிக்கவே, அடிமுடியில்லாத யாம், அருள் குருபரனாகி, அடியை முடியில் ஏற்றினோம்.

உள்ளாழ்ந்து தெளிவார்க்கு, எம் திருவடியே தஞ்சம்; உனது புத்தியில் நிற்பது எமது பொற்பாதங் காண்! உள்ளப் பொய்கையில் துள்ளும் அடியைக் கற்ற அறிவினர் கருதிப் பெறுவர். புரிகிறதா? ஔவையே தெரிகிறதா’ என்கிறான், புலவர் உணர்தரு புனிதப் பெருமான்.

பூத இருள் போக்கும் விளக்கு, மதி, பரிதி போல், ஆணவ இருளை அகற்றும் குருமுகமான ஆனந்தக் கணபதியின் உபதேசம், அமுதமழை, ஆகாய வாக்கு,
நல்நிமித்தம் போல் நலம் தருகின்றது.

உள்ளத்தைத் தொடுகிறது உபதேசம். கணபதி திருக்கரத்திருந்த மெய்ஞ்ஞானத் தந்தம், இந்நிலையிற் காட்சியாகின்றது. அதனால், மாறுபட்ட முன்னைய இச்சை, அறிவு, செயல்கள் எல்லாம், மறைந்து விடுகின்றன. ஆ! என்ன அருமையாக இருக்கிறது இந்நிலை. பரிந்து உணர்ந்து இவைகளைப் பாடுகின்றார் நாம் பாட்டியார். கேளுங்கள்!

21. குருவடி வாகிக் குவலயம் தன்னில்
22. திருவடி வைத்துத் திறமிது பொருளென
23. வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
24. கோடா யுதத்தால் கொடுவினை களைந்து
25. உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்

பதவுரை:
குவலயம் தன்னில் - நிலவுலகில்,
குருவடிவு ஆகி - (திருவருள்) குரவனாகத் திருமேனி தாங்கி,
திருவடி வைத்து - (என் தலைமேல்) திருவடியை ஏற்றி,
திறம் - (இது) நிலை பேறானது,
இது பொருள் என - இது ஒன்றுதான் மெய்ப்பொருள் என்று,
வாடா வகை - (அடியேன்) வாட்டம் கொள்ளாதபடி,
தான் - அப்பெருமான்,
மகிழ்ந்து எனக்கருளி - இன்ப வடிவனாக இருந்து எளியேனுக்குத் திருவருள் பாலித்து,
கோடு ஆயுதத்தால் - (திருக்கரத்தில் ஏந்திய) தந்தம் ஆகிய மெய்ஞ்ஞானக் கருவியினால்,
கொடுவினை களைந்து - (எனது முன்னைய) நேர்மையில்லாத செயல்களை அடியொடு நீக்கி,
என் செவியில்,
உவட்டா உபதேசம் புகட்டி - தெவிட்டாதபடி உபதேசத்தை (இனிது) உபதேசித்து (என்றவாறு).

ஒருமித்த உணர்வு கண்டு உதயமான குருநாதன், ஆன்மாவின் தலைமேல் கரத்தையும், தாளை இதயத்தும் பதிப்பன்; அடுத்து முடிமேல் அடியிடுவன்; முத்தியுலகை ஆள் என முடி சூட்டிய நடைதான், இத்திருவடி தீட்சை. திருவடி புனைந்த பின், அடியாகிய முடி சூடிய மன்னர் எனப் பெயர் பூண்ட ஆன்ம இன்பத்திற்கு அளவில்லை.
    'மேல் வைத்த வாறு செய்யாவிடில் மேல்வினை
    மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்
    பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
    தாள் வைத்தவாறு தரிப்பித்த வாறே'
- எனும் திருமந்திரம், இங்கு எண்ணத் தகும். பரிபூரண ஞானமே திருப்பாதம் என்று பலப்பல பதிநூல்கள் பாடுகின்றன. அகத்தும் புறத்தும் திருவடித் தீட்சையை, அற்புத அமலன் அருளானேல், மலத்தின் தொடர்பால் மால்கொண்ட மனம், என்றும் மயங்கி இடரடையும் எனலை, வித்தக இத்திருமந்திரப் பாடல் விளங்க வைக்கின்றது அல்லவா!
    'தூவேதம் தலைகாண்டற் கரியதாகித்
    துன்பமுறு பிறவியெனும் துகள்சேர் வெய்யில்
    ஆவேனைத் தன்னடியாம் நிழலில் சேர்த்த
    அத்திதனைப் பத்திசெய்து முத்தி சேர்வாம்'
- என இவ்வமயம் உவகையுடன் நம் உள்ளம் ஓதுகிறது.

சிவனார் திருக்கரத்தில் சூலம்; முருகன் திருக்கரத்தில் வேல்; அதுபோல், தற்பர கணபதி திருக்கரத்தில் தந்தம் இருக்கிறது. தன் திருமுகத்திலிருந்து கொண்ட மெய்ஞ்ஞானமே அந்தக்கருவி. அதன் தொடர்பால், பேரின்பப் பேற்றிற்கு மாறான
உலகியல் செயல்கள் அனைத்தும் ஒழியும். கூறும் அச்செயல்களைக் 'கொடுவினை' என்று குறிப்பிடுகின்றார் ஔவையார். கொடுமை - வளைவுடைமை; நேர்மையிலாமை.

முப்பதாம் அடியில் 'இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து' என்றிருத்தலின்,
கொடுவினை என்பதற்கு, இங்கே தீய செயல்கள் எனப் பொருள் கொள்ளப் பெற்றது.
திருவடி சொருப நிலையில் பரிபூரண ஞானம் எனப் பெறும். அந்தத் திருவடி தீட்சை அருளியபின், திறம் இது, பொருள் இது என உணர்த்துகின்றார்
கணபதியான தெய்வக் குருபரர்.

இது திறம், இது பொருள் என இயைதலின், இது என்பது இடைநிலை விளக்காய் இருக்கின்றது.

'எம் அடிமலர் விரும்பு; அமைதியை அடை. பேரின்பம் பெற்றுக் கொள்!' என்பது இறைவன் கட்டளை. அதற்கு உரிய இச்சை, அறிவு, செயல்களை ஏற்க வேண்டும் ஆன்மா. திருவருட்கு மாறான பிருகிருதி இன்பத்திற்கு உரிய இச்சையும், அறிவும், செயலும் கொள்ளுமேல், அந்நிலை பரிதபிக்கத் தக்கதுதான். இந்நிலை நேராதபடி 'கோடாயுதத்தால் கொடுவினை களைந்தான்' என்றார்.

'கூற்றிருக்கும் வெண்கோடு வெளிற்றறி(வு)
இரண்டும் குமைப்ப'
- என்பது தணிகைப் புராணம்.

பாசஞானம், பசுஞானம் இரண்டையும் கெடுத்தலை, 'வெளிற்றறி(வு)
இரண்டும் குமைப்ப' என்று குறிப்பிடுகின்றது அந்தப் புராணம். கெடுப்பது எது? வெண்கோடுதான். இதனால், தந்தம் மெய்ஞ்ஞான சொருபம் என்று
விளங்குகிறது அல்லவா!

திரு - கண்டார் யாவரானும் விரும்பப் பெறும் தகுதியது; அடி - பரிபூரண ஞானம்; எனவே அடைந்தார்க்குப் பூரண ஞான ஐஸ்வரியம் அளித்தலின், இறைவன் அடியைத்
திருவடி என்பர் தெளிவுடையோர்.
    'கணங்கொண்ட வல்வினைகள், கண்கொண்ட நெற்றிப்
    பணங்கொண்ட பாந்தள் சடைமேல் - மணங்கொண்ட
    தாதகத்த தென்முரலும் கொன்றையான் தந்தளித்த
    போதகத்தின் தாள்பணியப் போம்'
- என்கிறார் கபிலர்.

கணபதி திருவடிகளை மனம் கனிந்து வணங்கினால், பாவப் பாழ்வினை பறந்தோடும் என்று பரந்த அநுபவம் கூறுகின்றது இப்பாடல்.

ஞானத் தெளிவு

நெருப்பைப் போல் உளது பசு; நெருப்பின் சூடு போல் உளது பதி; நெருப்பின்
ஒளி போல் உளது மாயை. நெருப்பின் சூடு, அருவமாகி அகத்தும் புறத்தும் அடர்ந்து
கிடக்கும். சூடு இலதேல், நெருப்பும் ஒளியும் வெளிப்படல் இல்லை. நெருப்பும் சூடும் ஒளியும் போல் பசுவும் பதியும் பாசமும், ஒன்றையொன்று பிரியாத அநாதி நித்தியம்.

பேரறிவை உடையது பதி; பதியை யறியும் பசு; அறிய இயலாதபடி மறைத்து நிற்கிறது பாசம். இதையறிந்து 'பாசம் அகன்று நில்! பதியை உணர்ந்து கொள்! இரண்டிற்கும் இடையில், உன்னை நீ உணர்ந்தாயானால் உனக்கொரு கேடும் இல்லை' என்று, வெறுப்பு விளையாதபடி விரித்து விளம்புகின்றார் வித்தகக் குருவாய் வந்த விநாயகர்.

சேய்க்குப் பால் புகட்டும் தாய்போல், இரக்கம் மிக்க எம்மான் உபதேசம் இன்பம்
தருகின்றது. மேலாம் கணபதியே பொருள்; இதனை உள்ளக்கண் கொண்டு உணர்ந்தால், உயர்ந்து தெளிந்த ஞானம் உதிக்கும். ஔவையார்க்கு உதித்த
இத்தெளிவு, கருவி நூல்களால் கலந்தது அன்று; கணபதி காட்ட உதித்தது.
ஆதலின் இது, தெவிட்டாத ஞானத் தெளிவு எனப் பெறுகின்றது. ஓரடியில்
இதனைக் குறிப்பிடும் அருமையை உணர்ந்து ஓதல் உயர்நடை.

26. தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
பதவுரை:
தெவிட்டாத - தெவிட்டுதல் பிறவாத,
ஞானத் தெளிவையும் காட்டி - (பேரின்பத்திற்கு உரிய) தெளிந்த அருளறிவையும் தந்தருளி (என்றவாறு).

வீடு தரும் மெய்யுணர்வு, இங்கு ஞானத் தெளிவு எனப் பெற்றது. வீட்டிற்கு
வாயிலாகிய அதனைப் பெறுதல் இன்றியமையாதது என்பர் மேலோர்.

துரிய கணபதி, இங்ஙனம் குருமுகங் காட்டிச் செய்த உபதேசம் கோடி பெறும்.

ஐம்புல அடக்கம்

பளபளக்கின்றது கூரிய வாள். துப்பு ஏறலாமா? ஓய்வுள நேரத்தில், அதில் நெய் பூசியுளர் உரியோர். நெய்யை விரும்பி, வாளின் வாயை நக்கியது நாய். ஆ! அதன் நாவின் கதி யாதாகும்?

கடுவிடம் பாயசத்தில் கலந்திருக்கின்றது. அதனை அறியாமல், பாயசம் பார்த்த மனம் படபடக்கின்றது. நா ஊறுகின்றது. ஆய்ந்து ஓய்ந்து பாராமல், விறுவிறு என்று
பருகுகிறான் ஒருவன். ஆ! அதன் பின்விளைவு யாது?
மேனி மினுக்குதல் வேசையர்க்கு அழகு; அது வெறும் போலி நிலை. கானலை நீரென்று கருதி, அதை நோக்கி விரைகின்றது மான்; அதன் முடிவு யாது?
அதுபோல் முடிகிறது விலைமாதர் நட்பு.

அசுணப் பறவை ஓசை கேட்டு அழியும். ஆண் யானையைப் பிடிக்கப் பெண் யானையை அனுப்புவர்; பெண் யானையின் பரிசம் விரும்பிய ஆண் யானை, ஆண்மை குன்றி அழியும். தூண்டில் முள்ளில் இறைச்சி; நாவிற்கு அடிமையான மீன் இறைச்சியை விரும்பி இறந்தொழியும். மணத்தை மோந்து வண்டு மாயும்.

அணுவளவு இன்பம்; மேலுரைத்த ஐந்திற்கும் அதனால் மலையளவு துன்பம். முடிவிலும் பரிதாப மரணம். ஒன்று ஒன்றால் அழியும். அம்மவோ அம்ம! சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் எனும் இவைகளை அறிவிக்கும் புலன்கள் ஐந்தாலும் அழிவர் மக்கள்.

இவைகளை அழுந்த உணர்ந்தால் அச்சம் அதிகரிக்கும். ஆக்கம் அளிக்கும் சிவநெறியில் வேட்கை சிறக்கும். அருள் நூல்களில் ஆர்வம் பிறக்கும்; ஆர்வத்திற்குத் தக்க அறிவு உதிக்கும். அதற்கான செயலை நிறைக்கும். அநியாய நெறிகளில் புகுத்தித் தலைவிரி கோலமாக்கிய பழைய மனம், இந்நிலையில் ஆன்மாவில் அடங்கும். உறவும் தொடங்கும். சிவபோகம் ஒன்றையே சிந்திக்கும். வரவரச் சிந்தனை வளரும்.

இந்த ஒழுக்கத்தால் ஆன்மாவிற்கே உரித்தான இச்சை, அறிவு, செயல்களில்
அருள் ஒளி சிறிது சிறிதாகப் படரும். அதற்கேற்ப விரிந்த மல இருள் சிறிது சிறிதாக
விலகும். வித்தக இந்த அநுபவத்தை, 'பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதானந்தப் பொருளாம் மெய்காட்டும் மெய்' என்று இனிது கூறும் உண்மை விளக்கம் இங்கு உணர்தற்கு உரியது.

கணபதி இந்நுட்பங்களைக் கனிவு தோன்றப் பாட்டிக்குக் காட்டினாராம்.
என்ன அருமை!

27. ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
28. இன்புறு கருணையின் இனிதெனக்(கு) அருளி

பதவுரை:
ஐம்புலன் தன்னை - ஐந்து புலன்களை,
அடக்கும் உபாயம் - (விஷயாதிகளால் செல்லாதபடி) தடைப்படுத்தும் தந்திரத்தை,
இன்புறு கருணையின் - பேரின்பம் பெறுதற்கு உரிய பேரருளால்,
இனிது எனக்கு அருளி - இனிதாக அடியேற்கு அருளியும் (என்றவாறு).

உலகியல் உறவு குறையக் குறைய, சமயச் சார்பு பெருகப் பெருக, ஐம்புல வேட்கை படிப்படியாக நொடித்துவிடும். இதுதான் புலனை அடக்கும் உபாயம். இதற்குச் சாதனா சம்பந்தமும் கை தரும்.
    'சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்என் றைந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு'
    - என்பது திருவள்ளுவரின் திருக்குறள்.
    'ஐஞ்சு புலனின் வழியறிந் தால்பின்னை
    துஞ்சுவ தில்லை உடம்பு'
- என்னும் ஔவை குறளும், இங்கு உணர்தற்கு உரியது. வகை தெரிதலை
வள்ளுவர் குறிப்பிட, வழியறிதலை வாய் மலர்கின்றாள் பாட்டி.


கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து..

(பதிப்பாசிரியர் குறிப்பு)

எளிமையான உருவ வழிபாட்டில், கணேசப் பெருமானின் அண்ட பிண்ட நுட்பங்களைப் பாடத் தொடங்கும் பாட்டியார், 'கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து' என்ற 29'ம் அடியிலிருந்து தாந்திரிக நுட்பங்களின் ஆழத்துக்குச் சரேலென நம்மை இட்டுச் செல்கிறார்.

அவை 'தியானம் செய்வோன், தியானம், படுபொருள்' என்ற திரிபுடி நிலை கடந்தோர்க்கு எளிதில் வசப்படுவன.
    'நினைப்பு நினைவது நினைப்பவனும் அறு
    நிலத்தின் நிலை பெற நிறுத்த உரியதும்'
என்ற திருப்புகழ் 'பெருத்தவசன வகுப்பின்' ஒரு பகுதிக்கு அடியேன் எழுதிய உரை ஒன்றையும் இவ்விடம் ஒப்பிட்டு நோக்குவோம்:

ஷீர்டிமகானுக்கு அணுக்கத் தொண்டராய் இருந்து அவர் சரிதத்தை எழுதிய ஹேமத்பந்த் என்ற அடியவருக்கு ஒரு பெருத்த ஏக்கமிருந்தது. அண்டும் அடியவர்க்கெல்லாம் ஆசி வழங்கியிருக்கும் பாபா தமக்குக் குறிப்பாய் ஏதும் உபதேசத்தை அருளவில்லையே என்பதது.

அதற்கும் ஒரு நேரம் வந்தது. அன்று பாபா ஒரு லீலையினால் குறிப்பால் உணர்த்திப் பின் உபதேசித்த பேருரையே பிரம்மஞான சாரமானது. அவர் சொல்லும் அமுதமொழி:

ஆத்மஞானமான அனுபூதி அடைவதற்கு தியானம் இன்றியமையாதது. ஆசையினை அறவே ஒழித்து அனைத்துயிர்களிலும் பரவியிருக்கும் ஆண்டவனைத் தியானித்திருத்தலே இறுதிவழி. அதற்கு எளிய வழியாக உன் இஷ்டதெய்வத்தையோ அன்றி, குருவாய் என்னையே நீ தியானித்திருப்பினும் அதையும் ஒரு நிலையில் கடக்க வேண்டும்.

உன் எண்ணங்கள் ஒரே இலக்கில் குவிமுகமாக, தியாதா (தியானம் செய்பவர்),
தியானம், தியேயோ (தியானிக்கப் படும் பொருள்) இவைகளிலுள்ள வேறுபாடு மறைந்து விடும். தியானம் புரிவோன் உச்ச உணர்வுத் திரளுடன் ஒன்றி பிரம்மத்துடன் கலந்து ஐக்கியமடைவான்.

நீ எங்கோ வசிக்க, நான் எங்கோ தொலைவில் ஒரு குக்கிராம மூலையில் உள்ளேனே என்று ஐயுறாதே! தாய் ஆமை நதியின் ஒரு கரையிலும், அதன் குட்டிகள் மறு கரையிலும் இருக்கலாம். தன் குட்டிகளுக்கு அது பாலையோ உஷ்ணத்தையோ அளிக்காமலும் இருக்கலாம். தாயின் கண்ணோட்டம் ஒன்றே குட்டிகளைப் போஷிக்கும். குட்டிகளும் தாயை நினைவில் கொண்டே உயிர் வாழும். தாயின் கண்ணோட்டம் ஒன்றே குட்டிகளுக்கு, காலூன்றிப் பெய்யும் அமுதமழையாகும்; ஊட்டத்துக்குத் தோற்றுவாயாகும்.

குருவுக்கும், சீடர்களுக்கும் இடையேயான உறவும் அத்தகையது!

ஞானிகள் சுட்டும் ஞேயம் மலியும் நிலையும் அதுவே.
    ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்
    ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
    ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர்
    ஆயத்தில் நின்ற அறிவறி வாரே.
திருமந்திரம் - தந்திரம் - 6 - 1606

JNATHRU, JNANA, JNEYA
(KNOWER, KNOWLEDGE AND KNOWN)

Knower-Knowledge-Known Relationship:
To them that pursue the Object of Knowledge
Shall be vouchsafed Knowledge and its attributes;
The Subject that seeks the Object shall in the Object merge;
They that have cognised the Object of Knowledge
Through Knowledge
Have the Knowledge of union with the Object.
    தானவன் ஆகும் சமாதி தலைப்படில்
    ஆன கலாந்த நாதாந்த யோகாந்தமும்
    ஏனைய போதாந்த சித்தாந்தம் ஆனது
    ஞானமென ஞேய ஞாதுரு வாகுமே.
திருமந்திரம் - தந்திரம் - 8 - 2381

Serenity in Samadhi:
In Samadhi Jiva with Siva
One becomes;
In Kalanta, in Nadanta, in Yoganta
And in Bodhanta and Siddhanta
Is Jnana reached
Of Knowledge, the Known and the Knower
One uniting.
    ஆறந்தமும் சென்று அடங்கும் அந்நேயத்தே
    ஆறந்த ஞேயம் அடங்கிடும் ஞாதுரு
    கூறிய ஞானக் குறியுடன் வீடவே
    தேறிய மோனஞ் சிவானந்த மாமே!
திருமந்திரம் - தந்திரம் - 8 - 2382

In that Jnana, (Divine Knowledge)
The Six Antas (ends) merge;
That Jnana (Knowledge) in the Knower (Jnani) merges;
When Knowledge in the Knower merges;
Then dawns Mauna (Divine Silentness)
That is Siva-Bliss.

இந்த இடையுரையுடன் இனிவரும் அடிகளின் விளக்கத்தைக் காண்போம்.

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

மாயை மூன்று. அவைகள் தூய (சுத்த) மாயை, தூய்மையற்ற மாயை,
மூலப்பகுதி எனப் பெறும்.

சுத்த மாயை

ஆன்மாவில் உள்ள அழுக்கின் பெயர் ஆணவம். செம்பில் களிம்புபோல் உயிரில் அது
சேர்ந்திருக்கின்றது. எனினும், அநியாய அந்த அழுக்கு, எவ்வுயிரிலும் ஒரே தன்மையாக
இல்லை. ஏற்றக் குறைவாகவே இருக்கின்றது.

புனித கணபதி தொடர்பால் புண்ணியமும், ஆணவச் சார்பால் பாவமும் ஆன்மாக்கட்கு
உண்டு. இப் புண்ணிய பாவங்களையே, அனாதி கன்மம் என்றும், களிம்பின் மணம்
போல்வது என்றும் அருள் நூல்கள் அறிவிக்கும்.

இன்பம் வழங்கும் இறைவனைப் பரசிவம் என்று பதிநூல்கள் படிக்கும்.
பரம் - (அளவிலாது) உயர்ந்த; சிவம் - (மங்கல) இன்பம்.

பரசிவத்தின் அருள் ஆற்றலைப் பராசத்தி என்று பகர்வது மரபு. அதனினும் உயர்ந்த
ஆற்றல் உடைய பொருள் ஒன்று இல்லாமையால், அச்சத்திக்குப் பராசத்தி என்ற
பெயர் அமைந்துளது; பரா - மேலான; சத்தி - அருள் ஆற்றல்.

பரிதியின் ஒளி அப்பரிதியை அகலாமைபோல், பரசிவத்திலிருந்து பராசத்தி என்றும் பிரிந்து இருப்பதில்லை. ஆணவ அழுக்கை அகற்றி, ஆன்மாவை ஆள இறைவன்
சங்கற்பிக்கின்றான். அப்போதே சுழல்கிறது சுத்த மாயை. அதன் விளைவு அடாடா!

சுத்தமாயை -> நாதம், விந்து, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்த வித்தை.

(சூக்குமை, பைசந்தி, மத்திமை, சூக்கும வைகரி, தூல வைகரி எனும் வாக்குத்
தத்துவங்களும், சாந்தி அதீதை, சாந்தி, வித்தை, பிரதிட்டை, நிவர்த்தி எனும் கலைகளும், வாக்கின் தொடர்பான அக்கரம், பதம், மந்திரம் என்பனவும் சுத்த மாயையுள் அடங்கும்.)

பராசத்தியின் ஆயிரத்தில் ஒரு கூறு, ஆதி சத்தியை அளிக்கிறது; ஆதி சத்தியின் ஆயிரத்தில் ஒரு கூறு, இச்சா சத்தியாக எழுகிறது; இச்சா சத்தியின் ஆயிரத்தில் ஒரு கூறு, விமல ஞான சத்தியாக வெளிப்படுகிறது. ஞான சத்தியின் ஆயிரத்தில் ஒரு கூறு,
உயர்ந்த கிரியா சத்தியாக உதிக்கிறது.

கலந்திருக்கும் கருமலம் என்னும் ஆணவத்தின் ஏற்றக்குறைவால் ஆன்மாக்கள்,
விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என முத்திறப் படுவர். அந்த அழுக்கையும் அதனாலான துன்பத்தையும் தவிர்த்து உயிர்கட்கு இன்பம் வழங்கும் பேரருளால் இறைவன், தனது ஆதிசத்தியைப் பரம தூய மாயையில் பதிப்பன். பதித்ததும், உடனே ஐந்து பிரிவுகளாக விறுவிறு என்று அது விரிகின்றது.

நாதம், விந்து, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்த வித்தை எனப் பெயர் பெறும் அவைகளை
ஐந்து முதல்கள் என்றும், சுத்த தத்துவங்கள் என்றும் கூறுவர். தத்துவம் எனினும்,
கருவியெனினும், முதல் பொருள் எனினும் பொருள் ஒன்றே.

சாதாக்கிய தத்துவத்தில் அணுசதாசிவர் பதின்மர், வித்யேஸ்வரர் எண்மர் இருக்கின்றனர். சுத்த வித்தையில், ஏழு கோடி மகா மந்திரர் உளர்; அதன் கீழ்ப்பகுதியில், அபக்குவ மல விஞ்ஞானகலர் வாழ்கின்றனர். புண்ணியம் நண்ணினர், எண்ணுவர் இவைகளை.

வித்யேஸ்வரர் எண்மருள், முதல்வர் அனந்தர். அவர் சதாசிவத்தின் கட்டளைப்படி,
அசுத்த மாயையை விளங்கச் செய்வர். சுழல்கிறது உடனே அதன் சூழ்நிலை.

அப்போது செயல்படும் அம்மாயையில் காலம், நியதி, கலை, வித்தை, அராகம் எனும் தத்துவங்கள், விதி முறைப்படி ஒன்றன்பின் ஒன்றாக விளங்கும். அராக தத்துவத்தின் கீழ்ப்பாகத்திற்குப் பெயர் புருடன். இம்மாயையில் வசிப்பவர் ஸ்ரீகண்டர் முதலினோர். இவர்கள் பிரளயாகலரில் முதல்வர்.

ஸ்ரீகண்டர், அனந்தர் ஆணை பெற்று, மூலப்பகுதியை விளங்கச் செய்வர். அவ்வமயம்,
சித்தம், புத்தி, மனம், அறிகருவிகள், தொழில் கருவிகள் முதலியவற்றைத் தன்னுள்
அடக்கிய அகங்காரம், ஆகாயம், வாயு, தேயு, அப்பு, மண் எனும் சாதாரண தத்துவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக முறையே விளங்கும்.

மாயா தத்துவம் - மயக்கி விளக்கும்;
காலம் - இறப்பு, நிகழ்வு, எதிர்வு என மூவகைப்பட்டுக் காலத்தைத் நேர்வு செய்யும்;
நியதி - அவரவர் வினையை அவரவரே அநுபவிக்கச் செய்யும்;
கலை - ஆன்மாவில் உள்ள ஆணவத்தைச் சிறிது அகற்றும்;
வித்தை - உயிரின் ஞானத்தைச் சிறிது பிரகாசிக்கச் செய்யும்;
அராகம் - பெற்றதிலிருந்து பெறாததில் அவாவை உண்டாக்கும்;
புருடன் - விஷயத்தில் அழுத்தும்.

இந்த ஏழும் வித்யா தத்துவங்கள் என்றும் வழங்கப் பெறும்.

பிரகிருதி மாயை

இம்மாயை மூலப்பகுதியென்றும், ஆத்ம தத்துவம் என்றும் பெயர் பெறும்.
குணம், புத்தி, அகங்காரம் எனப் பிரியும் இதில், அகங்காரம், தைசதம்
எனும் தெளிவு, வைகாரிகம் எனும் செலவு, பூதாதிகம் தாழ்வு
என்று முத்திறப்படும்.

தைசத அகங்காரம், மனம், சித்தம் எனத் தெளியும். (சித்தம் சிந்திக்கும்;
புத்தி நிச்சயிக்கும்; அகங்காரம் 'யான், எனது' என்ற இறுமாப்பை விளைவிக்கும்;
மனம் எதனையும் பற்றும்).

