Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் 56-இரு துருவம்

தமிழ்க்கடவுளான முருகனின் புகழ்பாடும் திருப்புகழைப் படித்து உள்ளம் உருகுவான் கபிலன். திருவாசகத்தைப் படித்து, ""இறைவா! எனக்கு இனி பிறவியே வேண்டாம். உன் காலடியில் இருக்கும் பரமானந்த நிலையை அருள்செய்,'' என்று மாணிக்கவாசகரைப் போல் உள்ளம் உருகி வேண்டுவான்.
அவனது மனைவி மல்லிகாவோ நேர் எதிர். அவன் கொண்டு வந்து கொடுக்கும் பணத்துக்குள் குடும்பம் நடத்தத் தெரியாதவள். யார் வீட்டில் என்ன வாங்கினாலும், அது தன் வீட்டிலும் இருக்க வேண்டுமென விரும்புபவள். உலகமே தன் கைக்குள் வந்தாலும், அதிலும் குறை காணும் இயல்புடையவள். எதிர் துருவங்களான இவர்கள் வீட்டில் நிம்மதி எங்கே இருக்கும்?
""இவருக்கு கொஞ்சமாவது என் மீதும், பிள்ளைகள் மீதும் அக்கறையிருக்கிறதா? இப்போது சம்பாதிப்பதை விட இன்னும் கூடுதலாகப் பணம் வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? என் பக்கத்து வீட்டுக்காரி பட்டு கட்டுகிறாள்! என்னிடம் நூல் புடவை கூட கிழிசலாக இருக்கிறது. அவர்கள் வீட்டில் விதவிதமாய் சாப்பிடுகிறார்கள்! இங்கே தினமும் பழையசாதமும் ஊறுகாயும்! இறைவா! இவரைத் திருத்து<'' என்று அவளும் முறையிட்டாள்.
ஒருசமயம், அவ்வூருக்கு ஒரு சாமியார் வந்தார். அவர் மண்ணைத் தங்கமாக்கும் மந்திரக்கோல் வைத்திருப்பதாக ஊரெங்கும் பேச்சு.
மல்லிகாவின் காதுகளில் இந்த சேதி விழுந்ததோ என்னவோ! கபிலனை அரிக்க ஆரம்பித்து விட்டாள்.
""உடனே சாமியார் கிட்டே போங்க! மந்திரக்கோலை வாங்கிட்டு வாங்க,'' என்று விரட்டினாள்.
""மல்லி! சாமியாரிடம் ஞானம், பக்தி, தியானம், யோகம், முக்தியை கேட்கலாம். அவரிடம் செல்வத்தைக் கேட்பது முறையா!'' என்றான்.
""அட பைத்தியக்கார மனுஷா! சொன்னதைச் செய்யும். இல்லாவிட்டால், பிள்ளைகளுடன் நான் என் பிறந்த வீட்டுக்கு போய் விடுவேன்.
பெண்டாட்டியை வைத்துக் காப்பாற்ற தெரியாத துப்புக்கெட்டவன் என்று உம்மை ஊர் சிரிக்க செய்துவிடுவேன்,'' என்று விரட்டினாள்.
வேறு வழியில்லாமல், அவன் சாமியாரிடம் போனான். தலைகுனிந்து அமர்ந்திருந்த அவனிடம், ""தம்பி! தயங்காமல் உன் தேவையை என்னிடம் கேள்,'' என்றார் சாமியார்.
""சாமி! எனக்கு பணத்தின் மீது பற்றில்லை. என் மனைவிக்கோ அதன் மீது மட்டுமே பற்று.
உங்களிடம் எதைத்தொட்டாலும் தங்கமாகும் மந்திரக்கோல் இருப்பதாகவும், அதை பெற்று வாருங்கள் என்றும் சொல்லி அனுப்பினாள். எனக்கு அதைக் கேட்க இஷ்டமில்லை. இருப்பினும், நிர்ப்பந்தத்தால் கேட்கிறேன். தர முடியுமா?'' என்றான்.
சாமியார் "உச்' கொட்டினார்.
""அடப்பாவமே! நேற்றே நீ வந்திருக்கக்கூடாதா! பரதேசியான எனக்கு அது
தேவையில்லை என்று கருதி, வடக்குத்தெரு பண்ணையார் வீட்டு முன்புள்ள சாக்கடையில் தூக்கி வீசிவிட்டேன். வேண்டுமானால் தேடி எடுத்துக் கொள்,'' என்றார்.
இவன் மனைவியிடம் போய்
விஷயத்தைச் சொன்னான். அன்றிரவு அவள் சத்தமில்லாமல், கணவனுடன் அந்த இடத்துக்குச் சென்றாள். கணவனும்,
மனைவியும் கையை விட்டு துழாவினர்.
ஒரு வித்தியாசமான குச்சி கபிலன் கையில் கிடைத்தது.
அதைக் கொண்டு பக்கத்திலுள்ள கல்லைத் தொட்டான். தங்கமாகி விட்டது. மல்லிகாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. கோலுடன் வீட்டுக்கு வந்தனர்.
அதன்பின் மல்லிகா தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. அவள் கணவனைக் கண்டுகொள்ளவே இல்லை. பிள்ளைகளும் தாறுமாறாக செலவழித்து கெட்டுப்போனார்கள். கபிலனுக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. அவன் பந்தபாசத்தை துறந்து காசிக்கு கிளம்பினான்.
""அனுபவிக்க தெரியாத மனுஷா! போ போ!'' என்று அவனைத் திரும்பிக் கூட பார்க்காமல் எரிந்து விழுந்தாள் மல்லிகா.
அழியும் செல்வத்தை விட்டுஅழியாச்செல்வமான முக்தியை பெறும் நோக்கில் ரயிலேறினான் கபிலன்.

No comments:

Post a Comment