Friday, December 12, 2014

சதுர்த்தி பிறந்த கதை


சதுர்த்தி பிறந்த கதை
வசிஷ்டரின் பரம்பரையில் தோன்றிய பரத்வாஜ மகரிஷி ஒரு சமயம் நர்மதை நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நதியில் நீராடிக் கொண்டிருந்த மங்கை ஒருத்தியைப் பார்த்து மனம் மயங்கினார். மோகித்த அவர் அவளை அவந்தி நகருக்கு அழைத்துச் சென்று இல்லறம் நடத்தினார். அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த மங்கையோ தேவலோகத்துக்குத் திரும்பிச் சென்றாள். பரத்வாஜ மகரிஷியும் அவந்தி நகரிலேயே குழந்தையை விட்டு விட்டு நர்மதை நதிக் கரைக்கு சென்று பாதியில் விட்ட தவத்தை மீண்டும் தொடர்ந்தார். அந்த ஆண் குழந்தையை பூமாதேவி அரவணைத்து வளர்த்து வந்தாள். குழந்தையின் மேனி செந்நிறத்துடன் அக்னி போல் ஒளி வீசியதால் அவனுக்கு அங்காரகன் என்று பெயர் சூட்டினாள். அங்காரனுக்கு ஏழு வயது பூர்த்தியடைந்தது. ஒருநாள் அவன் பூமாதேவியிடம், அம்மா என் தந்தை யார் என்று சொல். அவரைப் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன் என்று கேட்டான். உடனே அவள் குழந்தாய் உன் தந்தையின் பெயர் பரத்வாஜர். மகரிஷிகளில் தலை சிறந்தவர். அவரிடம் உன்னை அழைத்துச் சென்று உன் ஆவலை நிறைவேற்றுகிறேன் என்று கூறி அவனுடன் பரத்வாஜர் ஆசிரமத்தை அடைந்தாள்.
அங்கு மகரிஷியைச் சந்தித்து மகரிஷியே இவனே உன் மகன் உங்களைச் சந்திக்க விரும்பியதால் இங்கு அழைத்து வந்தேன். தாங்கள் இவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டினாள். மகிழ்ந்த மகரிஷி அன்புடன் தன் மகனை அணைத்துக் கொண்டார். அங்காரகன் உரிய வயதை அடைந்ததும் முறைப்படி அவனுக்கு உபநயனம் முதலிய சடங்குகளைச் செய்து வைத்து வேத அத்யனத்தையும் துவக்கி வைத்தார். மிகக் குறுகிய காலத்திலேயே கற்றுத் தேர்ந்த அவன் மற்ற பல கலைகளிலும் சிறந்து விளங்கினான். ஒருநாள் தன் தந்தையிடம் அங்காரகன் தான் சர்வ கலைகளிலும் வல்லமை பெற விரும்புவதாகவும் அதற்கேற்ற வழியைக் காட்டும்படியும் வேண்டினான். தவத்தைக் காட்டிலும் சிறந்த வழி எதுவும் இல்லை. அதனால் நீ ஸ்ரீ விநாயகரைக் குறித்து தவம் செய் என்றார் பரத்வாஜர். உரிய மந்திரங்களையும் அவனுக்கு உபதேசித்து அனுப்பி வைத்தார். அவந்தி நகரை அடுத்த அடர்ந்த காட்டில் உரிய இடத்தைக் தேர்ந்தெடுத்து ஒரு நல்ல நாளில் தன் தவத்தை மேற்கெண்டான். பல நூறு வருடங்கள் கடுமையாக தவம் செய்த அவனுக்குப் பலன் கிடைக்கும் காலம் கனிந்தது. மாசி மாதம் கிருஷ்ண பட்சம் சதுர்த்தியன்று இரவு சந்திரோதய காலத்தில் அங்காரனுக்கு தரிசனம் தந்தார் விநாயகர். அவரின் பாத கமலங்களைப் பணிந்து அவரைப் பலவாறு துதித்துப் போற்றினான். இறுதியாக விக்னேஸ்வரா தங்களிடம் நான் சில வரங்களை பெற விரும்புகிறேன். அருள் புரியுங்கள் என்று வேண்டினான். அங்காரகனே உன் கடும் தவத்தால் கட்டுண்டேன். விரும்பும் வரம் எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேள் என்று விநாயகர் திருவாய் மலர்ந்தருளினார்.
லம்போதரனே நான் அமிர்தம் அருந்தி அமரனாக ஆசைப்படுகிறேன். சர்வ மங்களமான உருவத்தோடு தங்களை தரிசித்த என்னை அனைவரும் மங்களன் என்று அழைக்க வேண்டும். அது மட்டுமல்ல, இந்த சதுர்த்தி நன்னாளை அனைவரும் கொண்டாட வேண்டும். இந் நாளில் தங்களை வணங்கி வழிபடும் பக்தர்களின் துயரங்களை நீக்கி அருள வேண்டும். மேலும் என்னை வணங்கும் அடியவர்களுக்கு செல்வம் அளிக்கும் கிரகமாக நான் மிளர வேண்டும் என்ற பல வரங்களை வேண்டினான். கனிவான பார்வையுடன் நோக்கிய கணபதி அன்பனே! நீ கேட்ட எல்லா வரங்களையும் தருகிறேன். அத்துடன் என்னிடம் நீ அனுகிரகம் பெற்ற இந்த சதுர்த்தி நாள் சங்கடஹர சதுர்த்தியாகவும் போற்றப்படும். இந்த நாளில் திரிகரண சுத்தியுடன் என்னை வழிபடுபவர்களுக்கு சங்கடங்களை அடியோடு விலக்கி விடுவேன் என்று அருளி மறைந்தார். ஸ்ரீ விநாயகர் திரிசனம் கிடைத்த அந்த இடத்தில் கணபதி விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து அவரை வழிபட்டு வந்தான் அங்காரகன். இதனால் இந்த விநாயகருக்கு மங்கள விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. பிறகு விநாயகரின் பேரருளால் தேவலோகம் அடைந்த அங்காரகன் அங்கு தேவாமிர்தம் பருகியதுடன் நவகிரகங்களில் ஒருவனாகும் பேறு பெற்றான். எனவே செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி, மற்ற சதுர்த்திகளைக் காட்டிலும் ஒப்பற்றது. விநாயகருக்கு உகந்தது.

No comments:

Post a Comment