Tuesday, November 18, 2014

பொறுமையின் பெருமை

புத்திரப்பேறு இல்லாத மன்னர் ஒருவரின் மறைவுக்குப்பின், புதிய மன்னரைத் தேர்ந்தெடுக்க பட்டத்து யானை மாலையுடன் புறப்பட்டது. வீதியில் சென்ற ஒரு துறவியின் கழுத்தில் மாலையிட்டது.
""துறவியான எனக்கு அரசபதவி தேவையில்லை'' என மறுத்தார் அவர்.
""இது கடவுளின் தீர்ப்பு. மக்களின் நலனுக்காக இந்த பதவியில் நீங்கள் இருந்தே ஆக வேண்டும்'' என அனைவரும் வற்புறுத்தி துறவிக்குப் பட்டம் சூட்டினர்.
தாமரை இலையில் விழுந்த தண்ணீர் போல துறவியின் மனநிலை பட்டும் படாமலும் இருந்தது.
இது தான் சரியான நேரம் என்ற எண்ணத்துடன், பக்கத்து நாட்டு மன்னன் படையெடுத்து வந்தான்.
படைத்தளபதி துறவியான மன்னரிடம், ""மன்னா! எதிரியின் படைகள் நம் நாட்டு எல்லைக்குள்
வரப் போகிறது. நாமும் படையுடன் ஆயத்தமாக உத்தரவிடுங்கள்'' என்றார்.
""வேண்டாம்! போர் புரிவது அதர்மச் செயல். அமைதி காப்பது தான் தர்மம்'' என்றார் துறவி.
படையுடன் வந்த மன்னன், அரண்மனைக்குள் நுழைந்து விட்டான்.
""வாருங்கள்! நீங்கள் போர் புரிவதற்கான காரணம் அறிய விரும்புகிறேன்'' என்றார் துறவி.
""இந்த நாட்டையும் நானே ஆள வேண்டும்'' என்றான் கர்ஜனையுடன்.
""நான் என்றைக்கும் துறவியாக இருக்கவே விரும்புகிறேன். இதோ இந்த சிம்மாசனத்தில் இப்போதே அமர்ந்து கொள்ளுங்கள்,'' என்று சொல்லி எழுந்தார் துறவி.
அவரின் பெருந்தன்மையைக் கண்ட எதிரிக்கு வெட்கம் வந்தது. தன் நாட்டையும் துறவியிடம் ஒப்படைத்து விட்டான்.
போர் செய்யாமல் எதிரியைச் சரணடையச் செய்த துறவியைக் கண்டு நாடே வியந்தது.

No comments:

Post a Comment