மெய், வாய், கண், நாசி, செவி என அறிகருவிகள் ஐந்தும் இப்பிரிவில் அடங்கும்.

வைகாரிக அகங்காரத்தில் வாக்கு, கால், கை, எருவாய், கருவாய் ஆகிய தொழில்கருவிகள் அடங்கும்.

பூதாதி அகங்காரத்தில் விண், காற்று, தீ, நீர், மண் ஆகிய ஐம்பூதங்களும், முறையே அவற்றின் தன்மாத்திரைகளான ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தும் அடங்கும்.

விண் - எதற்கும் இடமளிக்கும்;
காற்று - சலித்துத் திரட்டும்;
தீ - சுட்டு ஒன்றுவிக்கும்;
நீர் - குளிர்ந்து பதம் செய்யும்;
மண் - கடினமாக இறுகச் செய்யும்.

சுத்தமாயையில் உள்ள சிவதத்துவம் - 5
அசுத்தமாயையில் உள்ள வித்யா தத்துவம் - 7
பிரகிருதி மாயையில் ஆன்ம தத்துவம் - 24

ஆக,
தலைமைத் தத்துவங்கள் 36 எனப்பெறும்.

தாத்துவிகம் (தத்துவ உட்பிரிவுகள்)

மண்ணின் கூறு - என்பு, தசை, தோல், மயிர், நரம்பு என 5.
நீரின் கூறு - சிறுநீர், குருதி, சிலேத்துமம், வியர்வை, சுக்கிலம் என 5.
தீயின் கூறு - இதய வெம்மை, கண்ணின் வெம்மை, உடல் வெம்மை,
செரிக்கும் செய்கை, பைத்தியம் என 5.
காற்றின் கூறு - பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்,
நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன் என 10.
விண்ணின் கூறு - அத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழுனை,
காந்தாரி, குகுதை, சங்கினி, சிகுவை, புருடன் என 10.
காமம், குரோதம், மதம், லோபம், மோகம் - 5
தொழில்கருவியின் தொழில் - பேச்சு, நடை, கொடை, விடுகை, இன்பம் என 5.
அறிகருவியின் செய்தி - சுவை, ஒளி, ஊறு, ஓசை, மணம் என 5.
வாக்கு - சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என 4.
குணம் - சாத்துவிகம், இராசதம், தாமதம் என 3.
அகங்காரம் - தைசதம், வைகாரிகம், பூதாதிகம் என 3.

ஆக, தத்துவ உட்பிரிவுகள் - 60.

அத்துவாக்கள்

உயிரின் விடுதலைக்கு உரிய பெருவழிகள் ஆறு. இவ்வழிகளை அத்துவாக்கள் என வழங்குவர். அவை மந்திரம், பதம், வன்னம் (வர்ணம்,எழுத்து), புவனம், தத்துவம், கலை என அறுவகைப்படும். வழி தவறாது ஆன்மா சென்றால் வாழ்வு பெறும். மந்திரம் முதலிய ஐந்தும் கலையில் அடங்கும்.

கலையில் அடங்கும் மந்திரம், பதம், எழுத்து, புவனம், தத்துவம், மற்றும் முறையே
அவற்றின் அதிதெய்வம்:
    நிவர்த்திகலை - 2, 28, 1, 108, 1 - பிரமன்,
    பிரதிட்டை கலை - 2, 21, 24, 56, 23 - திருமால்,
    வித்யாகலை - 2, 20, 7, 27, 7 - உருத்திரன்,
    சாந்திகலை - 2, 11, 3, 18, 3 - மகேசன்,
    சாந்தியாதீதகலை - 3, 1, 16, 15, 2 - சதாசிவம்

ஆக,
கலை - 5,
மந்திரம் - 11,
பதம் - 81,
எழுத்து - 51
புவனம் - 224
தத்துவம் - 36
அதிதெய்வம் - 5

நிவர்த்தி - உயிரின் மலத்தை ஒரு சிறிது நீக்கும்;
பிரதிட்டை - உயிரின் பரிபாகத் தகுதியைப் பதிவு செய்யும்;
வித்யா - ஆன்மாவில் விமல அறிவை விளங்கச் செய்யும்;
சாந்தி - உயிர்க்கு அமைதியை உண்டாக்கும்;
சாந்தியாதீதம் - மேலான அமைதி மேவ வைக்கும்.

மூன்று நிலை

இருள், மறதி, அறியாமை, துன்பம் எனும் கேவல நிலையில் இருந்தது ஆன்மா. அநாதி நித்தியமான ஆணவச் சார்பால், அவதியடையும் ஆன்மச் செய்தியில் இரக்கம் கொண்டனன் எம்மான்.

கேவலத்தில் இருந்து விடுதலை அடைய, தனு கரண புவனங்களைத் தந்தான். கன்மத்திற்குத் தக்கபடி இருளும் ஒளியும், அறியாமையும் அறிவும், மறதியும் நினைவும், துன்பும் இன்பும் கலந்த சகலநிலை என்னும் வையக வாழ்வில் ஆன்மாவை வைத்தான்.

இருள் கலவாத ஒளியும், அறியாமை கலவாத அறிவும், மறதி கலவாத நினைவும்,
துன்பம் கலவாத இன்புமான சுத்தநிலை எய்த வேண்டும் இந்த ஜீவன்.
கேவலம் - இருள்; சகலம் - பகல்; சுத்தம் - இரவு பகல் அற்ற இன்பமயமான நிலை.

'இரவு பகலற்ற இன்பவெளி யூடே
விரவி விரவிநின் றுந்தீபற'
- என்பது ஆன்மாவிற்கு இட்ட அருள்திட்டம்.

அதனை மறந்து, பொல்லா மனம் போன போக்கில் போகிறது ஆன்ம உணர்வு. இதனால் விளைந்த விளைவுகள் விபரீதமாகின்றன பாருங்கள்!

கருவிகளின் ஆட்டம்

சிறந்த நிலம் போல் உளது சிவம். நீர்போல் உளது ஆன்மா. நீருள் உப்புப்போல் உளது ஆணவம். நீர்மேல் எழும் காற்றுப்போல் உளது கன்மம்; காற்றால் எழும் அலைகள்போல் உளது ஆன்ம அறிவு.

காற்றைப் போன்ற கன்மத்திற்குத் தக்கபடி, விருப்பு, அறிவு, செயல்கள் மூன்றும்
விளையும். அம்மூன்றும் பிரமன், மால், உருத்திரர், மகேசர், சதாசிவர் எனும் ஐவரைச் செலுத்தும். பிரமன் அகரத்தைச் செலுத்துபவர்; மால் உகரத்தை நடத்துவர்; உருத்திரர் மகரத்தை இயக்குவர்; மகேசர் விந்துவைச் சுழற்றுவர்; நாதத்தைச் சதாசிவர் நடத்துவர்.

எழுத்துக்களுள் அகரம் அகங்காரத்தைச் செலுத்தும்;
உகரம் புத்தியைச் செலுத்தும்;
மகரம் மனத்தைச் செலுத்தும்;
விந்து சித்தத்தைச் செலுத்தும்;
நாதம் புருடனாகிய உயிரைச் செலுத்தும்.

இந்த எழுத்துக்களைப் பிரிப்பின்றி எண்ணும்போது, அவை, பிரணவமான ஓங்காரம் எனப் பெயர் பெறும். கடல் அலை எழுந்து வீழ்ந்து மீண்டும் எழுதல் போல், இவைகளால் அறிவு நிகழும். மறதியும் நினைவும் மாறி மாறி வரும். மெய், வாய், கண், நாசி, செவி எனும் கருவிகளை மனம், புத்தி, அகங்காரம், சித்தம் எனும் கரணங்கள் அசைக்கும். பம்பரம் போல் ஆன்மாவை இவைகள் என்றும் சுழற்றியபடியே இருக்கும். தாத்துவிகங்கள் அறுபதும், தத்துவங்கள் முப்பத்தாறும், ஆன்மாவை இங்ஙனம் ஆட்டிப் படைக்கும் தளைகள் ஆயின. பணியாளர் நிலையில் உதவ வந்த அவைகளை, பயன்படுத்திக் கொள்ள அறியாமல், அவைகட்கு அடிமையாகி அல்லலுறுகின்றது ஆன்மா.

தத்துவங்கள் ஒன்று பிறிதொன்று அறியா; தம்தம் குணங்களைத் தாமும் அறியா. கண்ணில் உள்ள புலன், கண்ணை அறியா. அதுபோல், அத் தத்துவங்கள் ஆன்மாவை அறியா. என்ன பரிதாபம் இது!

'தத்துவங்கள் சடம். உன் கன்மத்திற்குத் தக்கபடி, உன்னில் அவைகள் உள. இது
திருவருட் சம்மதம். அவைகளையும், அவைகளின் செயல்களையும் பகுத்தறிந்து,
அவைகளிலிருந்து நீங்கி நிற்க வேண்டிய அறிவு உன் சொருபம்' என்று,
குருமுகமாகி வந்த திருவருள், அரிய பல குறிப்பு வெளிப்பட அறிவிக்கும்.


(பதிப்பாசிரியர் குறிப்பு)
    அகார உகாரம் அகங்காரம் புத்தி
    மகாரம் மனஞ்சித்தம் விந்து; பகாதிவற்றை
    நாதம் உளவடிவாம்; நாடிற் பிரணவமாம்;
    போதம் கடற்றிரையே போன்று.
- மெய்கண்டதேவர் - சிவஞானபோதம்
(நான்காம் நூற்பாவின் எ.கா. செய்யுள்)

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா!
- மாணிக்கவாசகர் - சிவபுராணம்

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

தத்துவ ஒடுக்கம்

அதன்பின் புலன்களின் போக்கின் மேல் பற்றுதல் அகலும். பின்னர், மெய் வாய் கண் மூக்கு செவி எனும் அறிகருவிகளும், விடயங்களை அபகரிக்காமல் அகலும். பேச்சு, நடை, கொடை, விடுகை, இன்பம் முதலியன விளைவிக்கும் சொல், கால், கை, எருவாய், கருவாய் எனும் தொழில் கருவி ஐந்தின் தொடர்பு தொலையும். அறிகருவி, தொழில் கருவிகள் எனும் பத்திற்கும் இடமான பூதங்கள் ஐந்தும் இரியும். வீணான மூலப்பகுதி விறுவிறு என்று இப்படி விலகும்.

விடயங்களை நிச்சயித்து, விரும்பிச் சிந்திக்கும் கரண வாசனை கழலும். அறியாதது போலப் பொருள்களை அநுபவிக்கக் காட்டும் புதுமையும், மேலும் அநுபவிக்கக்
கருத்தை உண்டாக்கும் கால தத்துவமும் தோன்றாமல் கரக்கும்.

இவ்வளவுதான் அநுபவிக்க வேண்டும் என்று, அளவறிந்து வரையறுக்கும் நியதி நீங்கும்.
விடயங்களை விரும்பிப் பகுத்தறிந்து அநுபவிக்க, ஆன்மாவிற்கு இச்சை, ஞானம், செயல்களை எழுப்பும் இராகம், வித்தை, கலை எனும் மூன்றும் விலகும்.

ஐம்பொறிகளிலும் காற்றாடிபோல் சுழல, உணர்வைச் சுழற்றும் புருடன் நீங்கும்.
விடயங்களை அநுபவிக்கும் இடத்து, விடயம் என்றும், தான் என்றும் மயக்கும்
மாயை மடங்கும். வித்யா தத்துவங்கள் இங்ஙனம் விலகும்.

இவைகளைச் செலுத்தும் சுத்த தத்துவங்கள் ஐந்தும், அதன்பின் முறையே அகலும். பெத்தத்தில் இருந்த இச்சை, அறிவு, செயல்கள், சிவத்தின் மேல் செல்லும். தனிப்
பேரின்பத்தை இந்நிலை தரும். இங்ஙனம் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றும், தோன்றிய இடத்தே இறுதியில் ஒடுங்கும் என்று இவைகளை விளக்கிக் கணபதி செய்த இனிய உபதேசத்தைப் பாடிக் காட்டுகின்றார் நம் பாட்டியார்.

29. கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
பதவுரை:
கருவிகள் - முப்பத்தாறு தத்துவங்களும்,
ஒடுங்கும் - (ஒன்றன்பின் ஒன்றாய்) ஒடுங்கி (ஆன்மாவை) இன்புறுத்தும்,
கருத்தினை அறிவித்து - (கருத்தை அடியேன்) அறிய அறிவித்து (என்றவாறு).

நிலம் முதல் நாதம் ஈறான முப்பத்தாறு தத்துவக் கருவிகளும், ஒன்றன்பின் ஒன்றாய் ஒடுங்கி, முறையே தூயவெளியிலும், அருளிலும், சிவத்திலுமாக அடங்குதல்,
பேரின்பத்தை ஆன்மா பெறுதற்கே என்பது கருத்து.

செம்பில் களிம்புபோல், அநாதி தொட்டு ஆன்மாவில் கலந்து, பொருள் தன்மையால் ஒன்றாகி, பலவகை ஆற்றல் படைத்து, மகத்தான அறிவை மறைத்து, அநியாயம் பல செய்யும் ஆணவம், தன்னைக் காட்டாது; தலைவனையும் காணச் செய்வதில்லை. பாழும் இருளாய்ப் படரும் மும்மலத்துள் ஒன்றான மூலமல ஆற்றலை, அற்புத முதல்வன் முறையே அடக்கினன்.

(பதிப்பாசிரியர் குறிப்பு)

The Siddhantic Seers enumerate sixty external and thirty-six internal substances of our being. The outer tatvas are the movements of the physical vital planes of our being. Let us see how the inner mechanism functions.
The internal tatvas are three-fold. They are grouped as Atma tatvas (24), Vidya Tatvas (7) and Siva tatvas (5) or five principles of Divinity.

The meditative soul, in the state of equal and harmonious flow of energy, penetrates all the sheaths of body and reaches the state of emancipation as MeykandaThevar sings in this verse:
    மண்முதல் நாளம் மலர்வித்தை; கலாரூபம்
    எண்ணிய ஈசர் சதாசிவமும் நண்ணிற்
    கலையுருவாம் நாதமாம் சத்தியதன் கண்ணாம்
    நிலையதில்ஆம் அச்சிவன்தாள் நேர்.
- சிவஞானபோதம்
(ஒன்பதாம் நூற்பாவை விளக்கவந்த மூன்றாம் எ.கா. செய்யுள்)

"maNmuthal nALam malarvidhdhai kalArUpam
eNNiya Isar sathAsivamum naNNiR
kalaiyuruvAm nAthamAm saththiyathan kaNNAm
nilaiyathil Am ach -ivanthAL nEr"

The stalk of this flower - maNmuthal nALam - indicates the 24 Atma tatvas starting from the gross level of Earth principle and their related subtle principles like Smell for Earth, Taste for Water, Form for Fire, Touch for Air and Sound for Ether. The 7 Vidya tatvas (conditional elements) and Suddha Vidya tatva (Pure gnosis) of Siva
tatvas form the eitht petals. The other four principles of Divinity - Iswaram & Sathakiyam are the anthers; the Bindu or Sakthi and Nadham or Sivam are the ovary and ovules of that mystic flower. These ovules or seeds are also known as Mantras.

Let me quote 'Yogi Shuddananda Bharathi' to clarify further:

Begin quote:
Paramasivam, the Supreme transcendent Reality, is pure Satchidananda. Sakthi or Consciousness is His personality. There is no existence for Sakthi without Sivam and there is no manifestation for Sivam without Sakthi; they are like the Sun and its rays.

The duality of SivaSakthi is a polarity. The Supreme remains in the I am (Asmi of Vedanta) consciousness. From that bourgeons Aham, Idam (In this) consciousness. It is Unmani located in the pericarp of the Sahasrara.

It is Unmani located in the pericarp of the Sahasrara. Samani below that is the sound priciple - Nadam - and verily at the beginning was the Word or Logos and from that the Idam or This-consciousness manifested. This is called Sadakya Tatvam. From this evolves the Iswara tatvam which is the state of self-gathered active consciousness in which 'I' subjectivises 'This'.

Here begins Suddha Vidya Tatvam - the principle of pure cognition. The five forms of Maya are Time (kAlA), kalA (Limited power of doing), vidya (Limited Knowledge), Raga (attachment), Niyati (restraint). This along with Maya and Purusa, the soul, form the seven Vidya tatvas.

From this breaks out the Atma Tatva, 24 in number. These are the Prakriti tatvas of Sankyas, the principles of the embodied soul: Five elements, Five sensations, Five senses of Knowing, Five of action and the Four inner instruments viz Mana, Buddhi, Citta, & Ahankara.

These are the inner principles - 36 in number. The outer priciples are 60, being the movements of the physical vital planes of our being; altogether, there are 96 principles, which have to be scrutinized, purified and transformed by the force of Maya. These are portions of our being, undiscovered by Physiology and Pathology.

Siddhantha lays down the Sadhanas for their purification and perfection; the psychic force necessary for this transformation descends from the Mother-Grace of Sivam.
Unquote

As St.Meykandar sings, this has to start from bottom up - maNmuthal nALam or Muladhara to ManonmaNi.

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

இருவினை அறுத்தல்

நல்வினை தீவினைகள் என வினைகள் இரண்டு. இவைகளின் பயன் இன்பம் துன்பம். இவைகளை அனுபவிக்க, ஆன்மா பிறவி எடுக்கும். மேலும் கீழுமான உலகங்களை அடைய இறக்கும்.

மீட்டும் வந்து பிறக்கும். வினையின் பயனான உடலும், இன்பமும் துன்பமும் சடம். அவைகள் தாமே வந்து ஆன்மாவை அடையா. தேடிய சொத்தான அவைகளை அனுபவித்துத் திருந்த வேண்டும்; அது கருதிய அமலன், அவைகளை ஆன்மாவில் சேர்ப்பன்.

வந்த நோயை மாற்ற, மருந்தளிக்கும் வைத்தியன் போல், குற்றம் கண்டு தண்டிக்கும் கோவேந்தன் கொள்கைபோல் இருக்கின்றது இச்செயல்.

ஆன்மா வினைகளின் பயனை அனுபவிக்கும்; வித்தில் மரமும், மரத்தில் வித்தும்போல் தொடர்பு கொண்டு, மீட்டும் வினைகள் தோன்றுகின்றன. திருவருளை விரும்பிய அறிவுடன், செயல் செய்வார்க்கு ஆகாமியம் ஏற வழியில்லை.
ஞானிகளைப் புகழ்வார்பால் நல்வினை ஏறும்; இகழ்வார்பால் தீவினை ஏறும்; சஞ்சிதமாக இருந்த தம் இருவினைகளையும் இங்ஙனம் பிறர்பால் உதறிய பின், அந்த ஞானிகள்தம் சஞ்சிதம் அகலும். எனினும், கணபதிப் பெருமான் தன் கருணையைக் காட்டி, தம் கடிய வினையைக் கழற்றுதலையே விரும்புவர் அம்மேலோர். மகத்தான இது அவர்தம் மனநிலை.

இருவினை என்பதற்கு, வல்வினை எனப் பொருள் கொள்ளலுமாம். பிறப்பிற்கு ஏதுவாக ஆன்மாவின்பால் அமைந்திருக்கும் வினை, எளிதில் விலக்கத் தக்கது அன்று. ஆன்ம தவவலியையும் கடந்து நிற்கும் ஆற்றல் உடைய அது, இருவினையெனப் பெயர் பெற்று இருக்கின்றது.

அனைத்தும் ஒடுங்குதற்கு உரிய காலம், மகா சங்கார காலம் எனப் பெறும். அப் பேரூழியில், ஆன்மாக்கள் எல்லாம் கணபதி அருளால் காரண மாயையுள் ஒடுங்கும்; அவ்வமயம், அவ்வான்மாக்களின் எஞ்சிய வினைகளும், சூக்குமமாய்க் காரண மாயையுள் ஒடுங்கும்.

காரண மாயையில் ஒடுங்கிக் கிடப்பினும், மீட்டும் படைப்புத் தொடங்குங்கால், ஒடுங்கியிருந்த அவ்வினைகளே, உயிர்கட்குத் தனு கரண புவன போகங்கட்கு ஏதுவாக முளைக்கும்; அங்ஙனம் ஆகாதபடி, 'இருவினை தன்னை அறுத்து' என்ற நுட்பம்,
நுனித்து உணரத் தகுவது.

'வினையீட்டப் படுங்கால், மந்திரம் முதலிய அத்துவாக்களின் இடமாக, முறையானே மனம், வாக்கு, காயம் எனும் மூன்றான் ஈட்டப்பட்டு, தூல கன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெறும். பின்னர்ப் பக்குவம் ஆங்காறும் சூக்கும கன்மமாய்ப் புத்தி தத்துவத்தினிடமாக மாயையிற் கிடக்கும். அம்மாயை பற்றுக்கோடாக நின்று, புனருற்பவத்தில், தனு கரணம் முதலியவற்றிற்கு ஏதுவாய் வருமெனக் கொள்க' என்று சிவஞானபோத இரண்டாம் சூத்திர இரண்டாம் அதிகரணத்தில், மாதவச் சிவஞான யோகிகள் விளக்கம் செய்தல் ஈண்டு எண்ணத் தகும்.

ஐம்பெருந் தொழில்களுள் ஒன்றான மறைத்தல் தொழிலால், உயிர்களோடு உடனாகி நின்று, வினைப்பயனை நுகர்விக்கின்றான் விமலன்.

வினையெச்சமே பிறப்பைத் தருகிறது. பிறந்த பின், இறப்பு தவிர்க்க இயலாதது.

'இறப்பெனும் மெய்ம்மையை யிம்மை யாவர்க்கும்
மறப்பெனும் அதனின்மேற் கேடு மற்றுண்டோ' என்றார் கம்பர்.

பற்றற்று எய்தும் வீடுபேறு மிக அரியது. அதனை விட்டு, வினையெச்சம் உடையோரே உலகில் பெரும்பாலர். இறப்பில் வினையெச்சம் உளதாயின், உயிர்க்கு மீண்டும் பிறப்பு உண்டு; இலதாயின் பிறவாமையும் உளதாம். இவைகளை எல்லாம் எண்ணும்போதே, உய்தி கருதிய உயிர், பேறு கருதி, 'கணேசா கா! கணபதீ எளியேனைக் கா!' என்று கதறுவது இயற்கைதானே! அப்பெருமான்தான், நம் இருவினை அறுத்து இருள் கடிதல் இயலும் என்று உணர்த்தும் காலமே உய்திபெறும் காலம்.
    'விரிந்த சஞ்சித வினைகள் அன்புடன் நாம்
    விழிக்க வெந்தன; விரவும் இப்பிறப்பில்
    பொருந்தும் வல்வினை உடலுடன் அகலும்;
    புந்திசேர் அருள் வருவினை போக்கும்'
- என்று மணிமொழிப் பெருமானுக்குச் சிவம் அன்று வாய் மலர்ந்தது. இன்று ஔவையாரின் வினையை வீழ்த்திக் கருமலத்தை விலக்கியது கணபதி என்பதை, பின்வரும் ஓர் அடி எவ்வளவு திறம்படக் கூறுகின்றது! பாடிப் பாருங்கள்! என்ன இன்பம்!

30. இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
பதவுரை:
இருவினை தன்னை - நல்வினை தீவினையெனும் இருவினையின் பயனை,
அறுத்து - முழுதும் கெடுத்து,
இருள் கடிந்து - (வினைகளுக்கு வழி செய்த ஆணவ) இருளை அகற்றி (என்றவாறு).

(பதிப்பாசிரியர் குறிப்பு)
    இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி
    குருவென வந்து குணம்பல நீக்கித்
    தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்
    திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.
- திருமந்திரம் (5-1527)

'இரட்டை வினைகொடு
திரட்டு மலவுடல் இணக்கமற
ஒரு கணக்கை அருள்வதும்'
என்ற திருப்புகழ் - 'பெருத்தவசன வகுப்பின்' அடிக்கு,
அடியேன் உரை இவ்விடம் பொருந்தக் காண்போம்:
    புண்ணிய பாவம் இரண்டுள பூமியில்
    நண்ணும் பொழுதறிவார் சில ஞானிகள்
    எண்ணி இரண்டையும் வேரறுத்து அப்புறம்
    அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே.
தந்திரம் - 6 - 1647

Jnana is Knowledge of Good and Evil:
Good and evil, they are two in this world
As they seek God, some Jnanis know them;
As you cognize them two and uproot them
Then shall you perceive Lord's Abode Beyond.
The Seers realize that God is beyong good and evil,
beyond time and space.

நாகம் உடல்உரி போலுநல் அண்டச
மாக நனாவில் கனா மறந்தல்லது
போகலும் ஆகும் அரன்அருளாலே சென்
றேகும் டம்சென்று ருபயன் உண்ணுமே.
தந்திரம் - 8 - 2132
    In the Waking State Dreams are Forgotten;
    So it is Through Successive Lives:
    Even as the snake sloughs off its skin
    And another assumes;
    Even as the bird its shell leaves
    And another life pursues;
    In its waking state the Jiva forgets
    Happenings of the dream state;
    Thus does Jiva from one body to another migrate;
    Until with Grace of Hara
    It reaches where it is destined to be;
    And there experiences
    The Karmas two, good and evil.

    உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன
    கண்டு விடுஞ்சூக்கங் காரணமாச் செலப்
    பண்டு தொடரப் பரகாய யோகி போல்
    பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே.
தந்திரம் - 8 - 2133
    Cycle of Births and Deaths:
    Having experienced hell and heaven,
    Jiva leaves Subtle body;
    Entering Causal body its course continues;
    And unto the Yogi that transmigrates
    Enters yet another body;
    Thus entangled in cycle of birth and death.

    தான் அவனாகிய தற்பரம் தாங்கினோன்
    ஆனவை மாற்றிப் பரமத்து அடைந்திடும்
    ஏனை உயிர்வினைக்கு எய்தும் இடம்சென்றும்
    வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.
தந்திரம் - 8 - 2133
    The Birth Cycle ends only when Jiva Unites in God:
    The Jiva that realized
    "I" and "You" are one,
    Is in Tatpara state;
    Its course inherent diverting
    Will reach Param;
    The rest of Jivas
    Reaching their destined abodes
    In heaven and earth
    Will in sorrow wallow.

    இருவினையொப்பு எனும் நிலை
    சேர்ந்தே பின் நிர்வாணம்.

    இருவினை ஒத்திட இன்னருள் சத்தி
    மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக்
    குருவினைக் கொண்டருள் சத்திமுன் கூட்டிப்
    பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.
தந்திரம் - 8 - 2262
    Sakala Jiva'a Journey to Suddha State
    They reach the State
    When deeds good and bad
    Equable become (Iruvinai Oppu);
    When Sakti's Grace
    On them descends (Sathinipadam);
    When on the pedestal of Grace
    They thus get seated,
    Then with the aid of Guru Holy
    They reach the Presence of Sakti's Grace;
    Finally rid of the Primordial Mala (Anava)
    They reach the State of Suddha
    That no birth thereafter gives.

    தன்னையறியாது உடலை முன் தானென்றான்
    தன்னைமுன் கண்டான் துரியந்தனைக் கண்டான்
    உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்
    பின்னையும் வந்து பிறந்திடுந் தானே.
தந்திரம் - 8 - 2264
    Self-Realization Only in Turiya State--It Is Not Ultimate:
    Knowing not the Self,
    Jiva deemed body as the Self;
    When he saw the Real Self;
    He attained Turiya State;
    But even in that Turiya State,
    If he, Jiva, with Lord united not,
    He will again born be, here below.

