Saturday, June 25, 2011

உன் வாழ்க்கை உன் கையில் 4

யார் ஒருவர் இந்த வாழ்க்கையை, உயர்ந்த தன்மையை அடைவதற்குரிய ஒரு படியாக பார்க்கிறாரோ, அவருக்கு தோல்வியே கிடையாது. வாழ்வில் சின்னச்சின்ன விஷயங்களை மட்டும் தன் லட்சியமாகக் கொண்டவருக்குத்தான் வெற்றியும் தோல்வியும். வாழ்க்கையை உயர்ந்த தன்மையை அடைவதற்குரிய படியாகப் பார்ப்பவர், வெற்றி கிடைத்தாலும், தோல்வி அடைந்தாலும், அதையும் தன் நன்மைக்குத்தான் பயன்படுத்துவார். பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தபோது முட்டாள்கள் கூட வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தினர். இடையே பொருளாதாரம் சிறிது வீழ்ச்சி கண்டபோது, தொழிலில் நிலைத்திருக்கவும், வெற்றிபெறவும் புதிய திறமை தேவைப்பட்டது. மக்கள் தோல்வி குறித்து பயப்படுவதாக கூறுகிறார்கள். தோல்வி என்பதே துயரம்தான். அதில் பயம் என்ற மசாலாவைவேறு ஏன் தடவுகிறீர்கள்? வெற்றி என்பது எல்லோருடைய விருப்பமும்தான். ஆனால், வெறும் விருப்பத்தினால் மட்டும் வெற்றி வருவதில்லை. திறமை இருந்தால்தான் வெற்றி. நீங்கள் சொல்லலாம், ""என் திறமையில் எந்த சந்தேகமும் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு முன் என் பணித்திறனை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அசந்து போயிருப்பீர்கள்...!'' என்று. உண்மைதான். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. புதிய சூழலை சமாளிக்க ஒரு வகையான திறமை தேவைப்படுகிறது இல்லையா? பொருளாதாரம் சிறப்பாக இருந்தபோது பணப்புழக்கம் அதிகமாக இருந்தது. அப்போதே பணம் குறித்த வேட்கையை நீங்கள் குறைத்திருக்கலாம். இப்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, பணவரவு குறைந்துவிட்டது. அதனாலென்ன? நிறைய பணம் கையில் இருந்தபோது வாழ்க்கையில் எதற்கும் நேரம் இல்லாமல் இருந்தீர்கள். இப்போது உங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. இப்போதாவது தியானம் செய்ய முடிகிறதே என்ற கோணத்தில் பாருங்கள். எனவே வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பரவாயில்லை. உயர்ந்த நிலையை அடைவதற்கு அது ஒரு படிநிலை என்று பார்த்தால், எந்தச் சூழ்நிலையும் மிகவும் அழகானதுதான்.
முன்பெல்லாம் ஒவ்வொரு வேளைக்கும் விருந்துபோல் உணவு... இப்போதோ ஏதோ சுமார்தான். ஆனால், நீங்கள் விரும்பினால் இதையும்கூட மகிழ்ச்சியுடன் சாப்பிடலாம். நிறையபேர் இதுபோல் எளிய உணவை முழு விருப்பத்துடன் தேர்வு செய்கிறார்கள். கையில் அதிக பணம் இல்லாவிட்டால் என்ன? சிறிய கார், சிறிய வீடு, எளிமையான உணவு என்று வாழமுடியும். கார் இல்லாவிட்டால் நடந்துபோகலாமே! கோவையில் 100 வயது கடந்த ஒருவரை 100வது பிறந்தநாளில் பேட்டி எடுத்தார்கள். அவர் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதைக் கண்டு, ""உங்கள் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு ""வாக்கிங்தான் காரணம். நான் ஒரு வாக்-கிங்'' என்று பதிலளித்தார். ஒரு விவசாயி இருந்தார். இயற்கை சக்திகள் தன் பயிரை ஆள்வதுகுறித்து துயரம் கொண்டார். ஒருநாள் அவர் சிவனை அழைத்து, ""இயற்கை சீற்றங்களால் எனக்கு மிகவும் தொல்லையாக உள்ளது. இந்த விவசாயியின் துயரம் உங்களுக்கு புரியாது. ஏனென்றால் நீங்கள் ஒரு விவசாயி அல்ல. ஒரு வேடன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எப்போது மழை பெய்ய வேண்டும்? எப்போது சூரியன் வரவேண்டும் என்று எல்லாமே எனக்கு நன்றாகத் தெரியும். வேடனும் பித்தனுமான