Wednesday, June 29, 2011

ஆன்மிக கதைகள் 75 இதோ ஒரு நல்ல மனிதர்

திருவொற்றியூருக்கு சாமியார் ஒருவர் வந்திருந்தார். அவர் கோயில் அருகில் உட்கார்ந்து கொண்டு வழியில் போவோர் வருவோரைக் கண்டு ஏதாவது விமர்சனம் செய்வதுண்டு. பெரும்பாலான மனிதர்களை மனிதன் என்றே சொல்ல மாட்டார். ""இதோ ஒரு நாய் தெருவில் போகிறது! கழுதை போகிறது! பன்றி போகிறது'' என்று தான் சொல்வார். மனிதன் போகிறான் என்று யாரையும் சொல்லமாட்டார். சாமியாருக்கு பைத்தியம் தான் பிடித்துவிட்டது என்று சிலர் சொன்னார்கள். வேறுசிலரோ, கோபம் கொண்டு முறைத்தார்கள். ஆனால், ஒருநாள் சாமியார் வழியில் சென்ற ஒருவரைக் கண்டு மகிழ்ந்தார். ""இதோ ஒரு நல்லமனிதர் போகிறார்'' என்று குறிப்பிட்டார். அந்த மனிதர் வேறு யாருமல்ல! அருட்பெருஞ்ஜோதியாக கடவுளை வழிபட்ட வள்ளலார் தான். உள்ளத்தில் மட்டுமல்ல! அவருடைய முகத்திலும் தனிப்பெருங்கருணை நிறைந்திருந்ததையே அந்தச்சாமியார் அப்படி குறிப்பிட்டார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் அல்லவா அவர்! ஒருமுறை சத்தியதருமச்சாலையில் மறுநாளுக்குத் தேவையான அரிசி பருப்பு ஏதுமில்லை. பணியாளர்கள் வள்ளலாரிடம் வந்து முறையிட்டனர். அமைதியுடன் அவர்களின் பேச்சைக் கேட்டுவிட்டு, ""ஒன்றும் கவலைப்படாதீர்கள்! நிச்சயம் நமக்குத் தேவையான அரிசி, பருப்பு வந்துசேரும்
'' என்றார். வள்ளலார் ஆறுதலாக நம்மைத் தேற்றுகிறார் என்று எண்ணிக் கொண்டே அவர்கள் தூங்கச் சென்றனர். மறுநாள் திருத்துறையூரில் இருந்து பக்தர் ஒருவர் ஒரு வண்டி நிறைய அரிசியும், பருப்பும், காய்கறியுமாக சத்திய தருமசாலைக்கு வந்து சேர்ந்தார். பணியாளர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் அப்பொருட்களை வாங்கிக் கொண்டனர். சரியான தருணத்தில் வந்து சேர்ந்த பக்தருக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். அப்போது அந்த பக்தர், தன்னுடைய கனவில் வள்ளலாரே வந்து உத்தரவிட்டதைச் சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

No comments:

Post a Comment