Monday, June 27, 2011

ஆன்மிக கதைகள்»33-நம்பினார் கெடுவதில்லை

நாரத மகரிஷி ஒருமுறை பூலோகம் வந்தார். மற்ற ஊர்களில் கலாட்டா செய்வது போல பூலோகத்தில் கலகம் செய்வது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில், பூலோக மக்களே கலாட்டாவாசிகள். அவர்களிடமும் எப்படியாவது கலகம் செய்து, முடிவைச் சுபமாகத் தந்து விட வேண்டுமென கருதி சுயரூபத்திலேயே வந்துவிட்டார்.
சாலை ஒன்றில் நடந்து சென்ற அவரை மக்கள் கூடிநின்று வேடிக்கை பார்த்தனர். ""பார்த்தாயா! இந்த நடிகருக்கு நாரதர் வேடம் கச்சிதமாக பொருந்தியுள்ளது. நன்றாக நடிக்கவும் செய்வார் போலும், எந்த ஊரில் நாடகமோ,'' என்று பேசிக் கொண்டனர். ஒரு மரத்தடியில் போய் அமர்ந்த அவர் ஆசுவாசப்படுத்துவது போல் பாவனை செய்தார்.
அப்போது ஐந்து பேர் அங்கு வந்தனர். அவர்கள் அவரை நிஜ நாரதர் என நம்பினர். அவர்களில் ஒருவர் பணக்காரர். அவர் நாரதரிடம், ""திரிலோக சஞ்சாரியே, தாங்கள் நாராயணனின் திவ்யதேசங்களான பாற்கடலுக்கும், ஸ்ரீவைகுண்டத்துக்கும் சர்வசாதாரணமாகச் சென்று வருபவர். மனித ஜீவன்களான நாங்கள் இறந்தபிறகும் கூட அங்கு செல்வோமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால், அங்கு செல்வதன் ரகசியம்
உங்களுக்குத் தெரிந்திருக்கும். தாங்கள் சொன்னால், நானும் என்னைச் சார்ந்தவர்களும் வைகுண்டத்தை அடைவோம், சொல்லுங்களேன்,''என கெஞ்சினார்.
அந்த சமயத்தில் அந்த பணக்காரரின் பண்ணையில் பணிசெய்யும் கூலியாள் ஒருவரும், ஒரு புலவரும், இரண்டு துறவிகளும் அங்கு வந்தனர். அவர்களும் நாரதரிடம் பணக்காரர் கேட்ட கேள்வியையை கேட்டனர். அவர்களின் கடுமையான இந்தக் கேள்விக்கு நாரதராலேயே பதில் சொல்ல முடியவில்லை.""நீங்கள் என்னை நிஜமான நாரதர் என மனதார நீங்கள் நம்புகிறீர்கள் இல்லையா?''
"ஆம்' ""அப்படியானால், என்னை நம்பும் நீங்கள் ஐவருமே மோட்சத்தை அடைய வேண்டுமென விரும்புகிறேன். ஆனால், நீங்கள் கேட்ட கேள்விக்குரிய விடை எனக்குத் தெரியாது. அந்த நாராயணனிடமே இதற்கு விடை கேட்டு வருகிறேன். அதுவரை பொறுத்திருங்கள். வரும் பவுர்ணமியன்று மாலையில், உங்கள் ஊர் பெருமாள் கோயிலுக்கு வந்துவிடுங்கள். நான் பதில் சொல்கிறேன்,'' என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார் நாரதர்.
வைகுண்டம் சென்ற அவர் பெருமாளிடம், பூலோகவாசிகள் கேட்டதைத் தெரிவித்தார்.
அதற்கு பெருமாள்,
""நாரதா! நீ மீண்டும் பூலோகம் செல். நான் ஊசியின் காதில் யானையை நுழைத்துக் கொண்டிருப்பதாகச் சொல். அதை யார் நம்புகிறார்களோ அவர்கள் என்னை அடையலாம்,'' என்றார்.
பவுர்ணமியன்று ஐவரும் கோயிலில் காத்திருந்தனர். நாரதரும் வந்துவிட்டார்.
""பக்தர்களே! நீங்கள் கேட்ட கேள்விக்குரிய பதிலை நான் பெருமாளிடம் கேட்டேன். அப்போது அவர் ஒரு ஊசியின் காதுக்குள் ஒரு யானையைத் திணித்துக் கொண்டிருந்தார். என் கேள்விக்கு பதிலளிக்கவே இல்லை,'' என்றார். இதைக் கேட்டவர்களில் தொழிலாளியைத் தவிர மற்றவர்கள் நகைத்தனர்.
""ஊசிக்குள் நூலை நுழைக்கவே படாதபாடு பட வேண்டுமே! பெருமாள் யானையை நுழைக்கிறாரமே! ஊசியின் காதுக்குள் யானை எப்படி நுழையும்?'' என்று சிரித்தபடி கேட்டனர். பணியாளன் மட்டும்,""நாரதரே! கடவுள் அபார சக்தியுள்ளவர். அவர் நினைத்தால் ஊசிக்குள் யானையை என்ன! இந்த உலகத்தையே கூட அவர் நினைத்தால் ஊசிக்குள் நுழைத்துவிடுவார்,'' என பரவசத்துடன் சொன்னான்.
நாரதர் அவர்களிடம், ""பார்த்தீர்களா! இறைவனால் எதையும் செய்ய முடியும் என நம்புபவனே அவனை அடைய முடியும். இதோ! இந்த பணியாளன் அவரை நம்பினான். இவன் இவ்வுலகில் மனநிறைவுடன் வாழ்ந்து முடிவில் மோட்சத்தை அடைவான்,'' என்று சொல்லி மறைந்தார்.

No comments:

Post a Comment