Thursday, November 13, 2014

வென்றது வெற்றிவேல்

தட்சனைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். பார்வதிதேவி தாட்சாயிணியாக அவதரித்த காலத்தில் அவளுக்கு தந்தைஆகும் பாக்கியம் பெற்றவன் தட்சன்.
ஆணவமிக்க இவன் தன் மருமகனான சிவபெருமானையே அவமதித்தான். கடவுளை அவமதிப்பவர்களே அசுர குணங்களுக்கு ஆளாவார்கள். இவர்கள் மறுபிறவியிலும் அசுரர்களாகவே பிறந்து ஈனச்செயல்களைச் செய்து இறைவனால் தண்டிக்கப்படுவார்கள்.
தட்சனும் ஆணவக்காரனாகவும், இறைவனை மருமகனாகப் பெற்றும் அவரை மதிக்காத காரணத்தாலும், பத்மாசுரன் என்ற பெயரில் பிறந்தான். காஷ்யபர், அதிதி தம்பதியருக்கு பிறந்த இவன் செய்யாத அட்டூழியமே இல்லை. இவனது சகோதரர்களான கஜமுகாசுரன், சிங்கமுகன், பானுகோபன் ஆகியோரும் அளவிடற்கரிய அநியாயங்களை இழைத்தனர்.
இதுபற்றிய தகவல் தேவர்கள் மூலமாக சிவனுக்குச் சென்றது. அவர், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளியிட்டார். அந்தப் பொறிகள் ஆறு குழந்தைகளாக வடிவெடுத்தன. ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்த்த பார்வதி அவனுக்கு "ஸ்கந்தன்' என பெயர் வைத்தாள்.
"ஸ்கந்தன்' என்றால் "ஒன்று சேர்க்கப்பட்டவன்' என்று பொருள்.
கந்தன் அழகாக இருந்ததால் "முருகன்' என்றும் பெயர் ஏற்பட்டது. "முருகன்' என்றால் "அழகன்'. சிறுவனாகிய முருகன், நவவீரர்களுடன் இணைந்து பத்மாசூரனுடன் போரிட்டார்.
நவவீரர்களின் தலைவராக இருந்தவரே வீரபாகு. முருகன் முதலில் பத்மாசுரனின் தம்பிகளை அழித்தார். பின்னர், பத்மாசுரனை இருகூறாகக் கிழித்து, ஒரு பகுதியை சேவலாக்கி தன் கொடியிலும், ஒரு பகுதியை மயிலாக மாற்றி தன் வாகனமாகவும் மாற்றிக் கொண்டார்,''.
இதனால் தான், சூரசம்ஹார முடிவில் சேவலை பறக்க விடுகிறார்கள். அது மட்டுமல்ல! சூரனின் தலைப்பகுதியில் மாவிலையைக் கட்டி வைப்பார்கள். போரின் போது முருகனிடம் இருந்து தப்பிக்க சூரன் மாமரமாக மாறி நின்றான். அதன் நடுவே தன் வேலைப் பாய்ச்சி அழித்தார் முருகன். அதைக் குறிக்கவே இப்படி செய்கிறார்கள்.
முருகன் ஆறுமுகம் கொண்டவராக அவதரித்தார். திதிகளில் ஆறாவது சஷ்டி. அதனால் தான் ஆறாவது திதியை தேர்ந்தெடுத்து சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வவளத்துடன் தீர்க்காயுளுடன் வாழ்வர். திருமணமான பெண்கள் இதை அனுஷ்டித்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.

No comments:

Post a Comment