Thursday, June 30, 2011

ஆன்மிக கதைகள் 112கை கொடுத்த தெய்வம்

சோழநாட்டில் முருகபக்தி மிக்க வணிகர் ஒருவர் இருந்தார். அவருக்கு நீண்ட நாளாகக் குழந்தைப் பேறு இல்லை. மழலைச் செல்வம் வேண்டி, முருகனுக்குரிய சஷ்டிவிரதம் இருந்தார். விரதத்தின் பயனாக, வணிகரின் மனைவி கருவுற்றார். நல்லதொரு வெள்ளிக்கிழமையில், மகாலட்சுமி போல் பெண்குழந்தை பிறந்தது. வணிகரும், அவருடைய மனைவியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கந்தசஷ்டி விரதம் இருந்து பிறந்த குழந்தை என்பதால் முருகனின் பெயரால்"முருகம்மை' என்று பெயர் சூட்டினர். முருகம்மைக்கு பக்தியுணர்வு இயல்பாகவே அமைந்தது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும்வரை "முருகா' என்ற திருநாமம் அவள் நாவில் ஒலித்துக் கொண்டே இருந்தது. முருகபக்தி அவள் உணர்விலேயே கலந்து விட்டது. கன்னிப்பருவம் அடைந்த முருகம்மைக்கு மாப்பிள்ளை பேசிமுடிக்கலாம் என்று வணிகர் முயற்சித்தார். ஆனால், முருகம்மையை ஊரார், ""அவள் எந்நேரமும் முருகா சொல்லும் பைத்தியமாயிற்றே!'' என்று வருகின்ற மாப்பிள்ளை வீட்டாரிடம் எல்லாம் சொல்லி விட்டனர்.
ஆனால், பக்கத்து ஊரில் வாழ்ந்த தனஞ்செயன் என்னும் இளைஞன் முருகம்மையின் பக்தியைக் கண்டு வியந்து, அவளைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான். உறவினர்கள்
முருகம்மையை மணம் செய்ய வேண்டாம் என்று தடுத்தும் தனஞ்செயன் கேட்கவில்லை.
மகிழ்ச்சியுடன் வணிகன் முருகம்மைக்கு சீதனம் தந்து, தனஞ்செயனுக்கு மணம் செய்து வைத்தான். கணவனும் மனைவியும் அன்புடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், தனஞ்செயனின் தாயும், தங்கையும் முருகம்மை மீது வேண்டாத வெறுப்பையும், கோபத்தையும் காட்டிவந்தனர். இவ்விஷயத்தை தனஞ்செயன் அறியாமல் இருந்தான். இந்நிலையில், தனஞ்செயனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. "திரைகடலோயும் திரவியம் தேடு' என்ற சொல்லுக்கேற்ப, வெளிநாடு சென்று சம்பாதிக்க அவன் முடிவெடுத்தான். ""முருகம்மா! கலங்காதே! செல்வம் தேடுவது தான் நம் குலதர்மம். விரைவில் பெரும்பொருள் தேடிக் கொண்டு நாட்டிற்கு வந்து விடுவேன். அதோடு கூட, நம் வீட்டுப்பணிகளைச் செய்ய முருகன் என்றொரு பணியாளை அமர்த்தியுள்ளேன். இனி முருகன் தக்க துணையாக இருந்து வீட்டைக் காவல் செய்வான்!'' என்று சொல்லி விட்டுக் கிளம்பினான். கணவனையே எப்போதும் மனதில் எண்ணிக் கொண்டு உண்ணாமலும், உறங்காமலும் முருகம்மை வாழ்ந்தாள். அவள் உதடுகள் "முருகா' என்ற
திருநாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தது. வேலைக்காரன் முருகன், "முருகா' என்ற பெயரைக்
கேட்டதும், ""அம்மா கூப்பிட்டீர்களா?'' என்று ஓடோடி வருவான். ""அம்மா! கவலைப் படாதீர்கள்! பொருள்தேடிவிட்டு சீக்கிரம் உங்கள் கணவர் வந்துவிடுவார்'' என்று ஆறுதல் சொல்வான். பொறாமை கொண்ட நாத்தனாரும், மாமியாரும் வேலைக்காரன் முருகனுடன் முருகம்மை தகாத உறவு வைத்திருப்பதாக எண்ணிக் கொந்தளித்தனர். ஓராண்டு சென்று விட்டது. தனஞ்செயன் வெளிநாட்டிலிருந்து வீட்டுக்கு வந்தான். தன் மனைவி முருகம்மையைக் கண்டு மகிழ்ந்தான். மழைமுகம் காணாத பயிர் மீது மழைத்துளி விழுந்தது போல முருகம்மை தன் கணவனை அணைத்துக் கொண்டாள்.
தனஞ்செயனின் தாயும் தங்கையும் அவனிடம், ""முருகம்மை, வேலைக்காரன் மீது கொண்ட மோகத்தால் தான் முருகா என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாள்!'' என்று சொல்லி கோபத்தை மூட்டினார். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல தனஞ்செயனும் மனம் மாறினான். தன் மனைவியிடம், ""முருகம்மா! இனி உன் உதடுகள் முருகா என்ற பெயரைச் சொல்லக் கேட்டால் வெட்டிக் கொன்று விடுவேன்!'' என்று ஆவேசமாகக் கத்தினான். முருகம்மைக்கு தனஞ்செயனின் பேச்சு பாம்பு தீண்டியது போல இருந்தது. பூஜையறைக்குச் சென்று முருகப்பெருமானிடம், ""கணவனின் சொல்லே எனக்கு மந்திரம் முருகா. இனி மறந்தும் முருகா என்று சொல்லமாட்டேன் முருகா! '' என்று சொல்லி அழுதாள். இதைத் தனஞ்செயன் கேட்டு விட்டான். நான் சொல்லியும் "முருகா' என்ற வார்த்தையை உ<ச்சரித்தாயா? என்றவன் கடும்கோபத்துடன், வாளெடுத்து முருகம்மையின் கைகளைத் துண்டித்தான். வலியால் துடித்த முருகம்மை, ""முருகா! முருகா! முருகா!'' என்று கூவி அழைத்தாள். மூன்றாம் முறை அழைத்த போது மயிலில் ஓடோடி வந்தான் முருகப்பெருமான். துண்டித்த கை வளர்ந்தது. முருகப்பெருமானின் அருளால் தனஞ்செயனின் அஞ்ஞானம் மறைந்தது. தெய்வீகத்தம்பதியராய் முருகம்மையாரும், தனஞ்செயனும் பக்தியோடு பலகாலம் வாழ்ந்து முருகன் திருவடிகளை அடைந்தனர்.

No comments:

Post a Comment