Thursday, July 28, 2011

பரமாசார்ய ஸ்வாமிகள் கூறும் தர்ம சாஸ்திரம் முறைகள்!

வேத தர்மத்தில் மநுஷ்ய வாழ்வின் ஸகல அம்சங்களையும் ஆத்மாபிவிருத்திக்கு அநுகூலமாக ஆக்கி விதிகள் போட்டிருக்கிறது. நாம் நடைமுறையில் செய்ய வேண்டியதை எல்லாம் சொல்வது தர்ம சாஸ்திரம். பதினெட்டு மஹரிஷிகள் தங்களுடைய அதிமாநுஷ்ய சக்தியால் வேதங்களை முழுக்கத் தெரிந்து கொண்டு அதிலிருந்து தொகுத்து தர்ம சாஸ்திரங்களைத் தந்திருக்கிறார்கள்.
தர்ம சாஸ்திரம்: சூரியோதயத்திற்கு முன் அதிகாலை எழுந்து காலைக் கடன்களை முடித்து குளித்து தூய உடையணிந்து கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும். தினசரி கோயிலுக்குப் போக முடியாதவர்கள் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை போக வேண்டும். பிரார்த்தனைக்குச் சிறந்த இடம் கோயில் தான். கோயிலில் நிதானமாக நடந்து ஒவ்வொரு விக்கிரகத்தையும் வணங்க வேண்டும். வீண் பேச்சு பரபரப்பு கூடாது. பிரார்த்தனையின் மூலம் தைரியம், மனத்தூய்மை, புலனடக்கம், தெய்வீக உணர்வு, நேர்மை உண்டாகிறது. தெய்வத்தின் உதவியின்றி எதுவும் எப்போதும் நடக்காது. உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தந்தை கடவுள். அவரே எல்லா உயிர்களையும் பரிபாலிக்கிறார். கடவுள் பொறுப்பில் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டு நம் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும். ஒரு மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு நல்ல காரியத்தில் மனதை செலுத்துகிறானோ, அவ்வளவுக்கவ்வளவு செல்வம் கிடைக்கும்.
மனிதனுக்குத் தேவை அன்புள்ள இதயமும் அமைதியுள்ள மூளையும். சந்தர்ப்பம் வரும் போது அதனைப் பயன்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதே வெற்றிக்கு அடிப்படை குறைவாகப் பேச வேண்டும். இனிமையாக பேச வேண்டும். உண்மையே பேச வேண்டும். <புத்திசாலியின் முதல் நண்பன் பணம் - நல்ல நாக்கு ஒரு நல்ல ஆயுதம் அதை தவறான வழியில் உபயோகிக்கக் கூடாது. எல்லா உண்மைகளையும் எப்போதும் சொல்லக்கூடாது. பிறர் நினைப்பதைப் பற்றிக் கவலைப் படக்கூடாது. தன்னம்பிக்கை, தாமதம் இன்றி எடுக்கும் முடிவு இதுதான் வெற்றியை நிர்ணயிக்கும். தைரியத்தைக் கைவிடக் கூடாது. தைரியம் போனால் எல்லாம் போய்விடும். தோல்வி வெற்றியின் படிக்கட்டாகும். தோல்விகளைக் கண்டு அஞ்சக்கூடாது. தோல்விகள் மனதைப் பலப்படுத்தும். எதையும் எப்போதும் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும். நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும்.
நாம் நினைப்பது நல்லதாக இருக்கவேண்டும். எண்ணிய எண்ணம் ஈடேற சுய முயற்சியும், கடவுள் அருளும் இருந்தால் எதுவும் நடக்கும். சுறுசுறுப்பாக இருங்கள் செல்வம் வந்தடையும். சோர்வுக்கு இடம் கொடுக்காதீர்கள். வெற்றி கிடைக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். நிம்மதி கிடைக்கும். எல்லோரையும் நேசியுங்கள், சந்தோஷம் உண்டாகும். கடவுளை நம்புங்கள், நினைத்தது நடக்கும். குடும்பப் பெண்கள் காலையில் சூரியோதயத்திற்கு முன்பாக எழுந்து விட்டு வாசலைப் பெருக்கி சாணம் தெளிக்க வேண்டும். வெறும் தண்ணீரைவிட சாணம் கலந்த தண்ணீரையே தெளிக்க வேண்டும். கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள் வீட்டில் காலையிலும், மாலையிலும் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கிற்கு நல்லெண்ணெய் உபயோகிக்க வேண்டும். விளக்கு ஏற்றிய பிறகு வெளியில் எங்கும் செல்லக்கூடாது. மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது. வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் வைத்து வணங்குவது நல்லது. விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது. விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது. அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும். இரவில் வீட்டைப் பெருங்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது. பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலு<ம் குவித்து வைக்கக் கூடாது. அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.
அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது. எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது. சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும். குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும் அன்பு சாதித்ததை வேறு எதுவும் சாதித்தது இல்லை.
எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எந்த வீட்டில் உபசாரம் மனப்பூர்வமாக செய்யப்படுகிறதோ அங்கு திருமகள் தங்கியிருப்பாள். பசியோடு வருபவர்களுக்கு முன்பின் தெரியாதவர்களாக இருந்தாலும் உணவு அளிக்க வேண்டும். அழகு பெண்ணுக்கு ஒரு பொக்கிஷம். அடக்கம் ஒரு அணிகலன். மௌனம் அவளை தேவதையாக்கும். உண்மையான அழகு உடலில் இல்லை, தூய்மையான, அன்புள்ள இரக்கமுள்ள உள்ளத்தில் தான் இருக்கிறது. தூய உள்ளம், தூய சிந்தனை, குற்றமற்ற மனசாட்சி இவை எந்த துன்பங்களையும் தாங்கிக் கொள்ளும். எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள். சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். அது இதயத்தின் இசை. சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள், அது சக்தியின் பிறப்பிடம், விளையாட நேரம் ஒதுக்குங்கள், அது இளமையின் ரகசியம். படிக்க நேரம் ஒதுக்குங்கள். அது அறிவின் ஊற்று. நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள், அது மகிழ்ச்சிக்கு வழி. உழைக்க நேரம் ஒதுக்குங்கள் அது வெற்றியின் விலை. உழைப்பின் மூலம் தான் செல்வம் வரும். தர்மத்தின் மூலம் அது நிலைத்திருக்கும்

No comments:

Post a Comment