Monday, June 13, 2011

யமனை வேண்டி யாராவது தவம் இருப்பார்களா?

யம தவம் புரிந்த எண்ணற்றப் புகழ் பெற்ற கனகதாசர்!


திருமாலை வேண்டித் தவம் இருக்கலாம்; சிவனை வேண்டித் தவம் இருக்கலாம்; யமனை வேண்டி யாராவது தவம் இருப்பார்களா? இருந்தான் ஒருவன். யமனுடைய வாகனமான எருமை மாட்டை நோக்கி தன் தவத்தினைத் தொடங்கி னான் அவன். அவன் மூடனா அல்லது மூதறிஞனா என்பதை நாம் அறிந்தாக வேண்டும்.

மனிதர்களாகப் பிறந்த எவருக்குமே இறப்பு என்பது வேண்டாத ஒன்றா கவே ஒவ்வொரு யுகங்களிலும் இருந் திருக்கிறது. "புனரபி ஜனனம்- புனரபி மரணம்' -அதாவது ஒரு சக்கரம் சுழன்று கொண்டே இருப்பதைப் போல மரணமும் பிறப்பும் மாறி மாறி வரும். மனித வாழ்க்கையில் மட்டுமல்ல; படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்குமே அந்த நீதி பொருந் தும். பிறப்பைப்போலதான் மரணமும் என்றறிந்து பயப்படாமல் இருப்பவன் தான் ஞானி. அப்பேற்பட்ட ஞானி யாக மாறியவன்தான் யமனை வேண்டிய எளியவன். யார் அவன்?

விஜயநகர சாம்ராஜ்ஜியம். மாமன்னர் கிருஷ்ண தேவராயர் ஆண்டு கொண்டிருந்த அற்புதமான காலம். அவருடைய அரசவையில் பல ஞானிகளும் பண்டிதர்களும் வீற்றிருந்து மன்னருக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர் களில் முதன்மையாக விளங்கியவர் மன்னரது குலகுரு ஸ்ரீ வியாசராயர். ஸ்ரீவியாசராயரின் ஒவ்வொரு சொல்லுக் கும் தலை வணங்கி அதை நிறைவேற்றிக் கொண்டிருந்தார் கிருஷ்ண தேவராயர். ஒரு நாள் வியாசராயர் மன்னரைப் பார்த்து, தான் சொல்லும் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த அரசை நடத்திச் செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

குலகுருவே இப்படிக் கேட்டுவிட்டாரே என்று நினைக் காமல், மாமன்னர் கிருஷ்ண தேவராயர் தன்னுடைய குருவிற்கு அவர் விரும்பிய நாளில் தன் ஆட்சியை ஒப்ப டைத்தார். அன்று முழுவதும் ஸ்ரீ வியாசராயர் மன்னனு டைய சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு ஆட்சி புரிய, கிருஷ்ண தேவராயரோ கீழே ஒரு இருக்கையில் கைகட்டி அமர்ந்திருந்தார். பல நல்ல உத்தரவுகளை அரசவையி லுள்ள அமைச்சர்களுக்குப் பிறப்பித்த ஸ்ரீ வியாசராயர், மாலை நேரம் நெருங்கு கையில் தன் சிம்மாசனத்தை விட்டு எழுந்து சற்று தள்ளி நின்று, தான் மேலே அணிந்திருந்த அங்கவஸ் திரத்தை சிம்மாசனத்தின்மீது தூக்கி எறிய, சிம்மாசனம் ஒரு நொடியில் தீப்பற்றி எரிந்தது. அனைவரும் ஸ்ரீ வியாசராயரின் இச்செய்கையைக் கண்டு அதிர்ந்து நின்றனர். உடனே ஸ்ரீ வியாசராயர் அதற்கான காரணத்தைச் சொன்னார்.

""சக்கரவர்த்தியான கிருஷ்ண தேவராய ருடைய ஜாதகத்தில் இன்று ஒரு மிகப் பெரிய கண்டம் இருப்பதை அறிந்தேன். அவர் இன்று அரசனாக சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தால், சிம்மாசனம் எரிந்து மன்னர் சாம்பலாகப் போவார் என்பதால், இன்று ஒரு நாள் மன்னரை சாதாரண மனிதனாக்கி நான் ராஜ பதவியை ஏற்று நடத்தினேன். இனிமேல் அரசருக்கு எந்தக் குறையும் இருக்காது'' என்று சொல்லி வேறொரு சிம்மாசனத்தில் மன்னரை அமர்த் தினார் வியாசராயர். அன்று முதல் ஒரு நாள் ராஜாவாக இருந்ததால் வியாசராயரை ஸ்ரீ வியாசராஜர் என்றழைக்க ஆரம்பித்தனர். அவருடைய புகழ் பாரத தேசம் முழுவதும் பரவியது. அவர் வாழ்ந்த காலம் கி.பி. 1447 முதல் 1539 வரை ஆகும்.