    சாக்கிரந் தன்னில் அதீதந் தலைப்படில்
    ஆக்கிய வந்த வயிந்தவ மானந்த
    நோக்கும் பிறப்பறு நோன்முத்தி சித்தியாம்
    வாக்கும் மனமும் மருவல் செய்யாவே.
தந்திரம் - 8 - 2265
    Only With Turiyatita State Birth Cycle Ends
    If in Waking State
    The Jiva realizes the Atita State
    The Vaindavas (the Tattvas) that Maya caused
    Will their malevolence shed;
    The birth's whirl will cease;
    Goodly Mukti and Siddhi then attained;
    Speech and thought cease to be.
லலாடம் எனும் புருவமத்தியில் அவஸ்தை அனைத்தையும் அடக்கவல்ல ஞானியர்க்கே 'இரட்டை வினைகொடு திரட்டு மலவுடல் இணக்கமற ஒரு கணக்கை அருள்வதும்' நிகழும்.

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

நான்கு வழிகளில் நாற்பயன்

நம்பன் அருள்நிலையை நம்ப வேண்டும்; உணர்வில் நம்புதல் ஊன்ற வேண்டும். அடைய வேண்டும் நம் அமலனை என்னும் ஆர்வக் கனல் அதிகரிக்க வேண்டும். ஆற்றாமை மிக வேண்டும்.

ஆனைமுகப் பரமனை அடைய, நலஞ்சிறந்த வழிகள் நான்கு. பணிவழி, மைந்தன் நிலை, நட்பு நெறி, காதல் மார்க்கம் என அவைகளை அறிவித்துளர் அறவோர்.

மேதகு கோயிலில் மெழுக்கிடல், மலர் கொய்தல், அரிய மாலை தொடுத்து அணிதல், பரனைப் பாடல், தொண்டரைத் தொழுதல், தொண்டு செய்தல் முதலியன பணிவழி எனப்பெறும். இந்நெறியில் பயில்பவர், வித்தகக் கணபதி உலகில் வீற்றிருக்கப் பெறுவர். இது சாலோகபதவி எனப்பெறும்.

நாண்மலர், நறும்புகை, திருவிளக்கு, திருமஞ்சன நீர் முதலிய வழிபடு பொருள்களைத் தேடிப் பெறுதல்; ஐவகைத் தூய்மை செய்தல், இறைவருக்கு இடம் உருவம் முதலியன அமைத்தல்; அன்பினால் வழிபடல்; அழல் ஓம்புதல் முதலியன மைந்தன் நிலை. பயனான இந்நெறியிற் பயில்பவர், பரம கணபதியின் அண்மையில் இருக்கும் பதம் அடைவர். இது சாமீப்யம் ஆகும்.

பொறிகளைப் புலன்வழி போகாமல் தடுத்தல்; இருவகை மூச்சையும் அடக்கல்; ஆதார முறையை அறிதல்; அங்கங்கு வாழும் கடவுளரை வழிபடல்; உச்சி நடுவில் சேர்தல்; அங்குள கமல அரும்பை மலர்வித்தல்; மதி மண்டலத்தை இளகச் செய்தல்; அதனிடத்து உள்ள அமுதை உடல் முழுவதும் பரவச் செய்தல்; பேரொளிப் பிழம்பாம் விநாயக உருவை நயமுற எண்ணியிருத்தல்; இவை நட்புநெறி அல்லது சாரூப பதவி எனப் பெறும். உயர்ந்த இந்நெறியை மேற்கொள்வோர் ஓங்கார கணபதியின் உருவம் அடைவர். பணிவழி, மைந்தன் நிலை, நட்பு நெறி மூன்றானும் அடையும் நற்பேறு பதமுத்தி என்று பெறும்.

நூல்களின் கொள்கையை ஆய்ந்து உணர்வர், உலகு, உயிர், இறையெனும் மூன்றை உணர்த்தவல்ல சிவஞானத்தையே சிந்திப்பர். காண்பான், காட்சி, காணப்படு பொருள் மூன்றும் தோன்றாது போக, கட்டற்ற கடவுளில் கலந்து நிற்பர்; இதுவே காதல் மார்க்கம். இவர்கள் பெறுவது சாயுச்சியம் என்ற பரமுத்தி.

மற்றொரு வகை

முப்பத்தாறு தத்துவங்களையும் நியதி களைவது பணிவழி; அதன்பின், தன்னை அருளால் அறிந்து, அவற்றின் முடிவில் நிற்பது சாலோக பதம்.

ஆங்குத் தனக்கு அறிவித்த அருளைத் தரிசித்து, அதன்பின் அருள் எனவும், தான் எனவும் பிரித்துப் பாராது, தற்போதத்தை அடக்குவது புத்திரவழி; அருளே வடிவான அதன் பயன், சாமீப பதம்.

அங்ஙனம் அமர்ந்து, தற்போதம் அணுவளவும் தோன்றாமல் ஒழிப்பது நட்பு வழி; பரையே தான் ஆன அதன் பயன், சாரூப பதம்.

பரையும் விலக உதிக்கும் பரம ஆனந்தம், காதல் வழியெனப் பெறும். அந்த இன்பத்தின் அதீதம் ஆவது சாயுச்சிய பதம். ஞான நூல்கள், அரிய நுட்பம் பல தோன்ற இவைகளை அறிவுறுத்துகின்றன.

அருளார்ந்த ஆனைமுகப் பரமன், இந்நான்கு வழிகளையும், அதன் பயனையும் அருளினன் என்கிறது பின்வரும் ஓர் அடி.

31. தலமொரு நான்கும் தந்தெனக்கருளி

பதவுரை:
தலம் ஒரு நான்கும் - (சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும்
வழிகளால் வரும்) ஒப்பற்ற (சாலோகம், சாமீபம், சாரூபம்,
சாயுச்சியம் எனும்) நான்கு இடங்களையும்,
தந்து எனக்கு அருளி - அடியேனுக்கு இனிது காட்டியருளி (என்றவாறு).

சரியையான உரு; கிரியையான அருவுரு; யோகமான அரு; ஞானமான உள்ளக்கண் எனும் நான்கு இடங்களையும், பெறற்கு அரிய அடி ஞானத்தையும் அடியேன் பெற வைத்து என்றும் பொருள் கொள்ள இங்கு இடமுண்டு.

'விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்பு மலர் காய்கனி போல் ஆகும் பராபரமே'
என்பர் தாயுமானார்.

(பதிப்பாசிரியர் குறிப்பு)

திருமந்திரம் ஐந்தாம் தந்திரத்தில் (பாடல் 1443 - 1513) பதமுத்தி, பரமுத்தியான நான்கு வழிகள் நன்கு விளக்கப் பட்டுள்ளன.

    சார்ந்த மெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர்
    சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
    ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
    தேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே.


சாலோகம், சாமீப்யம், சாரூபம் என்பவை இட்டுச் செல்லும் பதமுக்தி கடந்த, சாயுஜ்யம் என்ற பரமுக்திக்கும் அடிப்படை 'யான் எனது' என்ற நிலை கடத்தல் மட்டுமே.

சாயுச்சிய நிலையே துறவறமாவது. அதென்ன பதமுக்தி மற்றும் பரமுக்தி?

பரம்பொருளானது, பிறந்திறந்தோய்ந்திருக்கும் உயிர்களின் மேல் கருணை கொண்டு அவற்றைத் தன் திருவடியுடன் ஒன்றாக்கிக் கொள்வது அறக்கருணையெனில், விட்டுவிலகி வீடுபேறு மட்டுமே குறியெனக் கொள்ளாமல் மற்றீண்டு வரும் உயிர்களின் மேல் கொள்வது மறக்கருணையாகும்.

சில உயிர்கள் சிலகாலம் திருவடிபேற்றில் திளைத்தும் தத்தம் வினைப் புசிப்பின்படி
மீண்டும் வரும். மீண்டுவாரா முக்தி பரமுக்தியெனில், அவசியம் வருகையில் அப்படி மீண்டும் வரும் நிலைக்கு பதமுக்தியென்று சொல்வர்.

சாலோகம் - ஈசனவன் கூட்டத்தில் அவ்வுலகில் வாழ்வது
சாமீபம் - ஈசன் சமீபத்தில் அவன் ஆடும்பாதமடி புனிதவதியார் போல் வாழும் பேறு
சாரூபம் - ஈசனின் வடிவே தாமுமெய்தி வாழ்வது
சாயுச்சியம் - ஈசனே தன்னுள் கலந்து தான் அவனாகிவிட்ட அத்துவித நிலை.

சாரூபம் வரை பேறுபெற்ற உயிர்கள் மீண்டும் இறங்கிவருவது சொல்லக் கேட்கிறோம். இரண்டறக் கலந்துவிடல் பரமுக்தி. அவ்வளவுதான்.

முக்திக்கேற்ப பிரிபவை மார்க்கங்கள் என்பர்:

அவை முறையே:
தாசமார்க்கம் - என் கடன் பணிசெய்து கிடத்தலே என்றிருத்தல்.

சத்புத்ரமார்க்கம் - ஆணை நமதே என்று வேல் தூக்கும் உரிமை!
கவனிக்க:அவ்வழி பிறந்தோரெல்லாம் சத்புத்திரரே.

சகமார்க்கம் - இது நம்ம ஆளு என்ற பாவனையிது. வன்றொண்டர் வழி.

ஞானமார்க்கம் - அரவிந்தர் சொல்வது போல் லேசர் பார்வை கொண்டவரிவர்.
முடிந்தமுடிவாய் மூட்டை கட்டிக் கொண்டு காத்திருப்பவர்.

சைவக் குரவர் நால்வரையும் மேற்சொன்ன மார்க்கரீதியிலான அணுகுமுறையில் அடக்குவதென்பது இயலாதெனினும், பண்டு தொட்டு வரும் ஒருபுரிதலுக்காகச் சுட்டுகிறேன். அதுவும் அவர்களே தாம் பொழிந்த நிறைமொழிகளான மறைமொழிகளூடே குறிப்பால் உணர்த்துவதிலிருந்து:

என்கடன் பணிசெய்து கிடப்பதே என்பதும், புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம்தர வேண்டும் என்பதும் அப்பர்பெருமானது விண்ணப்பம். அது தாசமார்க்கத்தின் உன்னதத்தைச் சுட்ட வந்தது. சரியை என்றும் சொல்வர். இது சாலோக முக்தி.

'வேதவேள்வியை நிந்தனை செய்துழல்' கூட்டம் கண்டு பொங்கிய திருமகனார்
பாலறாவாயரான எம்பெருமான் சம்பந்தர் சத்புத்திரமார்க்கம் சுட்டுபவர். கிரியை என்றும் சொல்வர். உலகியல் சுழற்சி பாதிக்கும் வகையில் அசுரசக்திகள் மிகும் போதெல்லாம் வேலெடுத்து இரங்கிவரும், இறங்கிவரும் குழந்தையது. இது சாமீப்ய முக்தி. குழந்தை தகப்பனுக்கென்றும் அண்மையில் அல்லவா இருக்கும்!

'இவரலாது இல்லையோ பிரானார்? அட போய்யா' என்று ஈசனையே ஸ்நேகித்த, அவரையே காதலியிடம் தூதனுப்பிய சுந்தரர் சுட்டுவது யோக மார்க்கமெனும்
சகமார்க்கம். இது சாரூபம். ஆலாலசுந்தரர் என்று ஆடியில் தோன்றிய ஈசனின் வடிவே அவர்.

மாணிக்கவாசகர் ஞானமார்க்கம். அதுவே சன்மார்க்கம். எல்லாப் பிறப்பும்
பிறந்திளைத்து, 'மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்' என்று
முடிந்தமுடிபாய் மூட்டை கட்டி விட்ட மணியது. 'தெருப்பாடல் உவந்தெனையும்
சிவமாக்கும் தெய்வம்' என்று சன்மார்க்கவழியே கரைந்துபோய் விட்ட வள்ளலாரையும் சுட்டலாம். சீவன் குறுகிச் சிவமாகும் இந்த மற்றீண்டுவாரா இறுதி நிலையே சாயுச்சியமாகும் பரமுக்தியாகும்.

    சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல்
    சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதற்
    சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
    சாயுச் சியமனத் தானந்த சத்தியே!
திருமந்திரம் - 1513
    Sayujya is the state of Jagra-Atita, the Beyond-consciousness;
    Sayujya is to abide for ever in Upasantha, the peace that passes all
    understanding;
    Sayujya is to become Siva himself;
    Sayujya is to experience the infinite power of inward bliss,
    Forever and ever!

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

மாயை நிவாரணம்

தூயது, தூய்மையில்லாதது, மூலப்பகுதி என மாயை மூன்று எனலை முன் கண்டோம்.
முதிர்ந்த உலகெலாம் தோன்றுதற்கு, இவைகளே முதல் காரணம். கணபதிப் பெருமான்
கட்டளைப்படி, தூய மாயையின் கீழ், தூயதல்லா மாயை தோன்றும்; மூலப்பகுதி,
அதனிலிருந்து முளைக்கும்.

மாயை என்றும் மன்னியுளது. அது அருவம். பொருள் தன்மையால் ஒன்று. உலகிற்கு
வித்து. படர்ந்து எங்கும் பரவியது. இறைவனது சடசக்தி. உடல் முதலியவற்றிற்கு முதல் காரணம். ஆன்மாவின் கட்டு, மெய் இயல்பிற்கு மாறான உணர்வைத் தருதலின்,
மயக்கமும் செய்யும். மயக்காதது தூய மாயை. உணரத் தக்க இச்செய்தி, என்றும் நம்
மனத்தில் இருத்தற்கு உரியது.

இவைகளை ஊன்றி உணர, உள்புல நுட்பம் பல வெளிப்படும்.

32. மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

பதவுரை:
மலம் ஒரு மூன்றின் - (ஆணவம், கன்மம், மாயை ஆகிய) மும்மலத்துள் ஒன்றான,
மயக்கம் அறுத்தே - (மாயாமலத்தின்) மயக்கை (அடியொடு) அகற்றி (என்றவாறு).

பதினெட்டாம் அடியில், மாயாது பெருகும் பிறவியில் இருந்த மயக்கத்தை அறுத்தான்
என்றார். முப்பதாம் அடியில் இருவினை விடுத்தான்; இருளைக் கெடுத்தான் என்றார்.

இங்கு, மும்மலத்துள் ஒன்றான மாயா மலத்தில் ஆன்மா மயங்குதலை, அடியோடு
தொலைத்தான் என்னும் அருமை எண்ணற்கு உரியது.

பிஞ்சாய் இருந்தபோது, ஓடும் வித்தும் பிரிபடாது இருந்தன; பழமான நிலையில்,
ஓடும் வித்தும் பிரிபடும். அதுபோல், அறிவு முதிராப் பருவத்தில் பிரிபடாது இருந்தது
மும்மலம். அறிவு முதிர்ந்த அமயம், புறமிருந்து போர்க்கும் மாயை கன்மங்களும்,
ஆன்மாவில் மருவிய முளையான ஆணவமும், அந்நியமாய் நீங்கும்; ஆகாமியமும்
அழிவெய்தும்.

காதற்ற ஊசியாயின், நூலிருந்தும் பயனில்லை; அதுபோல், தற்போதம் தவிர்ந்தார்க்கு,
தொடர்பு எதனாலும் தொல்லை இல்லை; அவர்கட்கு, ஆசை நாசமே ஆனந்தம்.
இது இங்குக் கருதற்கு உரியது.

'வணங்கி நிற்போர்க்கருள் உதவும் எம்பெருமானை, எவ்வுயிர்களும் கொடு மாமலம்
ஒருவி யன்புரு வாகி யடங்கவைத்து ஆட்கொளும் உகள பங்கய பாதனை'
- எனும் விநாயகர் பிள்ளைத்தமிழ், இங்கு நம் நினைவிற் புகுந்து நிழலிடுகின்றது அல்லவா?

கதவடைப்பு
குறைவிலா நிறைவான அறிவானான் அமலன். குறையே நிறைந்த அறிவுடையது ஆன்மா. அடியோடு குறைகளை அகற்றல் வேண்டும். அதற்கென்றே, உடல் கரண புவன போகங்களை, உயிர்கட்குப் பெருமான் உதவியுளன்.
உதவி கிடைத்த பின், பிழைகளை அகற்றுவதற்கு ஆன அனுபவ அறிவை அடைய, உலகில் உயிர்க்கிறது உயிர். அதற்கென்றே உடலை - கரணங்களை ஊக்குகின்றது; தன் இச்சை, அறிவு, செயல்களை எழுப்புகின்றது; அரிய செயலைப் புறவுலகில்
ஆற்றுகின்றது. அனுபவம் விளைய, புறச்செயல் மட்டும் போதுவது இல்லை. புறவுலக போகத்தைத் துய்த்தற்கும், அவைகளை ஆக்கையின் அகத்தில் சேர்த்தற்கும், ஐம்புலக் கதவுகள் வாயிலாக அமைந்திருக்கின்றன. ஆன்ம உணர்வு புறம் போகாதபடி, அக்கதவுகளை அடைத்து விடுவதே அருமையான வழி.

ஒன்பது வாயில்

கண் எதிரில் படுகின்றன, போக அனுபவக் கழிவுகள்; அவைகள் வெளிப்படற்கு உரிய வழிகள் ஒன்பது. இவைகளை, ஒன்பது வாயில் என்று ஓதுவர். நவத்துவாரம் என்பது வடமொழி மரபு.

காமிக்குக் குறிவழி கீழிறங்கி விரயமாகும் விந்து, ஐம்புலக் கதவை அடைக்கும் அறிவுடையோர்க்கு, சிவசக்திக் கனலால் மேலேறும்; மகிமையுள சுழுமுனை வழியே போய், மகத்தான அமுதமாக மாறும்.

இதற்கென்று ஓரெழுத்து மந்திரத்தை உருவேற்றுவர். பிராண ஆயாமம் செய்வர். இதனால், உலக போகம் துய்க்கும் மனம் ஒடுங்கும்; ஒன்பது வாயிலும், ஐம்புலக் கதவுகளும் தாமே அடைபடும்.

உயர்ந்த இந்நிலையை எய்தினார் உடலுள், ஞான ஆகாய ஒளி விளங்கும்; அருள் அறிவு தித்திக்கும்; சிவபோகம் சித்திக்கும். என்ன அற்புதமான செய்தி! ஆனைமுகப் பரமன் இவைகளையும் தமக்கு அறிவுறுத்தினன் என்கிறார், நமது ஔவையார்.

33. ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
34. ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

பதவுரை:
ஒன்பது வாயில் - (இருகண், இருசெவி, நாசியின் இருதுளை, வாய், எருவாய், கருவாய் எனும்) ஒன்பது (உறுப்புகளின்) வழிகளையும்,
ஐம்புலக் கதவை - ஐம்பொறிகளான கதவுகளையும்,
ஒரு மந்திரத்தால் - ஒப்பற்ற (ஓங்கார) மந்திரத்தால்,
அடைப்பதும் காட்டி - (புருடனான ஆன்மா வெளியே போகாதபடி) அடைப்பதையும் காண்பித்து (என்றவாறு).

நீடித்து உடலை நிறுத்தி வைக்க முடியாது; உரிய வாயில், அதற்கு ஒன்பது உள்ளன அல்லவா! அதன் வழி உயிரோ ஒருநாள் ஓடிவிடும்.

ஐம்புலக் கதவுகளை அடிக்கடி திறக்க, ஒன்பது வாயிலிலும் போக்குவரவிற்கு இடம் பிறக்கின்றது. அங்ஙனம் ஆகாதபடி, உறுதி உரைத்த முறை இது.

27, 28 - ம் அடிகளில் 'ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக்கருளி' என்றார். அ·து, உரிய புலனை அடக்கும் உபாயம்; இங்குக் கூறியது, பொறி புலன்களைச் செயலற்றனவாகச் செய்யும் செய்தி. அடக்கும் உபாயம், ஞானசக்தியால் அமையும்; அடைக்கும் செய்தி, கிரியாசக்தியால் ஆவது.

இந்த வேற்றுமைகள் இங்கு நினைக்கத் தகுவன. என்ன அற்புதமான அனுபவம்!

    'பொள்ளல் இவ்வுடலைப் பொருளென்று
    பொருளும் சுற்றமும் போகமும் ஆகி
    மெள்ள நின்றவர் செய்வன எல்லாம்
    வாராமே தவிர்க்கும் விதியானை'
- எனும் சுந்தரர் தேவாரமும்,

    'ஓங்காரத்(து) உள்ளொளி யுள்ளே உதயமுற்(று)
    ஆங்காரம் அற்ற அனுபவம் கைகூடார்
    சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார்
    நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே'
    - எனக் கவினும் திருமந்திரமும் இங்குக் கருதத் தகும்.


ஆதார நிலை

யோகம் இருவகை. அவை ஆதாரம், நிராதாரம் எனப் பெறும். இந்த இரு நிலையும்,
சிவகணபதி திருவடியில் ஆன்மாவைச் சேர்ப்பிக்கும். குதம், குறிகளின் இடையில் மூலாதாரம் உளது. எதற்கும் மூலர் என்பதற்கு ஏற்ப, இம் மூலநிலத்தில் கணபதி
இருக்கின்றார். பயனான இதனை இன்னும் பாருங்கள்!

குறிமூலத்தில் சுவாதிட்டானம்; இங்குப் பிரமதேவர் இருக்கின்றார். உந்தியில் மணிபூரகம் உளது; தெய்வம் இதற்குத் திருமால்.

இதயத்தில் அநாகதம் இருக்கிறது; உருத்திரர் இங்குத் தலைவராக உளர்.

வித்தகக் கண்டம் விசுத்தி எனப் பெறும்; இங்கு மகேசர் இருக்கின்றார். ஆக்ஞை, புருவநடுவில் அமைந்து இருக்கின்றது. சாரும் இந்த இடத்தின் தலைவர் சதாசிவர்.

ஆறாகிய இந்த ஆதாரங்கள், வீணாத்தண்டின் அடியிலிருந்து நட்டுவைத்த அங்குசம் போல், புருவநடுவாம் சுழுமுனைவரை நீடிக் கூடி நிற்கின்றன.

ஆதாரங்களில் இருக்கும் திருவுருவங்களை, நியதிப்படி அழுந்த நினைக்க நினைக்க, அந்நுண்ணிய வடிவுகளில், முறையே ஆன்ம உணர்வு கலந்து கரக்கும். அந்நிலையில் நினைவானும், நினைபொருளும், நினைவும் நீங்கும். இனிய இது, ஆதார யோகம் எனப் பெறும்.

இந்நிலை கைவந்தபின், கற்பனை கடந்தவன், கலந்து எதனிலும் கலவாதான், அகண்டன் எனும் அந்த அருள் சக்தியாளனை, உள்ளக் கண்கொண்டு உணர வரும். அதன் பின், 'அவன் வேறு நான் வேறு' எனும் நினைவு நீங்கும்; முத்திக்கு உரிய மோனம் சித்திக்கும். இதயத்தில் இறைநிலை, நிலைபேறாக நிற்கும். இது நிராதார யோகம் எனப்பெறும்.

அங்குசத்தால் யானையை அடக்கும் பாகனைப்போல், பிராணனை இடை பிங்கலை
வழி விரயம் செய்யாமல், ஆறு ஆதார வழியே செல்லுமாறு அடக்குகின்றனர் யோகியர். உள்ளநுபவ இந்த உண்மையைக் கணபதி ஓதுகின்றார். ஓதிய அருமையை, பின்வரும் அடிகளில் பெரிது காண்கிறோம்.

35. ஆறாதாரத்து அங்குச நிலையும்
36. பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

பதவுரை:
ஆறு ஆதாரத்து - ஆறு ஆதாரங்களில்,
அங்குச நிலையும் - அங்குசம் போன்ற நிலையையும்,
பேறா நிறுத்தி - நிலை பெயராமல் நிற்கச் செய்து,
பேச்சு உரை அறுத்து - பேசும் பேச்சை விடச்செய்து (மௌனியாக்கி)
(என்றவாறு).
வாழ்க்கையில் ஊடுருவி வரும் இன்பத்தில் உருளார், துன்பத்தில் துவளார்,
இவ்விரண்டையும் ஒப்ப எண்ணுவர்; அதன் மூலம் அருளறிவு பெறுவர்; தேர்ந்த
இதனால் திரிகரண மவுனம் தேர்வர்; இ·தே வீடுபேற்றிற்கு வேண்டப் பெறும்.

'மோனம் என்பது ஞான வரம்பு' என்பது முதுமொழி.

‘சேவிக்கும் மந்திரம் செல்லும் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதாரம் ஆவன
பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குசம் ஆமே'
- என அங்குசம் குறித்துத் திருமூலர் குறிப்பிடும் அனுபவம் இங்கு ஆய்தற்கு உரியது.


இடைபிங்கலையின் எழுத்தறிவித்தல்

மூன்று கலை

சூரியன், சந்திரன், அக்கினி என்னும் நாடிகள் மூன்று உள்ளே ஓடுகின்றன. அவைகளை பிங்கலை, இடைகலை, சுழுமுனை என்றும் கூறுவர். இடைகலை என்பது இடது நாசியில்; பிங்கலை வலது நாசியில்; இப்படி இரு நாசியிலும் போக்குவரவு செய்யும் சுவாசம். இடகலை உடலின் இடப்பாகத்தும், பிங்கலை தேகத்தின் வலப்பாகத்தும் இருப்பது போல், சுழுமுனை இந்த உடலின் நடுவில் இருக்கிறது.

பிராணன் அசைவே சித்த அசைவு. அதனால் பிராணனைத் தம் வயப்படுத்தல்
தக்கது. பிராணாயாமத்தில் வெளிவாயுவை உட்கொள்ளல் பூரகம்; உட்கொண்டதை
உள்நிறுத்துவது கும்பகம்; கும்பித்ததை வெளிவிடுவது இரேசகம் எனப்பெறும்.

பிங்கலைக்கு உரிய எழுத்து அகரம்; இடகலைக்கு உரியது உகரம்; அக்கினி கலைக்குரியது மகரம். சிரத்தில் உளது ஆயிர இதழ்க் கமலம். அரிய எழுத்துக்களை, முறையே குருமுகமாய் அறிந்து கொள்ள வேண்டும். வழி முறை தெரிந்தால், கபால வாயிலும் விளங்கும்.

இடைகலை, பிங்கலை இடையறாது நிகழ்தலின், உடலில் நிற்கிறது உயிர். 'ஔவையே! நீ அந்த இருவழி இலங்கும் பிராணவாயுவை நிறுத்து. அவைகளைச் சுழுமுனை வழியே செலுத்து! உச்சி ஓட்டில் ஞானவெளி உளது; உயர்ந்த அதனொடு உறவாடல் செய்!' என்று உபதேசம் செய்தானாம் பெருமான். என்ன ஆனந்தம்!

37. இடைபிங் கலையின் எழுத்தறிவித்துக்
38. கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

பதவுரை:
இடை - இடைநாடிக்குரிய ஓரெழுத்து மந்திரத்தையும்,
பிங்கலையின் எழுத்தறிவித்து - பிங்கலை நாடிக்குரிய மந்திரத்தையும் (ஐயம் திரிபற)
அறிவித்தருளி,
சுழுமுனைக் கடையில் - அக்கினி கலையான சுழுமுனை நாடியின் முடிவில்,
கபாலமும் காட்டி - (காணத்தக்க) பிரமரந்திரத்தையும் காண்பித்தருளி (என்றவாறு).

'ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்து
ஏனை வழிதிறந்(து) ஏத்துவார்க்(கு) இடர்
ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே'
- எனும் ஞானசம்பந்தர் தேவாரம் இங்கு நினைவிற்கு வருகிறது அல்லவா!


(பதிப்பாசிரியர் குறிப்பு)

எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணி நிற்போரே.