உங்களுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் புரிவது கஷ்டம்தான். எனவே இயற்கை சக்திகளை என்னிடமே விட்டுவிடுங்கள்,''என்று வேண்டிக்கொண்டார். சிவனும் நல்ல மனநிலையில் இருந்ததால் அந்த வரத்தைக் கொடுத்துவிட்டார். விவசாயி நன்றாக திட்டமிட்டார். சோளம் விதைத்தார். ""மழை'' என்றார். மழை பெய்தது. ஆறு அங்குலம் நிலம் நனைந்தவுடன் "மழை நிற்கட்டும்' என்றார். மழை நின்றது. நிலத்தை உழுதார். விதை விதைத்தார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் "மழை' என்றார். பெய்தது. ""இன்று நான் வயலில் வேலை செய்ய வேண்டும். என்னவெயில்...! வெயில் வேண்டாம், மேகமூட்டம் வேண்டும்,'' என்றார். அப்படியே ஆனது. மிகவும் மகிழ்ச்சியானார். பசேல் என பயிரும் வளர்ந்துவந்தது. இயற்கை எப்போதுமே விவசாயியின் கையில் இருப்பதுதான் நல்லது என்று சொல்லிக்கொண்டார்.
அறுவடைக்கான நேரம் வந்துவிட்டதா என்று பார்ப்பதற்காக சோளக்கதிர்களை தொட்டுப்பார்த்தான். மெதுவாக அதை திறந்துபார்த்தார். ஒரு மணி சோளம்கூட இல்லை. ""என்ன நேர்ந்தது? வெயில் மழை எல்லாம் நான் சரியாகத்தானே நிர்வகித்தேன். சிவனிடமே கேட்போம்,'' என்று சிவனிடம் சென்று, ""எல்லாம் சரியாக இருந்தும் ஒரு சோளம் கூட விளையவில்லை. நீங்கள்தான் கெடுத்தீர்களா?'' என்று கேட்டார். ""நீ செய்வதை எல்லாம் நான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். நீயே எல்லாவற்றுக்கும் பொறுப்பெடுத்துக் கொண்டாய். எனவே நான் சிறிதும் தலையிட விரும்பவில்லை. மழை, வெயில் எல்லாம் சிறப்பாகத்தான் செய்தாய். ஆனால் காற்றை முழுவதுமாக நிறுத்திவிட்டாய். நான் நிர்வாகம் செய்தபோது அதிக வலுவான காற்றை அனுப்புவேன். பயிர்கள் வீழ்ந்துவிடும்போல் நிலை ஏற்படும். அப்போது அவை தம்மை நிலைநிறுத்திக் கொள்ள வேர்களை ஆழமாக நிலத்தில் செலுத்திக்கொள்ளும். வேர் உள்செல்வதால் பயிர் நன்றாக விளைந்து, சோளமும் வரும். ஆனால் இப்போது சோளக்கதிர் மட்டும் உள்ளது. சோளம் எதுவும் இல்லை,'' என்றார். எனவே உங்கள் வாழ்க்கையில் பல சூழ்நிலைகள் ஏற்படலாம். அவற்றைப் பயன்படுத்தி நீங்கள் வலிமை அடையலாம். அல்லது உட்கார்ந்து அழலாம். இந்த இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன. உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சின்னச்சின்ன விஷயங்களைக்கூட வெற்றிபெறும் படிக்கற்களாக மாற்றிக் கொள்ளலாம். உண்மையில் தோல்வி என்று எதுவும் கிடையாது. அது உங்கள் எண்ணம் மட்டுமே. ஒரு பிச்சைக்காரனுக்கு 20 ரூபாய் கொடுத்தால் ஓட்டலுக்கு சென்று மசால் தோசை சாப்பிடுவது அவனுக்கு வெற்றியின் உச்சம் போன்றது. ஆனால் உண்மையில் அதுவா வெற்றியின் உச்சம்? சொல்லுங்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் சமூகத்தின் கருத்துகளுக்கு அடிமையாகிவிட்டீர்கள். எனவே முதலில் வெற்றி, தோல்விகுறித்து மற்றவர்களின் எண்ணத்திற்கு அடிமையாவதை நிறுத்துங்கள். உங்கள் முதல் வெற்றி எது தெரியுமா? நீங்கள் யாருடைய கருத்துக்கும் அடிமை இல்லை என்பதுதான். வாழ்வில் என்ன சூழ்நிலை வேண்டுமானாலும் வரட்டும். நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்றால் அதுவே ஒரு வெற்றிதான். நான் சொல்வது சரிதானே!
உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சின்னச்சின்ன விஷயங்களைக்கூட வெற்றிபெறும் படிக்கற்களாக மாற்றிக் கொள்ளலாம். உண்மையில் தோல்வி என்று எதுவும் கிடையாதுவாழ்வு

No comments:

Post a Comment