Monday, June 27, 2011

ஆன்மிக கதைகள்»29-துஷ்டனைக் கண்டால் தூர விலகு

குருகுலத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், தர்மர் ஒருமுறை ஒரு தெரு வழியே நடந்து சென்றார். துரியோதனன், அந்தப் பக்கமாக தேரில் வந்தான். தர்மர் நடந்து செல்வதைப் பார்த்து துரியோதனனுக்கு ரொம்ப ஆச்சரியம். அரசகுலத்தவன் ஏன் தெருவில் நடக்க வேண்டும்? இதுபற்றி அவன் தர்மரிடமே கேட்டு விட்டான். ""அண்ணா! நம்மைப் போன்றவர்கள் தெருவில் நடக்கலாமா? நம்மைப் பெற்றவர்கள் ஆளுக்கொரு தேர் தந்தும் நீ நடந்து செல்கிறாயே! இதில் ஏதேனும் விசேஷம் உண்டோ?'' என்றான்.தர்மர் அவனிடம்,""தம்பி! நாடாளப் போகிறவனுக்கு ஊர் நிலைமை தெளிவாகத் தெரிய வேண்டும். தேரில் போனால் வேகமாகப் போய்விடுவோம். ஒவ்வொரு தெருவாக நடந்தால் தான், நமது நாட்டின் நிலைமை, மக்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடியும்,'' என்றதும், துரியோதனனுக்கு உள்ளூர பொறாமை எழுந்தது.""நாடாளப் போவது நானல்லவா! அப்படிப் பார்த்தால் நானல்லவா நடந்து செல்ல வேண்டும், இவன் ஏன் நடக்கிறான்? சரி...சரி...இவனைப் போலவே நாமும் நடப்போம்,'' என தேரில் இருந்து குதித்தான்.மனதுக்குள் குதர்க்கம் இருந்தாலும், அண்ணனுடன் சேர்ந்து நல்லவன் போல் நடந்தான். அண்ணன் கவனித்த விஷயங்களையெல்லாம், இவனும் கவனித்துப் பார்த்தான்.ஓரிடத்தில் ஒரு ஆட்டிறைச்சிக்கடை இருந்தது. கடைக்காரன், ஒரு ஆட்டை அறுத்துத் தொங்க விட்டுக் கொண்டிருந்தான். தர்மருக்கு அதைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.""சே...இவனெல்லாம் ஒரு மனிதனா! இவனது காலில் ஒரு முள் குத்தினால் "ஆ'வென அலறுகிறான். ஆனால், இந்த ஆட்டின் கழுத்தைக் கத்தியைக் கொண்டு
கரகரவென நறுக்குகிறான். ஐயோ! அதன் அவலக்குரல் இவனது காதுகளில் விழத்தானே செய்கிறது! இரக்கம் என்பதே இவன் இதயத்தில் இல்லையா?' ' என்று அவனை மனதுக்குள் திட்டியபடியே நடந்தார்.
அப்போது, அந்தக் கடைக்காரன் இரண்டு இறைச்சித்துண்டுகளை எடுத்தான். தன் கடையின் கூரையில் எறிந்தான். தேவையற்ற எலும்புகளை அள்ளினான். தெருவில் நின்ற நாய்க்கு வீசி எறிந்தான். அது மகிழ்ச்சியோடு சாப்பிட்டது. கூரையில் எரிந்த துண்டுகளை ஏராளமான காகங்கள் கொத்தித் தின்றன.
""ஐயோ! தவறு செய்துவிட்டோமே! இவனது தொழில் ஆடு அறுப்பது என்றாலும், மிருகங்களின் மீது இவன் இரக்கம் இல்லாதவன் அல்ல. காகங்களுக்கும், நாய்க்கும் உணவிட்டதன் மூலம் இதற்குரிய பிராயச்சித்தத்தை தேடிக்கொள்வதோடு, தர்மத்தையும் பாதுகாக்கிறான். அப்படியானால், இவனைப் பற்றிய தப்பான அபிப்ராயம் என் மனதில் ஏன் ஏற்பட்டது? நான் கெட்டவனையும் கூட நல்லவனாகப் பார்ப்பவனாயிற்றே!'' என்று சிந்தித்தபடியே வீடு சென்றார்.நிஜத்தில் நடந்தது என்ன தெரியுமா?இவர் தனியாக நடந்து போயிருந்தால் இப்படிப்பட்ட எண்ணமே வந்திருக்காது. ஆனால், துரியோதனன் கூட வந்ததால் அவனது கெட்ட குணம் காற்றில் பரவி, தர்மரையும் பாதித்து விட்டது. இதனால் தான் "துஷ்டனைக் கண்டால் தூர விலகு' என்றார்கள். துஷ்டனால் நமக்கு ஆபத்து வருகிறதோ இல்லையோ...அவர்களின் காற்றுப்பட்டால் நம் குணமும் மிருகநிலைக்கு சற்று நேரமாவது மாறி விடுமாம்! அதனால் தான் அப்படி ஒரு பழமொழியே வந்தது. இனியேனும், நல்லவர்களுடன் மட்டும் சேர்க்கை வைத்துக் கொள்வீர்கள் தானே!

No comments:

Post a Comment