Rouse All Kalas and Reach God

All Kalas from the Left and Right Nadis
Pass through the Central Nadi;
Kindle the Kundalini Fire in Muladhara;
They reach the Cranium at top,
To pay homage at the Feet of the Great One.
(Tirumantiram - Verse 3-857 - Chandra Yoga)
(English rendering - Dr.B.Natarajan)

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

பேசா மந்திரம்

பயனான மாயையில் மிளிர்கின்றது பரிக்ரக சக்தி. பாம்புருவம் படைத்து, மூலாதாரத்தை இடம் கொண்டு, தூங்கும் நிலையில் தொங்குகின்றது இது. யோகியர் இடத்தில் மட்டும், விழித்தெழுந்து மேல் நோக்கும். இதற்குக் குண்டலினி எனவும் பெயருண்டு. அரிய யோகிகள் இதனை அறிவர்.

மூலாதாரமும், சுவாதிட்டானமும், அக்கினி மண்டலம்; மணிபூரகமும், அனாகதமும் சூரிய மண்டலம்; விசுத்தியும், ஆக்கினையும் சந்திர மண்டலம் எனப் பெறும். இங்ஙனம் ஆறு ஆதாரங்கள், இரண்டு இரண்டாய்ப் பிணைந்து இருக்கின்றன. இந்த மூன்று மண்டலத்தினும் ஊடுருவிச் செல்லும் தூண்போல், குலவித் தொங்கி எழுகிறது குண்டலினி.

பிராணவாயு கும்பகம் ஆக, மூலக் கனல் மூண்டெழும். தகதக எனும் கனல் வெம்மைக்குத் தக்கபடி, மேன்மைக் குண்டலினி மேல் நோக்கும். அவ்வளவுதானா?
மந்திர நுட்பத்தை நாவால் எழுதி, அவைகளை மனம் உணர வழி செய்யும்; அரிய இச்செய்தியை பின் வரும் அடிகள் அறிவுறுத்துகின்றன.

39. மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
40. நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி

பதவுரை:
மூன்று மண்டலத்தின் - மதி, பரிதி, தீ எனும் மூன்று மண்டலங்களினும்,
முட்டிய தூணின் - முட்டிச் செல்லும் வீணாத் தண்டம் போல்,
நான்று எழு பாம்பின் - தொங்கி நிற்கும் பாம்புருவக் குண்டலினியின்,
நாவில் உணர்த்தி - (உரைக்கத் தக்கனவற்றை) நாவால் உணரச் செய்து (என்றவாறு).

    'மூல நிலத்தில் அதோமுகமாய்
    முகிழ்த்து விழியின் பொடுதுயிலும்
    மூரிப் பாம்பைக் கால் அனலை
    மூட்டி யெழுப்பி நிலம்ஆறும்
    சீல மொடும்போய்த் தரிசித்துச்
    செழுமா மதியின் அமுதகடல்
    தேக்கித் திளைத்தங்(கு) அசைவறுமோர்
    தெய்வத் தவத்தோர் உளவிழியில்
    காலும் தீபம் மினல்பந்தம்
    கடிகூர் விரிசு கதிர்மதிபோல்
    காட்டும் ஒளியாய், இவையாவும்
    கடந்தாங்கு அழிவில் பேரொளியாய்
    சால விளங்கும் விந்துவெனும்
    தடமா மயிலோய் தாலேலோ
    தமரக் கடலைக் கடைந்தமுதம்
    தருவோன் மருகா தாலேலோ'
- என்று சிதம்பர அடிகள் கூறும் சந்நிதிமுறைக் குறிப்பு, இங்குக் குணிக்கத் தகும்.


(பதிப்பாசிரியர் குறிப்பு)

    மூன்று மண்டலத்தினும் முட்டிநின்ற தூணிலும்
    நான்ற பாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்
    ஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்
    தோன்றும்ஓர் எழுத்துளே சொல்ல எங்கும் இல்லையே!
- சிவவாக்கியர் - அறிவுநிலை - 96

    எருவிடும் வாசற் கிருவிரன் மேலே
    கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
    உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்
    கருவிடுஞ் சோதி கலந்து நின்றானே.
    - திருமந்திரம் - 3-584, பிரத்தியாகாரம்

Kundalini Yoga Ends Birth

Two finger length above the anus
Two finger length below the sex organ,
Lies the Kundalini Fire
If you can meditate on the light
That burns there,
You shall be One with Lord,
Who all births ends.

    கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித்
    தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
    மண்டல மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
    பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே.
- திருமந்திரம் - 3-612, தியானம்

Perfect Meditation Leads to Immortality

Having abated not in the rules of vows,
The Yogi that has to mediate learned,
Coursing Kundalini through spinal column
And passing Mandalas Three with felicity equal
He in fleshy body forever lives.
(English rendering - Dr.B.Natarajan)

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)


பேசும் மந்திரம்

இடைகலை, பிங்கலை, சுழுமுனைகளின் சுவாசத்தால் உண்டாகும் சத்தமே அஜபா
(ஜபிக்காமல் எழும் ஒலி) எனப்பெறும். 'ஸோ' எனும் அசபையைச் சிவநாமம் எனச் ஜெபிப்பர். பிராணனை உட்கொள்ளும்போது ஸோ என ஏன்று, ஹம் என நிறுத்தித்
தியானித்தலால், இது ஸோஹம் எனப் பெறும்; இது ஹம்ஸ மந்திரம் எனவும்,
சிவோஹம் எனவும், ஊமையெழுத்து எனவும் பெயர் பெறும்.

இந்தச் சாதனையில், சுழுமுனையில் ஏறும் குண்டலிக் கனல். அது கிளர்ந்தெழும் போது, தகதக என்று நரம்புகளில் தீக்கனலும். நாவில் மந்திரம் சுழல்வது போன்ற உணர்வு உதிக்கும். கிழக்கில் உதித்து மேற்கு நோக்கி விரையும் பரிதிபோல்,
உளவறிந்து, சுடர்வழியில் செல்லும் உயிர். இந்நிலையில் மேலுரைத்த அஜபா மந்திரம், வெளிப்படையாக உள்ளிருந்து ஒலிக்கும்.

41. குண்டலி யதனில் கூடிய அசபை
42. விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

பதவுரை:
குண்டலி அதனில் - குண்டலினி எனும் சக்தியுடன்,
கூடிய அசபை - கூடியிருக்கும் (உரைக்க முடியாத)
அம்ச மநுவை,
விண்டு எழு மந்திரம் - வாய் திறந்து சொல்லும் மந்திரமாக,
வெளிப்பட உரைத்து - வெளிப்படையாகக் கூறற்கு உரியதுபோல் கூறி (என்றவாறு).

வாய் திறந்து உரைக்க இயலாதது, அஜபா மந்திரம். இது குண்டலினியின்
உள்ளொளியாய் அடங்கிப் ‘பேசாத மந்திரம்’ எனும் பெயரைப் பெற்றது.

அதனிலிருந்து பேசும் மந்திரம் பிறந்தது. இரண்டும் தனித்தனி ஓரெழுத்து மந்திரங்கள். இவைகளை வெளிப்படையாக எனக்குக் கணபதி விளங்க உபதேசித்தார் என்றபடி,

    'அசபை யறிந்துள்ள அனலெழ நோக்கில்
    இசையாது மண்ணில் பிறப்பு'
- எனும் ஔவை குறளும்.

    'ஓங்காரி என்பா ளவளொரு பெண்பிள்ளை
    நீங்காத பச்சை நிறத்தை யுடையவள்
    ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
    ரீங்காரத் துள்ளே யினிதிருந் தாளே!'
- என்கிறார், மூலம் உணர்ந்த திருமூலர். அவர் மந்திரமும் இங்கு மனனம் கொள்ளற்கு உரியன. இனிய மூச்சை இழுப்பர்; நிறுத்துவர்; பின் வெளிவிடுவர். அக்காலத்தில் பிறக்கும் மகத்தான நுண்மை ஒலியே அசபா மந்திரம் என்பதை, மீட்டும் நினைவுறுத்துகிறோம். ஊமை மந்திரம் என்றும் இதற்குப் பெயர் உண்டு.

மேலும் இது குறித்து,
    'ஐந்தக் கரத்தின் அரும்பொருள் தன்னை
    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து'
- எனும் 69'ம் அடியிலும் விளக்கப் பெற்றுள்ளது; ஆண்டும் அதையறிதல் நலம்.


(பதிப்பாசிரியர் குறிப்பு)

    தன்பால் உலகுந் தனக்கரு காவதும்
    அன்பா லெனக்கரு ளாவது மாவன
    என்பார்கள் ஞானமும் எய்துஞ் சிவோகமும்
    பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே.
- திருமந்திரம் - 5-1469, ஞானம்

Stages of Attainment Through Jnana

Thus they say;
By devotion the Jiva first sojourns Lord's world;
Then comes to dwell in Lord's proximity;
Further on receives Lords grace,
And in the end attains Jnana
In Sivohamic I and You union
Jiva shall himself Siva become.

    இருக்குஞ்சேம இடம்பிரம மாகும்
    வருக்கஞ் சராசர மாகும் உலகந்
    தருக்கிய ஆசார மெல்லாந் தருமே
    திருக்கிலா ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே.
- திருமந்திரம் - 5-1470, ஞானம்

Unitive Attainment of Jnani

Brahman shall be his impregnable abode,
Universe, his kith and kin;
Diverse paths the world presents
All, all shall be his;
For, verily he has realized
The pure Jnana, free of doubt.
(English rendering - Dr.B.Natarajan)

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)


சித்கனல்

'கனல் இருவகை. அவை பருமைக் கனல், நுண்மைக் கனல் எனப்பெறும்.
விறகெரிக்க, விளக்கேற்ற, சாணை பிடிக்கத் துள்ளி எழுவது தூலக்கனல்.
உன்னுள் உள்ளது நுண்மைக்கனல். அனைத்தையும் ஆக்கிக் காப்பது அக்கனல். அதனை எழுப்பி, மேரு தண்டத்தின் மேலேற்று! பிரமரந்திரத்தில் முட்டச்செய்! உயர்ந்த பேரின்பம் அப்போதே உண்டாகும். உன்னில் கரந்திருக்கும் தெய்வ சக்திகள், அப்பொழுதே கட்டவிழ்ந்து காண இலங்கும்; அருள் ஒளி துலங்கும்; அறிவாய் அதனை!' என்று மேலும் அறிவித்தானாம் அத்தன்.

43. மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக்
44. காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
பதவுரை:
மூல ஆதாரத்தின் - அடிச்சக்கரமெனும் மூலாதாரத்திலிருந்து,
மூண்டு எழு கனலை - பற்றி எரியும் (விந்து எனும்) ஞானக் கனலை,
காலால் எழுப்பும் - (பூரக ரேசக கும்பகம் எனும்) காற்றால் மேலேறச் செய்யும்,
கருத்து அறிவித்தே - கருத்தை அடியேற்கு உணர்த்தி அருளி (என்றவாறு).

இடம் வலம் சுழுமுனை மூன்றும், மூலாதாரத்தில் போய் முடிகின்றன. இடை
பிங்கலையில் போக்குவரவு புரியும் குணமான காற்றைக் கும்பிக்க, கும்பித்த
காற்று, மூலக்கனலை மேலெழுப்பும். அந்நிலையில், உறங்கியிருந்த குண்டலினி, வெப்பாற்றாது விழிக்கும். இடை பிங்கலை அடைபட்டிருத்தலின், சுழுமுனை வழியே மேலேறும். அதனுடன் தொடரும் ஆன்ம உணர்வு, ஆதார சக்கரங்களையும்,
அங்குள தெய்வங்களையும் அறியும் என்பது கருத்து.

மூலக்கனலை உயிர்ப்பால் மூள வைத்தபின், அறிவில் வந்து தங்கும் அருள்;
அது தன்னையும் அறிவிக்கும்; உய்தி வழியையும் உணர்த்தும்.

    'காலால் வழி தடவும் காலத்தே, கண்முளைத்தால்
    போலே, எனதறிவிற் போந்தறிவாய் நில்லாயோ'
- எனும் தாயுமானார் பிரார்த்தனை, இதனை மெய் மெய் என்று
மெய்ப்பிக்கின்றது அல்லவா!


(பதிப்பாசிரியர் குறிப்பு)

    மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
    மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
    ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
    பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே.
- திருமந்திரம் - 3-590 - தாரணை

    காலாலே கனல் ஏற்றுங்கடி சுழி மேலே கொண்ட முதூட்டுங்கடி
    மூலா தாரத் தலங்கேசர மென்று முழங்கிக் கும்மியடியுங்கடி!
    சார்ந்து கொள்ளடி கேசரத்தை முதற்றன்னை யறியலாந் தானாகக்
    கூர்ந்து மூலக் கணபதி பாதத்தைக் கும்பிட்டுக் கொள்ளடி ஞானப்பெண்ணே!
- மதுரை வாலைச்சாமி ஞானக்கும்மி - 66/67

    ஆதார மூலத் தடியில் கணபதியைப்
    பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்!
    மண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக்
    கண்வளர்த்து பார்த்துள்ளே கண்டிருப்பது எக்காலம்!
    அப்புப் பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை
    உப்புக் குடுக்கையுள்ளே உணர்ந்தறிவது எக்காலம்!
    மூன்று வளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில்
    தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்!
    வாயு அறு கோணம் அதில் வாழும் மகேச்சுரனைத்
    தோயும் வகை கேட்கத் தொடங்குவதும் எக்காலம்!
    வட்ட வழிக்குள்ளே மருவும் சதாசிவத்தைச்
    கிட்ட வழிதேடக் கிருபை செய்வது எக்காலம்!
- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல் - 66-70

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

அமுத நிலை

முதன்மைச் சாதனை முதிர, பிறங்கிய ஆநந்தம் பெருகும்; அதில் அழுத்தும் அமயம், உள்ளத்தில் துள்ளும் ஒளி உணர்வு. சதாசிவ நிலையை ஓங்கார பாத்திரம் என்று கூறுவர். திகழும் மதி மண்டலத்தில், சுழன்று கனலும் தீச்சுவாலை. அதனால் உருகும் அமுதம், அந்த ஓங்கார பாத்திரத்தில் ஊற்றெடுக்கும்.

    'மூல நெருப்பை யிட்டு முட்டிநிலா மண்டபத்தில்
    பாலை யிறக்கி யுண்டு பசிஒழிவது எக்காலம்!'
- என்று பத்திரகிரியார் பாடுவது போல், அந்த அமுதம் பருகி நிறைவுறுகிறது ஆன்மா. சந்திரனுக்கு உரியது பதினாறு கலை. அதுபோல், புருவநடுவும் பதினாறு பிரிவினது; அங்கு ஊறும் அமுதத்தைப் பருகப் பருக, உயர்ந்த பேரறிவு உதிக்கின்றது. இதனுடன், குமுற வைத்த ஆன்மாவின் பருவுடல் நுண்ணுடல் குறையும் தீரும். இவ்வமயம், 'அருளமுதம் புரியாயேல், வருந்துவன் இத்தமியேன் மற்று என்னே நான் ஆமாறே' எனும் திருவாசகமும் நினைவிற் போந்து, இன்று வருமோ அல்லது மற்று என்று வருமோ
இப்பேறு என்று நம்மை எண்ண வைக்கின்றது அல்லவா!

திரிகரண வழிபாட்டில் தெய்வ அமுதம் திரளாதேல், இறப்பும் பிறப்பும் இடர்ப்பாடும் என்றும் இருப்பது இயல்பு. அதனால், தொடர்ந்து தியானிப்பர் அறவோர். அச்சார்பிற்கு உரியது தியான சமாதி.

இந்தச் சுத்த சமாதி, சித்தம் உருக்கும். அவ்வமயம், உத்தமமான தான், உச்சியிலிருந்து ஒத்து ஊறும். அதை யோகிகள் அமுதபானம் என்பர். இதைப் பருகுவார்தம் குண்டலிக்கனல், பிரமரந்திரம் வரை எட்டும்; மூல ஆதாரத்தில் காலூன்றி வித்தக விநோதமாக விளையாடும் என்கின்றார் விமல கணபதி.

45. அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
46. குமுத சகாயன் குணத்தையும் கூறி

பதவுரை:
அமுத நிலையும் - சித்கனல், சுழுமுனை வழியேறிச் சிரத்தில் உள்ள பிரமரந்திர
மதி மண்டலம் சார்ந்து ஊறும் அமுதத்தை உண்டாக்கும் நிலையையும்,
ஆதித்தன் இயக்கமும் - (காயத்திற் சந்திரனுடனும், அக்னியுடனும் கலந்து,
சுத்த மாயையைச் சார்ந்து) சூரியனாகிய பிங்கலை ஊர்தலையும்,
குமுத சகாயன் குணத்தையும் கூறி - ஆம்பல் மலர்த்தோழன் ஆகிய சந்திரன்
(சூரியனில் சார்ந்துள்ள) பண்பையும் அறிவுறுத்தி (என்றவாறு).
மூன்று மண்டலம் உடலில் முதிர்ந்துளது. மூலாதாரத்திலிருந்து இருவிரல் அளவிற்குமேல் நான்கு கோணம்; நடுவே ஒரு முக்கோணம்; அங்கே நான்கு இதழ்க்கமலம்; கனல்கிறது அதனில் கனல் மண்டலம்.

உந்திக்கு நாலு விரல் அளவிற்கு மேல். இதய கமலத்தில் ஆறுகோணமான எட்டிதழ்க் கமலம் இருக்கின்றது. இது மகத்தான ஞாயிறு மண்டலம்.

தலை நடுவில், ஒளி வழங்கும் அமுத கலையுடன் திங்கள் மண்டலம் திகழ்கிறது. அது கீழ் நோக்கிப் பொழியும் அமுதத்தை, நாபியின் மேலுள்ள விழுமிய பரிதி மண்டலம் விழுங்கி விடுகின்றது. அதனால்தான், உடலில் நரை திரை மூப்புகள் உண்டாகின்றன.

தலைநடுவான பிரமரந்திரத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்த் தாமரையை, மாண்பார்
சிவசூரியனால் மலரச் செய்து, அக் கமலப் பூந்தாதுவில் கடினப் பட்டிருக்கும் திங்கள் மண்டலத்தை மூல நெருப்பினால் இளக வைத்து, அங்கிருந்து பயன் தர உருகிப் பாயும் உயர்ந்த அமுதத்தை, தம் ஆக்கையில் உள்ள நாடிகள் அனைத்தினும் பரவச் செய்வது யோகநடை.


(பதிப்பாசிரியர் குறிப்பு)

    மூலா தாரமொ டேற்றி யங்கியை
    ஆறா தாரமொ டோட்டி யந்திர
    மூலா வாயுவை யேற்று நன்சுழி முனையூடே

    மூதா தாரம ருப்பி லந்தர
    நாதா கீதம தார்த்தி டும்பர
    மூடே பாலொளி ஆத்து மந்தனை விலகாமல்

    மாலா டூனொடு சேர்த்தி தம்பெற
    நானா வேதம சாத்தி ரஞ்சொலும்
    வாழ்ஞா னாபுரி யேற்றி மந்திர தவிசூடே

    மாதா நாதனும் வீற்றி ருந்திடும்
    வீடே மூணொளி காட்டி சந்திர
    வாகார் தேனமு தூட்டி யென்றனை யுடனாள்வாய்!
- அருணகிரியார் - வைத்தீசுரன் கோயில் திருப்புகழ்

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)


சந்திர மண்டல சஹஸ்ராரத்தின் அமுதநிலை அனுபவம் சித்தித்ததும், இடை பிங்கலை இயக்கமும் மாறும். பசுபோதம் பாழாகும்; சிவபோதம் சேரும். மேலான இச்சாதனையை மேற்கொண்டவர்கள், இது கைவல்யம் ஆக இடையறாது முயல்வர்.

    'நியம லட்சணமும் இயம லட்சணமும்
    ஆச னாதிவித பேதமும்
    நெடிது ணர்த்திய பத்ம பீடமிசை
    நின்றி லங்கும் அசபா நலத்து
    இயல றிந்துவளர் மூல குண்டலியை
    இனிதி றைஞ்சி அவள் அருளினால்
    எல்லை யற்றுவளர் சோதி மூலஅனல்
    எங்கள் மோனமனு முறையிலே
    வயமி குந்துவரும் அமர்த மண்டல
    மதிக்குளே மதியை வைத்து நான்
    வாய்ம டுத்து அமர்த வாரி யைப்பருகி
    மன்னும் ஆரமிர்த வடிவமாய்ச்
    செயமி குந்துவரு சித்த யோகநிலை
    பெற்று ஞான நெறி யடைவேனோ
    தெரிவ தற்கரிய பிரம மேஅமல
    சிற்க கோதய விலாசமே!'

- என்று விமலனை அழுது கதறி வேண்டுவர். அதனுடன் அனுபவம் பழுத்த பரம ஞானிகளான சித்தர்கணத்தையும் குமுறியழுது கூப்பிட்டு, எமதெண்ணம் நிறைவேற வரவேண்டும்; வந்து வழி அருள வேண்டும் என்று வேண்டுவதும் உண்டு.

    எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான்
    யாதினும் அரிதரிதுகாண்
    இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ
    ஏது வருமோ அறிகிலேன்;
    கண்ணக நிலத்துநான் உள்ள பொழுதே அருள்
    ககன வட்டத்துள் நின்று
    காலூன்றி நின்று பொழி ஆனந்த முகிலொடு
    கலந்துமதி அவச முறவே
    பண்ணுவது நன்மை; இந் நிலைபதியு மட்டுமே
    பதியா யிருந்த தேகப்
    பவுரி குலையாமலே கௌரி, குண்டலி, ஆயி,
    பண்ணவிதன் அருளினாலே
    விண்ணிலவு மதியமுதம் ஒழியாது பொழியவே
    வேண்டுவேன் உமதடிமை நான்;
    வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
    வித்தகச் சித்தர் கணமே'

- எனும் தாயுமானாரின் அரிய இப் பிரார்த்தனைகள், அருமையான நுட்ப வழிகளை நமக்கு அறிவிக்கின்றன அல்லவா! அவ்வளவுதானா! இன்னும் பாருங்கள்!

சந்திர சூரியர் எனும் இடை பிங்கலைகள் ஒன்று சேரும்போது, நாதநிலை நண்ணும். சந்திரன் எனும் விந்துகலை, புருவ நடுவான ஆக்ஞா சக்கர ஞானாக்கினி கலையில் அடங்கும்.

சந்திர ஒளி தோன்றாத அமாவாசை, கேவல நிலையையும் குறிக்கும். மதியைத் தன்னிடம் அடக்கிய பரிதியின் சுத்தமாயா ஒளியில் இருப்பவர்க்கு, இரவும் பகலும் என்றும் இல்லை.

சந்திர ஒளியில் குமுதம் மலர்தலின், மதியவனைக் குமுத சகாயன் என்று குறிப்பிடுகின்றார் ஔவையார்.

    'விந்துவும் நாதமும் மேருவும் ஓங்கிடில்
    சந்தியில் ஆன சமாதியில் கூடிடும்
    அந்தம் இலாத அறிவின் அரும்பொருள்
    சுந்தரச் சோதியும் தோன்றிடுந் தானே'

    'சந்திரன் சூரியன் தான்வரில் பூசனை
    முந்திய பாநுவில் இந்துவந்(து) ஏய்முறை
    அந்த இரண்டும் உபய நிலத்தில்
    சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே'
- என்று திருமூலரும்,

    'நிலாமண் டலத்தில் நிறைந்த அமுதுண்ணில்
    உலாவலாம் அந்தரத்தின் மேல்.'

    'அண்ணாக்குத் தன்னை யடைத்தங் கமிர்துண்ணில்
    விண்ணோர்க்கு வேந்தனு மாம்.'

    'ஈரெண் கலையின் நிறைந்த அமிர்துண்ணில்
    போங்காலம் இல்லை புரிந்து.'

    'ஆன கலசத் தமிர்தை யறிந்துண்ணில்
    போனகம் வேண்டாமல் போம்.'

    'ஊறும் அமிர்தை உண்டியுறப் பார்க்கில்
    கூறும் பிறப்பறக்க லாம்.'

    'மேலை யமிர்தை விலக்காமல் தானுண்ணில்
    காலனை வஞ்சிக்க லாம்.'
- என இது குறித்து ஔவையார் அருளியுள்ள குறள்பாக்களும் என்றும் எண்ணி இன்புறுதற்கு உரியன.


(பதிப்பாசிரியர் குறிப்பு)

    உண்கலாம் பிரமத்தி லடங்கும் போதே
    உறுதியுள்ள அண்டத்தி லுருகிப் பாயுந்
    திங்கலாந் தோணுமடா அமிர்தச் சீனி
    தித்திப்புப் பாலுடனே திடமாய் மைந்தா!
    தங்கலாந் தேகமது அழியா மற்றான்
    சட்டையுமே கழன்றுமிகத் தங்கம் போலே
    பொங்கலாம் மெய்ஞ்ஞானத் தீபத் தாலே
    பூரித்துப் பார்த்திடவே புவன மொன்றே!
- சித்தர் காகபுசுண்டர்

    தெளிவுறும் அறிவினை நாம் கொண்டு
    சேர்த்தனம் நினக்கது சோமரசம்,
    ஒளியுறும் உயிர்ச்செடியில் - இதை
    ஓங்கிடும் மதிவலி தனிற்பிழிந்தோம்.
    களியுறக் குடித்திடுவாய் - நின்றன்
    களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;
    குளிர்சுவைப் பாட்டிசைத்தே - சுரர்
    குளத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்.
- மஹாகவி பாரதி

St.TiruMular sings on this ‘Somarasa’ in Tantra –3 - on Kechari Yaga

Aynthurai seyyil amuthaninR uRIdum
vAynthurai seyyum varukinRa kAlaththu
nInthurai seyyil nilA mandalam athAy –p-
paynthurai seythu pAlikkumARE.

If skillfully rubbed by the tongue's tip
The mystic nectar will begin to ooze;
When it comes, with care manage it
That you may swim in Moon's Region mystic;
And that which flowed and roared
May preserved be.

This is the ultimate yogic technique or Mudra called Kechari Mudra. Once the Kundalini is roused and all the adharas are pervaded, a perfect Yogi reaches stage of drinking in the divine madhu / nectar that flows from the astral sphere, known in Yogic language as nilA mandalam – piRai or Soma – within. At this stage the Yogi reaches the Samadhi stage, locking the breath within the body. And he no longer
needs any external food to live on. Literally Kechari means to traverse in the sky.

Quote:
Hatha Yoga Pradipika (iii, 41 – 53):

The siddhas have named this mudra, Kechari, from the fact that the mind and the tongue reach the akasa (ether) by its practice.

If the Yogi drinks Somarasa - vital fluid - by sitting with the tongue turned backwards and mind concentrated, there is no doubt he conquers death within 15 days. If the Yogi, whose body is full of Somarasa, were bitten by KingCobra too, its poison can not permeate his body. As fire is inseparably connected with the wood, the soul does not leave the body full of nectar exuding from the soma.

It is mentioned in Vedas that those who eat the flesh of the cow and drink the immortal somabana daily are regarded as men of noble family or Aryans.

The word goar (cow) means tongue; eating is thwarting it in the gullet.

Immortal liquor is the nectar exuding from the moon. It is produced by the fire, which is generated by thrusting tongue. If the tongue can touch with its end the hole from which falls the rasa which is saltish, bitter, sour, milky and similar * to a sort of mixture of ghee and honey, one can drive away all diseases. There is only one seed germinating the whole universe from it called Aum; and there is only one mudra called Kechari.
Unquote

The pathway to this ultimate salvation is hidden in St.Avvaiyar’s Vinayagar Agaval.

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

பதினாறு நிலையும் உறுப்பும்

சுத்த அத்துவா, அசுத்த அத்துவா, சுத்த அசுத்தம் இரண்டும் ஆன (மிஸ்ர மாயை) அத்துவா என, மூன்று நிலைகள் என்றும் ஊன்றியிருக்கின்றன. தூய பெருவழி, தூய்மையற்ற பெருவழி, இரண்டும் கலந்த பெருவழி என்னும் பொருளன இவை. இவைகளுடன், பல வேறு கிளை வழிகளும் இருக்கின்றன.

