Monday, November 18, 2013

விளக்கு மங்கலத்தின் சின்னம்

விளக்கு மங்கலத்தின் சின்னம். விளக்கை பூஜை செய்வது தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. தீபத்தையே தெய்வமாக வழிபாடு செய்வதும் வழக்கில் உள்ளது. திருவிளக்கின் சுடரே-சிவபெருமான் சுடரிலுள்ள வெப்பம் பராசக்தி. சுடரின் செந்நிறத்தில்கணநாதனாம் கணபதியும் ஒளியிலே கந்தவேளும் இருப்பதாக தெய்வ நூல்கள் கூறுகின்றன.

விளக்கேற்றுவது என்பது காலையிலும் மாலையிலும் நடைபெற வேண்டும். மானுட வாழ்வில் ஐம்பொறிகளையும் தன் வசப்படுத்தி ஒளிபெறச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவே ஐந்து முகங்கள் கொண்ட விளக்கினை வழிபடுகின்றார்கள்.

இந்த ஐந்து முகங்களும், அன்பு, நிதானம், சமயோசிதம், சகிப்புத்தன்மை, மனஉறுதி எனும் ஐந்து குணங்களையும் குறிக்கின்றன. ஐந்து முகங்களிலும் திரியிட்டு தீபமேற்றி வழிபடும் பெண்கள் உன்னத பண்புகளைப் பெற்றிடுவார்கள். விளக்கை நன்கு தேய்த்து துடைந்து பின்பு ஏற்ற வேண்டும்.

விளக்கில் விடும் எண்ணெய், நெய், இவற்றுக்கும் உரிய பலன்கள் உள்ளன. எதை விரும்புகிறோமோ அதற்குரிய எண்ணெயை, விளக்கில் பயன்படுத்தினால், விரும்பியதை அடையலாம். சகல விதமான செல்வங்களையும் சுகபோகங்களையும் விரும்புவோர் பசுநெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.

குலதெய்வத்தை வழிபடும் போது வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், பசுநெய் மூன்றையும் சமவிகிதத்தில் கலந்து விளக்கில் ஊற்றி ஏற்றிட வேண்டும். கணவன்- மனைவியரிடையே அன்பு நீடித்திருக்கவும் உறவினர்கள் நன்மை அடையவும் விளக்கெண்ணெயால் விளக்கேற்ற வேண்டும்.

தேங்காய் எண்ணையால் விளக்கேற்றி, கணபதியை வழிபட்டால், அவருடைய அருளைப் பெறலாம். லட்சுமி கடாட்சம் பெற விரும்பும் பெண்கள், பசுநெய்யால் விளக்கேற்றி வழிபடவேண்டும். மகாவிஷ்ணுவுக்கு உகந்தது நல்லெண்ணெய் தீபமே. எந்த தெய்வத்தை வழிபடுவதாயிருந்தாலும் நல்லெண்ணெய் ஏற்றது.

தென்திசை தவிர ஏனைய மூன்று திசைகளை நோக்கி தீபச்சுடர் இருக்குமாறு ஏற்றலாம். வீட்டில் ஏதேனும் பிரச்சினைகள், துன்பங்கள் இருந்தால் கிழக்கு நோக்கி ஏற்றி வழிபட்டு வந்தால் அவை விலகி விடும். தடைகளை விலக்க நினைப்பவர்கள் வடதிசைநோக்கி விளக்கு ஏற்றி வழிபடலாம்.

கல்விக்கு ஏற்படும் தடைகள், திருமணத்தடை போன்ற தடைகள் விலகி, எல்லா நலன்களையும் பெறலாம். பகை அகல வேண்டும், கடன் தொல்லை நீங்க வேண்டும், அமைதியான வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்கு திசை நோக்கி விளக்கின் சுடர் இருக்குமாறு ஏற்றி பூஜிக்கலாம்.

குத்துவிளக்கில் ஐந்து முகங்களிலும் திரியிட்டு விளக்கேற்றுவதால் புத்திர பாக்கியம் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவவேண்டுமென்று விரும்பும் பெண்கள் விளக்கின் இரண்டு முகங்களில் திரியிட்டு ஏற்ற வேண்டும்.

சகல சவுபாக்கியங்களையும் அளித்திடும் திருவிளக்கு பூஜையை; அதற்குரிய நியமத்துடன் செய்ய வேண்டியது அவசியம். பித்தளை அல்லது வெள்ளி, வெண்கலத்தால் ஆன விளக்கே பூஜை செய்யச் சிறந்தது. மரப்பலகை அல்லது தாம்பாளத்தின் மீது விளக்கை வைக்க வேண்டும். தலைவாழை இலை மீது குத்துவிளக்கை வைத்தும் பூஜிக்கலாம்.

திருவிளக்கை விபூதி, குங்குமம், சந்தனம் இவற்றால் பொட்டிட்டு அலங்கரிக்கவும், விளக்கின் உச்சிப் பகுதியில் ஒரு பொட்டு, அதற்குக் கீழே மூன்றும், அதனடியில் இரண்டும், கீழ்ப்பகுதியில் இரண்டு பொட்டு என மொத்தம் எட்டு பொட்டுக்கள் வைக்க வேண்டும்.

உச்சியில் இடும் பொட்டு தேவியின் நெற்றிப் பொட்டு, அடுத்த மூன்றும் திருநயனங்கள். அதற்கடுத்த இரு பொட்டுக்கள் கைகளாகவும், கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் பொட்டுக்கள் திருப்பாதங்கள் எனவும் கொள்ள வேண்டும்*

No comments:

Post a Comment