அந்த காலகட்டத்தில்- 1508-ஆம் ஆண்டு பீரப்பா என்னும் இடையருக்கும் பச்சம்மா என்கிற பெண்மணிக்கும் பிறந்த குழந்தையான திம்மப்பாதான் யமனை வணங்கி முக்தி பெற்றவன். இடையர் குலத்தில் பிறந்து மாடு மேய்க் கும் தொழிலைச் செய்து வந்தாலும் இறை பக்தி மிகுந்தவனாக விளங்கி வந்தான் திம்மப் பன். அவன் பிறந்த ஊரில் மிகப் பிரசித்தமான ஒரு ஆதிகேசவப் பெருமாள் கோவில் இருந்தது. தினமும் ஆதிகேசவப் பெருமாளை காலையும் மாலையும் தரிசிக்காவிட்டால் தூக்கம் வராது திம்மப்பனுக்கு. ஒரு நாள் பெருமாள் அவன் கனவில் தோன்றி, ""திம்மப்பா... நீ எப்போது என்னுடைய அடிமையாகப் போகிறாய்?'' என்று கேட்டார்.

""நான் இப்போதே உங்கள் அடிமைதானே சுவாமி'' என்றான் திம்மப்பன்.

""போதாது திம்மப்பா. நீ எனக்கு அடியவ னாகி நிறைய பக்திப் பாடல்கள் பாட வேண்டும்'' என்றார் பெருமாள்.

திடுக்கிட்டு எழுந்தான் திம்மப்பன். "என்ன இது... சாதாரண இடையர் குலத்தில் பிறந்த நான் பாட்டெழுதுவதா? அது எப்படி சாத்தியம்' என்று யோசித்தான்.

மற்றொரு நாளும் கனவில் வந்த கடவுள், ""என்ன திம்மப்பா... எப்போது பாடப் போகிறாய்?'' என்றார்.

""சுவாமி! ஏதாவது ஒரு குருவிடம் மந்திரோ பதேசம் கிடைக்காமல் நான் பாட்டெழுதி தங்கள் தாசனாக முடியுமா?''

""முடியும். மதனபள்ளி அருகே ஸ்ரீ வியாச ராஜர் வந்திருக்கிறார். அவரைப் போய் தரிசனம் செய். அவர் உனக்கு மந்திரோபதேசம் செய்வார்'' என்றார் பெருமாள்.

மறுநாளே மதனபள்ளி சென்று ஸ்ரீ வியாசராஜரின் முன் நின்றான் திம்மப்பன்.

""யாரப்பா நீ?'' -வியாசராஜர் கேட்டார்.

""சுவாமி! என் பெயர் திம்மப்பன். ஒரு சமயம் பூமியைத் தோண்டும்போது எனக்கு நிறைய பொன் கிடைத்தது. அதை அப்படியே எங்கள் ஊர் கோவிலுக்குக் கொடுத்து விட்டேன். அதனால் என்னை கனகன் (கனகம்-பொன்) என்றும் அழைப்பார்கள்.''

""என்ன வேண்டும் உனக்கு?''

""தாங்கள் எனக்கு மந்திரோபதேசம் செய்ய வேண்டும் சுவாமி.''

""என்ன தொழில் செய்கிறாய் கனகா?''

""மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறேன் சுவாமி.''

வியாசராஜர் பெரிதாகச் சிரித்தார்.

""இடையனுக்கு என்ன மந்திரம் சொல்லித் தருவது. உனக்கு எருமை மாடுதான் மந்திரம்'' என்று அவர் கிண்டலாகச் சொல்ல, "எருமை மாடுதான் மந்திரம்' என்று நினைத்துச் சென்றுவிட்டான் திம்மப்பன்.

ஒரு மரத்தடியில் அமர்ந்து, "எருமை... எருமை' என்று ஜபம் செய்ய ஆரம்பித்தான் கனகன். பல நாட்கள் கழித்து, அவன் எதிரே வந்து நின்ற பிரம்மாண்டமான எருமை ஒன்று பெருங்குரலெடுத்து, "கனகா' என்று கூப்பிட்டது. யமனின் வாகனம் அது. வியப்படைந்த கனகன் நேராக வியாசராஜரிடம் சென்று சொல்ல, அவரும் வியப்புற்றார். "இவன் ஏதோ விளையாட்டுத் தனமாகப் பேசுகிறான்' என்று நினைத்தார்.

""கனகா... மிகவும் சந்தோஷம். நான் ஊருக்கு வெளியே மக்களுக்காக ஒரு பெரிய ஏரியை உருவாக்கி கரையை உயர்த்திக் கட்டிக் கொண்டிருக்கிறேன். அதன் ஒரு மூலை பள்ளமாக இருக்கிறது. அதன் அருகிலேயே நூறு மனிதர்கள் சேர்ந்தாலும் தள்ள முடியாத சில பாறைகள் இருக்கின்றன. உன் எருமை மாட்டால் அந்தப் பாறைகளைத் தள்ளிப் பள்ளத்தை மூட முடியுமா என்று கேள்'' என்று சொல்லி கனகனை அனுப்பி விட்டார் வியாசராஜர்.

ஒருசில மணி நேரங்களில் மீண்டும் ஓடி வந்த கனகன் பள்ளத்தை மூடிவிட்டதாக வியாசராஜரிடம் சொன்னான்.

