Tuesday, June 28, 2011

ஆன்மிக கதைகள் 41திலகவதி-அப்பர்

ஒரு பெண் யாரை மனதில் நினைக்கிறாளோ அல்லது பெற்றோர் யாரை முடிவு செய்கிறார்களோ அவரோடு கடைசிவரை குடித்தனம் செய்வது என்ற கொள்கையுடன் அக்காலத்தில் திகழ்ந்தனர். பணம், அழகு எதையுமே அவர்கள் சட்டை செய்யவில்லை.
அதிலும் திலகவதி என்ற பெண்மணி, நிச்சயிக்கப்பட்ட மணமகன் இறந்துவிட்டார் என்பதற்காக, வாழ்வின் இறுதிவரை கைம்பெண்ணாக வாழ்ந்தார் என்றால், அந்த தியாகத்திற்கு ஈடுஇணை ஏது!
திருவாமூர் என்ற தலத்தில் வசித்த வேளாளர் குடும்பத்தில் தலைசிறந்தவர்கள் புகழனார்-மாதினியார் தம்பதி. இவர்களது செல்வமகள் திலகவதி. இவரையடுத்து பிறந்த மகனுக்கு மருள்நீக்கி என்று பெயரிட்டனர்.
அக்காவுக்கும், தம்பிக்கும் வயது வித்தியாசம் அதிகம். திலகவதியை பல்லவமன்னனின் சேனாதிபதியாக இருந்த கலிப்பகையாருக்கு திருமணம் செய்து வைப்பதென முடிவு செய்தனர். மணமக்கள் எதிர்கால வாழ்வு பற்றி இன்ப வானில் மிதந்து கொண்டிருந்த வேளையில், திலகவதியின் தந்தை புகழனார் இறந்து போனார். கணவன் சென்ற வருத்தம் தாளாமல் மனைவி மாதினியாரும் பின்தொடர்ந்து விட்டார். எவ்வளவு உயர்ந்த காதல் பாருங்கள். திலகவதியும், மருள்நீக்கியும் அனாதையாக விடப்பட்டனர். இருப்பினும், கலிப்பகையாரின் குடும்பத்தார், திலகவதியாரை தங்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக்கொள்வதில் பின்வாங்கவில்லை.
விதியைப் போன்ற கொடிய ஆயுதம் உலகில் ஏது! வடநாட்டிற்கு போருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானார் கலிப்பகையார்.
""வெற்றியுடன் திரும்புவேன்,என்மணநாள் பரிசாக அதை <உங்கள் திருவடியில் சமர்ப்பிப்பேன்,'' என மன்னரிடம் சூளுரைத்து கலிப்பகையார் கிளம்பினார். கொடிய சண்டை நடந்தது. கலிப்பகையாரின் வீரம் கண்டு வடநாட்டு மன்னன் அஞ்சினான். படைகள் பின்வாங்கி ஓடின. வீரத்தால் அவரை வெற்றி கொள்ள இயலாது எனக்கருதிய வடமாநில மன்னன், வஞ்சகமாக அவரைக் கொன்று விட்டான். வீரமரணம் அடைந்தார் கலிப்பகையார்.
""தந்தை போனார், தாய் போனார், கட்ட இருந்த மணமகனும் போய்விட்டார்...ஏன் பிறந்தோம் இந்த பூமியில்...இனியும் நான் யாருக்காக வாழவேண்டும்?அதிர்ஷ்டக்கட்டை, யோகமில்லாதவள், பெற்றவர்களையும், கட்ட இருந்தவனையும் விழுங்க வந்த காட்டுப்பிடாரி என்றெல்லவா உலகம் தன்னைப் பழிக்கும். இந்த சுடுசொற்களைத் தாங்கும் மனம் எனக்கில்லையே... உலகம் ஆயிரம் சொல்லட்டும், உண்மையும் அதுதானே! என்னால், யாருக்கென்ன லாபம்...திலகவதி கண்ணீர் வடித்தாள். இந்துமகாசமுத்திரத்தையும் விஞ்சுமளவு கண்ணீர்! ஆனால் பலனென்ன!
ஆண்டாண்டு காலம் அழுதாலும் மாண்டார் வருவார்களா! தன் உ<யிரை மாய்த்துக்கொள்ள துணிந்து விட்டாள்.
அவள் மரணத்தை தழுவ இருந்த வேளையில் இரண்டு பிஞ்சுக்கரங்கள் அவளது கால்களைக் கட்டிக்கொண்டன. ஆம்... திலகவதி உலகத்தில் ஏச்சு பேச்சை நினைத்தாளே தவிர, தன் தம்பியைமறந்துவிட்டாள்.
""அக்கா! அப்பா இல்லை, அம்மா இல்லை, உன்னை கட்ட இருந்தவர் இங்கு வந்திருந்தால் "மாமா' என அவர் மடியிலாவது சாய்ந்திருப்பேன். ஆறுதலைத் தேடியிருப்பேன், அவரும் போய்விட்டார். இப்போது, நீயும் போகிறாயா! அப்படி சென்றால் உன்னோடு என்னையும் அழைத்துப் போய்விடு. தாய் தந்தைக்குப் பிறகு இப்போது நீயே என் பெற்றோர், சகலமும் நீயே,'' என்று கதறினார் மருள்நீக்கி.
அக்கா தன் தம்பியை வாரி அணைத்துக் கொண்டாள்.
""அன்புச்செல்வமே! ஒரு பெண் வாழ்க்கையில் ஒருவனுக்கு மனைவியாவதற்காக பேசி முடிக்கப்பட்டு விட்டால், அவனை நினைத்தே வாழ்வாளடா! என்னை மணம் முடிக்க இருந்தவர் போய்விட்டார். இனி என் மனதில் யாருக்கும்
இடமில்லை. திக்கற்ற பெண் இவ்வுலகில் வாழ இயலாது. இருப்பினும், உனக்காக வாழ்வேனடா! ஆனால், கணவனை இழந்த பெண்கள் எப்படி இந்த பூமியில் கைம்மை நோன்பு பூண்டு வாழ்கிறார்களோ அப்படி வாழ்வேன். அதுவும் உனக்காக,'' என்றாள்.
மருள்நீக்கியை பெரும் பக்தனாக வளர்த்தாள். அந்த மருள்நீக்கியே "திருநாவுக்கரசர்' என்றும் "அப்பர்' என்றும்பெரும்புகழ் பெற்றார்.

No comments:

Post a Comment