Thursday, November 13, 2014

ராம பக்தரான ஆஞ்சநேயரின் தகப்பனார் வந்து என் காலை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு நாள் ரமண மகரிஷி, பக்தர்களுக்கு ஆன்ம விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, தனது பணிகளைக் கூட மறந்து விடுவார் ரமண மகரிஷி. அவ்வாறு ஒரு முக்கிய வேலையை மறந்து அன்றைய தினமும் பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்.

ஆனால் அவர் மறந்த விஷயத்தை நினைவு படுத்தி, வெளியில் செல்ல வேண்டும் என்பதை குறித்துச் சொல்லும் விதமாக, அவரது சீடர் ஒருவர், கையில் தடியையும், கமண்டலத்தையும் பிடித்துக் கொண்டு தயார் நிலையில் நின்று கொண்டிருந்தார்.

அதனை கண்ட ரமண மகரிஷி, தனது சொற்பொழிவை முடித்துக் கொண்டு எழுந்து கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. கால்கள் ரத்த ஓட்டமில்லாமல் பிடித்துக் கொண்டு விட்டது. அப்போது ரமணமகரிஷி சிரித்துக்கொண்டே, ‘கொஞ்சம் இருங்கய்யா, ராம பக்தரான ஆஞ்சநேயரின் தகப்பனார் வந்து என் காலை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் என்ன சாமான்யப்பட்டவரா? அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவாரா? அவரிடம் இருந்து மெதுவாகத்தான் விடுபட வேண்டும்’ என்று சொல்லி விட்டு முழங்காலுக்கு தைலம் தேய்த்துக் கொண்டு மெதுவாக எழுந்தார். ஆஞ்சநேயரின் அப்பா வேறு யாருமல்ல வாயுதான்.

முழங்காலை வாயு பிடித்துக் கொண்டு விட்டது என்பதையே இப்படி நகைச்சுவை உணர்வுடன் சொல்லி, அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தினார் ரமண மகரிஷி. இப்படி அடிக்கடி தனது நகைச்சுவை உணர்வை ரமணர் வெளிப்படுத்துவார். ஒரு முறை தைலம் தேய்த்துக் கொண்டிருந்த போது, ‘எண்ணெய் போடலேன்னா இந்த வண்டி (தேகம்) ஓடாது அய்யா’ என்று குறும்பும் கேலியுமாக சொல்லி சிரிப்பார்.

ரமண மகரிஷியின் காலை பிடித்து விட நான், நீ என்று பக்தர்களிடையே போட்டி நிலவும். ஆனால் இது ரமணருக்கு பிடிக்காது. அவர் தன் பக்தர்களை இதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று கூறும்போது, நாங்கள் உங்களுக்கு தொண்டு செய்து புண்ணியம் தேடிக் கொள்கிறோம் என்று பக்தர்கள் கூறுவார்கள்.

ஆனால் ரமண மகரிஷிக்கு பக்தர்களின் செயல் தர்ம சங்கடமாக இருக்கும். ரமணர் தனக்குத்தானே காலை பிடித்துவிடும் பணியை செய்து கொள்ள எண்ணினார். ஒரு நாள், அவரது காலை பிடிக்க பக்தர்கள் ஓடி வந்தபோது, ‘கொஞ்சம் இருங்கோ! எல்லா புண்ணியமும் உங்களுக்கு மட்டும் தானா!.

 என்னையும் கொஞ்சம் புண்ணியம் சம்பாதிக்க விடுங்கோ!’ என்றார் ரமணர். நகைச்சுவை உணர்வுடன் கூடிய அவரது சமயோசித புத்தியைக் கண்டு பக்தர்கள் சிரிப்பில் ஆழ்ந்தனர்

No comments:

Post a Comment