தனக்கென அமைந்த ஆற்றலால் தொழில்படும் இயந்திரம்போல் தூய அத்துவாவில்
உள்ள சிவ தத்துவமும், சுத்த வித்யா தத்துவமும், ஞானசக்தியால் விறுவிறு என்று
விரைந்து சுழல்கின்றன.

சக்தி தத்துவமும் சாதாக்கியத் தத்துவமும், கிரியா சக்தியாலும், ஈஸ்வர தத்துவம்,
இனிதாக எழும் இச்சா சக்தியாலும் இனிது இயங்குகின்றன.

சிவதத்துவம் நாத வடிவாகி, அசுத்த அத்துவாவில் நண்ணிய மாயையை நடத்துகின்றது.

சுத்த வித்யா தத்துவம், வித்தையை ஆன்மாவிற்கு விரிவாக விளங்க வைக்கும்.

சக்தி தத்துவம் விந்து வடிவமாய், காலம், நியதி, கலை என்னும் மூன்று தத்துவங்களையும் முன்னேறச் செய்யும்.

சாதாக்யத் தத்துவம் புருட தத்துவத்தை நடத்தும்.

ஈஸ்வர தத்துவம் அராக தத்துவத்தை முன்னேற்றும்.

வித்தை, புத்தி தத்துவத்தை விளக்கும்.
அராகம், மனத் தத்துவத்தைச் செலுத்தும்.
மனம் மன்னனாகி இருந்து அறிகருவி தொழில்கருவிகளை நலமுறத் தன் போக்கில்
நடத்தும்.

இங்ஙனம் கருவிகளை இயக்கி, ஆன்மா ஐம்புல விஷயங்களைச் சிவசக்தி
அனுபவிக்கச் செய்யும்.

இவைகளே தத்துவ இயக்கம் எனப்பெறும். இந்த இயக்கம் நிலையிலாதது எனலை
இனிது உணர்த்தி, நிலையான சிவயோகத்தில் அழுத்தற் பொருட்டே உடல் சக்கரம்
உருளுகின்றது. உருளும் சமயம், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் புலனாகின்றன.
இதைப் பாடிக் காட்டுகின்றார் நம் பாட்டியார்.

47. இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
48. உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி

பதவுரை:
இடைச் சக்கரத்தின் - (ஆறு ஆதாரங்களின்) நடுவாக இருந்து இயங்குகின்ற (கண்ட)
சக்கரத்தின்,
ஈரெட்டு நிலையும் - பதினாறு கலை (இதழ்களுடன் இருக்கும்) நிலைகளையும்,
உடல் சக்கரத்தின் - உடலாகிய இயந்திரத்தில் உள்ள,
உறுப்பையும் காட்டி - (ஒன்றை ஒன்று இயக்கும்) அங்கங்களையும் காணுமாறு அறிவித்து (என்றவாறு).

சஹஸ்ராரம் - 1
ஆதாரம் - 6
லலாடபிந்து - 1
அர்த்த சந்திரன் - 1
ரோகினி - 1
நாதம் - 1
நாதாந்தம் - 1
சக்தி - 1
வியாபிகா - 1
சமனா - 1
உன்மனா - 1

இவை இடைச்சக்கரம் எனப்பெறும். இப்பதினாறும் கடந்தவரே மேலோர்.

ஆதாரச் சக்கரங்கள் ஆறும், சூரிய சந்திர கலையிரண்டும் சேர்ந்து, உடல் சக்கரத்தின்
உறுப்புகள் எனப்பெறும். உறுப்புகள் பலவற்றால், தொழில் செய்யும் சக்கரம்போல்
இருக்கின்றது உடல். அதனால் அதனை இயந்திரமாக உருவகித்தார்.


(பதிப்பாசிரியர் குறிப்பு)

    காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது
    காளிசக்தி யென்றபெயர் கொண்டு - ரீங்
    காரமிட் டுலவுமொரு வண்டு - தழல்
    காலும் விழி நீலவண்ண மூலஅத்து வாக்களெனும்
    கால்களா றுடைய தெனக் கண்டு - மறை
    காணுமுனி வோருரைத்தார் பண்டு.
- பாரதி - மஹாகாளியின் புகழ்

காலமெனும் பெருவனத்தில், ஒலி ஒளிகளாலேயே
அண்டங்களும் பிண்டங்களும் ஆக்கி ஒடுக்கப் படுவன.
நாதம் என்னும் ஒலிவகையில் எழுத்து, பதம், மறைகள் என்றும்,
விந்து எனும் ஒளிவகையில் கலை, தத்துவம், புவனம் என்றும்
அனைத்துமே அறுவழிகளால், அத்வாக்களால் ஆவன.
அவற்றை இயக்கியிருக்கும் அன்னையை வணங்குவோம்!

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)


வடிவத் தியானம்

சகுணம் - பருமை; இது ஆறு அளவினது. இதை விக்ரகம் என்பர்.
நிர்க்குணம் - நுண்மை; இது நான்கு அளவினது. இதை யந்திரத்தில்
அமைத்துப் பெறுவது மரபு. இப் பத்து நிலைகளும், தியானத்தின் மூலம்
சித்திக்கும் என்றும் அறிவித்தது ஆனைமுகத் தெய்வம்.

49. சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
50. எண்முகம் ஆக இனிதெனக்கு அருளி

பதவுரை:
சண்முக தூலமும் - ஆறுமுகமாகிய பருமைப் பொருளான இயல்பையும்,
சதுர்முக சூக்கமும் - நான்குமுக நுண்பொருளான இயல்பையும்,
எண்முகமாக - எண்ணும் தியான இடமாக,
இனிது எனக்கு அருளி - இனிமையாக அடியேனுக்கு உபதேசித்து (என்றவாறு).

உருவ வழிபாடு உயர்ந்த நடை. நம்பனுக்கு முகம் நான்கு. ஆறுமுகங்களும் அமையும். கயமுகனைச் சாய்க்க ஒரு முகத்துடன் காட்சியாயினர் கணபதி. ஏகமூர்த்தி; நால் திசைக்கும் நாதன்; ஆறு திசைக்கும் அம்மான்; எண் திசைக்கும் உரியன் எம்மான்;
பத்து திசைக்கும் பரமன்.

'பத்துத் திக்கும் பணி நுதற்கண் திருவாளன்' என்று கசிந்த மனத்துடன் பாடுகிறார் கபிலர்.

இங்ஙனம் தம் பரிபாகத்திற்குத் தக்கபடி உரு அமைத்து, முகம் அமைத்து, ஆராதிப்பர் நல்லடியார்கள். அன்பால் எண்ணிய முகத்தொடு, அவர்முன் எழுந்தருள்வர் நம் ஹேரம்பர். இவ்வரிசையுள், சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும், யோகிகட்கு எண்முகமாக இருப்பன; அவைகளின் நுட்பமே நம் பாட்டிக்கு அறிவிக்கப் பெற்றன. இந்த உபதேசங்களை நாமும் இங்கு எண்ணல் நலம்.



(பதிப்பாசிரியர் குறிப்பு)

ஆசிரியர் இந்தப் பகுதியை மிகச் சுருக்கமாய்ச் சொல்லிச் செல்கிறார். இவ்விடம் மேலும் சில விளக்கங்களைச் சொல்ல விழைகிறேன். பொதுவாய், சண்முகம், சட்கோணம் என்றாலே சிவசக்தி ஐக்கியத்தைச் சுட்டும் எளிமையான கோலம். யந்திரங்கள் பலவகை என்றாலும் அடிப்படையான வடிவம், மேலும் கீழுமாய் இரு முக்கோணங்கள் பிணைந்து உருவாக்கும் இக்கோலம். இதைப் பூசையில் மட்டுமின்றி வெளியே மாக்கோலத்தில் வரைந்தும் வணங்குவது பண்டை வழக்கு. இப்படித் தத்தம் மனம் ஒன்றிய வடிவத்தை வணங்கிப் பின், வணங்குவோனும், வணக்கமும், வணங்கப் படுவதும் ஆன மூன்று நிலைகளும் ஒன்றாகி உட்குவிவது அதன் அடுத்தபடி.

விட்டகுறை, தொட்டகுறையாய் மீண்டுமொரு பிறவியில் வந்துவிழும் ஞானியர்க்கு
இது தேவையில்லை. குதம்பைச் சித்தரின் அரிய பாடலொன்றைக் காண்போம்:

முக்கோணம் தன்னில் முளைத்த மெய்ஞ்ஞானிக்குச்
சட்கோணம் ஏதுக்கடி குதம்பாய்!
சட்கோணம் ஏதுக்கடி!

உண்முக தரிசனத்தில், நாலிதழ் கொண்ட சதுரத்துக்குள் அமைந்த, கீழ் நோக்கிய முக்கோணமான குண்டலிக் கனலை மேல்நோக்கி எழுப்பும் மெய்ஞ்ஞானிக்கு, புறவடிவத் தூண்டுதல் ஏதுக்கடி என்று இங்கே பாடுகிறார் குதம்பையார்.

பாரத ஞானமரபில் இறைவனை அகத்துள் அறிவதே இறுதிப்படி.

இறைவன் தூணிலும் இருப்பவன், துரும்பிலும் இருப்பவன் என்று பொதுவாய்ச் சொல்வது வழக்கு. அப்படி அவனை உணர்ந்தவர்கே உளன். அன்றேல் அலன் என்று திருமூலர் பாடும் அரிய பாடலொன்றைக் காண்போம்:

    மாடத்து ளானலன் மண்டபத் தானலன்
    கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்
    வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
    மூடத்து ளேநின்று முத்திதந் தானே!
(திருமந்திரம் - 2614)

மூடம் என்றால் மெய்யுடல்.

இவ்விடம் திருமூலர் உணர்த்துவது 'தம்முள் இறை உணராமல் வேறெங்கு தேடினும் காண்பதரிது' என்பதே. தம்முள் உணர்வோர்க்கே அவன் எங்குமுளன்; என்றுமுளன். தன்னுள் அதையுணர்ந்த பிரகலாதன் விளிக்க உடன் பரம்பொருள் தூணிலிருந்தும் வடிவெடுத்து வந்தது அவ்வண்ணமே.

அங்ஙனம் அன்றி இருமையில் அவனைத் தனித்துத் தேடுவார்க்கு அகப்படுவோன் அல்லன். இதை வலியுறுத்தி சிவஞானபோதத்தின் இரண்டாம் சூத்திரத்தின் நான்காம் அதிகரணத்தில் விளக்க வந்த மெய்கண்டதேவரின் பாடலிது:

எங்குமுள னென்றளவை ஒன்றன் றிரண்டென்னில்
எங்கு முளன்அன் றெவற்றெவனும் - அங்கண்
அவையவன் அன்றில்லை பொன்னொளிபோல் ஈசன்
அவையுடைமை ஆளாம் நாம் அங்கு.

எங்கும் உளன் என்ற அளவை ஒன்றன்று இரண்டு எனில் எங்கும் உளன் அன்று!

கதிரவனையும் கதிரொளியும் போல் அவன் பிரிக்கவியலாதவன்.

அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி எழுந்த சிவஞானபோதத்தின் சாரமாய் அத்தேடலின் முடிவில் மெய்கண்டதேவர் சுட்டுவதும் அ·தே.

'அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகனாகி இறைபணி நிற்க
மலமாயை தன்னோடு வல்வினை இன்றே'
என்ற பத்தாம் சூத்திரத்தின் முதல் அதிகரண விளக்கம்:
'ஈண்டுப் பரமேசுவரன் இவ்வான்மாவாய் நின்ற முறைமையான்
அவனிடத்து ஏகனாகி நிற்க என்றது'. பின்னர் இறைபணி நிற்றலும்
சாத்தியமே.

சிவவாக்கியர் அருளிய இரண்டு பாடல்களைப் பார்ப்போம். நாத்திகத் தொனியில் இருப்பதாய் பலர் தவறாய்ச் சுட்டும் பாடல்கள் இவை:

    நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
    சுற்றி வந்து முணுமுணென்று சொல்லு மந்த்ரம் ஏதடா!
    நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்!
    சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

    கோயில் ஆவது ஏதடா குளங்கள் ஆவது ஏதடா?
    கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
    கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
    ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே!

நாதன் உள்ளிருப்பதை உணர்ந்தால் நட்டகல்லும் தெய்வமாகும்; கோயில் மற்றும் குளத்தின் சூக்குமம் உணர்ந்தால் அவற்றின் சாந்நித்யம் சிறக்கத் துலங்கும் என்பதே அவர் சுட்டுவது.

மேற்கண்ட விளக்கம், பக்தியொன்றைத் தவிர வேறொன்றும் அறியாத கண்ணப்ப
நாயனாருக்குப் பொருந்துமா?

சாலப் பொருந்தும்.

'யான் எனது' என்ற மயக்கறுத்த, தாம் தழுவி நிற்பது வெறும் கல்லன்று, தம்மைத்
தடுத்தாட் கொண்ட பேருயிரே என்ற பிணைப்பில் தம் கண்ணைப் பிடுங்கி அப்பி
*கொள்கையின் உம்பர் மேலார்* என்றாகி நின்ற, திண்ணன் என்ற அந்த மகாயோகிக்கு 'வேட்கை விட்டார் நெஞ்சில் மூடத்துளே நின்று முத்தி தந்தானே!' என்ற பேருரை சாலப் பொருந்தும்.

அதனாற்றான், சம்புவான அக்கல்லும் கசிந்து 'நில்லு கண்ணப்ப!' என்று
தடுத்தணைத்து, அந்த அன்புடைத் தோன்றலை, 'என் வலத்தில் மாறிலாய்! நிற்க!'
என்றருள் புரிந்தாண்டு கொண்டது.

* கொள்கையின் உம்பர் மேலார்* என்று சேக்கிழார் பெருமான்தம் திருவாக்கால்
எழுந்தது, கண்ணப்பர் 'யான் எனது' என்னும் செருக்கறுத்து வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுந்தமையால்.

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

எட்டு நிலை

'தன்மாத்திரைக் கொத்து இது. ஐம்பூதக் கொத்து இது. அறிகருவிக் கொத்து இது.
தொழிற்கருவிக் கொத்து இது. அந்தக்கரணக் கொத்து இது. முக்குணக் கொத்து இது. மூலப் பகுதி இது. கலைகளின் கொத்து இது. இந்த மட்டிலாத எட்டுக் கொத்துகளும் உன்னில் ஒட்டியிருத்தலை ஊன்றிக் காண்! இதோ பார்! ஆதாரம் ஆறு, நிராதாரம் ஒன்று, மீதானம் ஒன்று ஆக எட்டு நிலை இவை. பயன் தரும் இவைகளையும் பார்!' என்று, இத்தொகுதிகளின் நிலையைப் பிரித்துப் பிரித்துக் காண்பித்தாய் பெருமானே!

அதி சூக்குமம் ஆன உடலின் நுட்பத்தை, நீர் காண்பித்த அதன் பிறகுதான் அறிய நேர்ந்தேன் என்று ஔவையார் அருள்வதையும் கேளுங்கள்!

51. புரி அட்ட காயம் புலப்பட எனக்குத்
52. தெரி எட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

பதவுரை:
புரி அட்டகாயம் - அதிநுட்ப எட்டுக் கொத்தான உடலின் தன்மைகள்,
எனக்குப் புலப்பட - அடியேற்குப் புலனாகும்படியும்,
தெரி எட்டுநிலையும் - விளங்கும் (ஆதார நிராதார மீதானமான) எட்டுநிலைகளும்,
தெரிசனப்படுத்தி - காட்சியாகும்படிச் செய்து (என்றவாறு).

இவைகளைக் குறித்துத் தம் திருமந்திரத்தில்,

'அத்தன் அமைத்த உடல்இரு கூறினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே'
- என்கிறார் திருமூலர்.

இதன்படி, தன்அளவு எனும் தன்மாத்திரையாகிய ஐந்தும், புத்தி, மனம், ஆங்காரமாகிய மூன்றும் சேர்ந்து புரியட்ட காயம் எனப் பெறுகின்றது.

(பதிப்பாசிரியர் குறிப்பு)

உரையாசிரியர் இப்பகுதியில், புரியட்ட காயத்திற்குப் பலவிதக் கொத்துக்களைச் சுட்டினாலும், பொதுவாய், திருமந்திரத்தில் மட்டுமின்றி, மேலும் பல சித்தர் பாடல்களிலும், மெய்கண்ட சாத்திர நூல்களிலும், இறுதியாய்ச் சுட்டும் தன்மாத்திரைகள் ஐந்துடன் சித்தம் தவிர்த்த மனம், புத்தி, அகங்காரம் ஆன அந்தக்கரணத் தொகுப்பே சூக்கும உடல், கனவுடல் என்று பாடப்பட்டுள்ளது.

இன்னொரு பாடலைப் பார்ப்போம்:

    எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்
    கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
    ஒட்டிய பாச உணர்வென்னும் காயப்பை
    கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.
    - திருமந்திரம் 2-473, கரு உற்பத்தி

Of the eight organs of Body Subtle
Are senses protean five
And cognitive instruments three -
Mind, will and cognition;
Know the dear Lord
Who fastened this body bag,
With Desire's sticky glue
Will in time unfasten it too.
(English rendering - Dr.B.Natarajan)

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

சாலோகம்

மல இருள் விலகும் காலம் வரும். உயர்ந்த அந்நிலையில் உயிர் ஒளிவிளக்கம் பெறும். அவ்வமயம், சிரத்திற்கு மேல் பன்னிரண்டு அங்குலத்தில் எழுந்த பேரொளி தரிசனம் பிறக்கும். இச் சொருபநிலை சித்தித்த சீவன், இப்பேரொளியைத் தரிசித்துப் பெறுவது சாலோக பதம். ஞானத்திற் சரியையை மேற்கொண்டார் பெறுகின்ற பேறு இது.

    'நீடும் சிரசிடைப் பன்னிரண்(டு) அங்குலம்
    ஓடும் உயிரெழுத்து ஓங்கி உதித்திட
    நாடுமின் நாதாந்த நம்பெருமான் உகந்து
    ஆடும் இடம்திரு அம்பலந் தானே'
- என்பது திருமந்திரம்.

53. கருத்தினில் கபால வாயில் காட்டி
54. இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி

பதவுரை:
கருத்தினில் - எனது ஊன்றி உணர் உள்ளத்தில்,
கபால வாயில் காட்டி - தலையோட்டின் துளைவழி மேலுள்ள துவாதசாந்தப்
பெருவெளியை விளங்கும்படி காண்பித்து,
இருத்தி - என்னை அவ்வெளியில் சும்மா இருக்க வைத்து,
எனக்கு இனிது முத்தி அருளி - அடியேனுக்குச் சாலோக சுகத்தை
இனிதாக அருளி (என்றவாறு).

சும்மா இருத்தலை உணர்த்தும் சுருதி பல.

சும்மா என்பதில், உ-ம்-அ என்னும் மூன்று எழுத்துக்கள் இருக்கின்றன. அவை ஓங்காரத்தின் உட்பொருள்; சகரம் மகரத்தோடு சேர்ந்து, ஹம்ஸ மந்திரம் எனும் அசபையைக் குறிக்கின்றது. ஆடும் திருவடியை நாடி நின்றாரைச் சும்மா இருக்கும் சுகம் தேடி வரும். சிந்தையை அடக்கிச் சும்மா இருத்தல் அட்ட சித்திகளினும் அரிய ஒரு சித்தி. உள்ளத்தில் தெய்வப்பொருள் உளது. அதை, ஆசை எனும் ஆணவத் திரை மூடியுளது. சும்மா இருக்கும் நிலை நீடிக்க நீடிக்க, வீணான அத்திரை விலகும். அந்நிலையில் தெய்வ மெய்ப்பொருள் தெளிவாக விளங்கும்.

    'ஓராமலே ஒருகால் உன்னாமல் உள்ளொளியைப்
    பாராமல் உள்ளபடி பார்த்திருந்தால் - வாராதோ
    பத்துத் திசையும் பரந்தெழுந்தா னந்தவெள்ளம்
    தத்திக் கரைபுரண்டு தான்'
- என்றபடி இதய சித்சபையில் இனிது துள்ளூம் தெய்வ இன்பம். சும்மா இருந்த ஆன்மா, கொழிக்கும் அவ்வின்பத்தைக் கொள்ளும்.

    'ஏதுக்குச் சும்மா இருமனமே என்று(உ)னக்குப்
    போதித்த உண்மையெங்கே போகவிட்டாய் - வாதுக்கு
    வந்தெதிர்த்த மல்லரைப்போல் வாதாடினாயே! உன்
    புந்தியென்ன போதமென்ன போ!'
- என்று மனத்திற்கு உபதேசித்து, வாழும் வழியில் அதை வழிப்படுத்துவர் மேலோர்.

    'எம்மால் அறிவதற எம்பெருமான் யாதுமின்றிச்
    சும்மா இருக்கஒரு சூத்திரந்தா னில்லையோ!'
    'சொல்லும் பொருளுமற்றுச் சும்மா இருப்பதற்கு
    அல்லும் பகலும் எனக்(கு) ஆசை பராபரமே!'
- என்றெல்லாம் முதல்வனிடம் அப்பேறு வாய்க்க முறையிடுவர். அதன் பயனாக சும்மா இருக்கும் சுகம் பெறுவர். எம்மதமும் சம்மதிக்கும் இடம் இதுதான்.

    'சும்மா இரு சொல்லற என்றலுமே
    அம்மா பொருளொன்றும் அறிந்திலனே'
- என்பது கந்தர் அநுபூதி.

    'மும்மாயைக்கு அப்பாலாம் முப்பாழும் கண்டு நீ
    சும்மா இருவென்று சொன்னான்'
    - என்கிறது ஒழிவிலொடுக்கம்.

    'சும்மா இருக்கவைத்த சூத்திரத்தை நானறியேன்
    அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி'
- என்கிறார் தாயுமானார்.

    சும்மா இருக்கும் சூழ்நிலையை,
    'கூடுதலுடன் பிரிதலற்று நிர்த்தொந்தமாய்,
    குவிதலுடன் விரிதலற்று,
    குணமற்று, வரவினொடு போக்கற்று,
    நிலையான குறியற்று மலமு மற்று,
    நாடுதலு மற்று, மேல் கீழ் நடுப்பக்கமென
    நண்ணுதலு மற்று, வந்து
    நாதமற் றைவகைப் பூதபே தமுமற்று,
    ஞாதுருவின் ஞான மற்று,
    வாடுதலு மற்று, மேல் ஒன்றற் றிரண்டற்று,
    வாக்கற்று, மனமு மற்று,
    மன்னு பரிபூரணச் சுகவாரி தன்னிலே
    வாய்மடுத்து உண்டு அவசமாய்த்
    தேடுதலும் அற்ற இடம் இலையென்ற மௌனியே!
    சித்தாந்த முத்தி முதலே!
    சிரகிரி விளங்கவரு தட்சிணா மூர்த்தியே!
    சின்மயா னந்த குருவே!'
- எனத் தாயுமானார் மேலும் அறிவித்தல் இங்கு எண்ணத்தகும்.


(பதிப்பாசிரியர் குறிப்பு)

தேடித் தேடொணா தேவனை என்னுளே
தேடிக் கண்டு கொண்டேன்!
- அப்பர் பெருமான் - சரியை ஞானமான திருவங்க மாலை

    தலையடி யாவ தறியார் காயத்தில்
    தலையடி யுச்சியில் உள்ளது மூலந்
    தலையடி யான அறிவை யறிந்தோர்
    தலையடி யாகவே தானிருந் தாரே.
- திருமந்திரம் 8-2426

Head and Feet Are Within

They know not
The Head and Foot - within body,
the Head is in Sahasrara (Cranium)
The Foot is Muladhara;
Those who visioned thus in the Yogic way,
Remained in Prayer
Their heads bowed at Lords feet.
(English rendering - Dr.B.Natarajan)

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

சாமீபம்

ஆனைமுகப் பரமன், இயல்பாய் அறியும் அறிவுசொருபம்; ஆன்மா, அறிவிக்க அறியும் அறிவுசொருபம். இதைக் குருமுக எம்மான் குறித்ததும், ஆன்மா அமலனை அணுகும். இப்பேறு, சாமீப பதம் எனப் பெறும். இந்நிலை, சிறந்த ஞானத்திற் கிரியை
மிக்கவர்க்குச் சித்திக்கும். நம் ஔவைப் பாட்டியார், அதைக் கூறும் முறையே கோடி பெறும்.

55. என்னை அறிவித்து எனக்கருள் செய்து

பதவுரை:
என்னை அறிவித்து - ஆன்மாவாகிய எனது நிலையை அறியச் செய்து,
எனக்கு அருள் செய்து - எனக்கு சாமீப பதத்தை வழங்கி (என்றவாறு).

உலகில் அறிவுடைய பொருள்கள் பல; அப்பொருள்கட்கு இறைவன் ஆண்டான்;
அவை அடிமைகள் எனப்பெறும். அறிவிலாத பொருள்களும் பல; உரிய அவைகளை உடையான் விமலன். எனவே, இப்பொருள்கள் எம்மான் உடைமை.
ஆனைமுகப் பரமன் குருமுகமாகி வந்து அறிவித்தால்தான், ஆன்மா இவைகளை அறிய இயலும். பத்து நாடிகளையும் தூய்மை செய்து, மூலக்கனலை மூச்சுக் காற்றால்
மேலெழுப்பி, மதி மண்டல அமுதை மாந்தி, சில காலம் இருக்கும் உடலைப் பலகாலம் நீடிக்கச் செய்யும் கனத்த சித்தி கைவந்தாலும், ஞானம் பெறாவிடில் உய்தி காட்டும் உயர்கதி நேரா. இது திண்ணம். அதனாற்றான், 'என்னை யறிவித்து எனக்கருள் செய்து' என்று கொஞ்சிக் கூறுகிறார் குணவதியார்.

கவனத்தில் உள்ள கதை:

மன்னன் மகன் ஒருவனை மறவர் கவர்ந்தனர். அவன் இயல்பை அவன் அறியாதபடி,
வாழுமாறு அவனை வளர்த்தனர். காலம் பல கடந்து, பரிபாகம் எய்தினான் பாலன்.
நண்ணியது நல்லூழ்.

தரணிபன் ஒருநாள் தனையனை அறிந்தான். ஆயினும், தனையன் தந்தையை அறிந்திலன்.

'மறவர் மகன் அல்லன் நீ! என் மைந்தன். கவர்ந்தனர் கானவர்; வளர்த்தவர் பண்பு வாய்த்திலை. உனக்கே அரசு உரியது. ஊன்றிப் பார்!' என்று இன்னபல ஏதுக்களை எடுத்துக் காட்டி, தனையனைத் தன்னவன் ஆக்கினன் தரணிபன் என்றொரு வரலாறு, பலரும் அறிந்தது.

அதுபோல், ஐம்புல வேடர் சூழலில் அகப்பட்டு, அரிய தன் இயல்பை அறியாதிருந்தது ஆன்மா. கட்டறுக்க வந்தது காலம். அந்நாளில், கண்முன் குருவடிவில் காட்சியாயினர் கணேசர்.

'கேள்! புலன் நுகர் இன்பம் உனக்கன்று. பேரின்பப் பேற்றிற்கு உரிமை உடையவள் நீ!'
- இங்ஙனம் திருவருளில் தோய வைக்கும் உரிய மெய்யுணர்வால் உணர்த்தி, தன் பேரின்பச் செல்வத்தைப் பெற வைத்தனர் என்பது வெளிப்பட,

    'என்னை யறிவித்து எனக்கருள் செய்து'
    என்ற அடி எண்ணியெண்ணி இன்புறற்கு உரியது.

