Thursday, November 20, 2014

பிறப்பால் ஒருவன் பிராமணனும் ஆவதில்லை, சண்டாளனும் ஆவதில்லை.

ஜாதி.
முன்னொரு காலத்தில் ஒரு பிராமணர் இருந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான்.ஜாதிகள் பற்றிய தீவிரமான பாகுபாடுகள் இருந்தகாலம் அது. பிராமணரின் மகன் ஒரு உழவர் வீட்டுப் . பெண்ணைக் காதலித்தான். ஆனாலும் தந்தை சம்மதிக்க மாட்டாரே என்று கவலைப்பட்டான்.
நண்பன் ஒருவன் யோசனை சொன்னான், ''நீ உன் தந்தையிடம் அந்தப் பெண் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவள் என்று துணிந்து சொல்,'' இளைஞனும் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு தந்தையிடம் நண்பன் சொன்னதுபோலப் பொய் சொன்னான்.
அதிர்ச்சியுற்ற அந்தப் பெண் உடனே, ''ஐயா,உங்கள் மகன் சொல்வது தவறு. நான் உழவர் வீட்டை சேர்ந்த பெண் தான். நீங்கள் அனுமதித்தால் மட்டுமே இத்திருமணம் நடைபெறும்'' என்றாள்.பிராமணர் புன்னகை புரிந்தபடி சொன்னார், ''அம்மா,உன் அப்பா எந்தத் தொழில் செய்தால் என்ன? துணிந்து உண்மை சொன்ன நீயும் ஒரு பிராமணப் பெண்தான். உண்மையான பிராமணர் பொய் சொல்ல மாட்டார்கள். பிராமண குலத்தில் பிறந்தாலும் என் மகன் பொய் சொல்லி விட்டான். அவன் உண்மையான பிராமணன் அல்ல..., பிராமணன் அல்லாத இவனை நீ திருமணம் செய்து கொள்ள பிராமணரான உனக்கு ஆட்சேபம் இல்லாத நிலையில் இத்திருமணத்திற்கு எனக்கு முழு சம்மதமே.'' என்றார்
புத்தபெருமான் சொல்கிறார், பிறப்பால் ஒருவன் பிராமணனும் ஆவதில்லை, சண்டாளனும் ஆவதில்லை. 
செயலினாலேயே ஒருவன் பிராமணன் ஆகிறான், 
சண்டாளன் ஆகிறான்

No comments:

Post a Comment