Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 104கீதை தரும் பாதை

அர்ஜுனன் கிருஷ்ணனின் மைத்துனன். உறவினர்கள் மட்டுமல்ல! உயிர் நண்பர்களும் கூட. குரு÷க்ஷத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை! போர்க்களத்தில் கேள்வி கேட்பதற்கோ, விரிவான விளக்கம் அளிப்பதற்கோ நேரமே இல்லை என்ற நிலை! இருந்தாலும் மைத்துனனின் மனசஞ்சலத்தைப் போக்க பகவான் கிருஷ்ணர் கீதையைப் போதித்து வெற்றி தேடி தந்தார். தன்னுடைய தெய்வீக ஆற்றலைப் பயன்படுத்தியிருந்தால், கீதோபதேசம் இல்லாமலே அர்ஜுனனை மாற்றியிருக்கலாம். மாறாக, அவனது கவலையை மாற்றும் மருந்தை கீதை மூலமாகப் புகட்டினார். ""அர்ஜுனா! நீ என் மைத்துனன் உறவு மட்டுமல்ல! நல்ல நண்பனுமாக இருக்கிறாய்! நான் உனக்குத் தேரோட்டும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறேன். இருந்தாலும் உன்னிடம் இருக்கும் அஞ்ஞானத்தால், போர் புரியாமல் காண்டீபத்தை (வில்) கீழே போட்டுவிட்டு மனம் வருந்துகிறாய். அஞ்ஞானத்தை உன் முயற்சியாலே போக்கவேண்டும். அப்போது கிடைக்கும் சத்தியஞானம் தான் நிரந்தர பொக்கிஷம். இது கிடைத்தால் மனவலிமையும், உடல் சக்தியும் உண்டாகும். புரட்சிகரமான நல்ல மாறுதல் உண்டாகும்,'' என்றார். உடனே அர்ஜுனன் வில்லை எடுத்தான். எதிரிகளைச் சாய்த்தான். நீங்களும் மனசஞ்சலமான நேரத்தில் கீதையைப் படியுங்கள். வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்வீர்கள். தைரியம் தானாகவே வரும். செயல்பாடுகளும் சிறப்பாக அமையும்.

No comments:

Post a Comment