    'தன்னை யறிவது அறிவாம், அ·தன்றிப்
    பின்னை யறிவது பேயறி வாமே'

- என்று திருமந்திரம் இதற்கான மரபு கூறுகின்றது. இவ்வுபதேசத்தின் பின், பெற்றவர் இவர் எனும் பற்றுதல் இல்லை; உற்றவர் என்று எவரையும் தொற்றுதல் இல்லை. முதல்வன் செய்த உபதேசத்தால், முன்னிலைச் சுட்டொழியும் என்பது குறிப்பு.

    'பாராதி பூதம் நீ யல்லை - உன்னிப்
    பார் இந்திரியம் கரணம் நீ யல்லை
    ஆராய் உணர்வுநீ என்றான் - ஐயன்
    அன்பாய் உரைத்த சொல் ஆனந்தம் தோழீ!'
    'அன்றென்றும் ஆமென்றும் உண்டோ - உனக்கு
    ஆனந்தம் வேண்டின் அறிவாகிச் சற்றே
    நின்றால் தெரியும் எனவே - மறை
    நீதியெம் ஆதி நிகழ்த்தினான் தோழீ!
    சங்கர சங்கர சம்பு'
- எனத் தாயுமானார், மௌனகுரு தமக்குச் செய்த உபதேசத்தை உரைத்தல் இங்கு உணரத் தகும்.

    'ஐந்து புலன் ஐம்பூதம் கரணமாதி
    அடுத்த குணம் அத்தனையும் அல்லை யல்லை;
    இந்த உடல் அறிவு அறியாமையும் நீ யல்லை;
    யாதொன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று,
    பந்தமறும் பளிங்கனைய சித்துநீ; உன்
    பக்குவம் கண்டு அறிவிக்கும் பான்மையேம் யாம்'
- என்று தாயுமானார்க்கு மௌனகுரு போதித்த பாடலும் இங்கு அறியத் தகும்.


(பதிப்பாசிரியர் குறிப்பு)

    'ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
    ஞான விளக்கினை யேற்றி நன்புலத்து
    ஏனை வழிதிறந்(து) ஏத்துவார்க்(கு) இடர்
    ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே!'
- திருஞானசம்பந்தப் பெருமான் - கிரியை ஞானம் சுட்டும் பஞ்சாக்கரப் பதிகப் பாடல்.

    கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
    வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
    ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
    தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.
- திருமந்திரம் - 5-1452 - கிரியை ஞானம்

True Worship is Worship Within

You may adore Him with sandal fragrance exceeding,
That grows on peaks atop in forests interior;
You may worship Him with flowers rare,
That bloom in Heaven's gardens;
Unless you shed your fleshy attachments
And realize Him in the depths of your heart
You shall never never reach his Holy Feet
That is like flowers that shed honey dew.
(English rendering - Dr.B.Natarajan)

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

வினை முதல்

அறம், பாவம் இரண்டற்கும் முதற்காரணம் மூலவினை. இவ்வினை, மும்மலத்துள் ஒன்று. மூலவினை, செயலாக வெளிப்படின் அன்றிப் பயன் செயல் இல்லை. அதனால் அதனை, இருவினையின் வேறாக எண்ணுவது இல்லை. அம் மூலவினையைக் காமிய மலம் என்பர். அவ்வினை, அநாதி தொட்டு ஆன்மாவில் அடர்ந்து உள்ளது. பீடழிக்கும்
புண்ணிய பாவச் செயல்கள், அதனிலிருந்து பிறந்தன. அவைகளின் பயன் இன்பம் துன்பம். அனுபவித்த பின் அவைகள் அழிதலால் அவ்வினைக்கும் ஆதி அந்தம் உண்டு.

கருமலத்தொடு கலப்புற்று மாயா வடிவுகளில் மன்னி, காரணம் காட்டாமல் கட்டுப்படுத்தி, ஓயாமல் பல்வேறு உடல் தந்து, ஆன்மாவிற்குப் புலனாகாமல், அமலன் ஆணையின் அடங்கி இயங்கும் இக்காமியம். அதன் வேரையே கல்லி எறிந்தனர் நம் கணபதி பெருமான் என்று பாடுகின்றார் பாட்டியார். படித்துப் பாருங்கள் அந்த ஓர் அடியை!

56. முன்னை வினையின் முதலைக் களைந்து
பதவுரை:
முன்னை - அநாதி காலம் தொட்டுவரும்,
வினையின் - (பிறப்புகட்குக் காரணமான) இருவினைகளின்,
முதலை - வேரான கன்ம மலத்தை,
களைந்து - வேரொடு கல்லி எறிந்து (என்றவாறு).

தெளிமனம்

பாசஞானத்தால் பிறக்கும் கருவி அறிவிற்கு, வாக்கு என்று பெயர் வழங்கும். பசு ஞானமான ஆன்ம அறிவை, மன்மனம் என்பது மரபு. வீட்டின்பம் தர, தூய மாயையில் இருந்து மன்மனம் தோன்றும். மன்மனத்தில் ஒடுங்குதல், மனோலயம் எனப்பெறும். கவினுடைய நாக்கு சுவையின்பம் காண்பதுபோல், மன்மனம், அரிய பேரின்பம் பெற்று அதன் மயமாகும்.

உலகம் நிலையிலாதது; திருவருள் ஒன்றே மெய். உலகைச் சார்ந்து உலக மயமாய், அருளை அடைந்து அருள்மயமாகும் ஆன்மா. இதனைக் குருமுகமாயிருந்து தெய்வமே குறிப்பிட்டு உணர்த்தும். அதை அனுபவத்தில் அறிந்ததும் தெளிவடையும் சித்தம். மலவிருள் கலவாமல், அருள் ஒளி நிறைந்த தூய சிந்தையே தெளிந்த மயமாய்த் தேர்வு பெற்றிருக்கும். உத்தமப் பாட்டி, இந்நுட்பத்தை ஓதும் அழகே அழகு.

57. வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
58. தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து

பதவுரை:
வாக்கும் - வாயால் பேசுதலும்,
மனமும் - மனத்தால் நினைத்தலும்,
இல்லா - இல்லாத,
மனோலயம் - மனநிலை ஒழுக்கம்,
தேக்கியே - நிறைந்து பெருகச் செய்து,
என்றன் சிந்தை தெளிவித்து - (அதனால்) எனது மன்மனத்தைத் தெளிவுறச் செய்து (என்றவாறு).

என்ன அற்புதமான செய்தி!

    'மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
    மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
    மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் போர்க்கு
    மன்மனத் துள்ளே மனோலயம் ஆமே'
- என்று திருமூலரும்,

'வாக்கும் மனமும் இறந்த பொருள் காணில்
ஆக்கைக்கு அழிவில்லை யாம்'
- எனும் ஔவை குறளும், அருமையாக இதனை அறிவித்தல் இங்கு அறியத்தகும்.

'வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும்' இறைவன் தந்துளன்;
மனத்தின் தூண்டுதலால், காயம் பணியிற் காதல் கொளும். வாயும் தன் பணியான வாழ்த்துதலைச் செய்யும். காயவுணர்வு, வரவரக் கருத்தில் அடங்கும். வாக்கின் உணர்வும் மனத்தில் ஒடுங்கும். கடவுட் காதல் கொண்ட மனம், இறுதியில் தன்னையே துறக்கும். இதுதான் 'மனோலயம்' எனப்பெறும். அவ்வமயம், பிருகிருதியின் போர்வையே இவ்வுலகம் என்னும் தெளிவு சிந்தையில் திகழும்.


(பதிப்பாசிரியர் குறிப்பு)

திருப்புகழ் - பெருத்தவசன வகுப்பில் வரும் 'உருக்கு திருவருள் திளைத்து மகிழ்தர உளத்தொடு உரை செயல் ஒளித்து விடுவதும்' என்ற பகுதிக்கு, அடியேன் எழுதிய உரை இங்கு பொருந்தக் காண்போம்:

அருணகிரியாரின் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அற்புதங்கள் பல. அண்ணாமலையார் ஆலயத்தின் கோபுரத்திலிருந்து வீழ்ந்த அருணகிரியாரைத் தாங்கியருளிய முருகன் செய்த உபதேசம், 'சும்மா இரு சொல்லற!' என்பதே.

கந்தரநுபூதியில் அதைப் பாடுகிறார் அருணகிரியார்:
    செம்மான் மகளைத் திருடுந் திருடன்
    பெம்மான் முருகன் பிறவா னிறவான்
    சும்மா இருசொல் லறவென் றலுமே
    அம்மா பொரு ளொன்று மறிந்திலனே!

சொல்லறச் சும்மா இருத்தல் யோகசமாதி. பேச்சின்றிச் சும்மாயிருத்தல் வீண். இங்கு
சொல் அறுத்தல் என்பது பேச்சும், சிந்தையும் நிறுத்துவது.

    வாக்கு மனமும் இரண்டு மவுனமாம்
    வாக்கு மவுனத்து வந்தாலு மூங்கையாம்
    வாக்கு மனமும் மவுனமாஞ் சுத்தரே
    ஆக்குமச் சுத்தத்தை யாரறி வார்களே!
திருமந்திரம் - தந்திரம் - 7 - 1896

Mauna is Stillness of Both Thought and Speech
To attain stillness of Speech and Thought at once is mauna
Mauna sans Speech alone
Is but state of dumbness;
Only when Speech and Thought are alike in mauna
Are you in State Suddha (Perfection)
Who but knows
That Suddha state to bring about?

    வாக்கு மனமு மறைந்த மறைப்பொருள்
    நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
    போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
    ஆக்கமும் அத்தனை ஆய்ந்து கொள் வார்க்கே.
திருமந்திரம் - தந்திரம் - 9 - 2854

He is Subtle Beyond Thought and Speech-Seek and Find Him
Beyond speech and thought
Is hidden that Vedic Object;
Look at it;
It is an Object subtle by far;
It has no coming, nor going, no perishing;
All blessings are
For those who seek Lord true.

திருவருள் திளைப்பு என்பது வாக்கும் மனமும் இல்லா மனோலயத்தில் நிகழ்வது.

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

சாரூபம்

கண்கள் இருளைக் காண்கின்றன. அதே கண்கள் ஒளியையும் அறிகின்றன; அதுபோல், அறியாமை மயமான அகம், அறிவுமயம் ஆகும். விகற்பமான இந்த இருநிலை விலக வேண்டும்.

தத்துவங்களின் நுட்பத்தை அறியும் பொழுது, ஒளிவளர் ஞானம் உதயம் ஆகும். அந்த ‘அறிகிறோம் இதனை’ எனும் சிந்தனையும் அகன்றதாயின், ஆனந்தமயமாகும் ஆன்மா. 'இருளது சக்தி, வெளியது எம் அண்ணல்' எனத் திருமந்திரம் தெரிவித்தபடி, தெளிந்த இடத்தில் தெய்வ இன்பம். என்ன அருமை! இரண்டே அடிகளில் எவ்வளவு பெரிய செய்தி! பாருங்கள் பாட்டி காட்டும் பாட்டை!

59. இருள்வெளி இரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
60. அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்திஎன் செவியில்

பதவுரை:
இருள் - இருளைச் சார்ந்த போதும்,
வெளி - ஒளியைச் சார்ந்த போதும்,
இரண்டுக்கு - அந்த இரண்டற்கும்,
ஒன்று இடம் என்ன - கண்ணே இடமானாற்போல,
என் செவியில் - (உலகச் சார்பால் உலகமயம்; சிவச்சார்பால்
சிவமயம் ஆயினை என்று) அடியேன் செவியில்,
அருள்தரும் - திருவருட் பேற்றைத் தரும்,
ஆனந்தத்து அழுத்தி - இன்பச் செய்தியை அழுந்த உபதேசித்து
(என்றவாறு).

'ஒளியிருள் கண்டகண் போல வேறாய் உள்
ஒளியிருள் நீங்க உயர்சிவம் ஆமே'
- என்பது திருமூலர் குறிப்பு.

இ·து அருளின் சொருபநிலை. இங்கு ஆன்மா கணபதி அருளில் கலந்து அடங்கும்; சாரூபகதி என்று இதனைச் சாற்றுவர் பெரியோர்.
அருளே இறைவர் திருமேனி. அருளைச் சார்தல் இறைவர் ஆகத்து உதித்தல் எனப்பெறும்.

'இவ்வுடம்பு நீங்கும் முன்னே எந்தாய் கேள்! நின்னருளாம்
அவ்வுடம்புக் குள்ளே அவதரிக்கக் காண்பேனோ'
- என்று மேலும் மேலும் வேண்டுவர் மேலோர்.

    'தத்துவம் ஆனவற்றின் தன்மைகள் உணருங்காலை,
    உய்ந்து உணர்ந்திட உதிப்பது ஒளிவளர் ஞானம் ஆகும்;
    அத்தன்மை அறியும் ஆறும் அகன்றிட அதுவாய் ஆன்மாச்
    சுத்தம தான ஞானத்(து) ஒருமுதல் தோன்று மன்றே'
- எனும் சிவப்பிரகாசம், இதனை எவ்வளவு நன்றாக உணர்ந்துளது என்பது யூகிக்கத் தகுவது. இது, புழுவைத் தன்னிறமாக்கும் குளவியின் செய்திபோல் இருக்கிறதல்லவா!

அறியாமை அறிவு எனும் இரண்டற்கும் பிறப்பிடம் ஒன்றே எனும்படி, பெருகிய திருவருளால் உண்டாகும் பேரின்பக் கடலில், மூழ்கச் செய்தான் முதல்வன் என இவ்வடிக்குப் பொருள் கொள்ளினுமாம்.

    'அறியாமை அறிவாதி பிரிவாக அறிவார்கள்
    அறிவாக நின்ற நிலையில்
    சிந்தையற நில்என்று சும்மா வுணர்த்திமேல்
    சின்மயா னந்த வெள்ளம்
    தேக்கித் திளைத்துநான் அதுவா யிருக்கநீ
    செய்சித்ரம் மிக நன்றுகாண்'
- எனும் தகவு நிறைந்த தாயுமான அடிகள், இங்கு நம் நினைவிற்கு வருகிறார் அல்லவா!


(பதிப்பாசிரியர் குறிப்பு)

    இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
    பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்
    இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
    இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.
- திருமந்திரம் - 1-331 - கள்ளுண்ணாமை

Joys of Sivananda Nectar

In meditation lost, 'rid of the cycle of Night and Day',
Dead to outward things, they drink not the bliss-nectar -
The Bliss of the Lord's Feet that neither night nor day knoweth,
I, caught in Maya causing Night and Day, struggle to reach.

    தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந்
    தங்குஞ் சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா
    அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர்
    இங்கிவ ராக விழிவற்ற யோகமே.
- திருமந்திரம் - 5-1510 - சாரூபம்

Only Jnana-in-Yoga Leads to Sarupa State

The State of Sarupa is, no doubt, reached
Through the eight-fold yoga way;
But unless it be Sanmarga-in-Yoga,
The Sarupa state cannot be;
The Yoga way but leads to bodily Siddhis diverse;
But for the Sarupa state to realize,
None these but the pure way of Jnana-in-Yoga.

    ஒளியும் இருளும் ஒருகாலுந் தீரா
    ஒளியுளோர்க் கன்றோ ஒழியா தொளியும்
    ஒளியிருள் கண்டகண் போலவே றாயுள்
    ஒளியிருள் நீங்க வுயிர்சிவ மாமே.
- திருமந்திரம் -7-1819 - அருளொளி

By Inner Light Unite One in Sivam

Interminable are light and darkness
Only to those who have light, will darkness cease;
To the eyes that see light, darkness is not;
So, too, when the inner light dispels darkness,
The Jiva with Siva one becomes.
(English rendering - Dr.B.Natarajan)

    கலைஇலங் கும்மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம்
    விலைஇலங் கும்மணி மாடத்தர் வீழிமிழலையார்
    தலைஇலங் கும்பிறை தாழ்வடம் சூலம் தமருகம்
    அலைஇலங் கும்புனல் ஏற்றவர்க் கும்அடி யார்க்குமே.
    - திருஞானசம்பந்தப் பெருமான், பதமுத்தியின்
    உச்சமாய் எய்தும் சாரூபநிலையைச் சுட்டும் அரிய
(திருவீழிமிழலைப் பதிகத்தின்) பாடலிது.

பரமுத்தி நிலை

மன்மனமும் மறையும்; காண்பான், காட்சி, காணப்படு பொருளும் கரக்கும். ஆன்மா கணபதியொடு அத்துவிதமாக அடங்கும். சத்தெனும் மெய்யொளி, சித்தெனும் அறிவொளி, ஆனந்தமெனும் இன்ப ஒளி மூன்றும், ஒன்றற்கு ஒன்று வியாபக வியாப்பியம் ஆகிவிடும். இதுவே பரமானந்தப் பேறு.

61. எல்லை யில்லா ஆநந்தம் அளித்து
பதவுரை:
எல்லை இல்லா - வரம்பு இல்லாத,
ஆநந்தம் அளித்து - சாயுச்சிய இன்ப உணர்வை அருளி
(என்றவாறு).

அருள் நெறி

கருவியில் அடங்கக் கருவிகள் தோன்றும்; இருளுடன், இன்பம் துன்பம் இரண்டும் அளிக்கும் நிலையது இந்நிலை. அம்மவோ அம்ம! என்ன பரிபவம்!

அருளில் அடங்க அருள் தோன்றும்; இது இன்பமேயான இயல்நிலை. இங்கு, ஓம் என்கிறது நம் உணர்வு.

கவரிமான் இயல்பான கஸ்தூரி மணம் வீசும்; அதுபோல், இந்நிலையில், அந்தக்கரணத்துள் சிவமணம் வீசும். மழையிருளில் திசை தெரியாமல் உழல்பவர் சூரிய உதயம் காண்பதுபோல், திசை தப்பிய கப்பல் தப்பித் துறை சேரக் காண்பது போல், விடாச்சிறையர்க்கு விடுதலை கிடைத்தது போல், அகலா நோயர்க்கு அந்நோய் அகன்றதுபோல், திருவருள் நெறி கண்டவர்க்குத் துன்பம் எல்லாம் தீரும்; இந்த அநுபவமும் காட்டினன் ஆனைமுகப் பரமன் என்கிறார் நம் ஔவைப் பிராட்டியார்.

62. அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
பதவுரை:
அருள்வழி காட்டி - அருள்நெறி எனும் ஞானமார்க்கத்தைக் காட்டி,
அல்லல் களைந்து - (காட்டிய அளவில்) பிறவித் துயரை வேரறுத்து
(என்றவாறு).

அல்லல் களைந்து அருள்வழி காட்டுதலை,

    'பாராதி யண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற
    பரவெளியின் உண்மை காட்டி,
    பற்றுமன வெளிகாட்டி, மனவெளியினில் தோய்ந்த
    பாவியேன் பரிசு காட்டி,
    தாராளமாய் நிற்க நிற்சிந்தை காட்டிச்
    சதாகால நிட்டை யெனவே
    சகசநிலை காட்டினை, சுகாதீத நிலயந்
    தனைக்காட்ட நாள் செல்லுமோ?
    காரார எண்ணரும் அநந்த கோடிகள் நின்று
    காலூன்றி மழைபொழிதல் போல்
    கால்வீசி மின்னிப் படர்ந்து பரவெளியெலாம்
    கம்மி ஆநந்த வெள்ளம்
    சோராது பொழியவே கருணையின் முழங்கியே
    தொண்டரைக் கூவும் முகிலே!
    சுத்தநிர்க் குணமான பரதெய்வமே! பரஞ்
    சோதியே! சுகவாரியே!'

- என வரும் தாயுமானார் பாடல், காண இயலாத அருள்வழியை ஆன்மாவிற்குக் காட்டும் கருணையை வெளிப் படுத்துகின்றது அல்லவா! அந்நிலையைத்தான் நம் ஔவையாரும், அல்லல் களைந்து அருள்வழி காட்டினான் நம் அருள் குரவன் என்கிறார்.


(பதிப்பாசிரியர் குறிப்பு)

    வான் கெட்டு மாருதம் மாய்ந்து
    அழல் நீர் மண் கெடினும்
    தான் கெட்டல் இன்றிச்
    சலிப்பு அறியாத் தன்மையனுக்கு
    ஊன் கெட்டு உயிர்கெட்டு
    உணர்வு கெட்டு என் உள்ளமும் போய்
    நான் கெட்டவா பாடித்
    தெள்ளேணம் கொட்டாமோ!
- மாணிக்கவாசகர் - திருத்தெள்ளேணம் -18

    ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
    ஏனம் விளைந்தெதி ரேகாண வழிதொறுங்
    கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
    ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே.
- திருமந்திரம் - 5-1472 - ஞானம்

Jnani becomes Light Divine

In whose thoughts Jnana ripens and swells,
In his path the Life Boat appears and greets him;
And thus does he reach the surging waters
Of the Crescent Moon's sphere.
And there rid of the impurities,
He himself the Effulgent Light becomes.

    சாயுச் சியஞ்சாக் கிரதாதீதஞ் சாருதல்
    சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதற்
    சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
    சாயுச் சியமனத் தானந்த சத்தியே.
- திருமந்திரம் - 5-1513 - சாயுச்சியம்

Sayujyam

Sayujya is the state of Jagrat-Atita, the
Beyond Consciousness,
Sayujya is to abide for ever in Upasantha
The peace that passes all understanding,
Sayujya is to become Siva Himself,
Sayujya is to experience the infinite power of inward bliss,
Forever and ever.
(English rendering - Dr.B.Natarajan)

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)


சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி..

அருவுருவம்

துரிய மெய்ஞ்ஞான அற்புத மெய்ப்பொருள், தயா உருவத் திருமேனி தாங்கும்;
உபதேசிக்கக் குருமுகமாகிக் குறுகும். இடையில், அருவமான தன் இயலை அறிவிக்கும். சிவம், சக்தி, விந்து, நாதம் என்னும் நான்கும் அருவத் திருமேனிகள்.

பதப்படும் ஆன்ம நிலையைப் பார்த்து, கனிந்த தன் அருவுருவைக் காட்டும்;
அருவுருவத்தின் வேறு பெயர் சதாசிவம்.

ஐந்தொழில் ஆற்றும் அருள் சிவசக்தி, சுத்த மாயையில் உள்ள சதாசிவத்தின் மூலம், அகத்தும் புறத்தும் தொழில் ஆற்றும். சதாசிவமும், சிவசக்தியும், அங்கியும், அங்கமுமாக என்றும் அமைந்துளர். இச்செய்தியை,

    'அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பாலும்
    உண்டென்ற சக்தி சதாசிவத்து உச்சி மேல்
    கண்டம் கரியான் கருணை திருவுருக்
    கொண்டங்கு உமைகாணக் கூத்துகந் தானே'

- என்று திருமந்திரம் (ஒன்பதாம் தந்திரம் - சுந்தரக்கூத்து) இனிது இயம்புகின்றது.

சாந்தியாதீத கலையில் உள்ளது சத்தம்; அ·து உயிர்கள் உணரும் சூக்கும பூதம். அதற்கு இடம், தூல பூதமான ஆகாயம். ஆகாய அதிபர் சதாசிவர். ஆன்ம அகத்தும் புறத்தும் இருந்து அருள் செய்பவர் இவர். சாந்தியாதீத கலையைச் சார்ந்த தத்துவங்கட்கும், புவனங்கட்கும் இவர் தலைவர். சீவர்கட்கு அருளல் இவர்தம் சிறப்புத் தொழில். எனினும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அனைத்தும் பொதுவாகச் செய்யும் புனித மூர்த்தியெனப் பெறுவர்.

வான் மண்டல அதிபரான இவர், ஆங்குச் சாரும் ஆன்மாக்கட்குப் புறத்தில் சத்தமாய்ப் பொலிந்துளர்.

சத்தம் என்பது சூக்கும வாக்கின் உள்ளடங்கிய ஓசை. வித்தக இந்த ஓசையை
விளைவித்து, அதனில் சதாசிவர் வியாபகமாக விளங்காரேல், சாந்தியாதீத கலையில் உள்ள உயிர்கட்குச் சிவபோகம் உதயம் ஆகாது.

புறத்தில் இருந்து போகம் நுகர்விப்பதுடன், நுகர் கருவியாகவும் இருந்து, அகத்தில் சீவர்கள் யோகம் அநுபவிக்கப் புரிகின்றார்.

சிவலிங்கம் எனினும் சதாசிவம் எனினும் ஒன்றே. அண்டத்தில் சத்தம்; சத்தத்தில் சதாசிவம். பிண்டத்தில் சித்தம்; சித்தத்தில் சிவலிங்கம். காட்டினன் இதனைக் கணபதிப் பெருமான். இவைகளை உணர்ந்து உரைக்கின்றார் ஔவையார். இதனை ஊன்றி உணர்ந்து படிக்கும்போது, நமது உள்ளம் பாகாய் உருகுகிறது.

63. சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
64. சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

பதவுரை:
சத்தத்தின் உள்ளே - அண்டத்தில் நுண்மைப் பூதமான சத்தத்தைத்
தொழில்படுத்தி, அந்தச் சத்தத்துள்,
சதாசிவம் காட்டி - வியாபக சதாசிவத்தை விளங்கச் செய்து,
சித்தத்தின் உள்ளே - (பிண்டத்துள்) உள்ளத்துள் விளங்கும்,
சிவலிங்கம் காட்டி - சிவலிங்கத்தைத் தரிசிக்கச் செய்து
(என்றவாறு).

சத்தமும் சித்தமும் அத்தன் இருப்பிடம் எனலை,

'சத்தமும் சத்த மனமும் மனக்கருத்து
ஒத்தறி கின்ற இடமும் அறிகிலர்;
மெய்த்தறி கின்ற இடம் அறிவார்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே'

- எனும் திருமூலர் குறிப்பை எவரும் ஓதி உணர்ந்துளர். உயிர்கள் தன்னை அறிந்துய்ய, அருளால் இறைவன் ஆட்சி நடத்துவன். அருள்வழி படரும் ஆன்ம கோடிகள், அன்பும் அறிவும் எய்தி, செவ்விய செயல் பல செய்து, இனிய படிமுறையேறி இன்பம் எய்துவர்.

அந்நிலையில், சத்தத்தில் பரமன் தன் அருவுருவை அறிவிப்பன். ஊன்றி உணர்ந்து நெகிழ்வார்க்கு, அவர் தம் சித்தத்தில் தன்மயமான சிவலிங்கம் காட்டுவன். புறத்தில் சதாசிவம்; அகத்தில் சிவலிங்கம். இவைகளை எண்ணி, ஆனந்திக்கும் நம் அகம். திகழும் புருவநடுவில் சதாசிவத்தைத் தியானிப்பதும், இதயத்தில் சிவலிங்க மூர்த்தியைப் பூசிப்பதும் மரபு.

    'உரைசெயும் ஓசை உரைசெய் பவர்க்கு
    நரை திரை யில்லை நமன்'

    'ஓசையின் உள்ளே உதிக்கின்ற தொன்றுண்டு
    வாசமலர் நாற்றம்போல் வந்து'

    'தற்பர மான சதாசிவத்தோ டொன்றில்
    உற்றறி வில்லை உயிர்க்கு'

    'ஓசை உணர்ந்தங்கே உணர்வைப் பெறும்பரிசால்
    ஈசன் கருத்தாய் இரு'
- எனும் ஔவை குறள்பாக்கள், இங்கு உணரத் தகும்.


(பதிப்பாசிரியர் குறிப்பு)

'வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்; மயில் குயிலாச்சுதடி' என்று எம்எஸ் அம்மா பாடிப் பிரபலமான, வள்ளலாரின் வரிகள். இதன் தத்துவ விளக்கம் இந்த அடிக்குத் தொடர்புடையது.

இங்கே மயில் என்பது விந்து என்ற ஒளியைக் குறிப்பது; குயில் நாதமெனும் ஒலி.
ஒலியும் ஒளியுமே சிவசக்தி ஐக்கியத்தில் ஆறு அத்துவாக்களாய் விரிந்து அண்டங்களாகி நிற்பன. சட்கோணத்தின் ஆறு பக்கங்கள் சுட்டுவதும் அவற்றையே. ஆறுமுகம் ஆன பொருளது. ஒடுங்குகையில் ஒளியெனும் பொருளுலகம், ஒலியில் அடங்கும்.

