Monday, November 17, 2014

தாயில்லாமல் நாமில்லை!

கந்தசாமி அம்மன் பக்தன். வருஷம் தோறும் ஆடிவெள்ளிக்கு தன் ஊரிலுள்ள வடக்குவாசல் செல்வி அம்மனுக்கு பட்டு சாத்தி விடுவான்.
""அவனுக்கென்னப்பா! அம்மன் அவனுக்கு அள்ளித்தான் கொடுக்கிறா! பிறகென்ன! அவன் கோயிலுக்கு செலவழிக்கிறதை கேட்கவா செய்யணும்!'' என்று ஊரே அவனைப் பாராட்டும்.
ஆனால், வீட்டில் அவனுக்கு அந்தளவுக்கு நல்ல பெயர் இல்லை. பெற்ற தாய் கூட கிழிந்த புடவையுடன் இருப்பாள். தீபாவளிக்கு மட்டும் கடமைக்கு ஏதோ ஒரு புடவை எடுத்துக் கொடுப்பான். தரமற்ற அந்தப்புடவை சில மாதங்களிலேயே நைந்து போகும்.
ஒருமுறை அவனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அம்மன் கோயிலுக்கு ஓடினான்.
""தாயே! உனக்கு வருஷம்தோறும் பட்டு சாத்தினேனே! என்னை சோதித்து விட் டாயே!'' என கதறினான்.
அப்போது அசரீரி ஒலித்தது.
""கந்தா! நீ செய்தது கொஞ்சமாவது சரியா! பெற்ற தாய்க்கு புடவை தராத நீ, கல்லாய் இங்கு சமைந்திருக்கும் எனக்கு பட்டு சாத்தி என்ன பயன்! இந்த உலகில் தாயன்பு உயர்ந்ததல்லவா! தாயே பெரியவள் அல்லவா! அவளுக்கு நல்ல புடவையில்லை, வயிற்றுக்கு கஞ்சியில்லை. நீ எனக்கு ஆடிக்கஞ்சி தருவதை விட, பட்டு சாத்துவதை விட, உன்னைப் பெற்றவளுக்கு சேவை செய். அந்த சேவையை எனக்கு செய்யும் சேவையாக ஏற்பேன். தாயில்லாமல் நீ இல்லை,'' என்றது.
அம்பாளின் குரல் கேட்ட கந்தசாமி மனம் மாறினான். அம்மாவுக்கு பணிவிடையைத் தவறாமல் செய்தான். காலப்போக்கில் விட்ட பொருளையும் சேர்த்து பெரும் பொருள் தேடினான்

No comments:

Post a Comment