Sunday, November 26, 2017

உபதேசம் பெறாமல், எப்படியோ கற்றுக்கொண்ட மந்திரங்களை ஜபிக்கலாமா?

கே‌ள்‌வி:உபதேசம் பெறாமல், எப்படியோ கற்றுக்கொண்ட மந்திரங்களை ஜபிக்கலாமா? அதனால் பலன் உண்டா?


ரமண‌ர்:கண்டபடி மந்திரங்களை ஜபிக்கக்கூடாது. மந்திரத்தை உச்சரிக்க யோக்கியதை வேண்டும். உபதேசம் பெற்று ஜபிக்க வேண்டும். அப்போதுதான் அதனால் நன்மையுண்டாகும்.இவ்வாறு கூறிய ரமணர், அதை விளக்கும் வகையில் ஒரு கதையைக் கூறினார்.ஒரு நாள் ஒரு ராஜா தனது மந்திரியின் மாளிகைக்கு விஜயம் செய்தார். அப்போது அவர் பூஜை அறையில் மந்திர ஜபம் செய்து கொண்டிருப்பதாகப் பணியாட்கள் சொல்லவே, அவர் ஜபம் முடித்து வருவதற்காக அரசர் காத்திருந்தார்.ஜபத்தை முடித்துக்கொண்டு மந்திரி வந்தவுடன் அரசர் கேட்டார். 'என்ன மந்திரம் ஜபித்தீர்கள்? 'காயத்திரி மந்திரம்' என்றார் மந்திரி. எனக்கும் அந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுங்களேன் என்று அரசன் கேட்டபோது மந்திரி பணிவடக்கத்துடன், 'நான் அதனை மற்றவர்க்கு வழங்க அருகதையற்றவன்' என்று தட்டிக் கழித்தார்.அரசன் மேலும் வற்புறுத்தவில்லை. அதன்பிறகு சில நாட்களில் வேறு யாரிடமிருந்தோ அந்த மந்திரத்தைக் கற்றுக்கொண்டு, அடுத்த தடவை மந்திரியை அரண்மனையில் சந்தித்தபோது, தான் கற்ற மந்திரத்தை உச்சாடனம் செய்துகாட்டி, 'சரியாகச் சொல்கிறேனா?' என்று வினவினார். அதற்கு மந்திரி, 'உங்கள் உச்சாடனம் சரிதான். ஆனாலும் நீங்கள் அந்த மந்திரத்தை ஜபிப்பது உசிதமல்ல' என்றுரைத்தார். ஏனோ? என்று அரசன் வினவினார்.உடனே மந்திரி, அருகிலிருந்த ஓர் காவலாளியைக் கூப்பிட்டு, "அரசனைக் கைது செய்!" என்று உத்தரவிட்டார். அவனோ திகைப்புற்று அவ்வுத்தரவுக்கு பணியவில்லை. திரும்பத் திரும்ப உத்தரவிட்டும் காவலாளி அசையாது வாளாவிருந்தான். தன்னைக் கைது செய்யுமாறு கூறுமளவிற்கு இந்த மந்திரிக்கு எவ்வளவு திமிர் என்று ராஜாவுக்கு வந்ததே கோபம்! "இந்த மந்திரியைக் கைது செய்" என்று அரசர் ஆக்ரோஷத்துடன் உத்தரவிட்ட மாத்திரத்திலேயே காவலாளி மந்திரியைக் கைது செய்து விலங்கிட்டான். மந்திரி சிரித்தார். சொன்னார், "அரசே நீங்கள் 'ஏன்' என்று கேட்டீர்களே அதற்கான விளக்கமிது!" "அதெப்படி" என்று கடுகடுத்தார் அரசர்."எவ்வாறென்றால், உத்தரவு ஒன்றேதான். அதை நிறைவேற்றுபவனும் அதே காவலாளிதான். ஆனால் அதிகாரம் வகிப்பவரோ வெவ்வேறு. நான் உத்தரவு இட்டபோது அதற்குப் பலனில்லை. ஆனால், நீங்கள் அதே உத்தரவு இட்டபோது உடனடியாகப் பலன் கிட்டியது. இதேபோன்றுதான் மந்திர உச்சாடனமும்" என்றார் மந்திரி மந்தகாசத்துடன்.

No comments:

Post a Comment