மீண்டும் ஒலியிலிருந்தே அனைத்தும் தோன்றும். 'வேதத்தொலி கொண்டு', 'எம் இறை நல்வீணை வாசிக்குமே' போன்ற திருமுறைக் குறிப்புகளால் இதை உணரலாம். 'சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்' என்று திருமூலர் சுட்டுவது போல் சாதாக்கியத் தத்துவத்திலிருந்து, அகர உகர மகரமான ஓம் எனும் முத்தமிழே, வேத ஒலிகளாய் விரிந்து பெருகும். 'நாதம் எழுந்தெழுந்தோடி வந்துறையும் திருக்கூத்து' என்பார் மணிவாசகர்.

இந்த அண்ட நிகழ்வைப் பிண்டத்தில், தஹராகாசத்தில் (வள்ளல் பெருமான் சாந்தோக்கிய உபநிடதம் சுட்டும் பிரம்மவித்யையாம் தஹரவித்யையைப் போதித்தவர்) - சிற்றம்பலத்தில் காண்கையில் - அகவானத்தில் ஆடும் மயில், குயிலாகி ஒடுங்கும். அக்கச்சி என்று குண்டலினி மஹாசக்தியைப் பாடுகிறார்; பொதுவாய்ச் சித்தர்கள், வாலைப்பெண், கண்ணம்மா, குதம்பாய், ஞானப்பெண்ணே என்று பாடுவது போல.

'ஆதியாம் சிவனும் அவன் சோதியான சக்தியுந்தான் அங்கும் இங்கும் எங்கும் உளவாகும்' என்று பாரதி பாடுவது போல், சிவசக்தியே நாதவிந்துவாய், ஒலியுலகாய், ஒளியுலகாய் விரிந்து எங்கும் நிறைவன. விந்து எனும் ஒளி, யோக உச்சியில், நாதம் எனும் ஒலியில் அடங்கிப் பின் நாதாந்தம் ஆகும்.

அங்ஙனம் நாதாந்தம் எட்ட வல்லோர் சித்தர் ஆவர்.

    'சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்
    சத்தமுஞ் சத்த முடிவும்தம் உள்கொண்டோர்
    நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர
    முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே'
என்பார் திருமூலர். (திருமந்திரம் - 1-125 - உபதேசம்)

Siddhas they that Siva's world here visioned,
Nada and Nadanta deep in them realized,
The Eternal, the Pure, reposing in Bliss unalloyed,
Thirty and Six, the steps to Liberation leading.

மயிலைக் குயிலாக்கி, நாதனை நாதத்தில் உணர்வது எப்படி?

அதை நோக்கிய வழியைப் பாட்டியார் படிப்படியாய்ப் பாடக் கேட்டோம். ரசபதியார் இப்பகுதியில் சுட்டும் ஒரு திருமந்திரப்பாடலில் இன்னும் விரிவான விடை இருக்கிறது.

இதைச் சித்தர் பரிபாஷையில் 'மறித்தேற்றம்' என்பர். கீழ்நோக்கியே செலுத்தி விரயமாகும் விந்துவை, குண்டலினி யோகத்தால் கட்டி, மேல்நோக்கி மறித்தேற்றும் சாதனையில் புருவமத்தியில் கண் திறக்கும். இதையே 'ஊர்த்வ ரேதம் வ்ரூபாக்ஷம்' என்று வேதமும் சுட்டும். அங்கே, நிலா மண்டலம் எனும் 'மாசறு திங்களில்' கங்கை ஊற்றெடுத்துப் பெருகும்.

இப்படி விந்துவைக் கட்டி மறித்தேற்ற அது நாதத்தில் ஒடுங்கும். 'என் குலம் சுக்குலம்தான் மைந்தா' என்று பாடுகிறார் சித்தர் காகபுசுண்டர்.

'குலாம்ருதைக-ரஸிகா' என்பது லலிதையின் ஆயிரம் (LS 90) நாமங்களுள் ஒன்று.

இதை 'விந்துசயம்' (Conquest of Bindu) என்று பாடுகிறார் திருமூலர்.

இதில் முக்கியமான சில பாடல்களைப் பார்ப்போம்.

    'அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள
    அமுதப் புனலோடி அங்கியின் மாள
    அமுதச் சிவபோகம் ஆதலாற் சித்தி
    அமுதப் பலாவன மாங்குறும் யோகிக்கே'
- திருமந்திரம் - 7-1959 - விந்துசயம்

Bindu Sublimated by Kundalini Yoga Leads to Ambrosial Flow

When the Bindu of the body
Thus perishes (by Yoga)
It is into Divine Bindu transformed
Of the ambrosial Lunar Sphere within;
When this Bindu of the body
Perishes in the fire of Kundalini,
The ambrosial waters flow and fill the body;
Then indeed is Siva Bhoga that is ambrosial sweet;
And thus bathed in divine waters of ambrosia
The Yogi attains Siddhis rare.

    விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
    வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
    அந்தமும் ஆதியு மாமந் திரங்களும்
    விந்து அடங்க விளையுஞ் சிவோகமே.
- திருமந்திரம் - 7-1969 - விந்துசயம்

Sivoham when Bindu Subsides

In union of Bindu and Nada
Was born this creation vast;
It is beginning and end of all life,
Of great mantras too,
When Bindu subsides,
Then is SivOham.

ரசபதியார் சுட்டும் பாடல் அடுத்து வருவது:

    'சத்தமும் சத்த மனமும் மனக்கருத்(து)
    ஒத்தறி கின்ற இடமும் அறிகிலர்;
    மெய்த்தறி கின்ற இடம் அறிவார்க்கு
    அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே'
- திருமந்திரம் - 7-1973 - விந்துசயம்

Jnani's know Lord's Seat

The Sound (Nada) and the Mind that perceives Sound,
And the place where Mind undistracted discerns Truth
- These they know not;
That place the Jnanis truly know
That verily is Lord's Seat.

சித்தர்கள் சுட்டுவதும் இதையே:

    சத்தம் பிறந்த இடம் தன்மயமாய் நின்ற இடம்
    சித்தம் பிறந்த இடம் தேர்ந்தறிவது எக்காலம்!
- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல் - 189

    விந்துநிலை தனியறிந்து விந்தைக் கண்டால்
    விதமான நாதமது குருவாய்ப் போகும்;
    அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால்
    ஆதியந்த மானகுரு நீயே யாவாய்!
- அகத்தியர் - தனிஞானம் – 4

சிதானந்த ரூபா சிவோஹம் சிவோஹம்!
- நிர்வாண ஷடகத்தில் ஆதிசங்கரர்

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

எங்குமான இன்ப உரு

உலகெலாம் ஒடுங்கும் நாளில், எஞ்சி நிற்பவன் இறைவன். அப்போதைய அவனுடைய பேருருவின் முன் அண்டமெலாம் அணுப்போல் ஆம். எம்மான் எப்பொருளினும் தங்கியிருக்கும்போது, அணுவெலாம் அண்டமாம். இதனால், விசுவரூபன், விசுவத்திற்கு அந்தர்யாமி, விசுவாதிகன், விசுவநாதன், விசுவேஸ்வரன் என்று அவனை ஏத்துகின்றது வேதம். இதனை அநுபவத்தில் அறிந்தவரே மெய்ஞ்ஞானிகள். வடிவிலா ஆகாயம், அவர்தம் அகக்கண்ணிற்குப் புலனாம். அந்நிலையில், தேகாத்ம புத்தி தேய்ந்து அழியும்; ஆஹா! அளவிறந்து பெருகும் ஆனந்தம். இதனை 'இன்ப ரசத்தே பருகிப் பலகாலும், என்றனுயிர்க்(கு) ஆதரவுற் றருள்வாயே!' என்கிறது தெய்வச் சந்தத் திருப்புகழ்.

65. அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
66. கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

பதவுரை:
அணுவிற்கு அணுவாய் - அணுவிற்குள் (அதிநுட்ப) அணுவாகியும்,
அப்பாலுக்கு அப்பாலாய் - அண்டமெலாம் கடந்து பெரிதாகிப் பரவி விரிந்து,
கணுமுற்றி நின்ற - கணுக்கள் முதிர்ந்து நலமுற விளைந்த,
கரும்புள்ளே காட்டி - கரும்பின் இன்ப நலத்தை என்னுள்
அத்துவிதமாக இருந்து உணரச் செய்து
(என்றவாறு).

தாம் பெற்ற இன்பத்தைப் பிறர்க்கு அறிவிப்பர் ஆன்றோர். அறிவிக்கும் அமயம், உலகம் அறிபொருளான கரும்பு, கனி, பால், தேன் முதலிய சுவைப் பொருள்களை, மகத்தான உவமையாகக் கையாள்வது மரபு. அவ்வழியைப் பின்பற்றி, 'கரும்புள்ளே காட்டி' என்று பாடிக் காட்டுகிறார் நம் பாட்டியார்.

'அண்டமோர் அணுவாம் பெருமைகொண் டணுவோர்
அண்டமாம் சிறுமைகொண் டடியேன்
உண்டஊண் உனக்காம் வகைஎன(து) உள்ளத்(து)
உள்கலந் தெழுபரஞ் சோதி'
என்று தெய்வக் கருவூர்த் தேவரும்,

    'அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
    கணுவற நின்ற கலப்ப துணரார்'
    என்று தந்திர சொருபமான திருமந்திரமும்,

    'பனைத்தடக்கை எந்தை மற்றி யாவுள
    சிந்தை செய்யும் தேவதை நமக்கே'
    'ஏயநின் தன்னை யல்லால் வேறுதழீஇத் தொழுமோ
    வணங்காத வியன்சிரமே'
- என வரும் மூத்த பிள்ளையார் மும்மணிக் கோவையும்,

    'கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
    இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே'
- என அருந்தமிழ் வேத அப்பரும் அருளிய அருள்மொழிகள் இங்கு நம் நினைவில் ஊறி நெஞ்சத்தை நெகிழ்விக்கின்றன அல்லவா!


(பதிப்பாசிரியர் குறிப்பு)

    அண்டபிண்டம் எல்லாம் அணுவுக்கு அணுவுக்கு நீ
    கொண்ட வடிவின் குறிப்பறியேன் பூரணமே!
- பட்டினத்தார் - பூரணமாலை - 37

    வெளியில் வெளிபோய் விரவியவாறும்
    அளியில் அளிபோய் அடங்கியவாறும்
    ஒளியில் ஒளிபோய் ஒடுங்கியவாறும்
    தெளியும் அவரே சிவசித்தர்தாமே.
- திருமந்திரம் - 1-124 - உபதேசம்

Space intermingling with space,
Nectar drowning in nectar,
Light dissolving in light--
The elect are they, the Siva-Siddhas,
Who these splendid visions perceive.

    அடங்கு பேரண்டத் தணு அண்டஞ் சென்றங்கு
    இடங்கொண்டதில்லை இதுவன்றி வேறுண்டோ
    கடந் தோறும் நின்ற உயிர்கரை காணில்
    திடம்பெற நின்றான் திருவடி தானே.
- திருமந்திரம் - 1-137 - உபதேசம்

The tiny atom, swimming the Universe vast,
Merges in the Vast - no separate existence knows;
So the Spirit abiding in each body,
At sight of His Holy Feet, discovers its Ancient Home.

    அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
    கணுஅற நின்ற கலப்பது உணரார்
    இணையிலி ஈசன் அவன்எங்கும் ஆகித்
    தணிவற நின்றான் சராசரம் தானே.
- திருமந்திரம் - 7-2010 - புருடன்

He within the atom (Jiva),
And the atom (Jiva) within Him
Commingling stand,
They know this not;
The peerless Lord pervades all
Unintermittent, in creation entire.

    பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்
    எறிகடல் ஏழின் மணல்அள வாகப்
    பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
    செறியும் அண் டாசனத் தேவர் பிரானே.
- திருமந்திரம் - 8-2297 - அண்டாதி பேதம்

In the vast spaces of Cosmos
Are universes numberless
That evolved and separated;
Countless are they
Unto the sands that are
On the shores of seven seas;
Sparkling as a jewel of gold
That dazzles
They form His Seat of Throne
--For Him, the Lord of Celestials.
(English rendering - Dr.B.Natarajan)

One paltry planet, a few thousand years - hardly worth the attention of a minor deity, much less the Creator of the Universe.
- Carl Sagan in Contact

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

வேடமும் நீறும்

தவம் நிறை ஒருவரை, மகத்தானவர் என்று உலகம் மதிக்கும். அதற்கு அயலாய்ப் பரனை மறந்து, ஊனுடல் வளர்த்து உயிர்க்கும் எவர்க்கும், நானே தெய்வம் என்று நமன் வருவான்.

அருந்தவம் முயன்று, பரமுத்தியைப் பெறுவர் இம்மையில் பெரியோர்கள். மும்மலக் கட்டு நீங்கினரெனினும், பிராரத்துவத்தால் வந்த உடல் விலகும் வரை, வினை இவர்களை விட்டு விலகுவதில்லை.

நிட்டையில் இருந்து நீங்கிய நேரம், பிராரத்துவம், சிற்சில சமயம் தானே அவர்களைத் தாக்கும். அதனால் விருப்பும் வெறுப்பும், தத்துவக் காட்சியும், விபரீத உணர்வும் விளைவது இயல்பு. அவை நிகழா வண்ணம், 'யானை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை'. அதனுடன், கணபதி அடியவரை, அப்பெருமான் சொருபமாகவே ஆராதிப்பர். அவருடன் கூடுவர். ஐந்தெழுத்தை ஓதுவர். ஞான நூல் ஆய்வர். அடியவர் உறவு மிகும்படி, மூலப் பரம்பொருள் திருமுன் முறையிட்டே நிற்பர்.

திருவடிப் பேற்றைப் பெற்றார்தம் பெருமையைப் பெரிது பேசுவர். அடியவர்க்கு அடியம் யாம் என்று ஆர்வத்தொடு அறிவிப்பர்; அவர்கட்கு ஆன பணி அத்தனையும் செய்வர். இந்நிலையரைச் சீவன்முத்தர் என்று சிவாகமங்கள் குறிப்பிடுகின்றன.

துணைவியிடத்தில் ஒருவன் கொண்டிருக்கும் அன்பை, அவள் உறவினரிடத்து அவன் காட்டும் அன்பைக் கண்டு கணிப்பர். அதுபோல் இறைவனிடம் வைத்த அன்பை, அவன் அடியரிடம் காட்டும் அன்பைக் கண்டு கணிப்பது பண்டை மரபு.

    'ஈசனுக்கு அன்பில்லார், அடியவர்க்கு அன்பில்லார்,
    எவ்வுயிர்க்கும் அன்பில்லார், தமக்கும் அன்பில்லார்,
    பேசுவது என் அறிவில்லாப் பிணங்களைநாம் இணங்கில்
    பிறப்பினிலும் இறப்பினிலும் பிணங்கிடுவர் விடு நீ
    ஆசையொடும் அரன் அடியார் அடியாரை அடைந்திட்டு
    அவர்கருமம் உன் கருமம் ஆகச் செய்து
    கூசி மொழிந்(து) அருள் ஞானக் குறியில் நின்று
    கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே!'

- எனும் சிவஞான சித்தியார், இங்கு நம் சிந்தனையில் ஊறிப் பெருகி உறவாடுகிறது அல்லவா!

வேடமும் நீறும் உலகில் விளங்க நிலைத்தால், கூடும் தொண்டரும் அவர்தம் உறவும் கொள்ள வரும்.

    'அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரிவாய்'
    'தொண்டரொடு கூட்டு கண்டாய்'
- எனும் முதுமொழிகள் இந்நினைவில் எழுந்தவை.

    'கனியும் நினைவொடு நாள்தொறும் காதல்படும்
    அடியார்க்கு இனியன்'
- எனக் கபிலர், கணபதியைக் குறிப்பிடுவதும், இங்குக் கருதத் தகும்.

இறைவனை மெய்யன்புடன் வாழ்த்துவாரும், வணங்குவாரும், தேவர் முதலிய
எவராலும் வாழ்த்தப் பெற்றும், வணங்கப் பெற்றும் பெருமை பெறுவர்.

    'தொழப்படும் தேவர் தொழப்படுவானைத் தொழுத பின்னை
    தொழப்படும் தேவர்தம்மால் தொழுவிக்கும் தம் தொண்டரையே'
- எனும் அப்பர் தேவாரம் இங்கு கருதத் தகும்.

பசு மலத்தை நீற்றி எடுத்தது நீறு; அது, பசுபோதங் கெடுத்தற்கு அறிகுறியாக அறியப் பெறும்; பராசக்தி விபூதிமயம் என்கிறது திருநீற்றுப் பதிகம். கண்ணுதலின் கண்களில் இருந்தொழுகிய அருள்துளிகள், கண்மணிகள் எனப்பெறும். நீற்றையும், அந்த கண்மணி மாலைகளையும் அணிவர் அடியார்கள். புருவநடு தியான இடம். அங்கு சொருபம் ஆவிர்ப்பவிக்கும். அதை நினைவுறுத்த, சந்தனம், குங்குமம் நெற்றியில் இடுவர். நெற்றி துரிய வெளியிடம். அங்கு வெளிப்படும் அருள் வெளியை எண்ணற்கு அறிகுறியாகவும் திருநீறு தரிப்பது மரபு. கன்மம் உலகியலில் உறவாட விடும்; திருவருள் அடியரிடம் உறவு பூண உதவும்; ஔவையார்க்கு அது செய்தானாம் அத்தன்; பாடிக் காட்டுகின்றார் பாருங்கள்!

67. வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
68. கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

பதவுரை:
வேடமும் - (கண்டிகை தரித்த அடியவர்) திருவேடமும்,
நீறும் - திருநீறும்,
விளங்க நிறுத்தி - உலகில் விளங்கி நிலைபெறச் செய்து,
கூடும் - ஒன்றுகூடி இன்புறும்,
மெய்த்தொண்டர் - மெய்யடியார்
குழாத்துடன் கூட்டி - கூட்டத்தில் எனையும் ஒருத்தியாகக் கூட்டுவித்து
(என்றவாறு).

மெய்ஞ்ஞானத்தால் மலத்தன்மை அகன்று, வெள்ளிய அருள்ஒளி நிறைந்த
சிவத்தன்மையை அடைதலை உணர்த்துகின்றது திருநீறு எனலும் ஒருவகை.

திருநீற்றிலும், வித்தக நீறணிந்த வேடத்திலும், தயிரில் நெய்போல் தற்பரன் தங்கியுளன். பிற இடங்களில், பாலில் நெய்போல் படர்ந்துளன்; அங்ஙனம் அமைந்து, அவைகளின் சொருபம் விளங்க, பரிபாகத்திற்குத் தக்கபடி, அந்நுட்பங்களை உயிர்கட்கு அறிவித்து உய்தி தருதலை முதலடி குறிப்பிடுகின்றது. சார்ந்ததன் வண்ணமாக அடியவர் உறவு சாரச் செய்கின்ற சதுரர் கணபதி. இதைச் சிறிது விரிவாக ஆய்வம். அதற்குரிய பயனும் விளையும்.


(பதிப்பாசிரியர் குறிப்பு)

    கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
    மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
    தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
    சிங்கார மான திருவடி சேர்வரே.
- திருமந்திரம் - 6-1666 - திருநீறு

Power of Holy Ashes

The Sacred ashes of Siva
Who has bones for His garland
Are an armour indeed impregnable;
For them who in joy smear it
Karmas take flight,
And Siva-state comes seeking;
And they shall reach His handsome Feet.
(English rendering - Dr.B.Natarajan)

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

வேடப் பொலிவு

காமிகம் முதல் வாதுளம் ஈறாக, இருக்கும் ஆகமங்கள் இருபத்தெட்டு. அவைகள், சதாசிவத்தின் விமல ஐந்து திருமுகங்களில் இருந்து வெளி வந்தன என்பர் மேலோர்.

இன்ப நீறு தரிக்கும் இடங்கள் இவை, அந்த இடங்கட்கு உரிய அளவுகள் இவை, வாழ அணியும் வகை இவை என்னும் அரிய நுட்பங்கள், ஆகமங்களின் மூலம் அறியப் பெறும்.

நெற்றி, தோள், மார்பு, உச்சி, கை, முழங்கால் முதலியன, இனிய திருநீறு தரிக்கும் இடங்கள்.

நெற்றியிலும், தோள்களிலும், மார்பிலும் அளவு ஆறு அங்குலம். உச்சி, கை, முழங்கால் முதலிய இடங்களின் அளவு ஓர் அங்குலம்.

திரிபுண்டரமாக அணிதல், உத்தூளனமாகப் பூசுதல் இரண்டும் உண்டு. இங்ஙனம் விதித்த இயல்பில், விதித்த காலங்களில், நீறு தரிப்பர் நிமலன் அடியர்.

'புண்ணியர் பூசும் வெண்ணீறு' என்பது தமிழ்மறை. 'நீறில்லா நெற்றி பாழ்'
என்பது ஔவை போதம்.

அழகு கருதியும், தூய்மையை நினைந்தும், திருவருள் பேற்றைச் சிந்தித்தும் நிமல நீறு பூசுவது நியதி. புறத் தூய்மையை வெண்மையான திருநீறும், அகத்தூய்மையை அன்பின் ஜபமும் அறிவிக்கும்.

'பூசும் நீறுபோல் உள்ளும் புனிதர்கள்' என்று புகல்கிறது புராணம். விபூதி, உருத்திராக்கம் அணிந்த கோலம், திருவேடம் எனப்பெறும்.

'கொண்ட வேடம், அரன் அடியர் வேடம், இது
குறைவி லாததவ வேடம்' எனவும்,

    'அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல்
    நிரந்த நீற்றொளியால், நிரை தூய்மையால்,
    புரந்த ஐந்தெழுத்(து) ஓசை பொலிதலால்,
    பரந்த ஆயிரம் பாற்கடல் போல்வது'

-எனவும் வரும் திருத்தொண்டர் புராணம், திருவேடப் பொலிவை நினைவுறுத்துகின்றது.

திருநீற்றுப் பதிகம், பஞ்சாக்கரப் பதிகம் முதலியன, அவைகளின் அருமையை உணர்ந்து, மந்திர மரபில் சமயக் குரவர்கள் வாய் மலர்ந்தவை.

    'நீறு புனைவார் வினையை நீறு செய்த லாலே
    வீறு தனி நாமமது நீறென விளங்கும்
    சீறு நரகத்(து) உயிர் செலாவகை மருந்தாக்
    கூறுடைய தேவி கையில் முன்னிறை கொடுத்தான்'
- எனும் ஆன்றோர் அருளிச் செயல்கள், திருவேடத்திற்கு மூலமான திருநீற்றை
வித்தகத் திறம்பட விளக்குகின்றன.

போலித் தன்மை இல்லாத புனித வேடம், எங்கும் விளங்க இறையருள் வேண்டும். திருவேடம் கண்ட உள்ளம் தெளிவடையும். அத்தெளிவு, அரிய நல்ல அருள் நாட்டத்தை அளிக்கும். பேறு அதன்பின் பெரிதாய் விளையும்.

வேடத்தின் நுட்பம், நீற்றின் தெய்விகம் இரண்டையும், கணபதி பெருமான் ஔவைக்கு விளக்கிக் காட்டினாராம்.

தொண்டர்தம் பெருமை

'மாசுறு மனமே! கண்டன மறையும், உண்டன மலமாம்,
பூசின மாசாம், புணர்ந்தன பிரியும்,
நிறைந்தன குறையும், உயர்ந்தன பணியும்;
பிறந்தன இறக்கும், பெரியன சிறுக்கும்.
ஒன்றுஒன்று ஒருவழி நில்லா; அன்றியும்,
செல்வமொடு பிறந்தோர், தேசொடு திகழ்ந்தோர்,
கல்வியிற் சிறந்தோர், கடும்திறல் மிகுந்தோர்,
கொடையிற் பொலிந்தோர், படையிற் பயின்றோர்,
குலத்தின் உயர்ந்தோர், நலத்தினில் வந்தோர்,
எனையர்எம் குலத்தினர் இறந்தோர், அனையவர்
பேரும் நின்றில போலும்; தேரின்
நீயும்அ·து அறிதி யன்றே! மாயப்
பேய்த்தேர் போன்று நீப்பரும் உறக்கத்துக்
கனவே போன்று நனவு பெயர்பெற்ற
மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக்
கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத்
தன்மையர் இழிவு சார்ந்தனை நீயும்;
அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி,
நன்மையில் திரிந்த புன்மையை ஆதலின்,
வளைவாய்த் தூண்டிலின் உள்இரை விழுங்கும்
பன்மீன் போலவும்,
மின்னுறு விளக்கத்து விட்டில் போலவும்,
ஆசையின் பரிசத்(து) யானை போலவும்,
ஓசையின் விளைந்த புள்ளுப் போலவும்,
வீசிய மணத்தின் வண்டு போலவும்
உறுவது உணராச் செறுவழிச் சேர்ந்தனை.
நுண்நூல் நூற்றுத் தன்னகப் படுக்கும்
அறிவில் கீடத்து நுந்தழிப் போல
ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்(டு),
இடர்கெழு மனத்தினொ(டு) இயற்றுவ(து) அறியாது,
குடர்கெழு சிறையைப் குறங்குபு கிடத்தி;
கறவை நினைத்த கன்றென இரங்கி
மறவா மனத்(து) மாசறும் அடியார்க்(கு)
அருள்சுரந்(து) அளிக்கும் அற்புதக் கூத்தனை,
மறையவர் தில்லை மன்றுள் ஆடும்
இறையவன் என்கிலை என்நினைந் தனையே!'

- என்று இடையறாது உணர உணர்த்தி, மனத்தின் மடமையை மாற்றுவர். திருந்திய மனம் கொண்டு தெய்வக் கணபதியின் திருவடி நினைவர். திரிகரண வழிபாட்டில் தெளிவு பெறுவர். தம் வசம் கெடுவர்; பரவசப் படுவர். பெத்த நிலை, முத்தி நிலை இரண்டிலும், இன்பக் கணபதிமயமாக இருப்பர்.

    பெத்தத்தும் தன்பணி யில்லை பிறத்தலால்
    முத்தத்தும் தன்பணி யில்லை முறைமையால்
    அத்தற்கு இரண்டும் அருளால் அளித்தலால்
    பத்திப் பட்டோர்க்குப் பணியொன்றும் இல்லையே'
- என்று திகழும் இவர்களை அறிவிக்கின்றது திருமந்திரம்.

ஜீவன்முத்தர்

முன்னைய தவம் கண்டு, வலிந்து ஆள்வர் வரத கணபதி. அதன்பின் நியதி வழுவாமல் ஆன்மா நிட்டை கூடும். முதிர்ந்த இந்நிலையரை முத்தர் என்பர்.

இவர்கட்கு ஆகாமிய சஞ்சிதம் இல்லை. எனினும், அடர்ந்த பிராரத்துவம் மட்டும் அழிவதில்லை. உடல் உள்ளவரை பிராரத்துவம்; பிராரத்துவம் உள்ளவரை உடல். மெய்யுணர்ந்து நிட்டை மேவினோரை, (பெருங்காயம் இருந்த பாத்திரத்தில், இல்லாத காலத்தும் வாசனை நீங்காமல் இருப்பதுபோல்), பழக்க வாசனையால் பிராரத்துவம் வந்து பற்றும். அப் பிராரத்துவ வினையின் பயனை அனுபவிக்கும் பொருட்டு, கனிந்த அவர்தம் நிட்டை கலையும். அவ்வமயம், கண்முன் உலகம் காட்சியாகும். நிட்டையில் இருந்த இச்சை, அறிவு, செயல் மூன்றும், உள்உணர்வு புறம் போகும் காலம் பார்த்துக் காத்திருந்த மும்மலமும், இவ்வமயம் இறைவன் திருவடியை மறப்பிக்கும்.