ஸ்ரீசுவாமிகள் திடுக்கிட்டார். "என்ன இது... இவன் புதுக் கரடி விடுகிறானே' என்று சந்தேகித்து, ஏரிக்கரையை அடைந்த வியாசராஜர் பிரமித்து நின்றார்.

""இவன் சாதாரண இடைக்குல கனகன் இல்லை; இவன் ஒரு மகத்தான மனிதன்; தேவ புருஷன்'' என்று சொல்லி, கனகனை ஆசீர் வதித்து தன்னுடைய சீடனாக்கிக் கொண்டார் வியாசராஜர்.

அன்று முதல் அவனுக்கு கனகதாசர் என்று பெயரிட்டு, அரசவையில் தன் பக்கத்தில் வைத் துக் கொண்டார். அவருடைய இன்னொரு பக்கத்தில் கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என்று சொல்லப்பட்ட புரந்தரதாசரையும் அமர வைத்து, கிருஷ்ண தேவராயரிடம் கனக தாசரின் பெருமையையும் கூறினார்.

ஆனால் அவையிலிருந்த பல வேத பண்டிதர் களும் அறிஞர்களும் வல்லுநர்களும் வியாசரா ஜர் தன் பக்கத்தில் இடைக் குலத்தவனான கனக தாசரை அமர வைத்துக் கொண்டதில் பொறா மைப்பட்டனர். ஆனால் ஸ்ரீ வியாசராஜரோ கனகதாசரின் அறிவை வெளியே கொண்டு வரவும், அவர் புகழைப் பரப்பவும் பல விந்தை களைச் செய்து காட்டினார்.

ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரின் அரச வையில் ஒரு விவாதம் நடந்தது. "யார் மோட்சத் திற்குச் செல்வார்கள்?' என்னும் கேள்வியே அது.

வியாசராஜர் பண்டிதர்களைப் பார்த்து, ""உங்கள் தகுதியை நன்றாகக் கணித்து உங்களில் யார் மோட்சம் செல்வீர்கள் என்று சொல்லுங் கள்'' என்றார். யாராலும் பதில் சொல்ல முடிய வில்லை. உடனே, ""கனகா... யாருமே மோட்சம் போக மாட்டார்கள் போலிருக்கிறதே? இவ்வளவு தான தருமம் செய்த மன்னரே பதில் சொல்லவில்லையே. நீயாவது மோட்சம் போவாயா?'' என்று கேட்டார்.

உடனே கனகதாசர், ""நான் போனால் போவேன்'' என்றார். இந்தப் பதிலைக் கேட்ட மன்னர் உட்பட அனைவருமே கோபப்பட்டனர்.

""என்ன திமிர் இவனுக்கு?'' என்று சத்தம் போட்டார்கள்.

ஆனால் வியாசராஜரோ, ""அதெப்படி கனகா? இந்த அவையினர் அனைவரும் இந்த வினாவிற்கு விடை சொல்லாமல் அமைதியாக இருக்க, நீ மட்டும் "நான் போனால் போவேன்' என்கிறாயே? என்றார்.

கனகதாசர் சற்றும் தாமதிக்காமல், ""நான் என்கிற அகந்தை போனால் அனைவருமே மோட்சம் போகலாமே சுவாமி? அந்த நான் எனும் அகங்காரம்தானே மனிதனை நரகத்திற் குத் தள்ளுகிறது?'' என்றார்.

அவை கனகதாசரைப் பாராட்டியது.

இப்படிப் பல பரீட்சைகளில் தேறிய கனக தாசர், கடைசியாக உடுப்பி சென்றார். அங்கே உள்ள பட்டர்கள் இவர் இடைக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் கோவிலினுள் விட மறுத்தனர். உடனே மேற்குப்புறம் சென்று உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணனின்மீது ஒரு பாடலைப் பாட, கோவிலின் மேற்குப்புறச் சுவர் உடைந்து, கிழக்கே சிலையாக நின்று கொண்டிருந்த பரமாத்மா மேற்குப் புறமாகத் திரும்பி நின்று கனகதாசருக்குக் காட்சியளித்தார்.

உடுப்பியில் பல காலம் வாழ்ந்து பல்லாயிரக் கணக்கான பாடல்களை கிருஷ்ணனின்மீதும் தனது ஊர் ஆதிகேசவப் பெருமாள்மீதும் பாடிப் புகழ் பெற்றார் கனகதாசர். இன்றும் அவர் சாகித்தியங்கள் கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன. கடைசியில் திருப்பதி வேங்கடாசலபதியையும் தரிசித்து தன் சொந்த ஊரான காகிநெலெ சென்று 98 ஆண்டுகள் வாழ்ந்து, பாகவதோத்தமராகத் திகழ்ந்து பரமபதம் அடைந்தார். (கி.பி. 1606-ல்). யமனின் வாகனம்மீது அவர் செய்த தவம், யமனைக் குறித்தே செய்த தவமாகி அவருக்கு நீண்ட ஆயுளையும் புகழையும் கொடுத்தது.

No comments:

Post a Comment