பரமே பார்த்திருந்த முத்தர்க்கு, உலகப் பொருள்களைச் சுட்டியறிவதாகிய விபரீத உணர்வு மேற்படும். அதனால் மெய்யுணர்வு கீழ்ப்படும். வீணான இந்நிலை பிறவிக்கு வித்தாகும். விருப்பும் வெறுப்பும் எதனிலும் விளையும். கடினமான இச்செயல்களை விளைவிக்கும் கன்ம மலம்; மாநிலப் பொருள்களைக் கண்முன் தோற்றுவிக்கும் மாயா மலம். அநியாய அறிவைப் பெருக்கும் ஆணவ மலம்.
யாது இனிக் கதி!

உத்தமத் தியானத்தில் ஒழிந்து, சற்றே அந்நிலை நீங்கியதும் மீட்டும் ஒட்டிய மலத்தைக் கட்டறுக்க உதவி தேவையென்று ஜீவன்முத்தர் கதறுவர்.

உலகப்பற்று முக்கால், கணபதிப் பற்று கால் பாகம்; இவர்கள் மந்ததர அன்பினர். உலக பாசம் அரைப்பாகம், கணேசர் வேட்கை அரைப்பாகம்; இவர்கள் மந்த அன்பினர். உலக வேட்கை கால்பங்கு, முதல்வர் மேல் அன்பு முக்கால் பங்கு; இவர்கள் தீவிர அன்பினர்.

உலகப் பற்று அறவே இன்றி, முழுவதும் ஆனைமுகர் காதலே ஆதல் தீவிரதர அன்பு. காதல் மிக்கவர் கனிந்த அடியார். வித்தகராகிய அவர்கட்கே உரியது வீடுபேறு. அன்பு செய்யும் உயிரும், அன்பும், அன்பு செயப்பெறும் அத்திமுகரும் எனச் சொல்லால் பிரிவு; எனினும், பிரிவிலாமல், கனிந்த அத்துவிதமாய் இம்மூன்றும் கலந்திருக்கும். கருணை மிக்கவர் அத்வைத கணபதி அடியவர். இவர்கள், இனிய அருள்மயமாகி இருப்பார்கள்.

மேற்சொன்னபடி கதறும் ஜீவன்முக்தர் எதிரே கணபதி அடியவர் காட்சியாவர்.

மறதியை விரைந்து மாற்றுவர்; உணர்வுக் கண்ணை உதவுவர். வழிமுறை காட்டுவர்; ஒளிநெறியில் ஊக்குவர்; வாழச் செய்வர், ஜீவன் முத்தரை வரத கணபதி அடியவர்கள்.

இந்த அருமையை அறிந்ததும், ஜீவன் முத்தர்கள், ஊன்றி அடியவருடன் உறவு கொள்வர்; உணர்வு அடியரிடம் உறைப்பேற இருத்தலின், உலக அனுபவ உணர்வு மாறும். மேன்மை அநுபூதி உணர்வு மேலிடும். பாழும் பிராரத்துவம் இந்நிலை கண்டு பாதிப்பது இல்லை.

'சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்'
- எனும் குறள் இங்கு ஒப்பு நோக்கத் தகும்.

எவ்வளவு சிறந்தவர்கள் ஜீவன் முத்தர்கள்! அவர்கட்கே உதவுபவர் அடியரெனில், பிற உயிர்கட்கு இவர்கள் செய்யும் உதவி பேச இயலுமோ! உத்தம அடியர் இருக்கும் இடமே ஒளிமயம். ஐந்தெழுத்தின் நாதமயம். ஆண்டபின் ஆண்டவனும், இந்தச் சீவன் முத்தரை அடியரிடம் உறவாட விடுகின்றான்.

'அத்தன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே' எனும் எட்டாம் திருமுறையிலும், இக்குறிப்பு ஒட்டியுணர உளது. பழுத்த அடியவர் என்றும் பயன் கருதுவது இல்லை. அவர்கள் 'கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்' என்றும், 'செய்வினையும் செய்வானும், அதன்பயனும், கொடுப்பானும் மெய்வகையால் நான்காகும் விதித்த பயன்' என்றும் அருள்மொழித் தேவர் அருளியபடி, பரம அவர் பணிக்கு உரிய பயனைப் பரனே வழங்குவன்.

'என்கடன் பணிசெய்து கிடப்பதே
தன்கடன் அடியேனையும் தாங்குதல்'
- என்பது அடியவர் திடம்.

நீரானது மண்ணை நிலைகுலையச் செய்யும்; அந்த நீர்ப்பெருக்கை, வடவைக் கனல் வற்றச் செய்யும்; அக்கனலைச் சண்டமாருதம் அவித்துவிடும்; இறுதியில் அக்காற்று, உயர்ந்த விண்ணில் ஒடுங்கி அடங்கும். இங்ஙனம் ஐம்பூதங்கள் நிலைகுலையும் காலத்தும் கலங்காதார், பரமன் மலரடி மறவாதார், பரம கணபதி பக்தர்கள். 'தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!'

'பல்உயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும் ..
தெய்வக் கடவுள் தொண்டர்'
-என்று பதினோராம் திருமுறை, பண்டைய தொண்டர் பெருமையைப் படிக்கின்றது.
இந்த அருமையெல்லாம் விளைய,

'வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடு மெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி'ய பேரருளை எண்ணிக் குழைகிறது பாட்டி மனம். இதனை உணர்ந்து உருகிறது
நம் உள்ளம்.


(பதிப்பாசிரியர் குறிப்பு)

'Satsangatve nissangatvam
nissangatve nirmohatvam
nirmohatve nishchalatattvam
nishcalatattve Jivanmuktih'

From Satsanga comes non-attachment,
from non-attachment comes freedom from delusion,
which leads to self-settledness.
From self-settledness comes Jivan Mukti.

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

திருவைந்தெழுத்து

முப்பொருள் உணர்த்தும் வாய்ப்பாடு போல் இருக்கிறது,
ஐந்தெழுத்து உண்மை.

சிகரத்தில் பதி உண்மை;
வகரத்தில் பதியின் அருள்குணம்;
யகரத்தில் பசுவுண்மை;
நகரத்தில் மறைப்பு;
மகரத்தில் மலம்.

இவை எல்லாம் பஞ்சாக்கரத்தில் வெளிப்படை. பதியை அடையாதபடி, ஆன்ம அறிவை மறைத்துப் பிணித்துத் தன் வழி ஈர்க்கின்றது, நகர, மகரமாகிய பாசம். அத்தடைகள் வகரத்தால் அகலும். அதன் பின் பதியை அடைந்த பசு பேரானந்தப் பேறு பெறும்.

ஐந்தெழுத்து, எம்மந்திரத்தினும் முதன்மையது. ஓங்காரத் துணையின்றி உயிர்க்கின்ற பெருமை, ஐந்தெழுத்திற்கே உண்டு. எழுத்தெழுத்தாய்ப் பிரித்து இதற்கு விளக்கம் கூறுவது எளிது. மெய்ஞ்ஞானம் மேவினர்க்கன்றி, இதன் பொருள் எவர்க்கும் விளங்குவது இல்லை. இதனால், அரும் பொருள் உடையது இது என்று அதன் நுட்பத்தைக் கணபதியே ஔவையார்க்கு விளக்கி அருள் செய்தாராம்.

நியதி வழுவாது ஓதுமளவு உரிமையம் யாம்; உருவேற ஏற, உள்ளத்தில் அதன் ஒளிநிழல் ஊன்றும். அருட்சத்தி துலங்கும்; மெய்யறிவு விளங்கும்.

பிறர் செவி கேட்க ஓதுவது சத்தம்; மெதுவாக ஓதுவது மந்தம்; மன அளவாக
எண்ணுவது மானதம் எனப் பெறும். சிவஞானிகட்கு உரிய மானத நடையே,
ஔவையார்க்கு அருளப் பெற்றது.

69. அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
70. நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து

பதவுரை:
அஞ்சு அக்கரத்தின் - ஐந்தெழுத்தின்,
அரும்பொருள் தன்னை - (உள்ள) அரிய பொருள் நுட்பங்களை,
நெஞ்சக் கருத்தின் - மன உணர்வில்,
நிலை அறிவித்து - நிலை பேறாம்படி உணர வைத்து
(என்றவாறு).

'சிவாய நமஎனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமைய தாக்கிச்
சிவாய சிவசிவ என்றென் றேசிந்தை
அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே' - என்பர் திருமூலர்.

'மூச்சைச் சிவாய என உள்ளிழுத்து நிறுத்தி நம: என்று வெளிவிடு! அல்லது, சிவாய என உயிர்ப்பை வாங்கிச் சிவ என விடு! பலநாள் செய்யும் பயிற்சியில் இதயத் துடிப்பில் இன்பம். ஆஹா! ஊன்றி அதை உணர்! பலகாலப் பயிற்சியில், தானே இயல்பாக எழும் குண்டலினி, ஆதார கமலங்களையடைந்து, சஹஸ்ராரத்தைச் சாரும்.

அதன்பின் ஞான விண் நாதம் கேட்கும். முச்சுடர் திகுதிகு என முன்னே ஒளிரும். பந்தம் எல்லாம் அதனில் வெந்து சாம்பராம். அந்த அடையாளமேதான் அரிய திருநீறு. மலம் எல்லாம் நிர்மலமான நிலை இது. சொல்வது விளங்குகிறதா? ஔவையே! அறிவில் இந்நிலையை இலங்கக் கொள்!' என்று, ஆனைமுகப் பெருமான் அறிவுறுத்திய அருமையே அருமை.

    'துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
    நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
    வஞ்சக மற்றடி வாழ்த்த வந்த கூற்று
    அஞ்ச உதைத்தன அஞ்செ ழுத்துமே'
- என்கிறார் ஆளுடைய பிள்ளையார்.

    'நற்றவா! உனை நான் மறக்கினும்
    சொல்லும் நா நமச்சி வாயவே'
- என்கிறார் சுந்தரமூர்த்திகள்.

'நற்றுணையாவது நமச்சிவாயவே!'
- என்கிறார் அப்பர் பெருமான்.

ந - மறைக்கும் சக்தி,
ம - மலம்,
சி - சிவம்,
வ - அருள்,
ய - ஆன்மா
- என்பது பொதுவாகக் குறிப்பிடும் புனித நடை.

ஆன்மா மறைப்பு நீங்கி, மலமகன்று, தானேயாய், வகர அருளை எய்தி, சிவத்தைச் சார்ந்து வீடு பெறல், ஐந்தக்கர நுட்பம்.

உலக பந்தம் உற்ற பொழுது, உயிரானது பாசமாம் மறைப்பையும், மலத்தையும் சார்ந்து நிற்கும். பந்தம் அகன்ற காலத்தில், மறைப்பையும் மலத்தையும் அகன்று, அருளை அடைந்து, சிவத்தைக் கூடி, பெரும்பேறு ஆன வீட்டைப் பெறும் என்று விரித்து விளக்க முதிர்ந்த அருள்நூல்கள் பெரிதும் முயன்றிருக்கின்றன.


(பதிப்பாசிரியர் குறிப்பு)

    அகராதி யீரெண் கலந்த பரையும்
    உகராதி தன்சக்தி யுள்ளொளி யீசன்
    சிகராதி தான்சிவ வேதமே கோண
    நகராதி தான்மூல மந்திர நண்ணுமே.
- திருமந்திரம் - 9-2700 - தூல பஞ்சாக்கரம்

Seek the Seminal Mantra Nama Sivaya

In the sixteen letters commencing with 'A'
(Of the Shodasa Flower within)
Is the Parai (Sakthi);
In the Unmani Sakthi beginning with 'U'
Is the light of Lord within;
The Mantra commencing with letter 'Si' (Sivaya Nama)
Is Siva and Vedas all,
With letter 'Na' commencing
That order reversed
Is Nama Sivaya;
That verily is the seminal Mantra;
That Mantra do seek.

    வாயொடு கண்டம் இதய மருவுந்தி
    ஆய இலிங்க மவற்றின்மே லேயவ்வாய்த்
    தூயதோர் துண்ட மிருமத் தகஞ்செல்லல்
    ஆயதீ றாமைந்தோ டாமெழுத் தஞ்சுமே.
- திருமந்திரம் - 9-2701 - தூல பஞ்சாக்கரம்

How Aum and the Five Letters are distributed in the Six Centres

In the six Adharas (centres) within
Are distributed the Five Letters and Aum;
That comprise Aum Nama Sivaya
In the Muladhara is Na
In the Svadhishtana is Ma
In the navel centre is Si
In the Heart Centre is Va
In the Throat Centre is Ya
In the Eye-brow Centre - Ajna is Aum.

    சிவன்சத்தி சீவன் செறுமல மாயை
    அவஞ்சேர்த்த பாச மலமைந்தகலச்
    சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
    அவஞ்சேர்த்த பாசம் அணுகி லாவே.
- திருமந்திரம் - 9-2710 - சூக்கும பஞ்சாக்கரம்

Si-Va-Ya-Na-Ma Brings Union of Jiva with SivaSakthi:

The letters Si Va Ya Na Ma denote
Siva, Sakthi, Jiva, Mala and Maya respective;
Chant it, for the five Pasas-Mala to disappear;
When with Siva and Sakthi, Jiva unites
(That is when you say Si Va Ya)
The harassing Pasas flee away.

    அங்கமும் ஆகம வேதம தோதினும்
    எங்கள் பிரானெழுத் தொன்றில் இருப்பது
    சங்கைகெட் டவ்வெழுத் தொன்றையுஞ் சாதித்தால்
    அங்கரை சேர்ந்த அருங்கல மாமே.
- திருமந்திரம் - 9-2710 - அதிசூக்கும பஞ்சாக்கரம்

Chant 'Si' and Cross the River of Life:

All that is spoken in Vedas, Vedangas and Agamas
Are in my Lord's One Letter contained.
Freed of doubts,
If that One letter 'Si' is consummated,
The boat of life reaches the lovely shore across.
(English rendering - Dr.B.Natarajan)

(பதிப்பாசிரியர் குறிப்பு முடிந்தது)

வித்தக விநாயகர்

    'உகத்திற்கு ஆதியாத் தேவர்க்கு ஆதியாய் உலவாச்
    சுகத்திற்கு ஆதியாய்ச் சுரர்களுக்கு ஈசராய்ச் சுடரும்
    மகத்திற்கு ஈசராய்க் கணங்களுக்கு ஈசராய் மதிப்போர்
    அகத்திற் கூடிய கணேசநின் அடியிணை தொழுதாம்'
எனத் துதித்த மூவர்க்கு முத்தொழில் புரியும் முதன்மை வழங்கிய வித்தகர் விநாயகர்.

    'உரையானும் உணர்வானும் உடலானும் அரிவரிய
    வரைமார்பும் திணிதோளும் திருமுடியும் மலர்ப்பதமும்
    விரையார் குங்குமக் கலவை மெய்யணிந்த கோலமுமாய்க்
    கரையா நெஞ்சமும் கரையக் கண்ணெதிர் நின்றனை போற்றி'
- என்று ஏத்திய நான்முகற்கு செம்மைப் படைப்பைச் செய்தற்கு உரிய அறிவும் தொழிலுமான ஆற்றலை அருளிய வித்தகர் விநாயகர்.

    'வேதகா ரணமும்நீ வேதமோர் நான்கும்நீ
    பாதமோர் நான்கும்நீ பதங்களோர் நான்கும்நீ
    போதலை மலையமார் புவனகா ரணரும்நீ
    நாதநின் பெருமையை நவிலவல் லார்எவர்!'

- என ஏத்திய வியாசர்க்கு, வேதம் தொகுத்து, புராண இதிகாசங்களை விரித்து விளக்க உதவிய வித்தகர் விநாயகர்.

    'குணமொடு குறிபல கொள்கைகொள் ளாயெனில்
    அணிமலர் மணமென ஆக்கையின் உயிரெனப்
    பணியுயிர் அறிவெனப் பயிலும்அத் துவிதமாம்
    கணபதி நினதியல் காணவல் லார்எவர்!'
- என ஏத்தினோர்தம் தீராப்பிணி தீர்த்த வித்தகர் தெய்வ விநாயகர்.

    வாதம் கடந்து பலமாயை கன்ம
    வகையும் கடந்து அவைசெய்
    ஏதம் கடந்து பொருளொன்று மின்றி
    யெழுகின்ற மம்மர் உயிரின்
    போதம் கடந்து, துரியம் கடந்த
    பொருளோயை யானும் உணர்வேன்
    வேதம் கடந்த திருமேனி கொண்டென்
    விழிகாண முன்னர் வரலால்'
- எனத் துதித்த இந்திரனுடைய ஏதம் தவிர்த்த வித்தகர் என்கிறது விநாயக புராணம்.

உடுண்டி விநாயகர், கஜானன விநாயகர், கணபதி, கணேசர், சிந்தாமணி விநாயகர், தூமகேது விநாயகர், மகோற்கட விநாயகர், வல்லபை விநாயகர், வக்ரதுண்ட விநாயகர், விக்கின விநாயகர் எனச் சிறந்த பன்னிரு திருவவதாரம் செய்து, அற்புத பல ஆடல் நிகழ்த்தி, அன்றும் இன்றும் உலகிற்கு அருள்செய் அம்மானை, வித்தக விநாயகர் என்று பெயரிட்டு விளித்து வீழ்ந்து வணங்கி, அடைக்கலம் ஆகின்றார் நம் ஔவைப் பிராட்டியார்.

எங்கும் நிறைந்தாயே!

வியாபகம்

மலைமகள் திருமணத்தில், கண்ணுதல் பெருமான் கணபதியை வழிபட்டார் என்று வரலாற்று இருத்தலின், வித்தக விநாயகர்தம் தொன்மை விளங்குகின்றது.

வேதம் தொகுத்த வியாசர்க்குப் பரம அருளைப் பாலித்தார் என்ற வரலாற்றால், எந்நூலுக்கும் மூலர் வித்தக விநாயகர் எனும் செய்தி வெளியாகின்றது. அவ்வளவுதானா? கணபதி காப்பு வைத்தே எந்நூலும் ஆரம்பிக்கின்ற செய்தியை, அகில உலகமும் அறியும். இன்றும் பெரும்பாலோர், பிள்ளையார் சுழி ஊன்றியே எழுத ஆரம்பிப்பதும் அறியத் தகும்.

கணபதி வழிபாடு செய்தபின் எச்சடங்கும் தொடங்குவதை, இந்நாட்டின் எந்தக் குடும்பத்தினும் அறியப் பெறும். பொய்கைக் கரை, மரத்தடி, மழை, நிலா, வெயில் முதலிய இயற்கை இடங்களையேன்று, கோயிலும் இன்றியிருந்து, வழியே போவார் வருவார்க்கும் அருளும் நிலையில் உளது, நம் வித்தக விநாயகர்தம் வியாபகம்.

வான் வெளி, இதய வெளியாகிய கோயில்களில், அன்பு அபிடேகமாக, ஞானத்தை வழிபாடாக ஏற்கின்றார், ஞானிகள் இடத்தில் அந்த வித்தக விநாயகர்.

ஆலமரம் வித்தில் அடங்கும்; அதுபோல், பிரணவத்தில் எம்மந்திரமும் அடங்கும். அந்த ஓம் எனும் பிரணவமே வித்தக விநாயகரின் விமல சொருபம். ஒடித்த கொம்பின் இடத்தில் இருந்து, பிரணவச்சுழி ஆரம்பிப்பதை அறிவோம்.

எண்வகைச் சித்திகளே பரம கணபதிக்குப் பணிமாதர். பிறரால் தாழ்த்தப் பெற்றவரையும் தலைநிமிர வைப்பவர் இத்தற்பரர்; அதற்கு அடையாளமே, அவர் சிரத்தின் மேல் சூடியிருக்கும் அறுகு.

சிறிய தெரு, பெரிய வீதி, நடுத்தெரு, நடுவீடு முதலிய எந்த இடத்தும், மண், கல், சாணம், மஞ்சள், வெல்லம், பஞ்சலோகம், வெள்ளி, பொன் முதலிய எதனிலும் திருவுருவை ஏற்று இருப்பது, வித்தக விநாயகர் வியாபகத்தின் அறிகுறி.

பஞ்ச மூர்த்திகளினும் மேற்பட்ட (அருவம், உருவம், அருவுருவம் எனும் நவநிலையும் கொண்ட) துரிய சிவத்தின் அபேத அவதாரத்தை, விநாயகர் என்று பெயரிட்டு
ஏத்துகின்றது வைதிக சமயம்.

விஷ்வக்ஸேநர் எனும் சேனை நாயகர் என்கிறது வைஷ்ணவம். புத்த நாயகர் என்று போற்றுகின்றது பௌத்த மதம். அருக நாயகர் என்று பேரிட்டு ஆராதிக்கின்றது ஜைனமதம். இங்ஙனம் இமயம் முதல் குமரிவரை சர்வசமய சமரச மூர்த்தியான வித்தக விநாயகர், சைனா, திபெத், ஜப்பான், வியட்னாம், சாவகம் முதலிய எத்தேசத்தினும் கோயில் கொண்டு இருக்கின்றார். பேரருள் நிறைந்த இப்பெருமானிடம், அன்பின் உணர்வொடு ஔவைப் பிராட்டியார் அடைக்கலம் ஆவதையும் பாருங்கள்! என்ன அருமை!

அடைக்கலம்

71. தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
72. வித்தக விநாயக விரைகழல் சரணே.

பதவுரை:
தத்துவ நிலையைத் தந்து - (தத் த்வம் - தானே அது என்று) உள்ளதன் நிலையை விளக்கி உரைத்து,
எனை ஆண்ட - எளிமையனை அடிமையாக்கி ஆட்கொண்டு,
வித்தக - மேலான,
விநாயக - ஒப்பாரும் மிக்காரும் இல்லாத முழுமுதலே,
விரை கழல் சரணே - அருள் மணம் நிறைந்த உனது திருவடிகட்கே அடைக்கலம்.

தத்துவம் - உள்பொருள். நிலை - நிலையான வீட்டை நினைவுறுத்தியது. எனவே, நிலையிலா உலக நிலைக்கு மாறான வீடுபேறு என்பது, இங்குக் குறித்த பொருள். தந்து - உபதேசித்து எனும் பொருட்டு.

உலகியல் தலைவர் தோன்றுவர்; தம் மன நிலைக்குத் தக்கபடி மக்களை ஊக்குவர்; ஊக்குதல் உபதேசத்தால் நலமும் விளையும்; தீங்கும் நேரலாம். இறுதியில் அத்தலைவர் மறைவர். எம்மான் கணபதி என்றும் உள்ளவன். விகற்பம் இலாதான். அன்றும் இன்றும் என்றும் அமலன். அப்பரமன் ஒருவனே ஆன்மாவின் சிறுமையை அறிபவன், சிறுமையை விலக்கிப் பெருமையில் உயிரை பிறங்கச் செய்பவன் அப் பெருமான்.

எனை என்பது, சிறுமையுடைய என்னை எனும் பொருட்டு. வித்தக என்பது, விளியெனலுமாம்.

அவனிடமன்றி வேறு எவரிடம் அடைக்கலம் ஆவது? இதையறிந்தே 'விரைகழல் சரணே' என்றார். பதினாறாம் அடியில், 'ஆட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந்தருளி'னான் என்றார். அதற்கு ஏற்ப, ஆட்கொள்ளற்கு உள அருள் செயல்களைச் சிறிது சிறிதாகச் செய்த பேரரறிவின் பெருமையையெண்ணி, 'வித்தக' என்றார். வித்தகம் என்பது ஒன்றிற்கும் பயன் இல்லாத தன்னையும் ஒரு பொருளாக்கி, அடிஞானத்தையும், அருளையும் முறையே தரிசிக்க அருளிய ஆற்றலை உணர்த்தியது.

'சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு' என்று திருவடிப் பெருமையை
ஆரம்பித்து, நூல் நிறைவிலும், 'விரைகழல் சரணே' என முடிக்கும் மங்கல அற்புதம் மறக்கத் தகுவதன்று.

திருவடி - சொருப நிலையில் பரிபூரண ஞானம்;
பரிபூரண ஞான அத்தன் அருளிய பரம உபதேசத்தை, உணர்ந்து உருகிப்
பாடிய உபநிடதம் இது. ஆதலின், சிவஞான வேட்கையர்க்குப் பல நுட்பங்களை
நினைவுறுத்தும் இந்நூல் என்பதும் இயற்கைதானே!

கழல், வீர அடையாளமான திருவடியணி; அது தானியாகு பெயராய், அதனையணிந்த திருவடிகளை எண்ணச் செய்தது.

'அயரா அன்பின் அரன் கழல் செலுமே' என்பது சிவஞானபோதம்.

மணம் பொருந்திய திருவடி மலர் என்பார், 'விரைகழல்' என்றார். விரை - தெய்வ மணம்; 'இறைவன் திருவடிகள் எல்லாப் பொருள்களையும் கடந்து நின்றன; ஆயினும், அன்பர்க்கு அணியவாய், அவர் இட்ட நறுமலரான வெறி கமழும் என்பது போதர, வெறியார் கழல் என்றார்' - என்று திருக்கோவையாருள் பேராசிரியர் கூறிய உரைநயம், ஊன்றி இங்கு உணரத் தகும். ஆனைமுகப் பரமன் அடிக் கமலங்கட்கே அடியேன் அடைக்கலம் எனும் பொருளில், 'விரைகழல் சரணே' என நூலை முடிக்கும் அருமையே அருமை!

ஞானம் பக்தியாகிய சாதனங்கள், திருவடி நிழலில் இருத்திப் பேரின்பப் பேற்றைப் பெறச் செய்யும். ஆதலின், திருவடி வழிபாடு, எம்மதமும் சம்மதிக்கும் இன்பநடையுடையது. இந்நுட்பம் ஓர்ந்து,

    'மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டுமலம்
    சாய அமுக்கியருள் தானெடுத்து நேயத்தால்
    ஆநந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல்
    தானெந்தை யார்பாதந் தான்'
- என ஓதுகின்றது உன்மை விளக்க நூல்.

வேதம் கணபதியின் நாதம். ஆகமங்கள், அப்பெருமானை ஆராதிக்க உரைத்த அருள்முறைகள். உபநிடதங்கள் விக்கிநேசர் உயிர்ப்பு. ஓங்காரம் அவர் திருமேனி. அகத்தும் புறத்தும் வாழ வழி கற்பிக்கும் அந்த வரத கணபதியின் அருளாக்கத்தை, விரித்து இந்த அருள் நூல் விளம்புகின்றது.

உருவிற் சிறியது; எனினும், பொருள் நுட்பத்திற் பெரிய இந்நூலிற் பிரவேசித்து, சிற்றறிவிற்குத் தோன்றிய அளவில் உதித்த இச்சிற்றுரையை, சதுர கணபதியின் திருவடிகளில் சமர்ப்பிக்கின்றோம்.


சாந்தி

மலைமடந்தை அருள் பாலா!
மதமிகுந்திழி கபோலா!
அலகில் அன்பர் பணி காலா!
அருள் சுரந்திடு விசாலா!
இலகுகின்ற பணிமார்பா!
இனிய மந்த்ர சொரூபா!
பொலிபெருங் கருணையாளா!
இனிய விநாயக எம்மானே!

இன்பமயமான நின்னருளால் 'வாழ்க இந்த மந்திர அருள்நூல்!' என்று வரத கணபதியை வாயாரப் பாடி, மனமார எண்ணிக் கைகுவித்துக் கும்பிடுவம் நாம்!

விநாகர் அகவல் விரிவுரைநிமலன் திருவருள் உதவிய அளவில் நிறைவு பெறுகிறது.

ஓம்

No comments:

Post a Comment